Friday, January 5, 2007

சப்ப மாடு செத்து ஏழை பணக்காரன் ஆன கதை


ஒரு ஊர்ல ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் ஒரே ஒரு பசு மாடு இருந்தது. அதுவும் சரியான சப்பை மாடு. ஒரு நாள் திடீர்னு, அந்தச் சப்பை மாடும் செத்துப் போச்சு. ‘என்னா பண்றது?'ன்னு இவன் தவிக்கிறான். கூழுக்கே வழியில்லாத குடும்பம். இருந்த ஒரே மாடும் செத்துப் போச்சு. அழுதுகொண்டே போய், மாட்டுக் கறியை மண்ணில் புதைத்துவிட்டு, தோலை உறித்து எடுத்துக் கொண்டான்.

“அடியே! புள்ளைங்கல பாத்துக்க. நாம் போயி தோல வித்துட்டு, சாப்பாட்டுக்கு எதுனா அரிசி வாங்கியாறேன். கஞ்சியாவது காச்சிக் குடிப்போம்''னு பொண்டாட்டியிடம் சொல்லிட்டு, வெளிய கௌம்பிவிட்டான்.

இவன் தேடிப்போன தோல் வியாபாரி ஊரில் இல்லை. “எத்தினி மணி ஆனாலும் செரி. தோல விக்காம ஊட்டுக்குப் போவக்கூடாது” எனக் கூறிக்கொண்டு வியாபாரி வீட்டின் வாசலிலேயே காத்திருந்தான்.

அந்த நாளில்தான் கரண்ட்டு கிடயாதே. இருட்டிப் போய், கண்ணு மண்ணு தெரியல. அந்த நேரம் பார்த்து, இண்டு திருடர்கள் கையில் இரண்டு பைகளுடன் வந்தார்கள்.

“டேய்! இந்த வீட்டு வாசல்ல இருக்கிற மர பீரோவில் ஒளிஞ்சுக்குவோம். யாரும் இல்லாத நேரம் பார்த்து தப்பிச்சிறலாம்'' எனச் சொல்லிக்கொண்டு, தோல் வியாபாரி வீட்டின் பீரோவுக்குள் பூகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.

சிறிது நேரம் கழித்துத் தோல் வியாபாரி வந்தான். அவன், காவிளக்கை ஏற்றியவுடன், இவன் போய் அவனெதிரே நின்றான். யாரு...? தோல் விற்க வந்தவன்.

“யாருப்பா நீ? இன்னா வேணும்'' தோல் வியாபாரி கேட்டான்.

“அய்யா! இன்ன மேரி எம் பசுமாடு செத்திரிச்சி. அதான் இந்தத் தோல வித்துட்டு, எதுனா வாங்கினு போலாம்னு வந்தேன்'' என்றான்.

“செரி, செரி. யவ்ளோ வேணும்? அத்த சொல்லு” என்றான் தோல் வியாபாரி.

“காசு பணமெல்லாம் வேணாம்ங்க. தோ, மழையிலயும் வெயில்லயும் மக்கிக் கிடக்குதே... மர பீரோ. அதைக் குடுத்தா, எங்கூட்டு சாமான்களை பத்தரமா வச்சிக்குவேன்'' என்றான் இவன்.

‘வெளிய கிடந்து வீணாதானே மக்குது' என்று தோல் வியாபாரியும் அதை அவனிடம் கொடுத்துவிட்டான்.

இவன், பக்கத்தில் நடந்து போய் ஒரு வண்டிக்காரனை கூப்பிட்டபோது, “ராத்திரில என்னால வரமுடியாது” என்று சொல்லி, “வேணும்னா வண்டியை நீயே ஓட்டினு போய், காலைல கொண்ணாந்து உட்ரு” எனச் சொல்லிவிட்டான்.

“இத்த சொல்லுவன்னுதான நானும் எதிர் பாத்தேன்” என நினைத்தபடி, நம்மாளும் பீரோவை வண்டியில் ஏற்றிக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.

போகிற வழியில் மாடுகளிடம் சொன்னான், “மாடுங்களா...! மன்னர் எனக்கிட்ட கட்டளையை இன்னிக்கித்தான் நிறைவேத்தி இருக்கேன். ரொம்ப நாள் அகப்படாம இருந்த திருடனுங்களை இன்னிக்கிப் புடிச்சிட்டேன். நாளைக்குப் பாரு அமக்களத்தை!” என்று.

திருடர்கள் பயந்து போய், “எங்கடா நமக்கு மரண தண்டன குடுத்துடப் போறாங்க” என அஞ்சி, “அய்யா, சாமி! உங்க கால்ல உழுந்து கேக்கறோம். இந்தப் பொண்ணும் பொருளும் உங்கிட்டயே குடுத்துடறோம். எங்களை தொறந்து உட்ருங்க. நாங்க எங்கனா கண்காணா தேசத்துக்குப் போய் பொழச்சிக்கிடறோம்'' என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். 

