Showing posts with label gnani. Show all posts
Showing posts with label gnani. Show all posts

Sunday, April 20, 2008

துப்பட்டாவில் ஒளிந்திருக்கிறதா தமிழ்க் கலாச்சாரம்?


''குட்டி ரேவதியா? அவ துப்பட்டாவைக் கையில் எடுத்துக்கிட்டு திரியிறவளாச்சே!’’ சண்டைக்கோழி படத்தில் இப்படி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதப்போக, அது கவிஞர் குட்டி ரேவதியைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக இலக்கிய உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலையை, ‘துப்பட்டா அணியாமல் வந்திருந்தார்’ என்று அவமானப்படுத்தி வெளியே அனுப்பியது கல்லூரி நிர்வாகம். குட்டி ரேவதியின் கவிதைத் தலைப்பாகட்டும், செக்ஸ் சர்வே குறித்த குஷ்புவின் கருத்தாகட்டும் அல்லது லீனா மணிமேகலையின் குர்தா, ஜீன்ஸாகட்டும். எப்படி உடையணிய வேண்டும் என்கிற பெண்களின் தனிப்பட்ட உரிமையைக்கூட ஆணாதிக்கச் சமுதாயம்தான் தீமாணிக்கிறது என்கிற விவாதம் எழுதப்படாமலும், பேசப்படாமலும் போனதுதான் பேரதிர்ச்சியாய் இருக்கிறது.

லீனாமணிமேகலை இயக்கிய ‘தேவதைகள்’ குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி அலியான்ஸ் பிரான்ஸேவில் நடைபெற்றது. விழாவுக்கு இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், அமீர் போன்ற திரைத்துறையினர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர். தழையத், தழைய புடவை கட்டித் தானும் ஒரு தேவதைபோல் மின்னிக்கொண்டிருந்தார் லீனா. புடவைக்கு துப்பட்டா அவசியமில்லாமல் இருக்கலாம். பதிலாக காதுகளை மறைத்தபடி கன்னத்தின் இரு புறமும் விளையாடிக் கொண்டிருந்தது கூந்தல். 'தலைப்புக்கேற்றார்போல் லீனாவும் தேவதைபோல்தான் வந்திருக்கிறார்' என்று நினைத்துக் கொண்டேன். ஏனோ, திடீரென்று ஆடைப்புரட்சி நினைவுக்கு வர, மனம் கல்லூரிச் சாலையிலிருந்து கிளம்பி லயோலா கல்லூரிக்குள் வலம் வந்தது. படித்துக் கிழித்தப் பாமரனும், பத்திரிக்கையாளர் ஞாநியும் பாடாய்ப்படுத்தத் தொடங்கினர். இதோ! அன்று லீனாவோடு பேசிக்கொண்டிருந்ததை இப்பொழுது பதிவிடுகிறேன்.

‘‘சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் ‘கனாக்களம் -2007’ என்கிற தலைப்பில் கடந்த ஜனவரி 15-ம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ‘சினிமாவும் சமூகமும்’ என்பது பற்றி நான் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தி அழைத்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை பத்துமணியளவில் கல்லூரிக்குச் சென்ற போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ‘உங்களை உள்ளே விட முடியாது’ என்று கூறித் தடுத்தார். ‘நான் இங்கே சீப் கெஸ்டாக வந்திருக்கேன். இதோ பாருங்க இன்விடேஷன்ல என் பேர் போட்டிருக்கு’ என்று அழைப்பிதழை எடுத்துக் காட்டினேன். ‘நீங்க யாரா வேணாலும் இருங்க. துப்பட்டா இல்லாம ஜீன்ஸ§ம், குர்தாவும் போட்டிருக்கீங்க. அதனால உள்ளே விட முடியாது’ என்று மீண்டும் மறுத்தார்.

எனக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. ஆத்திரப்படுவதா? அழுவதா? என்றே தெரியவில்லை. ‘நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை... தாலிபான்களின் கோட்டையில் கால்வைத்து விட்டோமா?’ என்று நொந்தபடி நன்பர் அஜயன் பாலாவிற்கும், நிகச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் போன் செய்தேன். சில நிமிடங்களில் புடவை அணிந்த சில கல்லூரி மாணவிகள் கையில் கருப்புத் துப்பட்டாவோடு ஓடி வந்தார்கள். ‘ப்ளீஸ் மேடம்! இதை கழுத்தில் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க’ என்று கெஞ்சலாக அழைத்தார்கள். எய்தவன் இருக்க அம்புகளை நோவதா? ‘‘சுதந்திரமாக உடையணியக் கூட உரிமைகள் மறுக்கப்படும் ஒரு அடிமைகளின் கூடாரத்தில், என்னால் உங்களுக்கு என்ன கூறிவிட முடியும்?’ என்று சொல்லித் திரும்பிவிட்டேன்.

