Showing posts with label ilayaraja. Show all posts
Showing posts with label ilayaraja. Show all posts

Monday, March 3, 2008

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா? -மீண்டும் மோக‌ன்!


மோகன் பாடல்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காதல் கடிதங்களில்கூட அவரது பாடல்களை காப்பியடித்து கவிதை என்று சக்சஸ் செய்து கொண்டவர்கள் ஏராளம். சி.டி விற்கும் சின்ன பிளாட்பாரக் கடைகள் கூட மோகன் ஹிட்சை தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது. பரபரப்புகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியை நாடுகிற போது ''மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேட்குதா... கேட்குதா...'' என்று கேட்க நேர்ந்தால் அவ்வளவு சுகமாக இருக்கிறது!

தமிழ் சினிமாவின் வரலாற்றில், தமிழகத்தின் காதல் இதயங்களில் மோகனுக்கென்று தனித்த இடம் உண்டு. என்ன ஆனதென்றே தெரியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாம் வலி நிறைந்தவை. ஒரு வழியாக சுட்டபழம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளவரை சந்தித்த போது, எதுவுமே மாறவில்லை. அதே முகம், அதே சிரிப்பு,அதே இளமை என்று அன்று பார்த்த மோகன் மாதிரியே இருக்கிறார்.

என்ன ஆச்சு, ஏன் இந்த இடைவெளி?

"நிறைய உழைச்சிட்டேங்க. சராசரியா என்னுடைய உடல்நிலையை மீறி ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்திருக்கேன். ஒரு வருஷத்தில் மட்டும் பத்தொன்பது படங்கள் ரிலீசாகியிருக்கு. எல்லாமே வெற்றியா இருந்ததால சோர்வோ, அலுப்போ தெரியலை. 'அப்பாடா... போதுமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்'னு நேனச்சேன் பாருங்க! அங்க விழுந்த இடைவெளிதான். மாசம் வருஷமாச்சு, வருஷம் பல வருஷமாச்சு.

இடையில் என்னவெல்லாமோ நடந்து, என்னைப் பற்றி இஷ்டத்திற்குமான வதந்திகள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்கவில்லை. ஆனாலும் இட்டுக்கட்டப்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளால், மாலையும் கையுமாக என் வீட்டிற்கு வந்து நின்றார்கள். நினைத்துப் பாருங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும் போதே 'நீ செத்துப் போய்ட்டியாமே' என்று வந்து நின்றால் சம்பந்தப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும்? நான் மட்டுமில்லாமல் என் குடும்பமே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதிலிருந்து மீள்வதற்கே இரண்டு வருடங்கள் பிடித்தது. இதற்கு செத்துப் போவதே மேல் என்று சொல்லலாம்.

'தூங்கும் போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துப் போய்ட்டான்னு சொல்லி அடக்கம் பண்ணிடுவானுங்க'ன்னு சொல்வாங்க. அது என் வாழ்கையில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட சில இடங்களிலேயே என்னைப் பார்த்த சிலர், 'ஏம்பா மோகன் செத்துப் போய்ட்டார்'னு சொன்னாங்க. இந்த ஆளப் பாத்தா அவர் மாதிரியே தெரியுதே'ன்னு என் காதுபடவே பேசினாங்க.

இடைவெளின்னு சொல்றீங்க. என்ன தான் செஞ்சிட்டு இருந்தீங்க. அவ்வளவு நாளும் சும்மாவே இருந்தீங்களா?

நான் எங்கங்க சும்மா இருந்தேன். சொன்னா நம்புவீங்களா! 'சிவிக் சினிமா'ங்கற பேர்ல சொந்தமா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்திருக்கேன். 'அச்சம் மடம் நானம், பிருந்தாவனம், தெலுங்கு சன் நெட் ஒர்க்கில் ஹாஸ்ய ராமாயணம், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பகும் செல்வங்கள்' எல்லாமே என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். மோகன் என்கிற பெயரை யூஸ் பண்ண வேண்டாமே'ன்னு நெனச்சு இதை விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸோடுகளை எனது நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதால் மீண்டும் வெளிப்படும் போது ஜெயித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இடையிடையே வந்து போன சில ஸ்கிரிப்டுகளும் திருப்தியாக அமையவில்லை. அந்த நேரத்திலும், என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்தேன். எதிர்பாராத காரணங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெரியதிரைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 'பெருசு' பட இயக்குநர் ஜி.கே கிடைத்தார். எனக்கும் அவருக்குமான அலைவரிசை பிரமாதமாக ஒத்துப் போனது.