இல்லாத உருட்ல், மெரட்டெலெல்லாம் காண்பித்துவிட்டு, “இத்தோட எந்த வம்புக்கும் போவக்கூடாது” என எச்சரித்து, நகைகளையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு, திருடர்களை துரத்திவிட்டான் செத்துப்போன சப்ப மாட்டின் உரிமையாளன்.

நேராக வீட்டுக்கு வந்தவன், மனைவியிடம் இரண்டு பைகளையும் கொடுத்துவிட்டு, வண்டிக்காரனிடம் வண்டியையும் திருப்பி ஒப்படைத்துவிட்டான்.

அதன் பிறகு செல்வத்துக்கு கேக்கவா வேண்டும்?

‘கல்லு ஊடுதான், கறி கொழம்பு தான்’

‘காலைலயும், சாய்ந்திரமும் வெத்தலப் பாக்குத்தான்.'

ஊரு சும்மா இருக்குமா? எல்லாருக்கும் ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இவம் எப்பிட்றா இவ்ளோ பெரிய பணக்காரனா ஆணான்?' என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.

பொம்பளைங்க வாய் சும்மா இருக்காது என்று சொல்வார்களே! 

‘நைசா இன்னான்னு விசாரிடி’ என்று, அவனவன் அவனவன் பொண்டாட்டிகளிடம் சொல்லி விரட்டிவிட்டார்கள்.

இவள்கள், குளக்கரையில் குடத்துக்குத் தண்ணீர் பிடிக்கும்போது சப்பை மாட்டுக்காரன் மனைவியிடம் கேட்டார்கள்.

“ஏண்டி... எங்கருந்துதான்டி வந்துது இவ்ளோ வசதியும்? அந்த மாயத்தை எங்களுக்கும் சொன்னா, நாங்களும் செஞ்சிப் பாப்பமுல்ல...” என்றார்கள்.

“அட, இதைக் கேக்கவா இவ்ளோ நாளும் மொன்னு முழுங்கியிருந்தீங்க? ஒரு சப்ப மாடு வச்சிருந்தமே. அதான் சம்பாரிச்சிக் குடுத்திச்சி. அது பாலுங் கரக்காம, சானியும் போடாம, ஒரு நாள் செத்துப் போச்சா. கறியைக் கொண்ணும் போய் மண்ணுல பொதச்சிட்டு, தோலை எடுத்தும்போய் விக்கப் போனவருதான். பய்யி நெறெய பணத்தொடத்தான் ஊட்டுக்கு வந்தாரு. தங்க வெல விக்கிதாமுல்ல தோலு...”

இவள் சொல்லி வாயை மூடவில்லை. குடத்தைப் பூரா போட்டது, போட்டபடியே எல்லாவளும் விட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டாளுகள்.

“அட வெவரங்கெட்டவங்களா! நாட்ல எந்தப் பொருளு என்னா வெலை விக்கிதுன்னுகூடத் தெரியாம, நீங்கள்லாம் சம்பாரிக்கக் கௌம்பிடுறீங்க. சப்ப மாட்டுத் தோலுதான்டா இவ்ளோ வசதிக்கும் காரணம்” என்று தாங்கள் கேட்ட அலாவுதீனும் அற்புத விளக்கும் கதைய அப்படியே ஒப்பித்தார்கள்.

அவ்வளவுதான்! எல்லா வீட்டு ஆம்படையான்களும் கூடி முடிவெடுத்தார்கள்.

“இருக்குற மாடு எல்லாத்தயும் வெட்டிக் கூறுபோட்டுப் பொதச்சிட்டு, தோலைத் தூக்கிட்டுப் போய் வித்துப் பணக்காரனா ஆவுரது” என்று.

முடிவெடுத்தபடி, இருந்த ஆடு, மாடுகள் எல்லாவற்றையும் வெட்டிச் சாகடித்துவிட்டு, தோலை உறித்து வியாபாரத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள்.

தோல் என்ன விலை விற்குமென்று சம்சாரிகளான உங்களுக்குத்தான் தெரியுமே. “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” என்கிற கதையாகிவிட்டது குடியானவர்களின் நிலைமை.

நம்ம ஆள் வாயும் வயிறுமாக வசதியாக வாழ்வதைப் பார்க்க எவனுக்கும் பிடிக்கவில்லை. ஒரு கூட்டம் போட்டு முடிவெடுத்தார்கள்.