பெண்ணடிமைத்தனம், தனிமனித சுதந்திரம் பற்றி பல தளங்களில் பேசியும், எழுதியும் வரும் என்னை ‘பெண் என்பதால் நீ அடிமைதான்’ என்று முகத்திலறைந்தாற்போல் விரட்டியது பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது. ஜீன்ஸ§ம், குர்தாவும் அணிந்துவர தடை இருப்பதாக முதலிலேயே சொல்லியிருந்தால் விழாவுக்கு மறுத்திருப்பேன். நான் என்ன உடை உடுத்த வேன்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைத் தீர்மாணிக்கும் அதிகாரத்தை லயோலா கல்லூரிக்கு யார் கொடுத்தது? பதினெட்டு வயது பூர்த்தியடைந்த ஒருவர் நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கும்போது, நமக்கு சவுகர்யமான உடையணியக்கூட நாதியில்லையே!

நீ இன்ன உடைதான் போட வேண்டும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எவ்வளவு ஆணவமான போக்கு. அடிமைத்தனத்தை மறுக்க வேண்டும் என்பதற்காக கடவுளையே மறுப்பவள் நான். இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றின் மாணவர்கள், நான் என்ன பேசுகிறேன் என்பதைக் கவணிக்காமல், என்னுடைய உடைகளில் சபலமடையக்கூடிய கீழ்த்தரமான புத்தியுடன் இருப்பார்கள் என்று நிர்வாகம் நம்புமானால், இதுவரை என்ன மாதிரியான கல்வியை அவர்கள் கற்றுத்துந்டிருப்பார்கள்?

சமூக விழிப்புணர்வை போதிக்காமல், பெண்களை இழிவுபடுத்தும் அடிமைத்தனத்தை கற்றுத்தரும் கல்வி நிறுவணங்கள் பேசாமல் சாமியார் மடங்களை நடத்தலாம். புரட்சி இறையியல் என்ற போர்வையில் உலகை ஏமாற்றும் பழமைவாத லயோலா நிர்வாகத்திற்கு அதுதான் பொருத்தமாக இருக்கும். ஒரு விருந்தினரை அழைத்து கையில் துப்பட்டா கொடுக்கும் இவர்களுக்கு பக்கத்து நாட்டுப் பிரதமரோ, மேலை நாட்டு மாணவர் குழுவோ வரும் போது துப்பட்டா கொடுக்க தைரியம் இருக்கிறதா? என்று கேள்விகளை அடுக்கியவர் கொஞ்சமும் படபடப்புக் குறையாமல் தொடர்ந்து பேசினார்.

‘‘நான் தமிழாநாட்டில் எத்தனையோ பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறேன். அடிப்படை வசதிகளே இல்லாத சுமார் இரண்டாயிரம் கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். கல்வியறிவு இல்லாத பாமர மக்கள்கூட ஜீன்ஸ் போட்டதற்காக என்னை வெறுத்து ஒதுக்கியதில்லை. ஆனால் பாமரன், ஞானி, எஸ்.ராமகிருஷ்ணன், அஜயன் பாலா போன்ற எழுத்தாளர்களும், இயக்குனர்கள் பாலுமகேந்திரா, வசந்தபாலன் ஆகியோரும் இதே நிகழ்ச்சியில் எந்த உறுத்தலுமின்றி உறையாற்றிச் சென்றிருக்கிறார்கள். ஏன்?

அவர்களுக்கு துப்பட்டா பற்றிய சங்கடம் ஏதுமில்லை என்பதுதான். பாலுமகேந்திராவும், ஞானியும் இரண்டு நாட்கள் கழித்து, தங்களுக்கு இந்த விஷயமே தெரியாது என்று தொலைபேசியில் கூறினார்கள். பெண்ணுரிமை, முற்போக்கு வாதம் என எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய படைப்பாளிகள், இப்போது நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால், எங்கோ தேசத்தில் நடக்கிற கொடுமைகளைக் கண்டு பொங்கியெழும் முற்போக்குவாதிகள் பக்கத்தில் நடக்கும் மனித உரிமை மீறலைக் கண்டு மவுனம் சாதிப்பதுதான் வேதனை’’ என்றார்.