'சுட்டப்பழம்'னு ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தை செஞ்சுக்கிட்டிருக்கோம். என்னால அடிச்சு சொல்ல முடியும். சமீபத்தில் இந்த மாதிரி ஒரு படம் வெளிவந்ததில்லை என்று. ரொம்ப வேகமான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் நிச்சயம் இது வெற்றிபெறும்.

ஒவ்வொரு நாளும் பாடல்கள் வழியே மறக்க முடியாத நடிகராக நிலைத்துவிட்டீர்கள். ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதற்கு பாடல்கள் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

பார்க்காத நேரங்களில்கூட பாடல்கள் தாலாட்டுகின்றன என்பது உண்மை தான். ஆனால் என்னுடைய வெற்றிக்கு வெறும் பாடல்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், நான் நன்றாக நடிக்கவில்லையா என்ன? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு படத்திற்கான வெற்றி என்பது அதன் கதையில் தான் அடங்கியிருக்கிறது.

முதல்ல படம் நல்லா இருக்கணும். அதோட சேர்ந்து பாடல்களும் பிரமாதமா அமைஞ்சதுன்னா அது சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்கள்ல நீங்க பார்க்கிற மோகன் மாதிரி இல்லாமல் 'விதி, நூறாவது நாள்'னு வில்லத்தனமான ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் என்ன காரணம்? அது நல்ல படம் என்பது தான். அதைவிட முக்கியம் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. வெற்றி என்பதின் பங்கு அதில் பணியாற்றிய எல்லாருக்குமானது.
உங்கள் ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள். காதல் கடிதங்கள் வந்ததுண்டா?

இன்றுகூட வெளிநாடுகளிருந்து ரசிகர்கள் பேசினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிஃப்ட் பார்சலே வீடு தேடி வந்தது. நம்பரை எப்படித்தான் பிடிக்கிறார்களோ! இண்டர்நெட்டில் 'சுட்டப்பழம்' பற்றி தகவல் பார்த்தார்களாம். 'சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க சார்!'னு கேட்கிறாங்க. என் ரசிகர்களைப் பொறுத்த அளவில் நானும் அவர்களை மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கவில்லை.

காதல் கடிதங்களைப் பற்றிச் சொல்வதென்றால் அதை யார் எழுதினார்களோ அவர்கள் என்மீது தன்னையறியாமல் கொண்ட அன்பினால் ஆனது. அதை விளம்பரப்படுத்தி கொச்சைபடுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயம் நீங்கள் 'ரீ-எண்ட்ரி' ஆகும் போது இளையராஜாவுடன் வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இளையராஜாவோ, எஸ்.பி.பி.யோ! இன்னும் யார் யாரெல்லாம் உங்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களோடு இனைந்த அந்தக் கூட்டணி எப்போது சாத்தியம்?

அப்படி ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இருக்குமானால், அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. என்றாலும் சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டுமே! நான் வெறும் நடிகன் மட்டும்தான். என்னைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தேதிகள் ஒத்துவர வேண்டும்.

எனக்காக இளையராஜா மீண்டும் இசையமைப்பதோ, எஸ்.பி.பி மீண்டும் பின்னணி பாடுவதோ நடக்கும் என்றால், அதைவிட சந்தோஷமான தருணம் வேறெதுவும் இருக்க முடியாது. இது ஆண்டவன் நினைத்தால், அவனோடு என் ரசிகர்களும் நினைத்தால் நிச்சயம் முடியும் என்று நினைக்கிறேன்.

Friday, February 29, 2008

ஒரு ரூபா கொடுத்தா ஆடிக்கிட்டே இருப்பேன் ‍‍-ஸ்நேக் சாந்தி.


சின்னக் கம்மல், சிம்பிளான குர்தா ஜீன்ஸ் என்று காட்சியளிக்கிற சாந்தி ஸ்டில் கேமிராவைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். "என்னங்க இது! ஒரு டான்ஸ் மாஸ்டர், எல்லா நடிகர்களையும் ஆடவெச்சே பென்டெடுக்கிற ஆடல் மெக்கானிக். நீங்க பார்க்காத கேமிராவா?' என்றால், "அய்யய்யோ! அது வேற, இது வேறங்க' என்று சிரிக்கிறார்.


