Showing posts with label balaphoto. Show all posts
Showing posts with label balaphoto. Show all posts

Saturday, July 26, 2008

ச்சே... இப்படியொரு வித்தை இருப்பது தெரியாமல் போச்சே!

பழைய புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்ப்பதே அலாதியானதுதான். அப்படியொரு புகைப்படத்தை எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார் என் அலுவலக நன்பர். இப்போது பார்க்க போலீஸ் அதிகாரிபோல் தோற்றமளிக்கும் ஒருவர், ஹிப்பித் தலையுடன் கூத்தாடி போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தார். நெற்றியில் பாதி நிலாபோல் வெள்ளைச் சிகப்பில் விபூதி குங்குமம். ‘‘ஆஹா... பிரமாதமா இருக்கே! பால்ய வயது சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துவிடுமே?’’ என்றேன், போட்டோவைப் பார்த்துவிட்டு.

‘‘அய்யோ! ஊர்ல இவம் பண்ணாத ராவடியே இல்லை. ஆடையில்லாம பாக்கிறதுக்கு கண்ணாடி கண்டுபுடிக்கிறதுக்கு முன்பே இவன் றெக்கை கண்டுபுடிச்சிட்டான்’’ என்று அந்த மந்திர வித்தையை எடுத்துவிட்டார் குரூப் போட்டோவில் கூட இருந்த நன்பர்.

கிராமத்து ஆட்களுக்குத் தெரியும். ‘‘கருடன் கூண்டில் சஞ்சீவி மூலிகை இருக்குமாம். அதைக் கொண்டுவந்தால் இரும்புக் கதவைக்கூட திறந்துவிடலாம். முழங்கையிலோ, தொடையிலோ கத்தியால் கிழித்து, கிழிபட்ட இடத்தில் சஞ்சீவி மூலிகையை வைத்துவிட்டால் தானாக மூடிக்கொள்ளுமாம். அதன் பிறகு எவனும் நம்மை கத்தியால் வெட்ட முடியாது. ஜெயிலுக்குப் போனாலும் கம்பியை உடைச்சிட்டு வெளியே வந்துவிடலாம். துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு தெரித்துவிடும். உடம்புக்கு ஒன்றும் ஆகாது’’ என்று கதை சொல்வார்கள். சஞ்சீவி மூலிகை எடுக்க கூண்டுக்குள் கையை விட்டு கருடன் கையால் மண்டையில் கொத்து வாங்கியவர்கள் ஏராளம்.

இப்போது குரூப் போட்டொ நன்பர் சொன்ன கதைக்கு வருவோம். அது பொம்மணாட்டிகளை அம்மணமாய் பார்க்க புது கண்ணாடி கண்டுபிடித்துவிட்டதாக கதை கிளம்பியிருந்த நேரம். "ஹ¨ம்... இதென்ன பிரமாதம். அந்த காலத்திலேயே இதுக்கு றெக்கை கண்டுபிடிச்சிட்டான்’’ என்று பிட்டு போட்டிருக்கிறார் கிராமத்தில் ஊர் கொளுத்தியாக வலம் வந்த ஒருவர். ''அப்படியா...! என்ன அது?’’ என்று வாய் பிளந்து கேட்டிருக்கிறார்கள் ஹிப்பித்தலையும், அவரது தோஸ்த்தும்.

‘‘கருடன் பறந்து போவுதில்ல... அப்ப றெக்கை உழுதான்னு பாத்துக்கிட்டே இருக்கணும். அப்படி என்னைக்காவது றெக்கை உழுந்திச்சின்னா, மண்ல உழுந்திடாம அப்படியே அதை கைல வாங்கிக்கணும். அதை எடுத்தும்போய், மொதமொதலா கண்ணு போட்ட பசுமாடு இருக்குதில்ல...! அது போடுற மொத சாணியில நாலா பக்கமும் நனைச்சு எடுத்துக்கணும். அதை எடுத்தும்போய் எது நம்ம குல தெய்வமோ, அதுங் காலடியில 108 நாள் விரதமிருந்து நல்லா காய வைக்கணும்.
காய வச்சாச்சா...? இப்ப என்னா பண்ணனும்னா... நல்லா பூ மலர்ந்த தாமரைக் குளமா தேர்ந்தெடுக்கணும். யார் கண்ணுலயும் படாம விடியக்காலை இருட்டோட இருட்டா பிரம்ம முகூர்த்தத்துல போய் றெக்கையை கைல புடிச்சிக்கிட்டு 108 முறை குளத்துல முங்கி எழுந்திருக்கணும். இதே மாதிரி 108 நாள் தொடர்ந்து பண்னனும்.

இதுக்குப் பொறவு என்ன பண்ண‌னும்னா...? ஊர்ல ஏழு கன்னிமார் கோவில் இருக்கில்ல!? உறும வேளையா (நன்பகல் பன்னிரண்டு) அங்க போய் உச்சி வெயில்ல 108 நாள் றெக்கையை கையில புடிச்சிக்கிட்டு காய வைக்கணும். றெக்கை ஒவ்வொரு நாளும் கொஞ்சங் கொஞ்சமாய் மெருகேறி ஜொலிக்கிறது உனக்கே தெரிய ஆரம்பிக்கும். 108 நாள் முடிஞ்சதுன்னு வச்சிக்கியேன்! அப்புறம் பாரு வித்தையை. 'தூக்கு'னா தூக்கும். 'இறக்கு'னா இறக்கும் என்று செய்து காட்டியிருக்கிறார்.

அதாவது, யாராவது ஆளுங்க இருக்கிற இடமா பாத்து கையில இறகோட நின்னுக்கணுமாம். அவங்களைப் பார்த்துக்கிட்டே, இறகை கீழிருந்து மேலாக நீவி விட்டால் அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்சும் அதே மாதிரி மேல போய் வருமாம்.’’

-இதைத்தான் பண்டைகால கண்டுபிடிப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் அந்தப் புண்ணியவான். ‘‘கருடா... கருடா... றெக்கை போடு!’’ ன்னு நம்ம ஹிப்பித்தலை நன்பரும், அவருடைய தோஸ்த்தும் அலையாத நாளில்லையாம்.
‘‘அட... இந்த வித்தை முன்னமே தெரியாமப் போச்சே!’’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் எங்க ஆபீஸ் கவிஞர்.
புகைப்படங்கள், நன்றி: friendsofblackwater.org/harold decker, mikecurtis.com

Friday, May 23, 2008

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.

இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்த‌வர்,
"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.

"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.

"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.

கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.

இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.
எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?
''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.

ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.

பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.
சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.

நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.

கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.

Tuesday, May 20, 2008

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூலம்.


மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்.

ஆரம்ப காலங்களில் நரிக்குறவர்கள்தான் அதிகம் பச்சை குத்தி வந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்கள், எழுத்துக்களை சித்திர வடிவில் மனப்பாடம் செய்து பச்சை குத்தினர். மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு எற்ப நோய்களின் பெருக்கம் அதிகரித்தபோது, மருத்துவமனை ஊசிகளே பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிந்தது. நோயிலிருந்து பாதுக்காக இப்போது டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நரிக்குறவர்கள் ஆண்டுக் கணக்கில் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்துவார்கள் என்பதால், அவர்களிடம் யாரும் பச்சை குத்திக் கொள்வதில்லை. ஆனால், பச்சை குத்தும் மோகம் இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது. நாகரீகம், டெக்னாலஜியை உள்வாங்கிக் கொண்டு எங்கோ போய்விட்டது. இந்தியாவில் பிறந்த பச்சை குத்து, வெளிநாட்டுக்குப் போய் நவீன தொழில் நுட்பங்களுடன் மீண்டும் இங்கே கலர் கலராய் கால் பதித்துள்ளது. இன்று அதன் பெயர் 'டாட்டூ'.

மீரா லிடியா. தமிழகத்தின் சூப்பர் பச்சை குத்துக்காரி.

சென்னையின் இளசுகள் மட்டுமல்லாது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சல்லிசாக இவரிடம் வந்து குத்திக் கொள்கிறார்கள். ஆளைப் பார்த்தால் "கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு" என்று பாடத்தோன்றும். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிளாக் மேஜிக் என்கிற தன் டாட்டூ ஸ்டுடியோவில் வேலையே ஜாலியாக இருக்கிறார் லிடியா.

இவரது இன்னொரு பெயர் பாய்சன் ஐ.வி. "பேட்ஸ் மென் ஆங்கிலப் படத்தில் வரும் பாய்சன் ஐ.வி.ங்கிற வில்லி கேரக்டர் எனக்கு ரொம்...பப் பிடிக்கும்" என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டுகிறார். பார்த்தால், முதுகெலும்பைக் கைப்பிடியாகக் கொண்ட கத்தியைப் பிடித்தபடி அதில் எமன் முறைத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ லேடி எஸ்.ஐ பிஸ்டலை பிடிப்பது போல் 'டாட்டூ கன்'னை(பச்சை குத்தும் கருவி) எடுத்துக் காட்டி, தன் குருநாதர் ராஜுக்கு நமஸ்காரம் செய்பவர் "கேள்வியை நீங்கள் கேட்குதா? அல்லது நான் கேட்குதா?" என்கிறார்.

ஒரு தொழிலாக செய்யக்கூடிய அளவுக்கு டாட்டூ வரைந்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா. எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது?



இன்னா அப்டி கேட்டுட்டீங்க! ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதே தவிர குறையல‌. அப்பாயிண்ட்மென்ட் வாங்கின‌ பிறகுதான் ஸ்டுடியோவுக்கே வர முடியும். ஏன்னா... பச்சை குத்துறது ஒன்னும் லேசுபட்ட‌ விச‌யமில்ல‌. சொல்லப் போனா, வரைர‌திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை மன்ஷன் உடம்புல டாட்டூ போட்ற‌துதான்" என்கிறார்.

அப்படி இன்னாங்க பொல்லாத கஷ்டம்?

"ஒவ்வொருத்தரோட உடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். சிலருக்கு ரொம்ப மிருதுவான சருமம், சிலருக்கு நார்மல், சிலருக்கு கடினம்னு தசைகள் வேறுபட்டு இருக்கும். சாதாரணமாக ஒரு கான்வாஸிலோ, பலகையிலோ வரையும் போது கிடைக்கக் கூடிய க்ரிப் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போகும். இதனால் படமோ, எழுத்தோ எதுவாக இருந்தாலும் தவறாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ரொம்ப சாஃப்ட் பேர்வழிகளின் தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டுதான் வரைய ஆரம்பிப்போம். ஆண்கள் பெரும்பாலும் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களிளும் பெண்கள் பின் இடுப்பின் மேற்புறம் மற்றும் முழங்கால்களில் வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பேர் குத்துற‌து, கோலம் போடுற‌‌து ரெண்டைத் தவிர வேற என்ன ஸ்பெஷல் இதுல?


பேர் குத்திக்கிற‌து என்னமோ வாஸ்தவம்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி யாரும் புள்ளிக் கோலம்லாம் போட்டுக்க மாடாங்க. எல்லாமே மார்டன் ஆர்ட்தான். ஒவ்வொரு ஓவியத்துக்குப் பின்னாடியும் ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியே இருக்கும். அர்த்தத்தோடதான் டாட்டூ போடுறோம். ஒவ்வொரு நாளும் மண்டையை குடைஞ்சி நானாவே புதுப்புது கான்செப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். அதில்லாம... வர்றவங்க என்ன மாதிரி டிசைன் கொண்டு வந்தாலும் அதையும் போட்டு தருவேன். இப்ப உங்க லவ்வரோட போட்டோவை எங்ககிட்ட குடுத்துட்டா போதும். அச்சு அசலா அப்படியே உங்க உடம்புல ரியலிஸ்டிக்கா வரைஞ்சு வச்சிடுவேன். ஆனா, அதுக்கப்புறம் வர்ற பிரச்சினைக்கு நான் பொறுப்பு இல்லை.

அப்படின்னா, மாசத்துக்கு ஒரு டிசைன்னு உடம்புல வரைஞ்சிக்கிட்டு அசத்தலாம். என்ன, 500 ரூபா வாங்குவீங்களா! ஆமா... எவ்ளோ நேரம் பிடிக்கும் இதை வரைய. அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவீங்கள்ல?

ஹலோ... ஹலோ... என்ன, ஜஸ்ட் லைக் தட் பேசிட்டே போறீங்க? அஞ்சு நிமிஷமா? அஞ்சு நிமிஷத்துல நீங்க ஆப்பங்கூட சுட முடியாது. குறைஞ்சது மூணு மணி நேரத்திலருந்து பத்து மணி நேரம் வரைக்கும் ஆகும்.

