Showing posts with label நளினி எழுதும் தொடர். Show all posts
Showing posts with label நளினி எழுதும் தொடர். Show all posts

Tuesday, October 25, 2011

தமிழ் உணர்வை காசாக்குகிறதா ஏழாம் அறிவு?

‘‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்’’ சொல்கிறது ஏழாம் அறிவு திரைப்பட கோஷ்டி.

image/ta.wikipedia.org/Yoshitoshi

‘‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்’ என ஜப்பானியர்கள் கூறுவதாக’’ சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா’ என்று பெயர் மாற்றியதே அவர்தான்’’ என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

இந்நிலையில், ‘‘‘ஏழாம் அறிவு’ திரைப்படம், தாங்கள் கடவுளாகப் போற்றிவரும் ‘போதி தர்மரை’ இழிவுபடுத்துவதாகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கில், வரலாற்றைத் திரித்துக் கூறி அவரை ‘தமிழராக’ சித்தரிப்பதாகவும், எனவே, அப்படத்தை தடை செய்யவேண்டும்’’ எனக் கோரியிருக்கிறது பவுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘நாகர் சேனை’ அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பானது சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

‘‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நாயகன் சூர்யாவும், ‘காஞ்சிபுரத்தில் பிறந்து, சீனாவுக்குப் போய், தற்காப்புக் கலையை நிறுவிய போதி தர்மருக்கு, சீனாவில் எங்கு பார்த்தாலும் சிலைகள் உள்ளன. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டது. இதற்காகத்தான் நாங்கள் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்துள்ளோம். படம் வெளியான பிறகு, ஒவ்வொரு தமிழனும் கர்வத்துடன் நடந்துகொள்வான்’ என்று தமிழர்களை உசுப்பேற்றும்விதமாகப் பேசியுள்ளனர்.

இங்கே, போதி தர்மரை ‘தமிழர்’ என்று ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் அடையாளப்படுத்தக் காரணம், ‘உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளை, உண்மைக்கு மாறாக தட்டியெழுப்பி, கோடிக்கணக்கில் காசு பார்க்கும் முயற்சிதானே ஒழிய, தமிழ் பற்று அல்ல. படம் குறித்த விளம்பரத்தில்கூட, ‘10 நிமிட காட்சிக்காக மட்டும், ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டதாக’ சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

உண்மையில், ‘போதி தர்மர்’ ஒரு தமிழரே அல்ல. போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில், அதாவது கி.பி. 300 முதல் கி.பி. 600-ம் ஆண்டுகள்வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.’’ என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இவர்களின் காலத்தை ‘‘தமிழகத்தின் இருண்ட காலம்’’ என, சிலர் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்’ தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது’ என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.’’ என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்’’ என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்’. களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

யாப்பருங்கல விருத்தி’ நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்’ என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்’ எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்” என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ எனும் நூலில், ‘‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்.’’ எனச் சொல்வதுடன், ‘‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்’’ என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே’’ என்பதுடன், ‘‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்’’ என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி’ முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை(சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

‘‘சரி, பல்லவர்கள் தமிழர்களா?’’

‘‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே’’ என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன். 

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை.’ என்கிறார் பேராசிரியர் அன்பழகன். *(நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி’ என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது.’’ என்றவர்,
 
‘‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்’ என்று கூறியிருப்பதும், ‘கி.பி.520-ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்’ என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார்.


‘‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார்.ஆனால், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது, போதி தர்மராக சித்தரிக்கப்படும் சூர்யா, அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது. இது, பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட பலகோடி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவேதான், பவுத்தர்களின் மனதை புண்படுத்தும் இத்திரைப்படத்தை, உடனடியாக தடை செய்யவேண்டும்.’’ என்கிறது நாகர் சேனை.

நாகர் சேனை சொல்லும், ‘‘அரைகுறை ஆடையில் பெண்களோடு ஆட்டம்போடுபவராகத் தெரிகிறது’’ என்கிற கருத்து, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே தெரிகிறது. அட்லீஸ்ட், வரலாற்றுப் படங்களிலாவது பாடல்களை தவிர்க்கும் டீசன்ஸியை, தமிழ்ப்பட இயக்குநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. டாக்டர்.கலைஞர்கூட இப்படித்தான் ‘பொன்னர் சங்கர்’ என்கிற வரலாற்றுக் கதையை மொக்கையான ஒரு குத்துப்பாட்டுப் படமாக மாற்றியிருந்தார்.

முடிவுரை:

சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் கதாநாயனாக நடித்து, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ‘மஹதீரா’ திரைப்படம்கூட, முன்ஜென்ம நினைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒருவேளை, அதைப் பார்த்து ‘ஏழாம் அறிவு’ கோஷ்டியினர் ஆசைப்பட்டிருக்ககூடும். ஆனால், ‘போதி தர்மரை’ நினைவில் வைத்துக்கொண்டு சூர்யா-சுருதிஹாசன் ஸ்டில்ஸை பார்க்கும்போது, எனக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வருகிறது.

தரவுகள்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம், பவுதமும் தமிழும்’ மற்றும் தமிழ் விக்கிபீடியா. கருத்துப் பிழைகள் இருப்பின், தயவு செய்து சுட்டிவிட்டுச் செல்லவும்.

Thursday, September 22, 2011

“விடியாத இரவு” -சிறையிலிருந்து நளினி எழுதும் தொடர்!


ன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.

‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் செய்தி வெளியான நாள் முதல், தமிழகம் மற்றும் உலகமெங்கும் எழுந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்கிறது. இன்று நீதிமன்றத் தடை உத்தரவால், மரணம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், உத்தரவு என்னவோ மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது.