'மெட்டி ஒலி' சாந்தியை மறக்க முடியுமா என்ன? முதல் ஆறு மாதங்கள் அந்தப் பாடலை வைத்துத் தான் மெட்டி ஒலியே ஹிட்டானது. பெரிதாகக் குடும்பப் பின்னணியோ, முறையான நடனப் பயிற்சியோ இல்லாமல் இன்று சினிமா உலகில் ஒரு திறமையான நடன இயக்குந‌ராக உயர்ந்திருக்கிற சாந்திக்கு, இப்போது அவரே வைத்துக் கொண்ட பெயர் லக்ஷன்யா'. சினிமா, விளம்பரம்'னு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவரை ஓய்வு நாள் ஒன்றில் சந்தித்தேன்.


"இந்த டிரஸ் கலர் கொஞ்சம் டல்லா இருக்கு. போட்டோவுக்காக ஒரு கலர்ஃபுல் டிரஸ் போட்டுட்டு வாங்களேன்" என்றால் "இது ஒன்னு தாங்க இருக்கு. வேற டிரெஸ் இல்லைங்க" என்கிறார் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக. அழகா தெரியணும்னு ஆசையில்ல போலிருக்கு. சரி! உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்திச் சொல்லுங்க?"


"கரடி பொம்மை, பிள்ளையார் பொம்மை , மீன் குழம்பு இதெல்லாம் பிடிக்கும். அப்புறம் குழந்தைங்க, ரஜினி, இளையராஜா பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஜீன்ஸ், டாப்ஸ், கலர் கலரா புடவைகள் அப்படீன்னு ஷாப்பிங் பண்றது ரொம்ப, ரொம்ப பிடிக்கும் . என்னை ஒரு டிரஸ் பைத்தியம்னே சொல்லலாம். அந்தளவுக்கு சளைக்காம ஷாப்பிங் பண்ணுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்னு பார்த்தா பொய் சொல்றது சுத்தமாப் பிடிக்காது. யாராவது பொய் சொன்னா சட்டுனு கோபம் வந்துடும்" என்றபடியே என்னை ஒரு முறை, முறைத்தார்.


"ஆஹா... நீங்க தானா அது? எனக் கேட்டுக்கொண்டே... இப்பதான் சொன்னீங்க. எனக்கு பொய் சொல்றதே பிடிக்காதுன்னு. ஆனா, எங்கிட்ட வேற கலர் டிரஸ் இல்லைன்னு சொன்னது பொய் தானே? என்று வகையாய் மடக்கினேன்.
அப்போ அவர் மூஞ்சியைப் பார்க்கனுமே. சிரித்த சிரிப்பும், பட்ட வெட்கமும். அடேங்கப்பா! ஒரு திரைப்படமே எடுக்கலாம். அத்தனை ஆக்க்ஷஷ‌ன்கள். சட்டென சுதாரித்துக்கொண்டு சொல்கிறார்


"சாரி! சுத்தமா தூக்கமே இல்லையா. கண்ணெல்லாம் எரியுது. டிரெஸ் மாத்த கஷ்டப்பட்டுக்கிட்டு அப்படி சொன்னேன். நான் சொன்னது இந்த மாதிரி சின்னச் சின்னப் பொய் கிடையாதுங்க‌. நம்பிக்கை துரோகம் பண்ற மாதிரி, அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி பெரிய பொய்களைச் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். யாருக்கும் எந்த பாதிப்புமில்லாத சிம்பிள் பொய்யெல்லாம் கணக்குல சேர்க்காதீங்க".


சொல்லுங்க சாந்தி. நீங்க எப்படி டான்சர், டான்ஸ் மாஸ்டர் ஆனீங்க?

"சின்ன வயசுலர்ந்தே டான்ஸ்னா எனக்கு உயிருங்க. ஒரு ரூபா குடுத்தா போதும். நாம்பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பேன். அப்டியே ஸ்கூல் போனேனா... அங்க, ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடி நிறைய பிரைஸ் வாங்கினேன். இன்னைக்கி நான் டான்ஸ் மாஸ்டரா ஆனாலும், இதுவரை எங்கேயும் போய் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டதில்ல. நானா ஆடிப் பழகிட்டதுதான். நாங்க சாதாரண குடும்பம். அக்கா ஏற்கனவே சினிமாவில டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க. குடும்பத்துக்கு உதவி பண்றதுக்காகத்தான் நான் சினிமாவுல டான்சரா சேர்ந்தேன்.