இதோ நான் கால்ல வரைஞ்சுக்கிட்டிருக்கேனே! இதுக்கு மட்டும் பத்து மணி நேரம் ஆச்சு. இந்தா... கைல இருக்கே! இதுக்கு அஞ்சு மணி நேரம். அப்புறம் என்ன கேட்டீங்க. ஐநூறு ரூபாயா? குறைஞ்சது ஒரு 'ஸ்கொயர் இன்ச்'க்கு ஆயிரம் ரூபாய்.

நான் கால்ல போட்டிருக்கிற சைஸ்னா பத்தாயிரம் ரூபாய் ஆகும். நாங்க என்ன காட்டுல இருந்து முள்ளு பறிச்சிக்கிட்டா வந்து குத்தி விடுறோம். எல்லாமே அமெரிக்காவிலருந்து இறக்குமதி பண்ணியது. இங்க் எல்லாம் கூட ப்யூர் வெஜிடேரியன். அதாவது தாவரங்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்ட, சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அமெரிக்க அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

நமக்கு தலை சுற்றுகிறது...

"ஓவியங்களுக்குத் தகுந்த மாதிரி பச்சை குத்தும் கருவியில் பல்வேறு ஊசிகள் இனைக்கப்பட்டிருக்கும். இங்க்'கை தொட்டுத் தொட்டுதான் படம் வரைய முடியும். பெயிண்ட் ஸ்பிரேயர் மாதிரி பயன்படுத்த முடியாது. கோடுகளுக்குத் தகுந்த மாதிரியும், ஷேடுகளுக்குத் தகுந்த மாதிரியும் ஊசிகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கின்றன‌. மற்ற ஓவியங்களைப் போலவே இதிலும் எல்லாவிதமான வண்ணங்களையும் பயன்படுத்த முடியும்" என்று டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கிய லிடியா,

"மாசத்துக்கு ஒரு டிஸைன்னு பச்சை குத்திக்கிட்டீங்கன்னா, அப்புறம் உங்க உடம்புல எந்த இடமும் பாக்கி இருக்காது. ஏன்னா இது பர்மனென்ட் பச்சை.இதை அழிச்சிட்டு வேறு புதிதாக போட்டுக் கொள்வதற்கான ஆராய்ச்சியில் எங்க கோஷ்டி ஈடுபட்டிருக்கு. கூடிய விரைவில் சக்ஸஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்" என்கிறார் ஜாலியாகவும் சீரியஸாகவும்.

ம்ம்...நாமளும் பச்சை குத்திக்கலாம். ஆனா பர்ஸ்ல அவ்ளோ அமவுண்ட் இல்லீங்க.

Monday, March 3, 2008

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா? -மீண்டும் மோக‌ன்!


மோகன் பாடல்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காதல் கடிதங்களில்கூட அவரது பாடல்களை காப்பியடித்து கவிதை என்று சக்சஸ் செய்து கொண்டவர்கள் ஏராளம். சி.டி விற்கும் சின்ன பிளாட்பாரக் கடைகள் கூட மோகன் ஹிட்சை தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது. பரபரப்புகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியை நாடுகிற போது ''மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேட்குதா... கேட்குதா...'' என்று கேட்க நேர்ந்தால் அவ்வளவு சுகமாக இருக்கிறது!

தமிழ் சினிமாவின் வரலாற்றில், தமிழகத்தின் காதல் இதயங்களில் மோகனுக்கென்று தனித்த இடம் உண்டு. என்ன ஆனதென்றே தெரியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாம் வலி நிறைந்தவை. ஒரு வழியாக சுட்டபழம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளவரை சந்தித்த போது, எதுவுமே மாறவில்லை. அதே முகம், அதே சிரிப்பு,அதே இளமை என்று அன்று பார்த்த மோகன் மாதிரியே இருக்கிறார்.

என்ன ஆச்சு, ஏன் இந்த இடைவெளி?

"நிறைய உழைச்சிட்டேங்க. சராசரியா என்னுடைய உடல்நிலையை மீறி ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்திருக்கேன். ஒரு வருஷத்தில் மட்டும் பத்தொன்பது படங்கள் ரிலீசாகியிருக்கு. எல்லாமே வெற்றியா இருந்ததால சோர்வோ, அலுப்போ தெரியலை. 'அப்பாடா... போதுமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்'னு நேனச்சேன் பாருங்க! அங்க விழுந்த இடைவெளிதான். மாசம் வருஷமாச்சு, வருஷம் பல வருஷமாச்சு.

இடையில் என்னவெல்லாமோ நடந்து, என்னைப் பற்றி இஷ்டத்திற்குமான வதந்திகள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்கவில்லை. ஆனாலும் இட்டுக்கட்டப்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளால், மாலையும் கையுமாக என் வீட்டிற்கு வந்து நின்றார்கள். நினைத்துப் பாருங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும் போதே 'நீ செத்துப் போய்ட்டியாமே' என்று வந்து நின்றால் சம்பந்தப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும்? நான் மட்டுமில்லாமல் என் குடும்பமே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதிலிருந்து மீள்வதற்கே இரண்டு வருடங்கள் பிடித்தது. இதற்கு செத்துப் போவதே மேல் என்று சொல்லலாம்.

'தூங்கும் போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துப் போய்ட்டான்னு சொல்லி அடக்கம் பண்ணிடுவானுங்க'ன்னு சொல்வாங்க. அது என் வாழ்கையில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட சில இடங்களிலேயே என்னைப் பார்த்த சிலர், 'ஏம்பா மோகன் செத்துப் போய்ட்டார்'னு சொன்னாங்க. இந்த ஆளப் பாத்தா அவர் மாதிரியே தெரியுதே'ன்னு என் காதுபடவே பேசினாங்க.

இடைவெளின்னு சொல்றீங்க. என்ன தான் செஞ்சிட்டு இருந்தீங்க. அவ்வளவு நாளும் சும்மாவே இருந்தீங்களா?

நான் எங்கங்க சும்மா இருந்தேன். சொன்னா நம்புவீங்களா! 'சிவிக் சினிமா'ங்கற பேர்ல சொந்தமா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்திருக்கேன். 'அச்சம் மடம் நானம், பிருந்தாவனம், தெலுங்கு சன் நெட் ஒர்க்கில் ஹாஸ்ய ராமாயணம், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பகும் செல்வங்கள்' எல்லாமே என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். மோகன் என்கிற பெயரை யூஸ் பண்ண வேண்டாமே'ன்னு நெனச்சு இதை விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸோடுகளை எனது நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதால் மீண்டும் வெளிப்படும் போது ஜெயித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இடையிடையே வந்து போன சில ஸ்கிரிப்டுகளும் திருப்தியாக அமையவில்லை. அந்த நேரத்திலும், என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்தேன். எதிர்பாராத காரணங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெரியதிரைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 'பெருசு' பட இயக்குநர் ஜி.கே கிடைத்தார். எனக்கும் அவருக்குமான அலைவரிசை பிரமாதமாக ஒத்துப் போனது.

'சுட்டப்பழம்'னு ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தை செஞ்சுக்கிட்டிருக்கோம். என்னால அடிச்சு சொல்ல முடியும். சமீபத்தில் இந்த மாதிரி ஒரு படம் வெளிவந்ததில்லை என்று. ரொம்ப வேகமான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் நிச்சயம் இது வெற்றிபெறும்.

ஒவ்வொரு நாளும் பாடல்கள் வழியே மறக்க முடியாத நடிகராக நிலைத்துவிட்டீர்கள். ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதற்கு பாடல்கள் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

பார்க்காத நேரங்களில்கூட பாடல்கள் தாலாட்டுகின்றன என்பது உண்மை தான். ஆனால் என்னுடைய வெற்றிக்கு வெறும் பாடல்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், நான் நன்றாக நடிக்கவில்லையா என்ன? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு படத்திற்கான வெற்றி என்பது அதன் கதையில் தான் அடங்கியிருக்கிறது.

முதல்ல படம் நல்லா இருக்கணும். அதோட சேர்ந்து பாடல்களும் பிரமாதமா அமைஞ்சதுன்னா அது சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்கள்ல நீங்க பார்க்கிற மோகன் மாதிரி இல்லாமல் 'விதி, நூறாவது நாள்'னு வில்லத்தனமான ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் என்ன காரணம்? அது நல்ல படம் என்பது தான். அதைவிட முக்கியம் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. வெற்றி என்பதின் பங்கு அதில் பணியாற்றிய எல்லாருக்குமானது.
உங்கள் ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள். காதல் கடிதங்கள் வந்ததுண்டா?

இன்றுகூட வெளிநாடுகளிருந்து ரசிகர்கள் பேசினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிஃப்ட் பார்சலே வீடு தேடி வந்தது. நம்பரை எப்படித்தான் பிடிக்கிறார்களோ! இண்டர்நெட்டில் 'சுட்டப்பழம்' பற்றி தகவல் பார்த்தார்களாம். 'சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க சார்!'னு கேட்கிறாங்க. என் ரசிகர்களைப் பொறுத்த அளவில் நானும் அவர்களை மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கவில்லை.

காதல் கடிதங்களைப் பற்றிச் சொல்வதென்றால் அதை யார் எழுதினார்களோ அவர்கள் என்மீது தன்னையறியாமல் கொண்ட அன்பினால் ஆனது. அதை விளம்பரப்படுத்தி கொச்சைபடுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயம் நீங்கள் 'ரீ-எண்ட்ரி' ஆகும் போது இளையராஜாவுடன் வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இளையராஜாவோ, எஸ்.பி.பி.யோ! இன்னும் யார் யாரெல்லாம் உங்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களோடு இனைந்த அந்தக் கூட்டணி எப்போது சாத்தியம்?

அப்படி ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இருக்குமானால், அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. என்றாலும் சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டுமே! நான் வெறும் நடிகன் மட்டும்தான். என்னைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தேதிகள் ஒத்துவர வேண்டும்.

எனக்காக இளையராஜா மீண்டும் இசையமைப்பதோ, எஸ்.பி.பி மீண்டும் பின்னணி பாடுவதோ நடக்கும் என்றால், அதைவிட சந்தோஷமான தருணம் வேறெதுவும் இருக்க முடியாது. இது ஆண்டவன் நினைத்தால், அவனோடு என் ரசிகர்களும் நினைத்தால் நிச்சயம் முடியும் என்று நினைக்கிறேன்.

Friday, February 29, 2008

ஒரு ரூபா கொடுத்தா ஆடிக்கிட்டே இருப்பேன் ‍‍-ஸ்நேக் சாந்தி.


சின்னக் கம்மல், சிம்பிளான குர்தா ஜீன்ஸ் என்று காட்சியளிக்கிற சாந்தி ஸ்டில் கேமிராவைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். "என்னங்க இது! ஒரு டான்ஸ் மாஸ்டர், எல்லா நடிகர்களையும் ஆடவெச்சே பென்டெடுக்கிற ஆடல் மெக்கானிக். நீங்க பார்க்காத கேமிராவா?' என்றால், "அய்யய்யோ! அது வேற, இது வேறங்க' என்று சிரிக்கிறார்.


'மெட்டி ஒலி' சாந்தியை மறக்க முடியுமா என்ன? முதல் ஆறு மாதங்கள் அந்தப் பாடலை வைத்துத் தான் மெட்டி ஒலியே ஹிட்டானது. பெரிதாகக் குடும்பப் பின்னணியோ, முறையான நடனப் பயிற்சியோ இல்லாமல் இன்று சினிமா உலகில் ஒரு திறமையான நடன இயக்குந‌ராக உயர்ந்திருக்கிற சாந்திக்கு, இப்போது அவரே வைத்துக் கொண்ட பெயர் லக்ஷன்யா'. சினிமா, விளம்பரம்'னு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவரை ஓய்வு நாள் ஒன்றில் சந்தித்தேன்.


"இந்த டிரஸ் கலர் கொஞ்சம் டல்லா இருக்கு. போட்டோவுக்காக ஒரு கலர்ஃபுல் டிரஸ் போட்டுட்டு வாங்களேன்" என்றால் "இது ஒன்னு தாங்க இருக்கு. வேற டிரெஸ் இல்லைங்க" என்கிறார் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக. அழகா தெரியணும்னு ஆசையில்ல போலிருக்கு. சரி! உங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பத்திச் சொல்லுங்க?"


"கரடி பொம்மை, பிள்ளையார் பொம்மை , மீன் குழம்பு இதெல்லாம் பிடிக்கும். அப்புறம் குழந்தைங்க, ரஜினி, இளையராஜா பாடல்கள்னா ரொம்பப் பிடிக்கும். ஜீன்ஸ், டாப்ஸ், கலர் கலரா புடவைகள் அப்படீன்னு ஷாப்பிங் பண்றது ரொம்ப, ரொம்ப பிடிக்கும் . என்னை ஒரு டிரஸ் பைத்தியம்னே சொல்லலாம். அந்தளவுக்கு சளைக்காம ஷாப்பிங் பண்ணுவேன். எனக்கு பிடிக்காத விஷயம்னு பார்த்தா பொய் சொல்றது சுத்தமாப் பிடிக்காது. யாராவது பொய் சொன்னா சட்டுனு கோபம் வந்துடும்" என்றபடியே என்னை ஒரு முறை, முறைத்தார்.