‘‘இப்படித்தான் உடையணிந்து வர வேண்டும் என்று லயோலா கல்லூரியில் விதிமுறை இருக்கிறது. அது பிடிக்கவில்லை என்று நிகழ்ச்சியைப் புறக்கணித்து லீனா வெளியேறிவிட்டார். இந்த விஷயத்தில் இரண்டு பேர் செய்ததும் சரியே. சண்டைக்கோழி படத்தில் குட்டி ரேவதியை அவமானப்படுத்தியதாக கொதித்தெழுந்த லீணாமணிமேகலை, சிவாஜி படத்தில் அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்களை கருப்பு மை பூசி அவமானப்படுத்தினார்களே! அப்போது எங்கே போயிருந்தார்’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார் எழுத்தாளர் பாமரன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தொடர்ந்து பேசிய லீனாமணிமேகலை ‘‘அங்கவை, சங்கவை இரண்டும் தமிழ்ப் பெயர்கள் என்பதற்காகத்தான் பாமரன் வரிந்துகட்டினாரே தவிர அவர்கள் பெண்கள் என்பதால் அல்ல. பெண்கள் இப்படித்தான் உடை அணிந்துவர வேண்டும் என்கிற ஆனாதிக்க சிந்தனையை பாமரன் ஆதரிக்கிறாரா, இல்லையா? என்பதுதான் கேள்வி. பெண்களின் உடைகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்வதே ஆண்களின் முழுநேர வேலையாக இருக்கிறது. இதற்கு பதிலாக உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி வாடும் நாட்டுமக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கட்டும்.

பெண்கள் அணியும் உடைகள் கவர்ச்சியாக இருப்பதால்தான் ஈவ்டீசிங் பெருகிவிட்டது என்கிறார்கள். கவர்ச்சியான உடை என்றால் இடுப்புத் தெரிய உடுத்தும் புடவையைத்தானே முதலில் தடை செய்ய வெண்டும்! எதிரில் வரும் வாகணத்தைக்கூட கவணிக்காமல் அங்கங்கே இழுத்து... இழுத்து... சரி செய்தபடி செல்லும் பெண்ணுக்குத்தான் தெரியும், புடவையில் உள்ள அசவுகர்யம். உடையைப் பார்த்து அத்துமீறத் துனிபவனை விட்டுவிட்டு பாதிப்படைந்த பெண்ணைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பது அயோக்கியத்தனம். தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று ஒரு பெண்ணுக்குத் தெரியும். முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்வது பற்றி ஆண்களுக்குக் கற்றுக்கொடுங்கள்’’ ஒட்டுமொத்தக் குமுறல்களையும் கொட்டித் தீர்த்தார் லீனா.

குட்டிரேவதியிடம் இது விஷயமாக பேசிக்கொண்டிருந்தபோது, ‘‘லீனா எப்படிப்பட்டவர், என்ன மாதிரியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர், எந்த விதத்தில் உடை அணிந்திருப்பார் என்கிற எல்லா விஷயங்களும் லயோலா கல்லூரிக்குத் தெரியும். சினிமா சம்பந்தமான லீனாவின் பேச்சுக்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவரது ஆடை மட்டும் அச்சமூட்டுகிறதோ?

எப்போதுமே சினிமா பிரபலங்களைக் கூப்பிட்டுத் தங்களை பெருமையடித்துக் கொள்ளும் லயோலா நிர்வாகத்திற்கு இதன்மூலம் செலவில்லாமல் விளம்பரம் கிடைத்திருக்கிறது. வியாபார ரீதியிலான, மலிவான சிந்தனைகளையுடைய, வெகுஜன நுகர்வுகளின் அடிமைகளை உற்பத்தி செய்யும் லயோலா நிறுவனத்திடமிருந்து விழிப்புணர்வுடன் கூடிய மாணவர்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இதுவரை மத நிறுவனங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்போது கல்வி நிறுவனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன. என்னதான் அறிவாற்றல் கொண்டவளாக, திறமையானவளாக இருந்தாலும், பெண்ணை ஒரு பாலியல் குறியீடாகவே பார்க்கும் இச்செயல் மிகக் கீழ்த்தரமான, வண்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’’ என ஆவேசப்பட்டார்.