ஆரம்பத்துல சாதாரண குரூப் டான்சரா இருந்து படிப்படியா அசிஸ்டென்ட் ஆனேன். பதினஞ்சு வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். தருண், பிரகாஷ்,பிரபு தேவா, கல்யாண், பிருந்தா இப்படி பல மாஸ்டர்களிடம் ஒர்க் பண்ணியிருக்கேன். நான் ரொம்ப உயரம்ங்கறதால(எங்க ஊர்லகூட 'எட்டடி'ன்னு ஒருத்தர் இருக்காரு) என்னதான் நல்லா ஆடினாலும் பின் வரிசையிலதான் நிக்க வைப்பாங்க. அப்பெல்லாம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். பிரபுதேவா மாஸ்டர் தான் உயரம் குள்ளம், குண்டு‍‍‍‍‍ ஒல்லின்னு எல்லாம் பார்க்க மாட்டாரு. அவருக்கு ஃபெர்பாமன்ஸ்தான் முக்கியம். அவரும், பிருந்தா மாஸ்டரும்தான் என்னை முன் வரிசைல நிக்க வச்சு வாய்ப்புக் கொடுத்தவங்க" என்று தான் சினிமாவுக்குள் நுழைந்த‌ க‌தையை விள‌க்கினார்.


மெட்டி ஒலி சாந்தின்னா சின்னக் குழந்தைங்கள்ல இருந்து என்பது வயது பெருசுகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை பிரவேசம் எப்படியிருந்தது?


"உண்மை தான். டி.வி. பார்க்கிற 'அ முதல் ஃ' வரையிலான அத்தனை பேரும் எனது மெட்டி ஒலி டான்சை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை பல முறை நான் நேர்ல உணர்ந்திருக்கேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் ஒரே பாட்டுல இடம் பிடிச்சிருக்கேன்னா அதுக்கு திருமுருகன் சார்தான் காரணம். மெட்டி ஒலிக்கு முதலில் ஒரு குரூப் டான்சராகத்தான் கூப்பிட்டிருந்தங்க. திருமுருகன் சார் என்னோட ரசிகர். அதனால என்னையே அந்தப் பாட்டுக்கு மெயின் டான்ஸ் பண்ணச் சொன்னார். ஒரு சூப்பரான காஸ்டியூமோ, மேக்கப்போ இல்லாம திடீர்னுதான் அந்த பாடலை செஞ்சு முடிச்சோம். அது இந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகும்னு நெனச்சே பாக்கல. அந்தப் பாடல் வெளியான பிறகு ஏகப்பட்ட ஃபோன் கால்ஸ், பாராட்டுக்கள். மெட்டி ஒலி சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட்லாம் தினம் வர்ராங்களோ இல்லையோ, ஆனா கண்டிப்பா நான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கரெக்டா ஒன்பது மணிக்கு வந்துருவேன். நான் போட்டிருக்கிற மணி, கம்மல், சேலை என்று சகலத்தையும் ஒண்ணு விடாமல் மக்கள் ரசித்தார்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.


இதைவிட ஒரு முக்கியமான விஷயம். கோடியில ஒருத்தருக்குக் கூட இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். நாலு வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு சாந்திக்கு பதிலா நான் செத்துப் போய்ட்டதா செய்தி பரவி பத்திரிகைலகூட நியூஸ் வந்திருச்சி. ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா... துக்கம் விசாரிக்கறதுக்கு ஊர்ல இருந்தெல்லாம் சொந்தக்காரங்க வந்திருக்காங்க. என்னை உயிரோட பார்த்ததும் அவங்களுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.யூனிட்ல விஷயம் கேள்விப்ட்டு ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் பண்ணியிருக்காங்க. பீச் சைட்ல ஷூட்டிங் நடந்தப்போ மீன்காரப் பொம்பளங்கள்லாம் என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுதாங்க. ஷூட்டிங் முடிஞ்சு கார்ல வீட்டுக்குத் திரும்புக்கிட்டிருந்தா... கார் வேறெங்கியோ போகுது. என்னன்னு விசாரிச்சா டிரைவர் சொல்றாரு. 'ஒரே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து முகத்தை காட்டிட்டு போயிடுங்க மேடம். எம் பொண்டாட்டி நீங்க உயிரோட இருப்பதை நம்பாம அழுதுக்கிட்டிருக்கா' என்கிறார். லைட்மேன் ஒய்ஃப், என்னோட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் என்னை வந்து நேர்ல பாத்தப்புறம்தான் நம்பினாங்க. நான் செத்தப்புறம் எனக்காக யார், யார்லாம் அழுவாங்க என்கிற வாய்ப்பை கொடுத்ததுக்காக கடவுளுக்கும், சின்னத்திரைக்கும் நன்றி.