"ஆஹா... நீங்க தானா அது? எனக் கேட்டுக்கொண்டே... இப்பதான் சொன்னீங்க. எனக்கு பொய் சொல்றதே பிடிக்காதுன்னு. ஆனா, எங்கிட்ட வேற கலர் டிரஸ் இல்லைன்னு சொன்னது பொய் தானே? என்று வகையாய் மடக்கினேன்.
அப்போ அவர் மூஞ்சியைப் பார்க்கனுமே. சிரித்த சிரிப்பும், பட்ட வெட்கமும். அடேங்கப்பா! ஒரு திரைப்படமே எடுக்கலாம். அத்தனை ஆக்க்ஷஷ‌ன்கள். சட்டென சுதாரித்துக்கொண்டு சொல்கிறார்


"சாரி! சுத்தமா தூக்கமே இல்லையா. கண்ணெல்லாம் எரியுது. டிரெஸ் மாத்த கஷ்டப்பட்டுக்கிட்டு அப்படி சொன்னேன். நான் சொன்னது இந்த மாதிரி சின்னச் சின்னப் பொய் கிடையாதுங்க‌. நம்பிக்கை துரோகம் பண்ற மாதிரி, அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி பெரிய பொய்களைச் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன். யாருக்கும் எந்த பாதிப்புமில்லாத சிம்பிள் பொய்யெல்லாம் கணக்குல சேர்க்காதீங்க".


சொல்லுங்க சாந்தி. நீங்க எப்படி டான்சர், டான்ஸ் மாஸ்டர் ஆனீங்க?

"சின்ன வயசுலர்ந்தே டான்ஸ்னா எனக்கு உயிருங்க. ஒரு ரூபா குடுத்தா போதும். நாம்பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பேன். அப்டியே ஸ்கூல் போனேனா... அங்க, ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடி நிறைய பிரைஸ் வாங்கினேன். இன்னைக்கி நான் டான்ஸ் மாஸ்டரா ஆனாலும், இதுவரை எங்கேயும் போய் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டதில்ல. நானா ஆடிப் பழகிட்டதுதான். நாங்க சாதாரண குடும்பம். அக்கா ஏற்கனவே சினிமாவில டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க. குடும்பத்துக்கு உதவி பண்றதுக்காகத்தான் நான் சினிமாவுல டான்சரா சேர்ந்தேன்.


ஆரம்பத்துல சாதாரண குரூப் டான்சரா இருந்து படிப்படியா அசிஸ்டென்ட் ஆனேன். பதினஞ்சு வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். தருண், பிரகாஷ்,பிரபு தேவா, கல்யாண், பிருந்தா இப்படி பல மாஸ்டர்களிடம் ஒர்க் பண்ணியிருக்கேன். நான் ரொம்ப உயரம்ங்கறதால(எங்க ஊர்லகூட 'எட்டடி'ன்னு ஒருத்தர் இருக்காரு) என்னதான் நல்லா ஆடினாலும் பின் வரிசையிலதான் நிக்க வைப்பாங்க. அப்பெல்லாம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். பிரபுதேவா மாஸ்டர் தான் உயரம் குள்ளம், குண்டு‍‍‍‍‍ ஒல்லின்னு எல்லாம் பார்க்க மாட்டாரு. அவருக்கு ஃபெர்பாமன்ஸ்தான் முக்கியம். அவரும், பிருந்தா மாஸ்டரும்தான் என்னை முன் வரிசைல நிக்க வச்சு வாய்ப்புக் கொடுத்தவங்க" என்று தான் சினிமாவுக்குள் நுழைந்த‌ க‌தையை விள‌க்கினார்.


மெட்டி ஒலி சாந்தின்னா சின்னக் குழந்தைங்கள்ல இருந்து என்பது வயது பெருசுகள் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை பிரவேசம் எப்படியிருந்தது?


"உண்மை தான். டி.வி. பார்க்கிற 'அ முதல் ஃ' வரையிலான அத்தனை பேரும் எனது மெட்டி ஒலி டான்சை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள் என்பதை பல முறை நான் நேர்ல உணர்ந்திருக்கேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் ஒரே பாட்டுல இடம் பிடிச்சிருக்கேன்னா அதுக்கு திருமுருகன் சார்தான் காரணம். மெட்டி ஒலிக்கு முதலில் ஒரு குரூப் டான்சராகத்தான் கூப்பிட்டிருந்தங்க. திருமுருகன் சார் என்னோட ரசிகர். அதனால என்னையே அந்தப் பாட்டுக்கு மெயின் டான்ஸ் பண்ணச் சொன்னார். ஒரு சூப்பரான காஸ்டியூமோ, மேக்கப்போ இல்லாம திடீர்னுதான் அந்த பாடலை செஞ்சு முடிச்சோம். அது இந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகும்னு நெனச்சே பாக்கல. அந்தப் பாடல் வெளியான பிறகு ஏகப்பட்ட ஃபோன் கால்ஸ், பாராட்டுக்கள். மெட்டி ஒலி சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்ட்லாம் தினம் வர்ராங்களோ இல்லையோ, ஆனா கண்டிப்பா நான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கரெக்டா ஒன்பது மணிக்கு வந்துருவேன். நான் போட்டிருக்கிற மணி, கம்மல், சேலை என்று சகலத்தையும் ஒண்ணு விடாமல் மக்கள் ரசித்தார்கள். ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.


இதைவிட ஒரு முக்கியமான விஷயம். கோடியில ஒருத்தருக்குக் கூட இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். நாலு வருஷத்துக்கு முன்னாடி யாரோ ஒரு சாந்திக்கு பதிலா நான் செத்துப் போய்ட்டதா செய்தி பரவி பத்திரிகைலகூட நியூஸ் வந்திருச்சி. ஷூட்டிங் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா... துக்கம் விசாரிக்கறதுக்கு ஊர்ல இருந்தெல்லாம் சொந்தக்காரங்க வந்திருக்காங்க. என்னை உயிரோட பார்த்ததும் அவங்களுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.யூனிட்ல விஷயம் கேள்விப்ட்டு ஷூட்டிங்கை எல்லாம் கேன்சல் பண்ணியிருக்காங்க. பீச் சைட்ல ஷூட்டிங் நடந்தப்போ மீன்காரப் பொம்பளங்கள்லாம் என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுதாங்க. ஷூட்டிங் முடிஞ்சு கார்ல வீட்டுக்குத் திரும்புக்கிட்டிருந்தா... கார் வேறெங்கியோ போகுது. என்னன்னு விசாரிச்சா டிரைவர் சொல்றாரு. 'ஒரே ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து முகத்தை காட்டிட்டு போயிடுங்க மேடம். எம் பொண்டாட்டி நீங்க உயிரோட இருப்பதை நம்பாம அழுதுக்கிட்டிருக்கா' என்கிறார். லைட்மேன் ஒய்ஃப், என்னோட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் என்னை வந்து நேர்ல பாத்தப்புறம்தான் நம்பினாங்க. நான் செத்தப்புறம் எனக்காக யார், யார்லாம் அழுவாங்க என்கிற வாய்ப்பை கொடுத்ததுக்காக கடவுளுக்கும், சின்னத்திரைக்கும் நன்றி.


கதாநாயகி இருக்கும்போது தேவையே இல்லாமல் குரூப் டான்சர்களை செக்ஸியாகக் காட்டுவது தொடர்கிறதே! இந்த மாதிரியான சூழ்நிலைகளில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


கட்டிப் பிடித்துக் கொண்டோ, செக்ஸியாக உடை அணிந்து கொண்டோ செட்டுக்குள் ஆடுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இடுப்பைத் தழுவிக் கொண்டு ஆடும் பொழுது ஒன், டூ, த்ரீ, ஃபோர், கட்! என்பார்கள். ஷாட் முடிஞ்சிரும். ரசிகர்கள் நினைப்பது மாதிரி ரொமான்ஸ் மூடில் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க மாட்டோம். ராத்திரி எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடிஞ்சிருந்தாலும் காலைல நாலு மணிக்கு எழுப்பி விட்ருவாங்க. சரியானத் தூக்கம் இருக்காது. அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்ப கஷ்டம் இருக்கும். எப்ப வேலை முடியும், எப்ப வீட்டுக்குப் போகலாம்னுதான் காத்திருப்பாங்க. ஆனா இந்த மாதிரி காட்சிகளை அவுட்டோர் ஷூட்டிங்ல வச்சா ரசிகர்களால பிராப்ளம் வரும். வாய் வார்த்தைகளால ரொம்ப கேவலமா, மட்டரகமா கிண்டலடிச்சி எங்க மனசை நோகடிப்பாங்க.


வெளியில இருந்து பாக்கறவங்களுக்கு 'கலர், கலரா ட்ரெஸ் பண்ணிக்கிறாங்க, விதவிதமா நகை போட்டுக்கிறாங்க, அழகழகா மேக்அப் போட்டுக்கிறாங்க, ஜாலியான லைஃப்டா!'ன்னு தோணும். ஆனா நிஜம் அப்படியில்லை. காலைல இருந்து மாலை வரைக்கும் வெயில், மழைன்னு பாக்காம காலில் செருப்புக்கூட இல்லாமல் ஆடுவோம். கண்டக் கண்ட‌ இடங்களில் ஆடுவதால் உடம்பு முழுக்க காயங்கள், சிராய்ப்புகளோடு வாழும் ஒரு மெக்கானிக்கல் லைஃப் எங்களோடது. ஆனா, இந்த வலி அத்தனையும் எங்களை ஸ்கிரீன்ல பார்க்கிறப்ப போயிடும்.


பெரிய நட்சத்திரங்களுக்கே திருமண வாழ்க்கை என்பது திருப்திகரமாக அமைவதில்லை. அப்படியிருக்கையில் டான்சர்களின் வாழ்க்கை எப்படிச் செல்கிறது?


நிறைய பேர் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். பெரும்பாலும் டான்சர்கள் இன்னொரு டான்சரையே திருமணம் செய்து கொள்வது அதிகமாக உள்ளது. ஒரு அரசு நிறுவனத்துலயோ, தனியார் நிறுவனத்துலயோ வேலை பார்க்கிறவங்க எப்படிப்பட்ட ஃபிராடாக இருந்தாலும் வெளில தெரியாது. நடிக்க வந்துவிட்டோம் என்ற காரணத்தினாலயே எங்களைத் தவறாகப் பார்க்கிறார்கள். ஒரு ஹீரோயின் கல்யாணத்திற்குப் பின் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். நடிப்பை நடிப்பாக மட்டுமே பார்க்கிற மனநிலை இங்க இல்லை.

முதன் முதலா எந்தப் படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா வேலை செஞ்சீங்க.அடுத்த‌டுத்த‌ உங்க‌ ப‌ட‌ங்க‌ளை ஒரு லிஸ்ட் போடுங்க‌ளேன்?

சரத்குமார் சாரோட கம்பீரம் படம் தான் நான் மாஸ்டரா ஒர்க் பண்ண முதல் படம். நினைவிருக்கும் வரை படத்துல "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா..." பாட்டுல பிரபுதேவா சார் தான் எனக்கு தனி பிட் கொடுத்து முதல் முதல்ல ஸ்கிரீன்ல காட்டினது. தமிழ்,ஹிந்தி ரெண்டுத்துலயும் ஆய்த எழுத்து, பேரழகன், கணாக் கண்டேன், திருட்டுப் பயலே, வெயில், நான் அவனில்லை என்று இதுவரை 120 பாடல்களுக்கு மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கேன். மஞ்சள் வெயில், தூவானம், அம்முவாகிய நான், ராமேஸ்வரம்'னு இப்போ செஞ்சு முடிச்சப் படங்களும் நிறைய இருக்கு. போதுமா இன்னும் பட்டியல் வேணுமா? என்று சாந்தி கேட்ட‌தும் மூட்டை முடிச்சுக்க‌ளோடு என் வீடு நோக்கிப் ப‌ய‌ண‌மானேன்.

Monday, February 25, 2008

"ஈகோவைச் சீண்டிப் பார்க்காதீர்கள்!" தீபா வெங்கட்.


ஒரு ஐந்து நிமிடங்கள் தீபா வெங்கட்'டுடன் பேச நேர்ந்திருந்தால் நிச்சயமாக சிவாஜி படத்தில் ஸ்ரேயாவைத் தேடிப் போயிருக்க மாட்டார் ரஜினி. பழகுவதற்கு அத்தனை இனிமையாக இருக்கிறார் தீபா வெங்கட். "யாருடைய ஈகோவையும் ஸ்பாயில் பண்ணுவது மாதிரியான நடவடிக்கைகளில் ஒரு போதும் நான் ஈடுபடுவதில்லை. எல்லோருடனும் ஃபிரண்ட்லியாக இருக்கவே விரும்புகிறேன், அப்படியே நடந்து கொள்கிறேன்'' என்கிறார். பேசும் போது அதை உணர முடிந்தது. பார்க்க பளிச்சென்று முதல் பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடுகிறவரிடம் எல்லாமே பர்ஃபெக்ட் ஆக இருக்கிறது.