“அவனை எப்பிடியாவது சாவடிச்சுடனும்டா”

இதற்காக என்ன செய்தார்கள் என்றால், மரத்தில் ஒரு பீப்பாய் செய்து, அதை இரவோடு இரவாகக் கொண்டு போய், நம்ம ஆளை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார்கள். விடிந்த உடனே கும்பலாக அந்தப் பீப்பாயை உருட்டிக்கிட்டுப் போய், கடலைப் பாத்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

“யாம் மொவன் இத்தோட ஒழிஞ்சாண்டா” எனக் கூறிக்கொண்டே ஜாலியாக உருட்டிக்கொண்டு போனார்கள்.

போகிற வழியில் இவுர்களுக்கு தண்ணீர்த் தாகம் எடுத்துக்கொண்டது.

“டே, தண்னித் தாகம் எடுக்குதுடா” என்று ஒருவன் சொல்லவும், “நெல்லிக்கா சாப்ட்டா சரியாப் பூடும்” என்று ஆளுக்கு ஒரு மூலையாக நெல்லிக்காய் பறிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

“பய எப்படித் தப்பிச்சிடப் போறான்?” என்கிற நினைப்பில் அசமந்தமாய்த் திரிந்தார்கள்.

அந்தக் காலத்தில்தான் மாடு திருடுறவர்கள் அதிகமாச்சே. அதுபோன்று மூன்று மாடு திருடர்கள், ஆளுக்கு நூறு ஆடு, நூறு மாடுகளைத் திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் பயங்கரக் களைப்பு. பீப்பா உருட்டு நடந்து கொண்டிருந்த வழியில் ஆடு, மாடுகளை மேய விட்டுட்டு, செம்ம வேட்டயாச்சே! ஆசை தீர சாராயத்தையும், கள்ளையும் நெக்கக் குடித்தார்கள்.

குடி வெறி சும்மா இருக்குமா? பங்கு போடுவதில் தகறாறு வந்துவிட்டது. விட்டான் ஒரு உதை. ஒருவன், ஓடிப் போய் நேராக பீப்பாய் மேல் விழுந்தான்.

“ஒதெக்கி ஒதெ குடுக்குறம் பார்றா” எனக் கூறிக்கொண்டு விழுந்தவன் பீப்பாவைத் தூக்கினான். அவனால் முடியவில்லை.

“என்னாடா இந்தக் கணம் கணக்குது” என நினைத்தபடியே, “டேய், பங்கு அப்புறம் பிரிச்சிகிரலாம். மொதல்ல இந்தப் பீப்பாவைத் தெறப்போம். சத்தியமா இதுல புதையல்தான் இருக்குது” என்றான்.

சண்டைய மறந்துட்டு மூன்று பேரும் பீப்பாயைத் திறந்தார்கள். திடீரென்று அதிலிருந்து சப்பை மாட்டுக்காரன் வெளிய வரவும், மூவரும் மிரண்டுவிட்டார்கள். பேயோ, பூதமோவென்று.

சப்பை மாட்டுக்காரன் சொன்னான், “யாரும் பயப்படாதீங்க! இது அதிசய பீப்பா. இதும் உள்ள போயி நீங்க இன்னா கேட்டாலும் கெடைக்கும். எங்க‌ போவனும்னாலும் போவும். எல்லா ஒலகத்துக்கும் போயி வரலாம்'' என்று புளுகினான்.

இதை நம்பி இந்த மூன்று திருடர்களும் அந்தப் பீப்பாய்க்குள் புகுந்து கொண்டார்கள்.

இவன் அந்தப் பீப்பாவை முன்னிருந்த மாதிரியே தைத்து மூடிவிட்டு, நூறு ஆடுகளையும் நூறு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். 

ஊர்க்காரப் பயலுகளும் அந்தப் பீப்பாவை உருட்டிக் கொண்டு போய் கடலில் தள்ளிவிட்டு, ''அப்பாடா! ஒழிஞ்சது சனியன்'' எனச் சொல்லிக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்கள்.


மறு நாள் விடிந்து எல்லாரும் வெளிய வந்தபோது...! ஆஹா! நம்ம ஆள், திண்ணை மேல் உட்க்கார்ந்து வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டிருந்தான்.

“இன்னாடா இது? எழவெடுத்த வேலையாப் போச்சு. மெனக்கட்டுப் போய் கடல்ல தள்ளிட்டு வந்தோம், இவன் கல்லு மாதிரி திண்ணைல உக்காந்துனு இருக்கானே?'' என்று ஆச்சர்யமாகப் போய்விட்டது அவர்களுக்கு. 

மீண்டும் தங்களது பொண்டாட்டிகளை விட்டனுப்பினார்கள்.

“போய் இன்னான்னு கேள்றி''

இவுளுகளும் போய்க் கேட்டாள்கள்.

“ஏதும இம்மா ஆடு மாடுங்க...? அதிசயமா கீது! எங்களுக்கும் சொன்னா நாங்களும் பொழைக்க மாட்டமா?'' என்று கன்னத்தில் கை வைத்தபடியே கேட்டார்கள்.