தொடர்ந்து, ‘‘இப்போது எல்லா மதிப்பீடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் ஒன்று சேர முடியாதபடி பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டனர். ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு ஆதரவான எந்தக் கருத்துக்களையும் எதிர்பார்க்க முடியாது. ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக’ எல்லாம் உங்களின் பாதுகாப்புக்காகத்தான் என்று ஆண்கள் கூறுவதை நினைத்தால் எரிச்சலாக வருகிறது. இதை பாதுகாப்பான சூழலாகவே உணர முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டாம். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய அதிகாரம்தான் தேவை’’ என்கிறார் குட்டிரேவதி.

லயோலா கல்லூரிக்குச் சென்ற இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் பெரியாரியவாதியான ஓவியா ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், ‘‘இந்த விஷயத்தில் எங்களால் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க முடியாது. ‘நமக்கென்று உள்ள பன்பாட்டை மீறக்கூடாது’ என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. விருந்தினர்களைப் போற்றுவதும் பன்பாடுதான். இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையையே நிர்வாகம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது’ என்றும் தடை விதிப்பார்கள். இது வண்மையாக கண்டிக்கத்தக்கது’’ என்றார்கள்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலையிடம் பேசியபோது, ‘‘அவர் டைட் ஜீன்ஸ§ம், ஸ்லீவ்லெஸ் குர்தாவும் அணிந்து மாணவியைப் போல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். அதனால்தான் காவலர்கள் தடுத்துள்ளனர். ஏதோ ஃபேஷன் ஷோவுக்கு வருவதைப்போல்தான் அவர் கல்லூரிக்கு வந்திருக்கிறார். ஒரு கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே கருத்தைச் சொல்ல வேண்டியவர் மார்கெட்டிற்குச் செல்வதைப் போல உடையணிந்து வரக்கூடாது. கல்லூரி என்பது கோவிலுக்குச் சமம். இதை அந்தம்மா உணர வேண்டும்’’ என்றார்.

லீனா மணிமேகலைச் சொல்வதுபோல், ‘‘பெண்களைப் பிரித்தாளும் ஆண்களின் சூழ்ச்சியால், இந்த அவலம் பெருமளவிலான விவாதத்துக்கு உள்ளாகாமலே போய்விட்டது’’. ஞாநியின் ஓ பக்கங்களோ, பாமரனின் படித்துக் கிழித்ததோ இது பற்றி எதுவுமே பேசாமல் வாய் மூடிக்கொண்டது, பத்திரிகை வாசகர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்குமென்று நம்பலாம்.

Tuesday, March 11, 2008

"கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை" -அழ‌கிய‌ பார்வதி.

"கவிதைகள் எப்பொழுதும் அழகு தான்
சில சமயம் கவிதாயினியைப் போல"
இந்த வரிகள் பார்வதிக்குப் பொருத்தமாக இருக்கும். பார்த்தவுடன் பிடித்துப் போகிற கனிவானத் தோற்றம், இனிதான குரல் வளம்.பேனா முனை என்பது படைப்பாளிகளுக்கு பெரும்பாலும் கவிதையிலிருந்து தான் தொடங்குகிறது போலும்.அந்த வகையில் "இப்படிக்கு நானும் நட்பும்" என்கிற கவிதைத் தொகுப்பபின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள அழகான கவிஞர் பார்வதி.

அழகைக் குறிப்பிட காரணம் இருக்கிறது. அடிப்படையில் பார்வதி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். பத்திரிகையாளர் ஞானியின் பரிக்ஷா நாடகக் குழுவில் பயின்று தேர்ந்தவர். பல்வேறு குறும்படங்களில் நடித்திருக்கிற பார்வதிக்கு சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது. சும்மா கேஷுவலா ட்ரெஸ் மாற்றினாலே போதும், இன்னொரு ஆளாகத் தெரியக் கூடிய அம்சம் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருக்கிறது. "இப்படி கெட்அப் சேன்ஜ் ஆகிற விஷயம் பற்றி பல முறை ஃபிரண்ட்ஸ் என்னிடம் கேட்டதுண்டு" என ஆச்சர்யப்படுகிறார். அகில இந்திய வானொலியில் கலைஞர்களைப் பேட்டி கான்பது, குரும்படங்களுக்கு பின்னனிக் குரல் கொடுப்பது, பத்திரிகையில் ஃபிரீலான்சர் என்று பன்முகத் திறமையுடன் திகழ்கிறார் பார்வதி.


சின்ன வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதா? கவிஞர் ஆனது எப்படி நிகழ்ந்தது?