பெண்கள் கற்றுக் கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன தீபா வெங்கட்'டிடம். அளவான மற்றும் அழகான மேக்கப், அதற்கேற்ற உடைகள், வண்ணங்கள். அணிகலன்கள் என்று பாத்தோமானால் ""அணிந்திருக்கும் சேலை அதற்கேற்ற மாலை'' என்று அத்தனைப் பொருத்தமாக இருக்கிறது. "எப்படிங்க இதெல்லாம்?" என்றால், "தங்களைத் தாங்களே அழகு படுத்திக் கொள்வதென்பதும் ஒரு கலைதான். நம்மை நாமே ரசிப்பதும் ஒரு சந்தோஷமான விஷயம். கண்ணில் மெல்லியதாக‌ மை விடுவதற்குக்கூட மெனெக்கட வேண்டியிருக்கிறதே! ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள். இங்கே அறிமுகம் இல்லாதவர்களிடம் ஆடை தான் நம்மைத் தீர்மாணிக்கும் சக்தியாக விளங்குகிறது.

அதனால் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது வாழ்க்கையில் தவிற்க முடியாத ஒரு விஷயம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக மனசு தான் அழகைத் தீர்மாணிக்கிறது என்பதே உண்மை. மனசு சந்தோஷமாக இருக்கிற போது அது முகத்திலும் வெளிப்பட்டு மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. எப்போது உடலும் மனசும் சந்தோஷமாக இருக்கிறதோ அப்போது இந்த உலகமே சந்தோஷமானதாக மாறிவிடுகிறது'' என்கிறவர்,

"உடைகளைப் பொறுத்த வரை ரொம்ப ஃபேஷனாவும் இல்லாம, ரொம்பப் பட்டிக்காடாகவும் இல்லாம கரெக்டா இருக்கேன்னு நம்புறேன். ஜீன்ஸ் போட்டாலும் கிளாமர் ஓவராகாமல் பார்த்துக் கொள்கிறேன். ப்ராக்டிகலான சில விஷயங்கள்'னு பார்த்தா முன்னாடி எனக்கு முகத்துல பருக்கள் வந்து தொல்லை கொடுத்தது. ரெண்டே மாசம் ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செஞ்சதுல உடம்பில் ஆக்ஸிஜன் கூடி பருக்கள் சுத்தமாக மறைந்து சருமம் நல்ல பளபளப்பு ஆகியிருக்கு. டாக்டர் எழுதிக் கொடுத்த மெடிகேட்டட் சோப்'பை மட்டுமே பயன்படுத்துகிறேன். ஒரே வரியைல சொல்லணும்னா "ஐ லவ் மைசெல்ஃப்'. இது தான் என் அழகின் ரகசியம்'' என்கிறார்.

நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? படிக்கையில் என்னவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது?

ரோம்ப சின்ன வயசிலயே எனக்கு நடிப்பின் மீது ஆசை வந்துவிட்டது. அது எந்த வயசுன்னு கூட ஞாபகமில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலேயும் ஸ்கூல் நாடகங்களில் கலந்து கொள்வதை தவறவிட்டதே இல்லை. இந்த பயிற்சி தான் கே.பி. சாரின் டி.வி. சீரியலுக்குள் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. படிக்கும் போதே நடிக்க வந்துவிட்டாலும் பரீட்சையில் நான் கோட்டைவிட்டதில்லை. படிக்கக் கிடைக்கும் நேரம், மற்ற மாணவர்களை விட எனக்கு மிகவும் குறைவு என்பதால் அதிக அக்கறையுடன் படித்தேன். +2வில் 75% மார்க் வாங்கியதைப் பார்த்து பிரின்சிபல் என்னைப் பாராட்டினாங்க.

ஒரு சார்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகணும்'ங்கறது தான் என்னோட பள்ளிக்கூட ஆசையாக இருந்தது. அதனால நடிக்க வந்த பிறகும் நான் படிக்கத் தேர்ந்தெடுத்தது ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் தான். இப்போ அது என் அன்றாட வாழ்க்கைக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது. நாம் சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பொருட்களின் மீதான வரிவிகிதம் எப்படி இருக்கு, ஷேர் மார்க்கெட் நிலவரம் என்ன? என்கிற பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஸ்டாக் புரோக்கர்கிட்ட நீங்க போகணும்னா அவங்க பேசுவது அத்தனையும் எதோ புரியாத பாஷையாகவே இருக்கும். இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் சுலபமா அந்த விஷயங்களைக் கையாள முடிகிறது.
உங்களை ஊக்கப்படுத்துகிற விஷயமாகவும், சோர்வடையச் செய்கிற விஷயங்களாகவும் எதைக் கருதுகிறீர்கள்?

"எனக்குக் கலைமாமணி விருது கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். அதுவும் கலைஞர் கையால் வாங்கியது அதைவிட மகிழ்ச்சி. கலைஞர்கள் என்றில்லை, எல்லா மனிதர்களுக்குமே பாராட்டுதல் என்பது சந்தோஷமானதாகவே இருக்கிறது. பத்திரிகையில் பாராட்டிப் பேசும்போதோ, மற்றவர்கள் நம்மைப் புகழ்ந்து பேசும் போதோ யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அப்படித்தான் நானும்.

அனால் நம்மைக் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் நிச்சயம் மனசு வருத்தப்படத் தான் செய்யும். அத‌னால் வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லை. விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படுகிற விஷயங்களை என் வளர்ச்சிக்கானதாக நான் மாற்றிக் கொள்கிறேன். மொத்தத்தில் என் எல்லையை உணர்ந்து பயணம் செய்கிறேன். நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நல்லா நடிச்சிருக்கேன்னு நீங்க எவ்வளவு பாராட்டினாலும் கர்வப்பட மாட்டேன். பந்தாவா இருக்கிறது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத விஷயம்'' என்கிறார். விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லனும்னா தமிழ்ல தீபா வெங்கட்டுக்கு பிடிக்காத வார்த்தை "பந்தா...''

தீபா சொல்லும் 2 நீதிகள்:
1. பளிச்சென மேக்கப் பளிச்சென மேக்கப் செய்து கொண்டிருப்பவர்களை அலட்டல் பார்ட்டிகள் என்று எண்ண வேண்டாம். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிற விஷயம்.
2. அடுத்தவர்களின் ஈகோவை சீண்டிப் பார்க்கும் போது தான் வெறுப்புக்கு ஆளாகிறோம். எனவே எல்லாரிடத்திலும் நட்பாகப் பழகுங்கள்.

Friday, August 17, 2007

எந்த ஆணும் முழு ஆண் அல்ல! எந்தப் பெண்ணும் முழு பெண் அல்ல!


"சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நடந்து போவதை

தெரிந்தும் உணர்ந்தும் கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி

யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்"

-லிவிங் ஸ்மைல் வித்யா.


லிவிங் ஸ்மைல் வித்யா 'அரவாணிகள்' என்றழைக்கப்படும் 'திருநங்கைகளின்' உரிமைகளுக்காக போராடி வருபவர். சமூக சார்ந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர், மு.ராமசாமியின் நாடகப் பட்டறையில் கற்றுத் தேர்ந்தவர். இனைய தளத்தில் எழுதுபவர்களுக்கான "வலைப் பதிவர் பட்டறை"யில் பங்கேற்க சென்னை வந்திருந்த வித்யா "அரவாணிகள் என்றழைக்கபடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்'' என்கிறார்.

''ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்களில் ஒன்று கூடுகிற மக்கள் "அரவான் பலி'' என்கிற சடங்கின் மூலம் அரவாணைப் பலியிட்டு அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அரவாணிகள் என்ன அரவாணின் மனைவியா? இப்படி புராணக் கற்பனைகளில் தொடங்கி, நிஜ வாழ்க்கை வரையிலும் அரவாணிகள் இந்த சமூகத்தால் பலிகடாக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருமாகக் கூடி கொலை செய்வதையே ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கிற அதே மனப்பண்மை பொது இடங்களில் அரவாணிகளை இழிவு படுத்திப் பார்ப்பதிலும் தொடர்கிறது.

எப்பொழுது ஒரு அரவாணியைப் பார்க்க நேர்ந்தாலும் திடீரென உங்களுக்குள் சந்தோஷம் பெருக்கெடுத்து அது சாக்கடையாய் நிரம்பி வழிகிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல் சிரிக்கிறீர்கள், கூப்பிடுகிறீர்கள். அஜக் என்கிறீர்கள், அக்கா என்கிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் கோமாளி வேடமிட்டுத் திரியவில்லை. அதுதான் நிஜம், அது தான் இயல்பு.

"திருநங்கைகள்" என்று அவர்களை மரியாதையாக அழைக்கலாமே'' என்று கேட்கிறவருடன் மெரினா கடற்கரையில் கால் பதித்தபடியே நிகழ்ந்த இந்த உரையாடல் முழுக்க வலி நிரம்பியதாகவே இருந்தது.

வித்யாவை அழகாக புகைப்படமெடுக்க வேண்டும் என்கிற எனது எதிர் பார்ப்பில் அவருக்கு பெரிதாக உடன்பாடு இல்லாததை உணர்ந்தேன். ''போட்டோவாங்க இப்ப முக்கியம்? என்ன எழுதப் போறீங்க'ங்கறது தான் முக்கியமே. இப்படித் தான் ஏற்கனவே 'அவர் கூந்தல் காற்றில் படபடத்தது, அப்படி இப்படி'ன்னு என்னை வர்ணிச்சு எழுதினாங்க. நீங்க அப்படி எழுதாதீங்க'' என்கிறார்.

பதிவர் பட்டறைத் தலைவர் பாலபாரதி மற்றும் நன்பரும், ஆங்கில மேதையுமான நடைவண்டி மூலமாகத்தான் நான் வித்யாவைத் தொடர்பு கொண்டது. என் மீது எப்படியான நம்பிக்கையுடன் வித்யா தன் வலிகளைப் பகிர்ந்து கொண்டாரோ! உரையாடல் தொடர்கிறது.

"ஒரு திருநங்கையாய் வாழ்வதில் உள்ள வலி அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆணோ, பெண்ணோ! எந்த ஒரு நபரும் மரியாதைக்குறியவர் அல்ல என்பதையே எங்களின் அனுபவம் உணர்த்துகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் பிணாமிகளாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆணும் முழு ஆண் அல்ல, எந்த ஒரு பெண்ணும் முழு பெண் அல்ல என்பதே அறிவியல் பூர்வமான உண்மையாய் இருக்கிற போது அதையே காரணம் காட்டி திருநங்கைகள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமனமோ, மனித உரிமைகளோ மருந்திற்குக் கூட இல்லாத ஒரு தேசமாகவே இருக்கிறது இந்தியா. ஆணோ, பெண்ணோ நாலு பேர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்படுவது என்பது எவ்வளவு அவமானமான ஒரு விஷயம்? ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நிர்வாணப்பட வேண்டியிருந்தது.

நாண்கு மருத்துவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி என் உடலைக் கிளரி சோதனை செய்தார்கள். நானும் ஒரு மனிதப் பிறவி தானே! உங்கள் எல்லோருக்கும் உள்ள உணர்வுகள் தானே எனக்கும் இருக்கும்? அப்போது நான் எவ்வளவு அவமானப்பட்டிருப்பேன், என் உடல் எந்தளவுக்கு கூச்சத்தால் நெளிந்திருக்கும்? சோதனை நடக்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என் பெயரை 'வித்யா' என்று மாற்றுவதற்காக யார் முன்னாடியெல்லாமோ நான் நிர்வாணப்பட வேண்டியிருக்கிறது. கேவலம் நியூமராலஜிக்காக ஒருவர் பதினைந்தே நாட்களில் பெயரை மாற்றிக் கொள்ள இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் நான் இரண்டு வருடங்களாக தாசில்தார், கலெக்டர், மருத்துவமனை, நீதிமன்றம் என்று அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பெண்ணாய் வாழ்வதென்பது எங்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை. பிறந்த குடும்பத்திலிருந்தே சமுதாய கவுரவத்திற்காக நாங்கள் நாயினும் கேவலமக விரட்டியடிக்கப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள்! ஒரு முதுகலைப் பட்டதாரியாய் ரயில்களில் பிச்சையெடுப்பதென்பது எவ்வளவு அவமானகரமான ஒரு விஷயம்? ஆனால் நான் அப்படி இருக்க நேர்ந்தது. எனது முந்தைய அடையாளங்களை அழிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தே அக வேண்டும் என்கிற கட்டாயம்.

சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் சுயமரியாதையும் தன்மானமும் என்னைச் சுட்டுக் கொண்டே இருக்க, தாளாத மனவேதனையுடன் (PUNE ரயில்களில்) பிச்சையெடுக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படுகிற எந்தவிதப் பரிசோதனைகளும் இல்லாமல் சட்டப்படி அரசாங்கத்தால் வாய்ப்பளிக்கப்படாத இப்படியான "அறுத்தெறிதல்'' உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடுப்புக்குக் கீழே அரை மணிநேரம் மறத்துப் போகச் செய்யக் கூடிய லோக்கல் அனஸ்தீசியா மூலம் படித்த மருத்துவரால் இது செய்து வைக்கப்படுகிறது. இதற்கும் வழியில்லாத திருநங்கைகளின் மறுவாழ்வு எங்கோ ஒரு ஓலைக் குடிசையில் ஆக்ஸா பிளேடினால் தீர்மானிக்கப்படுகிறது. பூஜை, புனஸ்காரங்களில் நம்பிக்கையுடைய மூத்த திருநங்கை இந்த அறுவை சிகிச்சையைச் செய்கிறார்.

பால் மாற்று அறுவைக்கு முன்வரும் நபரின் கை, கால்கள் இறுகக் கட்டப்பட்டு புத்தம் புதிதான ஆக்ஸா பிளேடினால் ''அந்த உறுப்பு'' அறுத்தெறியப்படும். உயிர் போகிற வலியில் மயக்கம் போட்டுவிடாமல் இருக்க வாயில் சுக்கு, மிளகைத் திணித்து கண்ணத்தில் பளார், பளார் என அறைவார்கள். சிறிது நேரம் கழித்து தனியறையில் விடப்படும் அந்நபர் மறுநாள் வெளியே வந்தால் திருநங்கை. இல்லையென்றால் பிணம்.

இப்படிப் போக்கிடம் எதுவும் இல்லாத நிலையில் ஆணாக வாழ்வதென்பதை விட செத்துப் போவதே மேல் என்று மனம் அடித்துக் கூறுகிற போது, பலிபீடத்தில் உதிரத்துடன் தொடங்குகிறது எங்கள் வாழ்க்கை.

நீங்கள் எனபது கூட உங்கள் உடல் அல்ல, மனம் தான். உங்களை நான் அவமானப்படுத்திப் பேசினால் உங்கள் மனம் தான் அதற்காக வருத்தப்படுகிறது. மனம் எனபது திருநங்கைகள் உட்பட எல்லோருக்கும் பொதுவானது தானே?

முதுகலைப் பட்டம் முடித்து ஒரு நிறுவணத்தில் பணிபுரியும் 25 வயதாகிய என்னை சில ஆறாம் வகுப்பு மாணவர்கள் "ஊரோரம் புளியமரம்'' என்று பாட்டுப்பாடி கேலி செய்கிறார்கள். தன் உடல் குறித்தோ, படிப்பு குறித்தோ அல்லது சமுதாயம் சார்ந்தோ எந்த அறிவும் இல்லாத சிறுவர்களுக்கு என் போன்றவர்களை இழிவுபடுத்திக் கேலி செய்ய வேண்டும் என்கிற புத்தி எங்கிருந்து வந்தது?

இங்கே தான் இப்படிக் கழிசடையான பொதுப் புத்தியை வளர்ப்பதில் சினிமா தன் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த பருத்திவீரன் அமீரிடம் திருநங்கைகளை இழிவுபடுத்தியது குறித்து பல கேள்விகளைக் கேட்டேன். "ஆமாம், அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த யதார்த்தைத் தான் காட்டியிருக்கிறேன்'' என்று பொருப்பில்லாமல் பதில் சொன்னார்.

எங்களைப் போன்ற திருநங்கைகளின் யதார்த்தம் பற்றி கற்பழிப்புக் காட்சிகளைப் (கற்பழிப்பு என்கிற வார்த்தை சினிமாத்தனம் என்பதற்காக கையாளப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்) படமெடுக்கிற அமீருக்கு என்ன தெரியும்?

ஒரு வேளை சோற்றுக்காக, வெறும் முப்பது ரூபாய்க்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிற அவலநிலை தான் திருநங்கைகளுடையது. ஆனால் நீங்கள் மூன்று கோடி, முப்பது லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கிலீஷ் பேசி, ஏ.சி. பங்களாவில் வாழ்ந்து கொண்டே விபச்சாரம் செய்கிறீர்கள். இன்று பத்திரிகையை எடுத்துப் பாருங்கள், "பத்து கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய நடிகை'' என்று முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.

"என்ன நாயணக்காரரே! சும்மா வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. வாயில வச்சி ஊத வேண்டியது தானே! நீங்க ஊதுறீங்களா? இல்ல நான் ஊதவா?'' எவ்வளவு வக்கிரமும் ஆபாசம் நிறைந்தது இந்த வசனம் என்பது சொல்லியா தெரிய வேண்டும். கேட்டால் இதை யதார்த்தம் என்கிறார் அமீர்.

இதில் பாலுமகேந்திரா, காக்க காக்க கவுதம், வேட்டையாடு விளையாடு (என்ன வேட்டை, என்ன விளையாட்டுப்பா அது?) கமலஹாசன் என்று எந்த ஒரு அறிவு ஜீவிகளும் விதிவிலக்கல்ல. இவர்களெல்லாம் போதாதென்று 'திருநங்கைகள் எனப்படுபவர்கள் அப்பாவிப் பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தாதாக்கள்' என்று தனது அரசி சீரியல் மூலம் வீடு தோறும் எடுத்துச் சொல்கிற அரும்பணியை சித்தி ராதிகா செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் அடுத்தவர்களை இழிவுபடுத்திக் காசு பார்க்கிற நீங்களெல்லாம் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

பள்ளிக்கூடம் படிக்கிறதிலிருந்து இன்றுவரை எதற்கெல்லாம் நாங்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. வரிசையில் நிற்கும் போது கூட ஒன்பதாவது இடம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண் எடுக்கிற மாணவராக இருந்தேன். திடீரென்று கரும்பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு "படிப்பலி, உழைப்பலி'' என்று சக மாணவர்களே எழுதி வைத்தார்கள். என்னை அலி என்று அவமானப்படுத்துவது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமனதாக இருந்தது.

சராசரியாக எல்லோருக்கும் அமையக்கூடிய பால்ய வயது அனுபவங்கள் கூட எங்களுக்கு வலி நிரம்பியதாகவே இருக்கிறது. நட்பு என்று சொல்லிக் கொள்ள ஒருவர் கூட அமைவதில்லை. வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு வந்து சேர்கிற வரை "ஏய்... ஒம்போது, பொட்டை, வா... யக்கா, அஜக்" என்று கூறி தொடர்சியாக கேலி செய்வதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? இப்படிப் பிறந்தது எங்களின் குற்றமா?

என்ன பிரச்சினை என்று எங்களுக்கே தெரியாத வயதில் சுற்றம், நட்பு என்றில்லாமல் பிறந்த குடும்பத்திலிருந்தே வெறுக்கப்பட்டு அனாதைகளாக்கப்படுகிறோம். அந்த வயதில் எங்களுக்குத் தேவை அன்பு தான். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களிடம் அன்பாகப் பேசி குடும்பத்தில் ஒருவராக பழக அனுமதித்தாலே போதும். எவ்வளவோ வலிகள் காணாமல் போகும்.

மாறாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்ட்டாயப்படுத்தினால் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் திடீரென்று உண்மை வெடித்துக் கிளம்புகையில் அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமில்லாமல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண்ணானவள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால் இன்று ஜெயலலிதாவோ, கிரன்பெடியோ வந்திருக்க முடியாது. ஆண்டுக் கணக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களும் தலித்துக்களும் கூட இன்று ஓரளவாவது முன்னுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் யார் பார்வைக்கும் படாமல் இன்றுவரை ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

பொதுவாக இந்தியாவில் குழந்தை வளர்ப்பு பற்றியே தெரிவதில்லை. மருத்துவர்களும் திருநங்கைகள் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் அதற்கான ஆர்வமும் முயற்சியுமின்றி இருக்கிறார்கள். திருநங்கைகளை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாயத்தில் இப்போது திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

"மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம், டீசல் சிக்கனம் - தேவை இக்கனம்" மாதிரி "திருநங்கைகளும் இயல்பான மனிதர்களே - அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே" போன்ற வாசகங்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

எங்களைக் குடும்பத்தில் ஒருவராக வாழ அனுமதிப்பது, அரசு உதவியுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது, சான்றிதழ்களில் விரும்பிய பெயரை, பாலினத்தை (மாறிய பாலினமாக) மாற்றி அறிவிப்பது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதுகிறோம்.

அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது எங்களுக்கு நேர்கிற அநியாயத்தைப் பாருங்கள். எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் விண்னப்பப் படிவத்தில் பாலினம் என்கிற இடத்தில் ஆண் என்று இருக்கும். ஆனால் புகைப்படத்தில் பெண் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக் குழப்பத்தினால் எடுத்த எடுப்பிலேயே எங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான முயற்சியே கூட மறுக்கப்படுவது தான் கொடுமையான விஷயம். எனவே திருநங்கைகளுக்கான அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற அரசு சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல் பெண்களின் மீதான பாலியல் வண்கொடுமைக்கும், திருநங்கைகள் மீதான பாலியல் வண்கொடுமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் பாருங்கள்.

பொது இடத்தில் யாராவது ஒரு பெண்ணை சீண்டினால் சுற்றி இருப்பவர்கள் தர்ம அடி கொடுக்கிறார்கள். வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம், தண்டனை கிடைக்கும் என்கிற பயமாவது பெண்கள் விஷயத்தில் இருக்கிறது. ஆனால் இதே வண்கொடுமைகளை திருநங்கைகள் மீது கட்டவிழ்த்து விடும் போது சமுதாயம் அதை ரசித்து வேடிக்கைப் பார்க்கிறது.

பட்டப்பகலில் மனிதாபிமானமின்றி நடந்தேறுகிற இந்த வண்கொடுமைகளின் மூலம் நாலு பேர் சந்தோஷப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மனித உரிமைகள் பற்றி பேசி மாநாடுகள் நடத்தி பிஸ்கட் சாப்பிடுகிறீர்கள்.

மரக்காணம் பாலா.

Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.

Saturday, July 21, 2007

ரிக்க்ஷா மாமாவுக்கு இது '1071'வது பிறந்த நாள்






பாண்டிச்சேரியில் இறங்கி 'ரிக்க்ஷா மாமா' யாரென்று கேட்டால், சின்னக் குழந்தைக்கூட சொல்லிவிடும். அந்தளவுக்கு ஊர் முழுக்கப் பிரபலம் ரிக்க்ஷா மாமா. சத்யராஜ் மாதிரி இவர் குழந்தைகளை ரிக்க்ஷாவில ஏற்றிக்கொண்டு 'ஒத்திப்போ, ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ'ன்னு பாட்டுப் பாடுகிறவரும் இல்லை. ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்ட சத்யராஜ், ''அய்யா! நீங்கதான் நிஜமான ஹீரோ, நீங்கதான் உண்மையான ரிக்க்ஷா மாமா''னு நெகிழ்ந்து போய், ஒரு ரிக்க்ஷாவையே இவருக்குப் பரிசா கொடுத்திருக்கார்.

சேவை செய்யணும்னா உலக அழகி ஆகணுமா என்ன? மனசு தாங்க முக்கியம். அந்த மனசு, இந்த ஏழை ரிக்க்ஷா மாமாகிட்ட நிறையவே இருக்கு. அஞ்சு ரூபாய்க்கு காதி போர்டு பட்ட சாதம் வாங்கி அடிச்சாலும் பசங்களுக்கு பொறந்த நாள்னா, 150 ரூபாய்க்கு கேக் வாங்கிக் கொண்டாடுகிற செல்வந்தர் இவர். இவருக்கு மொத்தம் 1071 பிள்ளைகள். எப்படி சமாளிக்கிறார்ணு பாக்கறீங்களா? கேளுங்க.

சவரிநாதனுக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் லட்சுமாங்குடி. மனம் நிறைய கனவுகளோடு 76ல் ஜெசிந்தா மேரியைக் கைப்பிடித்தார். கண்கொள்ளாத அழகு ஜெசிந்தா. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் மூட்டைத் தூக்கி சம்பாதித்து, அந்தப் பணத்தில் தன் அழகு மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். இப்படி சந்தோஷமாக நாலு வருடங்கள் ஓடிய குடும்ப வாழ்க்கையில், திடீரென்று புயலடிக்கத் துவங்கியது. அன்று நடுக்கடலில் கப்பலுக்குள் வேலை. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. களைத்துப் போய் பசியோடு வீடு வந்து சேர்ந்தவரை எதிர்பாராமல் இடி தாக்கியிருக்கிறது. ஆனால் அன்று மழை ஏதுமில்லை. வானத்திலிருந்து பாய்வதற்குப் பதில், இடி வீட்டுக்குளிருந்து பாய்ந்திருக்கிறது. ஆம், ஆறு மாதக் குழந்தை சார்லஸ் கீழே உறங்கிக் கொண்டிருக்க, மேலே வேறொரு ஆடவனுடன் கட்டிலில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் ஜெசிந்தா மேரி.