“இதுல என்னா அதிசயங் கீது? ராத்திரி யாரோ திருட்டுப் பயலுவ எங்கூட்டுக்காரு தூங்கியிருந்த நேரமாப் பாத்து, பீப்பாவுல அடச்சி எடுத்தும் போய் கடல்ல தள்ளிட்டு கீறானுங்க. விடிஞ்சி பாத்தா மனுசனக் காணாம். என்னமோ எதோன்னு நாம் பதறிக் கெடக்குறேன், சாயந்தரமா பாத்து அவரே வர்ராரு. சும்மாவா வந்தாரு? இந்தப் பக்கம் நூறு ஆடு, இந்தப் பக்கம் நூறு மாட்ட இல்ல ஓட்டிக்கினு வந்தாரு”

“ஏதுய்யா இம்மா ஆடு, மாடுங்களும்னு கேட்டா, ‘அட அத யாண்டி கேக்குற? திருட்டுப் பயலுவ பீப்பாவுல வச்சி உருட்டினு போய் என்னை கடல்ல தள்ளிட்டானுங்க. போறன்... போறன்... போறன்... நடு ஆழத்து வரைக்கும் போய்ட்டேன். பாத்தா... பாதாள தேவதை வந்து பீப்பாயைத் தொறக்குது.

‘யார்றா நீ? எதுக்கு இங்க வந்த?'ன்னு கேக்குது.

நான் இன்னாத்த சொல்றது? இந்த மேரி படுபாவிப் பயலுங்க என்னை சாவடிக்கப் பாத்தக் கதைய சொன்னேன். என் மேல எறக்கப்பட்டு, ‘இந்தா உனக்கு நூறு ஆடு, நூறு மாடு'ன்னு குடுத்து, ஓட்டினு போவச் சொல்லிருச்சி'ன்றாரு. இதாம்மா நடந்த கதை” என்று முழு சங்கதியையும் சொன்னாள் அவள். 



பொண்டாட்டிக்காரிகள் அத்தனை பேரும் போனார்கள்.

“அட அறிவு கெட்டவனுங்களா! இதாண்டா நடந்தது. நீங்களும் இருக்கீங்களே?” என்று காரித் துப்பினாள்கள்.

ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது இவன்களுக்கு.

“டேய்! ஆளுக்கு ஒரு பீப்பாயை ரெடி பண்ணுங்கடா'' என்று சொல்லி, அதே மாதிரி தயார் பண்ணிவிட்டார்கள்.

“பாருங்கடி... நங்கள்ளாம் இதுல உள்ள பூந்துக்குவோம். பக்குவமா எங்களை கொண்டுனு போய் கடல்ல தள்ளிறனும்'' என்று மனைவிமார்களிடம் சொல்ல, அவர்களும் அதே மாதிரி பண்ணிவிட்டார்கள். ஆனால், போன புருசன்கள் யாரும் திரும்பி வரவே இல்லை.

அப்புறம் என்ன ஆனது? பொம்மனாட்டிகளை ஆள ஊருக்குள் யாருமே இல்லை என்பதால், எல்லா பொண்டாட்டிகளையும் இவனே கல்யாணம் செய்துகொண்டு சந்தோசமாகக் குடும்பம் நடத்தினானாம்.

குறிப்பு: இந்தக் கதையை எனக்கு சொன்னது எங்க ஊர் மூலிகை வைத்தியர் விஜயன்.

6 comments:

Anonymous said...

I like your blog and poems very much. Keep writing.

--FD

மாசிலா said...

அருமையான கதைங்க. ரொம்பவும் நன்றி.
ஆட்ட ஓட்டி, மாட்ட ஓட்டி கடசியா எல்லா பொம்பளைங்கள ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு!

ஸ்ரீ said...

பாலா உங்கள் கதையும் படமும் நல்லா இருக்கு.

BadNewsIndia said...

மூணு கொழந்தைங்களுக்கு பதிலா தண்ணி அடிச்சுக்கினு சுத்தர மூணு தடியனுங்கன்னு சொல்லிக்கினா போச்சு.
தடியனுங்க கடல்ல வூந்தா கொழந்தைங்க கண்டுக்காது.

திங்கள் சத்யா said...

தீச்செய்தி இந்தியாவுக்கு மிக்க நன்றி. நல்ல காலம், நீங்க வந்து அந்த கொழந்தைங்கள காப்பாத்தினீங்க. அத்தோட கொல பாவத்துலர்ந்து என்னையும் காப்பாத்திட்டீங்க. உங்கள் ஆலோசனைப்படி கதை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு கதை.
கொஞ்சம் எழுத்துப்பிழைகளை குறைத்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்.