கதாநாயகி இருக்கும்போது தேவையே இல்லாமல் குரூப் டான்சர்களை செக்ஸியாகக் காட்டுவது தொடர்கிறதே! இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


கட்டிப் பிடித்துக் கொண்டோ, செக்ஸியாக உடை அணிந்து கொண்டோ செட்டுக்குள் ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இடுப்பைத் தழுவிக் கொண்டு ஆடும் பொழுது ஒன், டூ, த்ரீ, ஃபோர், கட்! என்பார்கள். ஷாட் முடிஞ்சிரும். ரசிகர்கள் நினைப்பது மாதிரி ரொமான்ஸ் மூடில் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க மாட்டோம். ராத்திரி எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சிருந்தாலும் காலைல நாலு மணிக்கு எழுப்பி விட்ருவாங்க. சரியானத் தூக்கம் இருக்காது. அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்ப கஷ்டம் இருக்கும். எப்ப வேலை முடியும், எப்ப வீட்டுக்குப் போகலாம்னுதான் காத்திருப்பாங்க. ஆனா இந்த மாதிரி காட்சிகளை அவுட்டோர் ஷூட்டிங்ல வச்சா ரசிகர்களால பிராப்ளம் வரும். வாய் வார்த்தைகளால ரொம்ப கேவலமா, மட்டரகமா கிண்டலடிச்சி எங்க மனசை நோகடிப்பாங்க.


வெளியில இருந்து பாக்கறவங்களுக்கு 'கலர், கலரா ட்ரெஸ் பண்ணிக்கிறாங்க, விதவிதமா நகை போட்டுக்கிறாங்க, அழகழகா மேக்அப் போட்டுக்கிறாங்க, ஜாலியான லைஃப்டா!'ன்னு தோணும். ஆனா நிஜம் அப்படியில்லை. காலைல இருந்து மாலை வரைக்கும் வெயில், மழைன்னு பாக்காம காலில் செருப்புக்கூட இல்லாமல் ஆடுவோம். கண்டக் கண்ட‌ இடங்களில் ஆடுவதால் உடம்பு முழுக்க காயங்கள், சிராய்ப்புகளோடு வாழும் ஒரு மெக்கானிக்கல் லைஃப் எங்களோடது. ஆனா, இந்த வலி அத்தனையும் எங்களை ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப போயிடும்.


பெரிய நட்சத்திரங்களுக்கே திருமண வாழ்க்கை என்பது திருப்திகரமாக அமைவதில்லை. அப்படியிருக்கையில் டான்சர்களின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது?


நிறைய பேர் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். பெரும்பாலும் டான்சர்கள் இன்னொரு டான்சரையே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. ஒரு அரசு நிறுவனத்துலயோ, தனியார் நிறுவனத்துலயோ வேலை பார்க்கிறவங்க எப்படிப்பட்ட ஃபிராடாக இருந்தாலும் வெளில தெரியாது. நடிக்க வந்துவிட்டோம் என்ற காரணத்தினாலயே எங்களைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஒரு ஹீரோயின் கல்யாணத்திற்குப் பின் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்க்கிற மனநிலை இங்க இல்லை.

முதன் முதலா எந்தப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சீங்க.அடுத்த‌டுத்த‌ உங்க‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு லிஸ்ட் போடுங்க‌ளேன்?

சரத்குமார் சாரோட கம்பீரம் படம் தான் நான் மாஸ்டரா ஒர்க் பண்ண முதல் படம். நினைவிருக்கும் வரை படத்துல "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..." பாட்டுல பிரபுதேவா சார் தான் எனக்கு தனி பிட் கொடுத்து முதல் முதல்ல ஸ்கிரீன்ல காட்டினது. தமிழ்,ஹிந்தி ரெண்டுத்துலயும் ஆய்த எழுத்து, பேரழகன், கணாக் கண்டேன், திருட்டுப் பயலே, வெயில், நான் அவனில்லை என்று இதுவரை 120 பாடல்களுக்கு மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கேன். மஞ்சள் வெயில், தூவானம், அம்முவாகிய நான், ராமேஸ்வரம்'னு இப்போ செஞ்சு முடிச்சப் படங்களும் நிறைய இருக்கு. போதுமா இன்னும் பட்டியல் வேணுமா? என்று சாந்தி கேட்ட‌தும் மூட்டை முடிச்சுக்க‌ளோடு என் வீடு நோக்கிப் ப‌ய‌ண‌மானேன்.