''எனக்கு ஆத்திரத்தைவிட அழுகைதான் அதிகமா வந்தது. தன் பொண்டாட்டியோட வேற ஒரு ஆம்பளையை கட்டில்ல பாக்குற மாதிரி கொடுமை உலகத்துல வேற எதுவும் இல்லீங்க. சாகிறவரை அது உங்களை சித்திரவதை பண்ணிக்கிட்டே இருக்கும். ரொம்ப மனசு ஒடஞ்சிப் போச்சு. எங்கெங்க‌யோ சுத்தினேன். கடைசியா வந்து சேர்ந்த‌ இடம், சூசைட் பாயிண்ட்னு சொல்றாங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. மலை உச்சிக்குப் போயிட்டேன். ஆனா, தற்கொலை என்னமெல்லாம் கிடையாது.

நான் மலை உச்சியில நிக்கிறதைப் பார்த்து, கர்னல் அந்தோனிங்கிற மிலிட்ரி ஆபீசர், 'அடப்பாவி ஏண்டா சாகப் போற? உனக்கு என்ன கஷ்டம்? எங்கிட்ட சொல்லு'ன்னு கேட்டவர், அங்குள்ள டெபன்ஸ் காலேஜில் என்னை தோட்ட வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் தனியா இருக்கிறதைப் பார்த்து 'ரோசி'ன்ற பொண்ணை கல்யாணமும் செஞ்சு வச்சார். ரோசிகூட குடும்பம் நடத்தினப்ப ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. யார் செஞ்ச பாவமோ! ரெண்டுமே செத்துப் போச்சு.

ரொம்ப நாளாகியும் குழந்தைங்க செத்துப்போன துக்கம் மனசை விட்டுப் போகலை. வெறுத்துப் போய், மனம் போன போக்கில் கிளம்பி பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன். குளம் வெட்டி இந்த ஊர் ஜனத்துக்கெல்லாம் தண்ணி அளந்தாளாமே ஆயி! அந்த ஆயி மண்டபத்துக்குப் பக்கத்துல பசியோட உக்காந்திருந்தேன். 'ராஜூ, பாபு'ன்னு ரெண்டு ரிச்சா தொழிலாளிங்க. அவங்க‌தான் எம்மேல இறக்கப்பட்டு கூடைசோறு வாங்கித் தந்தாங்க. என் கதைய கேட்டுட்டு 'இனிமே நீயே ஒழச்சி சம்பாரிச்சி சாப்பிடு'ன்னு சொல்லி ஒரே நாள்ல எனக்கு ரிச்சா ஓட்டக் கத்துக் குடுத்தாங்க.

ஹனிமூன் கொண்டாட பாண்டிச்சேரி வந்த ஜோடிதான் என் முதல் சவாரி. அன்னைக்கு என்ன அதிஷ்ட்டமோ! நிறைய வெள்ளக்காரங்க என் ரிச்சாவுக்கு சவாரி வந்தாங்க. சொன்னா நம்பறீங்களோ இல்லியோ! அன்னைக்கு மட்டும் ஒரே நாள்ல 300 ரூபா கலெக்க்ஷன் ஆச்சு. நேரா கொண்டுபோய் 'ராஜூ, பாபு'கிட்ட கொடுத்துட்டேன். அவங்க வெறும் முப்பது ரூபாயை எடுத்துக்கிட்டு, மீதிய எங்கிட்டயே கொடுத்துட்டாங்க.

இவ்ளோ பணத்தை எப்ப‌டி செலவு பண்றதுண்ணே தெரியல! குதிக்காத குறைதான். சந்தோஷமா தெருவுல நடந்து, போய்க்கிட்டே இருந்தேன். அப்பப் பாத்து பிளாட்பாரத்துல வசிக்கிற குழந்தைங்க, 'யம்மா பசிக்குது, யம்மா பசிக்குது'ன்னு சொல்லி அவங்க அப்பாம்மாகிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்குதுங்க! எனக்கு குழந்தைங்க இல்லையா? இதுங்க பசியில துடிக்கிறதப் பாத்து மனசு இறங்கிப் போச்சு. அப்பவெல்லாம் ஒரு சாப்பாடு ரெண்டு ரூபாதான். எல்லா குழந்தைங்களையும் கூப்பிட்டேன். மொத்தம் இருபது, இருப‌த்தஞ்சி பசங்க இருக்கும். எல்லாத்துக்கும் சோறு வாங்கிக் கொடுத்துட்டு, அதுங்க சாப்புடறதையே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்குப் பசியே எடுக்கலை.

அதுக்கப்புறம் எனக்கு நெறைய ஸ்கூல் சவாரிங்க வர ஆரம்பிச்சது. சக்திகுமரன்தான் என்னோட முதல் ஸ்டூடண்ட். அவனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள், எனக்கு நவம்பர் 8. சரி, இந்தக் குழந்தையோட பிறந்த நாளை கிராண்டா கொண்டாடணும்ணு முடிவு பண்னேன். நேரா காந்தி ஸ்ட்ரீட்ல இருக்குற சிவா ஆர்ட்டிஸ்ட்கிட்டப் போய், ஒரு வாழ்த்து அட்டை வரஞ்சிக்கிடேன். அப்புறமா கலர் பேப்பர், ஜோடிப்புலாம் வாங்கி ராத்திரி முழுக்க‌ உக்காந்து ரிக்க்ஷாவை அலங்காரம் பண்ணேன். காலைல சக்திகுமரன் வீட்டு வாசல்ல போய் நின்னதும், அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பிள்ளைய ரிச்சாவுல ஏத்திக்கிட்டுக் கிளம்பும்போது, பக்கத்து வீடுகள்ல இருந்து ஒரு பத்துப் பிள்ளைங்க வந்து நிக்குது. எல்லாரையும் ஏத்திக்கிட்டு நேரா மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போனேன். பிரார்த்தனையை முடிச்சிட்டு அங்கிருந்து லக்கி ஸ்டூடியோ ஓனரைப்போய், தூக்கத்துல எழுப்பினேன். அதுதான் எங்களோட முதல் பிறந்தநாள் போட்டோ.

குழந்தைங்க, அவங்க அப்பாம்மான்னு எல்லாரும் சந்தோஷப்பட்டதைப் பார்த்து எனக்கு ரொம்ப உற்சாகமாயிடுச்சி. ஆனா வசதியான பிள்ளைங்கள்லாம் சைக்கிள்ல, ரிச்சாவுல வரும்போது தெருவோரப் பிள்ளைங்க நடந்தே வர்றது என்னவோ மாதிரி இருந்துச்சி. 'நமக்குதான் பிள்ளைங்களே இல்லை. இதுங்களையாவது கூட்டிட்டுப் போவோம்'னு இலவசமாவே ரிச்சாவுல ஏத்திட்டுப்போக‌ ஆரம்பிச்சேன். போகும்போது, 'மாமா எனக்கு இன்னைக்கி பொறந்தநாள்'னு பிள்ளைங்க சொல்லும். மாத்திப் போடவே துணி இல்ல. இதுல பொறந்த நாள் எப்படிக் கொண்டாட முடியும்? புதுத் துணி எப்படி எடுக்க முடியும்? அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேன்.

இந்த மாதிரி ஏழைக் குழந்தைகளுக்கு நாமே பிறந்தநாள் கொண்டாடிடணும்.

புதுசா எந்தக் குழந்தை வந்தாலும் சரி! பிறந்த நாளைக் கேட்டு, குறிச்சு வச்சுக்குவேன். ஆனா கேக் வெட்டி, புதுத் துணி எடுத்து, பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு எனக்கு மட்டும் வசதி இருக்கா என்ன? அதனால... யாராவது பெரிய மனுஷங்க, அரசியல்வாதிங்க, துணிக்கடைக்கார‌ங்க, தனியார் கம்பெணிங்கன்னு போய், விஷயத்தைச் சொல்லி உதவி கேட்பேன். அவங்களும் 'இல்லை'ன்னு சொல்லாம இன்னிக்கு வரைக்கும் முடிஞ்சதை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. பாண்டிச்சேரியில் இருக்கிற எல்லா வி.ஐ.பி.களோடவும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிட்டோம். எங்களோட 125வது பிறந்தநாளை நடிகர் சத்யராஜ் முன்னிலையில் கொண்டாடினோம். அப்பதான் அவர் என்னைப் பாராட்டி ஒரு ரிச்சாவைப் பரிசாக் கொடுத்தார். 200வது பிறந்த நாளுக்கு சூப்பர்ஸ்டார், 225வது பிறந்தநாளுக்கு நடிகர் சரத்குமார், 250வது பிறந்தநாளுக்கு கமலஹாசன்னு எல்லா சினிமாஸ்டார் கூடவும் கொண்டாடி இருக்கோம். இதுவரைக்கும் 1071 பொறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இனிமேலும் என் மூச்சு இருக்குற வரைக்கும் கொண்டாடுவேன்'' என்கிறார்.

''உங்க ரெண்டாவது மனைவி ரோசி என்ன ஆனாங்க. அவங்களை ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க?" என்றேன்.

''அய்யய்யோ... விட்டுட்டு வரலை சார். போய் கூட்டிட்டு வ‌ந்துட்டேன். திரும்பவும் என் சொந்தக் கதைக்கே வந்துட்டீங்க. மறக்கணும்னு நெனச்சாலும் சொல்லித்தானே ஆகனும். சவாரி, சாப்பாடு அதைவிட்டா பிறந்தநாள்னு சந்தோஷமாத்தான் போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை. புள்ளைக்குட்டி யாரும் இல்லாததால வீட்ல ரோசி மட்டும் தனியா இருப்பா. அப்படி நான் இல்லாத நேரமாப் பார்த்து ரெண்டு பொருக்கிப் பசங்க அவளை பலாத்காரம் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே அவ கொழந்தைங்க செத்துப் போன துக்கத்துல மனசொடிஞ்சிக் கிடந்தா. இந்த சம்பவத்தால அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. குழந்தைங்களோட குழந்தையா அவளையும் 27 வருஷமா பாத்துக்கிட்டிருந்தேன். எனக்குன்னு இருந்த சொந்தம் அவ மட்டும்தான். அதையும் மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த சுனாமி, பரிச்சிக்கிட்டுப் போயிடிச்சி. சுனாமி வந்தப்போ நான் சவாரில இருந்தேன். குடிசை கடலோரத்துல இருந்ததா!அலையோட அலையா அவளையும் வாரிக்கிட்டுப் போயிருச்சி. ஆனா அவ சாகலை. விசாரிச்சிப் பாத்தப்ப அவங்க அம்மா வீட்டுப் பக்கம் பாத்ததா சிலபேர் சொன்னாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் திரும்பி வரவே இல்லை. எங்க இருக்கான்னும் தெரியல'' என்றவரிடம்,
''உங்களோட முதல் குழந்தை சார்லஸாவது இருக்கானா? அவனைப் பாத்திருக்கீங்களா?" என்றேன்.

''அவன் மெட்ராஸ்லதான் எங்கயோ இருக்கானாம். அவன் எனக்குப் பிறந்த குழந்தைங்க. என்னைக்காவது என்னைப் பார்க்க வருவானான்னு நான் ஏங்காத நாள் இல்லை. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டாவது அவனைப் பாக்க முடிஞ்சா அதைவிட சந்தோஷம் வேற எதுவும் கிடயாது'' என்கிறார்.

''பிறந்த நாள் மட்டும் தான் கொண்டாடுகிறீர்களா... இல்லை வேறு ஏதாவது சமூக சேவையும் செய்வதுண்டா?"

''ஜான்பீட்டர்னு ஒரு ஊணமுற்றப் பையன். யார் யாரிடமோ உதவி கேட்டு பத்து வருஷமா அவனைப் படிக்க வச்சிருக்கேன். நல்லா படிச்சி கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிட்டான். இப்ப அவனுக்கு கவர்மெண்ட் டூ வீலர் குடுத்திருக்கு. அவன் ஸ்கூட்டர்ல போற அழகைப் பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? தமிழ்ச்செல்வின்னு ஒரு பொண்ணு. பாவம்! ரொம்ப ஏழை. பேப்பர்ல என்னைப்பத்தி படிச்சிட்டு உதவி கேட்டு வந்துச்சி. 'ஊர் உலகத்துல எத்தனையோ பெரிய மனுஷங்க இருக்கும்போது இந்தப் பொண்ணு நம்ம‌கிட்ட வந்து நிக்குதே!'ன்னு ஒன்னுமே புரியலை. மருந்துக்கு மட்டும் மாசம் 600 ரூபா செலவாகும். அந்த மாதிரி ஒரு பிரச்சினை அந்தப் பொண்ணுக்கு. நிறைய தனியார் கம்பெனிகள்ல போய் நின்னு மொத்தம் ஒன்ரை வருஷம் மருந்து வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஒரு குறையும் இல்லாம நல்லபடியா இருக்கா.