எழுத்தை தொழிலாகக் கொள்வதற்கான எந்தத் திட்டங்களும் பால்ய வயதில் என்னிடம் எழவில்லை. குடும்ப சூழல் காரணமாக ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயம் கம்பீரமான உருவங்கள் மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் பாரதி, சுபாஷ் சந்திர போஸ், விவேகானந்தர் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தார்கள். பாரதியின் கவிதைகள் தான் எனக்குள் பொரியைக் கிளப்பியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பாரதி அளவுக்கு பெருங்கோபம் என்னிடம் இல்லை என்றாலும், கொஞ்சமே சீரியஸான ஆள் நான். பொது இடங்களில் ஈவ் டீசிங் மாதிரியான கொடுமைகள் நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காமல் தட்டிக் கேட்பேன்.

பாரதியின் கவிதைகளைத் தொடர்ந்து அதே ஆர்வமுடன் மற்ற கவிதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் எமிலி டிக்கன்சன், ராபர்ட் ஃபிராஸ்ட் ஆகியோர் என்னை மிகவும் பாதித்தவர்கள். ஆக்ஸ்போர்ட் புக் ஸ்டோர்.கம் என்கிற இனைய தளம் ஆங்கிலத்தில் ஒரு ஹைகூ கவிதைப் போட்டி நடத்தியது. அப்போதுதான் முதன் முதலாக ஒரு ஹைகூ எழுதி அனுப்பி வைத்தேன். தேர்வாகி விட்டது. அன்றிலிருந்து எழுத்து எனக்கு சாப்பாடு தூக்கம் போல ஆகிவிட்டது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத முடியும் என்பதை என் கூடுதல் பலமாகக் கருதுகிறேன். தற்போதைய தொகுப்பு நட்பு என்றாலும் அடுத்தடுத்த என் அனுபவங்களைப் பொறுத்து கவிதைத் தளம் விரிவடையும்.

உங்கள் கவிதைகளில் நட்புக்கும், காதலுக்கும் இடையில் ஊசலாடுவது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே. ஆண், பெண் நட்பில் இப்படியான சிக்கல் தவிற்க முடியாத ஒன்றாகக் கருதலாமா?

சமூகம் என்ன சிந்தனையில் கிடக்கிறதோ அதே நினைப்பில் கேள்வி கேட்கிறீர்கள். என்னுடயது நட்பு மட்டும்தான். நீங்களும் நானும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தால் பலரும் பலவிதமாய் பார்க்கத் தான் செய்கிறார்கள். கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை. நம்மைக் காதலர்கள் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் மனம்தான் நாறிக் கிடக்கிறது. மஞ்சற் காமாலை வந்தவர்களுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

சென்னையைப் பொறுத்த மட்டில் நம்மைப் போன்ற நன்பர்களுக்கு பிரச்னை இல்லை. அவரவர்களுக்கு ஆயிரம் வேலை. ஆனால் கிராமங்களில் இப்பிரச்னை பூதாகரமானதாக உள்ளது தெரியும். சகோதரி முறை உள்ளவர்களிடம்கூட வெளிப்படையாக பேசுவதில் சங்கடம் உள்ளது. இந்த அதரப் பழசான பொதுப்புத்தி மாற வேண்டுமானால் பழைய பஞ்சாங்கங்களை (சந்தேக புத்திக்காரர்கள்) புதுப்பிப்பதை விட்டுவிட்டு இளைய தலைமுறை நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இவர்கள்தான் வருங்கால மூத்தத் தலைமுறையினர். அதற்கான முயற்சியாகவே எனது கவிதைத் தொகுப்பைக் கருதுகிறேன். ரத்த சம்பந்தமில்லாத ஆண், பெண்ணுக்கு இடையில் வெளிப்படையான உறவுமுறைகள் என்று சாத்தியமாகிறதோ அன்றைக்கு இந்த சமுதாயம் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு வாழும்.

தற்போது பெண் கவிஞர்கள் சர்ச்சைகளில் அடிபடுவது வாடிக்கையாகி விட்டது. "அதெல்லாம் கவிதையே அல்ல. பார்வை தங்கள் மீது திரும்புவதற்கான முயற்சியின் விளைவு" என்ற விமர்சனம் சிலரால் முன் வைக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?