மரண தண்டனை ஒழிப்பு என்கிற சமீபத்திய விவாதத்தின்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகு, உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கலாமா? வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே! இவர்களை உடனே தூக்கில் போடவேண்டும்’’ என்பதுபோன்ற பரவலான கருத்தாக்கங்கள் எழுந்தன.  

இந்த விவாதங்களுக்குள் போகும் முன்பாக, ‘நாங்கள் எப்படி கைது செய்யப் பட்டோம், எவ்வாறு நடத்தப்பட்டோம், எந்த சூழலில் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன’ என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். 

இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இளைய தலைமுறையினருக்கு எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியாதல்லவா?   அதற்காகத்தான் உங்களை பத்திரிக்கை வாயிலாக சந்திக்க விழைகிறேன். 

எம் மீதான சித்ரவதைகளை எழுதுவதே இன்னுமொரு சித்ரவதைதான்.

அன்புடன்
நளினி ஸ்ரீகரன்.

***********************************


14, ஜூன் -1991. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அன்று ரொம்பவும் இருட்டாக இருப்பதுபோல உணர்ந்தேன்.  

நானும் என் கணவர் ஸ்ரீகரனும்(முருகன்) இரவு 11 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டோம். அப்போது நான், இரண்டு மாத கர்ப்பம். மூன்று போலீசார் எங்கள் அருகில் வந்து என்னையும், முருகனையும் கைது செய்கிறோம் என்றும், ஆட்டோவில் ஏறுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.

நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றப்பட்டோம். ஆட்டோவின் இடது ஓரத்தில் ஒரு காவலர் அமர்ந்து கொண்டார். காவலர் அருகில் என் கணவர் முருகனும், முருகன் அருகில் நானும், எனக்கு அருகில் ஒரு உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அமர்ந்துகொண்டனர்.

மூன்று பேர் உட்காரும் இடத்தில், நான்கு பேர் உட்காந்து இருந்ததால், அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த உதவியாளர், என் உடலில் படக்கூடாத இடங்களில் தன் கையை வைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்தார். ஒரு தாயாக இருக்கும் என்னை, என் கணவர் அருகில் இருக்கும்போதே, இப்படி அசிங்கமாக நடந்துகொண்ட அந்த காவலர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? இப்போது  நினைத்தாலும் உடல் கூசுகிறது.  

‘கைது செய்யப்பட்டோம்’ என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள, ஒரு சில வினாடிகள்கூட கொடுக்கப்படாமல், எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையின் வேதனையை அனுபவித்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுக் குழுவின் ‘மல்லிகை’ அலுவலகம். அந்த மல்லிகை அலுவலகம் எனக்கும், என்னோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு நரகத்தை காண்பிக்கப்போகிறது என்பது, அந்த ஆட்டோ காம்பவுண்டுக்குள் நுழையும்போது எனக்கு தெரியாது.

ஆனால், மல்லிகைக்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே நரகம் தெரிந்துவிட்டது. பெயர்தான் மல்லிகையே தவிர, மல்லிகை மலருக்கு உண்டான மென்மையோ, மணமோ அந்த கட்டிடத்தில் துளியும் கிடையாது. மாறாக மலருக்கு நேர் மாறான மிருககுணம் உடைய மனிதர்களும், மலத்திலும், சிறுநீரிலும், வாந்தியிலும் என்னைப் போன்றவர்களைப் புரள வைக்கப்பட்ட அவலமும்தான் அந்தக் கட்டிடத்தின் அடையாளங்கள்.

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த விதத்திலும் மனித உரிமைகளை மீறாமல், ராஜீவ் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது என்று புத்தகம் எழுதும் அளவுக்கு மேடைதோறும் இப்போதும் பேசிவரும் அந்த முன்னாள் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  

எங்களைப் பார்த்ததும், “கொலைகாரி சிக்கிட்டாளா? ரெண்டு நாய்களும் சிக்கிட்டாங்களா? அடிச்சு இவங்க முதுகுத் தோலை உரிங்க. அப்போதான் வழிக்கு வருவாங்க” என்று கடும் குரலில் உத்தரவிட்டார். நானும், என் கணவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். மிகவும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி, இடக்குமடக்கான கேள்விகளை கேட்டனர்.

அரை மணிக்கும் மேலாக எனக்கு ஆபாச அர்ச்சனைகள் நீண்டுகொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்து நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அது, என் கணவர் வைக்கப்பட்டிருந்த அறை. வேகவேகமாக அந்த அறைக்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே நான் கண்ட காட்சி! இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. எழுதும் என் விரல்கள் ஆடுகின்றன. என் கணவரை நிர்வாணப்படுத்தி பல பேர் சுற்றி நின்று லத்தியால் அடித்துக் கொண்டிருந்தனர். என் கணவர் வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். நான், கண்களை மூடிக்கொண்டு “அவரை விட்டுவிடுங்கள், அடிக்காதீர்கள்” என்று அலறினேன், அழுதேன், கெஞ்சினேன்.

ஆனால், லத்தி அடிகள் விழுந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த ஒரு அதிகாரி, “என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? சொல்லுகிறபடி கேட்காவிட்டால் உனக்கும் இதே கதிதான். உன் கணவரை அடித்தே கொன்று விடுவோம்” என்று கூறிவிட்டு, என்னை பழைய அறைக்கே இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் என்னை தூங்கவிடவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அந்த இரவிலும் அந்த அறையில் பளிச்சென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என் கண்ணை உறுத்தின. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கைகள் என் கழுத்தை நோக்கி நீண்டது!

-இரவுகள் நீளும்

நன்றி, ‘மீடியா வாய்ஸ்’ 24.09.2011 இதழ்