93ல் என் தோள்ல தூக்கிட்டுப் போய்விட்ட சரண்யா! இப்ப ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர். அந்தப் பொண்ணால நடக்க முடியாது. அதேபோல சுகண்யாங்கற பொண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் நடந்திச்சி. அதுக்கு ஆயிரம் சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா, 'தங்களை அன்புடன் வரவேற்கும் ரிக்க்ஷா மாமா'ன்னு இன்விடேஷன்ல எம்பேரப் போட்டுருச்சி. அதப் பாத்த உடனே எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. எனக்குன்னு யாருங்க சொந்தம்? பள்ளிக்கூடம் கூட்டிட்டுப் போனப் பாவத்துக்காக, இந்தப் பொண்ணு பத்திரிகைல பேரைப்போட்டு கவுரவப்படுத்திருச்சே!ன்னு எனக்கு பலநாள் தூக்கமே வரலை'' என்கிறவர்,

''வெள்ளிக்கிழமையானால் போது!, பாண்டிச்சேரியில் இருக்கிற ஜோதி கண் மருத்துவமனைக்கு கிராமத்தில் இருக்கிற ஏழை முதியோர்களை கொண்டு போய்விடுகிறார் ரிக்ச்கா மாமா. டாக்டர் வனஜா வைத்தியநாதன் அவர்களுக்கு ரிக்க்ஷா மாமா சார்பாக இலவச மருத்துவம் பார்த்து அனுப்புகிறார். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஊணமுற்றவர்களை சென்னை சூளையில் உள்ள 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவது என்று இன்றைக்கும் தொடர்கிறது ரிக்க்ஷா மாமாவின் சேவை.

இந்த ஏழையைச் சார்ந்து நிற்கிற ஏழைகளுக்கு இவர் வெறும் ரிக்க்ஷா மாமா அல்ல. அதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவர். இவரது ரிக்க்ஷாவில் ஏறி இன்றைக்கு ஃபிரான்ஸில் குடியிருக்கும் விண்ணரசி என்ற மாணவி, இவருக்காகவே பாண்டிச்சேரி வந்து ஒரு முழு நீள டாக்குமெண்ட்ரி எடுத்துச் சென்றிருக்கிறார். அது அங்குள்ள பல்வேறு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அரசு நிறுவன‌ங்களாகட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவன‌ங்களாகட்டும்! காக்கா பிடித்து காரியம் சாதிப்பதற்காகவே விருதுகள் வழங்கி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விழா நடத்துகிறார்கள். இனிமேலாவது இவர்கள் சவரிநாதன் போன்ற மனிதர்களை இனம் கண்டு கவுரவிக்கட்டும்.

''உறவினர்கள் யாரும் உங்களைத் தேடி வருவதில்லையா?'' என்றால் சவரிநாதன் சொல்கிறார், ''உன் சகோதரனிடத்தில் மனத்தாங்கல் வைத்துக் கொண்டு என்னிடத்தில் வராதே' என்கிறார் ஏசு. அவர்கள் தினமும் கோவிலுக்குப் போகிறார்கள்''.

Friday, November 17, 2006

உயிர்வலி!

புதுச்சேரி, நேரு வீதியில்தான் அந்த மனிதரைப் பார்த்தேன். மழை, விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. எப்போதுமே போகுவரத்துக்கு இடைஞ்சலாக சாலையில் நடந்து செல்லும் மக்கள், மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தார்கள்.

சில்லென்றெ குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க, நான் வேடிக்கை பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தேன். நான் ஒரு காமிராக்காரன்.

காந்தி வீதி குறுக்கிட்டபோது, சன்னமான குரல். ஒலித்த குரல், என் உயிரைப் பிடுங்கி உடலைக் கிழித்த மாதிரி வலித்தது. குரல் வந்த திசைக்குத் திரும்பினேன். சாக்குப் பையை போர்த்தியபடி கிழவர் ஒருவர் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.

"அய்யா பெரியவங்களே! எதுனா தர்மம் போடுங்கையா!''

எலும்பும் தோலுமான தேகம், தலையோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. மீண்டும், மீண்டும் ''அய்யா பெரியவங்களே, அய்யா பெரியவங்களே!'' என்று அவர் இரந்து கொண்டிருந்தது, என்னை மிகவும் பாதித்தது. பாக்கெட்டில் தடவிப் பார்த்தேன். பைசா எதுவுமில்லை.

''ச்சே, இந்நேரம் பார்த்து...'' என வருத்தப்பட்டுக்கொண்டு, அடுத்த நடையை எடுத்து வைத்தேன்.

மனம் என்னை விடுவித்துக்கொண்டு, பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கிழவரைத் திரும்பிப் பார்ப்பதற்குள் சில அடிகள் கடந்துவிட்டேன். ''அட்லீஸ்ட் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட்டு போகலாமா?'' என்று நினைத்து, பின் அந்த நினைப்பையும் கைவிட்டேன். வீடுபோய்ச் சேர்ந்தேன்.

மறுநாள் காலை தோழியுடன் அக்கிழவரைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தபோது, நேரு வீதியில் அந்த இடம் வந்துவிட்டது. வழக்கமாய் நாங்கள் அலுவலகம் நோக்கி பிரிகிற இடம்.

''மதியம், அவ‌ருக்கு எதுனா வாங்கிக்கொடு'' என்றாள் தோழி.

நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். பெரிய மார்க்கெட் மீன் நாற்றம் காந்தி வீதியில் மணத்துக்கொண்டிருந்தது. 'நேரு வீதியில் தோழியை ஒரு எட்டு பாத்துட்டு போய்டலாம்' என்று பார்க்கிறேன்! எதிரில்அந்த கிழவர்.

நடு ரோட்டில், போலிஸ் பேரிகார்ட் மீது சாய்ந்தபடி,
''அய்யா பெரியவங்களே! அய்யா பெரியவங்களே!"
என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.

விருவிருவென்று பழைய காட்சிகள் மனதில் ஓட ஆரம்பித்தது.

''யாரு, யாரப் பார்த்துடா 'பெரியவங்களே’ன்னு சொல்றது? என்னடா உலகம் இது? கேடுகெட்ட சமுதாயம். இந்த மனுஷனுக்கு சோறுபோட, படுக்க வைக்க வக்கில்லாத நாடு, என்னடா நாடு?'' என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

மாலை வெளிச்சம் புகைப்படத்திற்கு போதுமானதாக இருந்ததால், கைகள் தன்னிச்சையாக காமிராவை வெளியே எடுத்தன‌. முகத்தை சூம் செய்து, போகஸ் செய்கிறேன். அந்தக் கண்களைப் பார்க்கிறேன்.

கண்களா அது!? ஆயிரம் கதைகள் சொல்லும் அதன் தீட்சண்யம். வயதாகிப்போனதால், அதில் நீலம் படர்ந்திருந்தது. ஆனால், ஒளி மிகுந்து காணப்பட்டது. அதிலிருந்து வீசிய மின்னலை ஒன்று, நேராக என் இதயத்தை தாக்கியதை நன்றாகவே உணர்ந்தேன். யாசகம் வேண்டி நின்ற ஒரு மனிதனின் வலி, காமிரா வழியாக கண்களுக்குள் பரவியதால், மனம் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

சூமைக் குறைத்து முகத்தை ஃபிரேம் செய்தேன். சுருங்கிய தோலும், லேசான எண்ணெய்ப் பசையும் முகத்தில் பளபளப்பைக் கூட்டியிருந்ததால், விலை மதிக்கமுடியாத ஒரு பிம்பம் கைகூடி இருந்தது. காமிரா அடுத்தடுத்து கிளிக்கிக்கொண்டிருந்தது.

அந்த கிழவருக்கு குழப்பம் வந்திருக்க வேண்டும். ''எப்படியா இருந்தாலும் இவன் பணம் கொடுப்பான். ஆனால், இவனைப் பார்த்துக்கொண்டு வழியில் போகிறவர்களை எப்படி விடுவது?'' என்கிற குழப்பம் அது.

எனவே, நொடிக்கு நொடி அவரது முகபாவம் மாறிக்கொண்டிருந்தது. என்னைப் பார்க்கிறார், திரும்பி சாலையில் போவோரைப் பார்க்கிறார். ரொம்பப் பாவமாய் போஸ் கொடுக்கிறார்.

நான், என் நிலை இழந்துகொண்டிருந்தேன். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஆறாத ரணங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. கிழவரைப்போலவே நானும் நடுக்கத்தை உணர்ந்தேன்.

ரொம்பப் பாவமாக என்னைப் பார்த்து கையை நீட்டினார் கிழவர்.

பாக்கெட்டைத் தடவினேன். அன்று சில்லரையாகக் கிடந்த பன்னிரண்டு ரூபாயைப் போட்டுவிட்டு, வலிகளைச் சுமந்தபடி நகர்ந்தேன்.

'நாளைக்கு எப்படியாவது ஒரு நூறு ரூபாயை சில்லரை மாத்திப் போட்றனும். வேற என்ன பண்ண‌லாம்...?'' என்று யோசித்தேன்.

நேராக தோழியிடம் போய், "அந்தத் தாத்தா சொன்னேன்ல! இதோ பார் அவர் போட்டோ" என்று காமிராவை நீட்டினேன். பார்த்த நொடியில் அவள் முகம் சுருங்கிவிட்டது.

''காசு குடுத்தியா...?''

''ம்...பன்னென்ரூபா''

''ச்சீ... அவ்ளோதானா?''

''இல்ல... நாளக்கி நூர்ரூபா சில்ர மாத்தி குடுத்துடலாம்னு இருக்கேன்.''

அன்றிரவு தூங்கப் பிடிக்கவில்லை. மாற்றி மாற்றிக் கிழவரும் வேறு சில நிகழ்வுகளும் போட்டுத் தாக்கியதில், கெட்டக் கெட்ட‌ வார்த்தைகள் மனதுக்குள் சத்தம் போட்டு ஒலித்தன.

மறுநாள் பத்தரை மணி இருக்கும். வேக வேகமாய் நேரு வீதிக்கு வந்தேன். கிழவரைக் காண‌வில்லை. அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தார். அவர் கையிலிருந்த கோனிப்பையை வாங்கிக்கொண்டு, ''நீ வருவேன்னுதான் காத்திருக்கேன்'' என்றேன்.

ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு. ஏதோ சொல்ல வருவதைப் புரிந்தவராய்,
''காது செரியா கேக்கல, கண் பார்வையும் தெரியாது'' என்றார்.

"வா! ஒக்காருவோம்" என்று கைத்தாங்கலாக அவரை அழைத்து கடை வாசல் ஒன்றில் அமரவைத்தேன்.

''தாத்தா, உம் பேரு இன்னா?"

''ம்... பேரா கேக்குற? பரணி கவுண்ரு. தொண்டர் படைத் தலைவன், அந்தகாலத்துல'' என்றவரின் முகத்தில், லேசாகப் பிரகாசம்.
எனக்கு ஆர்வம் கூடிற்று.

"தொண்டர் படைத் தலைவன்னா போராட்டம், ஆர்ப்பாட்டம்லாம் கலந்துகிட்டியா?"

''ஆமா, காந்தி கடலூர் வந்தப்போ, ஒரு பெரிய படையே தெரட்டிகினு போய் கூட்டத்துல கலந்துக்கிட்டேன். கடலூர்னு இல்ல, காந்தி எங்கக் கூட்டம் போடறார்னு தெரிஞ்சா போதும், எப்பாடுபட்டாவது போய்க் கலந்துக்குவேன்."

''பெரியார்லாம் பாத்திருக்கியா?''

அன்னாந்து பார்த்துவிட்டு சிரிக்கிறார்.

''பாத்திருக்கியாவா? அவரு பேச்சக் கேக்காதவன் எவன் இருந்தான், அந்தக் காலத்துல! அப்பிடியே நரம்பு முறுக்கிட்டு துள்ளும். ரத்தம் கொதிக்கும்.  'ஆமா, ஆமா! அவரு சொல்றது சரிதான்'னு சொல்வானுங்க'' என்றவர்,

''எங்க ஊர் பறையன, பொனுசாமி கவுண்டன் அடிச்சிட்டான். வந்துச்சி பார் ஆத்திரம். பரபரன்னு இழுத்தும்போய் கோட்டகுப்பம் போலீஸ் ஸ்டேசன்ல புடிச்சிக் குடுத்துட்டேன். மூனு மாசம் ஜெயில். வந்து ஏங்கிட்ட கெஞ்சுறாங்க. 'மன்னிச்சுடு'ன்னாங்க. சரி போவுதுன்னு உட்டுட்டேன். இதெல்லாம் அவர் பேச்சக் கேட்டு வந்ததுதான்.