எந்த ஒரு முத்திரையும் என் மீது குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. கவிதை என்பது சர்ச்சைகளின் உலகமாக இருக்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. வெளிப்படுத்துவது அவர்களுடைய சுதந்திரம். அதே சமயம் விமர்சனங்களை தவிர்க்க முடியாது என்பதால் அதையும் ஏற்றுக் கொள்கிற மனோபாவமும் தேவைப்படுகிறது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுதுவேன். முதலில் எனக்கான விஷயங்கள். எதிர் காலம் என்னவென்பதை இப்போது யாராலும் தீர்மானிக்க முடியாது.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், குறும்படங்களில் நடிப்பு என்ற அனுபவங்கள் மூலம் சினிமா குறித்த உங்கள் பார்வை எப்படி இருக்கிறது. சினிமாவில் முழுநேர கதாநாயகியாக இருக்கப் போவதில்லை என்றாலும் இயக்குநர் கனவு இருக்குமே?

டெக்னிக்கலான பார்வையோடு சினிமாவைப் பார்த்தாலும் பொழுதுபோக்கையும் மறந்துவிடவில்லை. எனக்கு மொழியும் பிடித்திருக்கிறது, போக்கிரியும் பிடித்திருக்கிறது. பாடல்கள், நடனம், டப்பிங், ரீரெக்கார்டிங் என்று எல்லா விஷயங்களையும் கவனிக்கத் தவறுவதில்லை. பாடல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது மெட்டுக்கு ஏற்ற மாதிரி டூப்ளிகேட் போட்டுப் பார்ப்பேன். பாய்ஸ் படத்தில் வரும் 'எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா' பாடலை 'எனக்கொரு பாய் ஃபிரண்ட் வேணுமடா' என்று முழுவதும் மாற்றி வைத்திருக்கிறேன். எனக்குள்ளும் ஒரு குட்டி டைரக்டர் ஓடிக்கொண்டிருக்கிறார். அவரால் குறும்படங்களைத்தான் இயக்க முடியும். ஆனால் சினிமாவுக்கு பாடல் எழுதுவதை இப்போதே சிறப்பாக செய்ய முடியும்.

'எழுத்து, நடிப்பு' என்று ஆகியிருக்காவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்? அழகான முக வடிவம், நல்ல குரல்வளம் இரண்டும் உள்ளதே. டி.வி. தொகுப்பாளினியாக முயற்சிக்கவில்லையா?

எனக்கு தமிழை பிழையின்றி சுத்தமாகப் பேசத் தெரியும். அங்கே தப்புத் தப்பாய் பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அது என்னால் முடியாது. "ரேடியோ ஜாக்கி' ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒரு ரேடியோ நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். தேர்வு செய்யும் குழுவில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சுத்தமாக தமிழே தெரியாது. தமிழில் ஒலிபரப்பாக வேண்டிய ஒரு நிகழ்ச்சிக்கு தமிழே தெரியாத ஆசாமிகள்(நார்த் இண்டியன்ஸ்) உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கேள்வி கேட்பதோடு இல்லாமல் தமிழர்களைக் குறித்த இளக்காரப் பார்வையும் அவர்களிடம் இருந்தது. என்னிடம் நிறைய தமிங்கிலீஷ் பேச வேண்டுமென எதிர்பார்த்தார்கள். எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரம் வேலை பார்த்தாலே என்னால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். என்னை மறைத்துவிட்டு வேறொரு ஆளாக நீடிக்க முடியாது எனக்கூறி கடுமையாக சண்டை போட்டுவிட்டு வந்தேன்.

ஒரு இன்ஸ்டன்ட் கவிதை சொல்லுங்கள்?

இன்ஸ்டன்ட் காபி வேணும்னா கேளுங்க. ஹபிபுல்லா ரோட்ல கிளாசிக் கார்னர்னு ஒரு டீக்கடை இருக்கு. அங்கதான் என் ஃபிரண்ட்ஸோட 'டீ' அடிக்கிறது வழக்கம். என்னமோ... ஒரு பாட்டுப் பாடுங்க, ஒரு டான்ஸ் ஆடுங்கன்னு கேட்பது போல் கேட்கறீங்க. இயந்திரம் மாதிரி எங்க வச்சாலும் என்னால் கவிதை எழுத முடியாது. கவிதை என்பது மனசு மாதிரி. ரொம்ப லெக்சர் கொடுக்கிறேனோ! கூல் டவுன்மா. உங்களுக்காக மனசு பற்றி ஒரு கவிதை.

"நீள்வட்டம் பழுப்பு மஞ்சள்
சருகுகள் சப்தம் செய்கின்றன
அவற்றின் உணர்வுகளும் உலர்ந்ததாலா?"