அப்ப ஒடம்பு நல்லா வாட்ட சாட்டமா, பாடியா இருப்பேன். 'மனுசனுக்கு மனுசன் இன்னாடா ஜாதி வேண்டி கெடக்குது?'ன்னு கேப்பேன். எனக்கு அதெல்லாம் புடிக்காது. அதனாலயே ஊர்ல ஆவாதவனா போய்ட்டேன்.''

''உங்க சொந்த ஊர் எது? ஏன் இங்க வந்துட்டீங்க?''

''காலாப்பட்டு பக்கத்துல மாத்தூரு. நெலம், சொத்து பத்துலாம் இருக்குது. மூனு சொந்த மனை இருக்குது. மூன்ற கானி நெலத்த கோயிலுக்கு எழுதி வச்சிட்டேன். இப்பக்கூட ஊருக்கு போனேன். 'ஏன்டா... கோயிலுக்கு நெலத்த எழுதி வச்சிருக்கேன். இன்னாடா ஊர ஒழுங்கு மரியாதையா வச்சிருக்கீங்க?'ன்னு கேட்டேன். பிரச்ன வந்திருச்சி. என்னை எல்லாரும் சண்டக்காரனாத்தான் பாக்குறானுவோ!"

''ஏன், உங்க பொண்டாட்டி புள்ளைலாம் எங்க?''

''பொண்டாட்டி செத்து நாப்பது வருசமாவுது. இப்போ எனக்கு நூத்தி அஞ்சி வயசு'', என்றபோது தூக்கி வாரிப்போட்டது.

பொக்கிஷமாய் காக்கப்பட வேண்டிய புத்தகமல்லவா இவர்? ஜப்பான், அமெரிக்காவில் நூறு வயதைத் தாண்டியவர்களை கொண்டாடி மகிழும் நாளிதழ் செய்திகள் நியாபகத்துக்கு வந்தது.

தொடர்ந்து பேசினார் கிழவர்.

''ஒரு புள்ள இருக்கான்... பேரு உத்திரகுமாரன். அவம் பொண்டாட்டிதான் என்ன சரியா கவனிச்சிக்கிறதில்ல. ஏன் வயசான காலத்துல வீணா அவங்களுக்கு தொல்ல குடுப்பான?ன்ட்டு கௌம்பி வந்துட்டேன். தோ! இங்கியே படுத்துக்கிறேன், இங்கியே சாப்டுக்கிறேன். சொத்துப் பத்துக்கெல்லாம் ஆசயில்லை எனக்கு. நான் பாக்காத சொத்தா?

காலாபட்ல எட்டுத் தூலபத்தி வீடு, மூன்ற கானி நெலம். இன்னக்கி கோடிக்கணக்குல போவும். வெறும் பதினேழு ரூபாய்க்கு ஏமாத்தி வாங்கிக்கினான் அந்த வக்கீலு. திருட்டுப் பையன். போன மாசம்கூட நேர்ல போய் நாக்கப் புடுங்கறமாரி நாலு கேழி கேட்டுட்டு வந்தேன். அவ்ளோதான் முடிஞ்சது. ஏமாத்திக்கினான். இன்னா பண்றது? புள்ளையும் செரியில்ல''

புலம்பியபடி மீண்டும் தொடர்ந்தார்.

''அந்த காலத்துல சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்வேன். ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பனா, எவனும் எதுத்துப் பேசமாட்டான். ஆனா, ஞாயமாத்தான் தீர்ப்புச் சொல்வேன். எவன், எங்கத் தப்பு செஞ்சிருந்தாலும் இழுத்து வந்து நாலு சாத்து சாத்தி, 'பத்து ரூவா, இருவது ரூவா'ன்னு அபராதம் போட்ருவேன். அப்பலாம் அது பெரிய காசு.''

கிழவருக்கு காது கேட்காது என்பதால், சத்தம் போட்டு நான் கேட்ட கேள்விகளால், சாலையில் போவோர் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டு டீ சொல்லி ஆளுக்கு ஒன்றாய் சாப்பிட்டோம். கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தேன். அடுத்த கேள்வி மிகுந்த சங்கடமானது. அவரது சாவைப் பற்றியது. சூசகமாக ஆரம்பித்தேன்.

''வயசான காலத்துல ஊர்ல இருந்தாத்தானே நல்லது. நாலுபேர் கூட வருவாங்க, எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்?''

கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டு, கேட்டார்.

''என் சாவப் பத்தி கேக்கிறியா? அதுக்குத்தான் அப்பவே பாடிவச்சிட்டு போனானே!

''இப்பவோ இன்னுஞ்செத்த நேரமோ
இரவுதான் பகலோ அஃதிலோ

நீரிலோ தீயிலோ
செப்பறியா வீட்டிலோ காட்டிலோ

சாலையிலோ மரம் மீதிலோ
எப்பொழுது என்னுயிர் பிரியும்
ஈசனே!''

என ராகம் போட்டுப் பாடியவர்,

'' வெள்ளக்காரங் காலத்துல ஏழாவது படிச்சேன். விவேக சிந்தாமனி, ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் தண்ணி பட்ட பாடு.''

''ஒடம்பு எப்படி இருக்கு?''

"எனக்கு... எந்த நோயுமில்ல. இப்ப கொஞ்ச நாளா மூச்ச இழுக்குது. இன்னும் பத்து நாள் இருப்பனா? சாவு எப்பனா வரட்டும். யாருக்குத்தான் வரல. நீ வேலைக்கு போவல..?'' என்றார், என்னை பார்த்து.

''அது கிடக்கட்டும், ஊர்க்காரங்க யாரும் உன்னை விசாரிக்கிறது இல்லையா? எதுனா வாங்கித் தருவாங்களா?''

''ஏன் வாங்கித்தராம! ஊர்க்காரன், ஜாதிக்காரன் யாரும் வரமாட்டான். காலனிக்காரங்க வந்து விசாரிப்பாங்க. அஞ்சோ, பத்தோ குடுத்துட்டு போவாங்க. ஒன்னும் கஷ்டமில்ல உடு... ஒரு கை சோத்துக்கு மேல எறங்காது.''

என் செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புமணி வந்துகொண்டிருந்தது. ரொம்பவே நேரமாகிவிட்டிருந்தது.

"சரி தாத்தா, எதுனா வாங்கி வந்து தரவா? குளிர் நாளாயிடுச்சே! போர்வை வாங்கித்தரட்டுமா?'' என்றேன்.

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். போர்வை எங்கிட்டயே இருக்கு. போத்தாலே ஒடம்பு வலிக்குது. காசுகூட வேணாம். முந்தாநாளு எர்நூற்ரூபாவ எவனோ திருடினு போய்ட்டான். நீ எங்கயா இருந்தாலும் நல்லா இருக்கனும், கௌம்பு.'' என்றார்.

பாக்கெட்டில் கிடந்த முப்பத்தைந்து ரூபாயை, அவர் கையில் தினித்துவிட்டு நடந்தேன். கோபம் யார், யார் மீதெல்லாமோ படர்ந்துகொண்டிருந்தது.























''தமிழ், தமிழ் என்கிறோம். தமிழ்நாட்டில்தான் இந்த கேடுகெட்ட நிலை. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன். ச்சே!

நேற்று வரை நான் தமிழன். இன்று முதல் ஒரு மயிரும் இல்லை'' என்று நினைத்துக் கொண்டேன்.

*03.12.2006 தேதியிட்ட குங்குமம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Wednesday, November 15, 2006

மரணம் மகிழ்ச்சியானது


தமிழகத்தின் ஒரே குழந்தைகள் நாடகக் கலைஞரான வெலு சரவணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது என் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடிந்தது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணங்கள் நிரம்பியது அந்த நாட்க்கள்.

கைக்காசுக்கு செலவு வேண்டி பட்டாம்பூச்சிகளைப் பிடித்து புதைத்தது, கண்ணில் ரத்த சோகையைக் கண்டு காக்கைகளைச் சுட்டுத் தின்றது, ''முருகருக்கு மூத்திரமா பேய்ஞ்சு குடுக்கிற?'' என்று ஓனான்களை கல்லெறிந்து கொன்றது, ''தூண்டி போட்டா எப்பப்பாரு தவுக்ள வந்து மாட்டிக்கிது'' என்று அடித்துக் கொன்றது என அது ஒரு கொலைகாரப் பருவமாகவே இருந்துள்ளது.

வேலு சரவணனிடம் கேட்டேன், ''குழந்தைப் பருவம் எப்படிப்பட்டது?''

''அழகழகான, அதிசயம் நிறைந்த, கனவுகளோடு கூடிய மகிழ்ச்சியான பருவமது. மரணத்தைக்கூட மகிழ்ச்சியாக்கி விளையாடுவதென்பது அவர்களால் மட்டுமெ முடியும். பக்கத்துல ஒரு சாவு விழுந்திருக்கும், ஆனா பசங்க அதையே வெளையாடிப் பாப்பாங்க'' என்கிறார்.

நிணைத்துப் பார்க்கிறேன். அந்த நாட்களில் சாவுகளையும் அதனோடு கூடிய ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா... த்தரரா! தினுக்கு, தினுக்குத் தித்தா'' என்கிற மேளச்சத்தம் எங்கள் நாடி நரம்புகளை முருக்கேற்றி ஆடவைக்கும். ''ஆடி மகிழலாம், அழுது மகிழ்வது எப்படி?'' அதுக்குத்தான் ஒணானும் தவுக்களையும் இருக்கே!

ஒரு நாலைந்து பேர் கூடிக்கொண்டு நிறைய கற்களை பொறுக்கிக் கொள்வோம். சில பையன்கள் தென்னை ஓலையை சுருக்குப் போட்டு மரத்தில் ஏறி ஓணான் பிடிப்பார்கள். நாங்கள் கற்களை எடுத்துக்கொண்டு மரம் மரமாக சுற்றி வருவோம்.

கற்களைக் கொண்டு எவ்வளவுதான் அடிச்சாலும் இந்த சனியம் புடிச்ச ஓணான்கள் ஓடவே ஓடாது. இதன் காரணமாகவே ஒவ்வொன்றாய் அடிபட்டு விழும். ''வாப்பா... முருகருக்கு மூத்திரமா பேஞ்சு குடுத்த? இந்தா சாவு''ன்னு சொல்லி மீண்டும் அடிப்போம்.

''டேய் அனில்லாம் அடிக்கக்கூடாதுடா! ஏன்னா அதுதான் முருகருக்கு தண்ணி தாகம் எடுத்தப்போ... எள்னீர் பெற்ச்சி குட்த்துதாம்'' என்று ஓனானை சாகடிப்பதற்கான காரணத்தைக் கூறிக்கொள்வோம். மரப் பொந்துகளிலும், ஓலைகள், தண்ணீர் வற்றிய குட்டைகளிலிருந்தும் தவளைகளைப் பிடித்து கொன்று வருவோம்.

இப்பொழுது சாவு, களை கட்டிவிடும். அலுமினியத் தட்டுக்கள், தகர டப்பாக்கள், மாட்டுத் தோலிலிருந்து நாங்களே செய்த மேளம் இவற்றைக் கொண்டு ''ஜென்டு குட்டி ஜெனுக் நாக், ஜெண்டு குட்டி ஜெனுக் நாக், த்தரரா, த்தரரா தினுக்கு, தினுக்கு தித்தா''தான்.

நாங்கள்லாம் கூத்தாடுவோம், பொம்பள புள்ளங்கலாம் ''கட்டியாலா புட்டியாலா'' சொல்லி ஒப்பாரி வெப்பாங்க.
தென்ன ஓலைல பாடகட்டி அப்டியே மோளம் அடிச்சிகினும், கூத்தாடிகினும் எங்கூட்டு பக்கத்லகிற செம்மன் பள்ளத்தாண்ட எடுத்துனுபூடுவோம்.

''ஏ... பொணத்த எறக்குற மோளத்த அட்றா''ன்னு சொன்ன ஒட்னே ''ஜென்,ஜென்,ஜென்,ஜென்''னு ஒத்தஅடி அடிப்பானுங்க. மெதுவா எறக்கி அவுங்கள அடக்கம் பன்னிட்டு, மறுநாள் மொறையா போய் அவுங்களுக்கு பாலும் ஊத்திட்டு வருவோம்.

குழந்தைகள் சூது, வாது அறியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் கொட்டிக் கிடக்கின்றன.கற்பனைதான் படைப்பாற்றலின் அடிப்படை.

வேலு சரவணன் சொல்கிறார் ''குழந்தைகளை விளையாட விடுங்கள். அவர்கள் விழுந்து எழுந்திருப்பார்கள். மரத்திலிருந்து விழுவதால் பூக்களுக்கு வலிப்பதில்லை.''