Showing posts with label tamilnadu pondicherry. Show all posts
Showing posts with label tamilnadu pondicherry. Show all posts

Friday, April 6, 2007

சர்க் புர்க் கொட்டையான் கதை!


ஒரு ஊர்ல ''கொட்டையான், கொட்டையான்''னு ஒருத்தன் இருந்தானாம். “யாங் அவம் பேரு கொட்டையான்”னு கேளுங்க.

ஹி...ஹி...ஏன்னா? அவனுக்கு கொட்ட, ரொம்பப் பெருசா இருக்குமாம். செரி, கதைய கேளுங்க.

கொட்டையான பாத்து யார்னா ''கொட்டையான்''னு கூப்பிட்டா அவனுக்கு பயங்கர கோவம் வருமாம். ஒரு நாள் இதுமேர்த்தான், இவம் கழினில ஏர் உழுதுகினு இருந்தானாம். இவம் பொண்டாட்டி இவுனுக்கு கஞ்சி எடுத்தாந்து கிறா.

கஞ்சி எடுத்தாந்தவ, கழினில கால் வெக்க பால்மாறிக்கினு [சோம்பேறித்தனம்] மோட்டு [மேடு] மேலயே நின்னுக்கினு ''யோவ் மச்சாங்... யோவ் மச்சாங்...''ன்னு கூப்ட்டுகிறா.

அந்தக் கழுதக்கி காது கேக்கல போல கீது. இவ கூப்ட்டு கூப்ட்டு பாத்து எரிச்சலாயிட்டு, ''யோவ் கொட்டையான்! இந்தாயா கஞ்சி யெடுத்தாந்து கீறம்''ன்னு சொல்லிக்கிறா.

அது இவம் காதுல உழுந்துட்டுது. வஞ்ச்சி பேரு ஆத்திரம்...

''கட்ன புருசனையே நீ கொட்டையான்னு கூப்புட்றயா''ன்னு சொல்லி வரப்பு மேல வச்சிருந்த கத்திய எடுத்து ஒரே வெட்டா வெட்டி பொண்டாட்டிய சாவடிச்சி போட்டான்.

அப்புறம் இன்னா பண்ணானாம்... மாட்ட[மாடு] அட்ச்சி, அட்ச்சி ஏர் உழுதுகிறாம். மாடு இன்னா பண்ணிக்கிது, வலி தாங்காத ''அம்மே கொட்டையான், அம்மே கொட்டையான்''ன்னு கத்திக்கிது.

''உனுக்கு இம்மாந் திமுரா? நீயும் ஒழிஞ்சி போ''ன்னு சொல்லி அதியும் வெட்டி சாவடிச்சிட்டானாம்.

‘பொண்டாட்டியும் பூட்டா, மாடும் பூட்ச்சி. செரி மாட்டு தோலாவது இருக்கட்டுமே’னு தோல உரிச்சி எடுத்தும் போனானாம். யெங்கெங்கியோ அலஞ்சி பாத்துக்கிறாம். யெங்கியும் தோல விக்க முடியில. செர்தான்ட்டு தோல காயப்போட்டு மோளங்[மேளம்] கட்டிட்டாம். கட்ன மோளத்த எடுத்துனு வழி நெடுக்க அடிச்சிம் போனாராம் பாரு!

அது ''ஜென்..ஜென்..ஜாம், நாக்-நாக், ஜென்...ஜென்...ஜாம், நாக்-நாக்''னு சொல்றதுக்கு பதிலா ''ஜென்..ஜென்..ஜாங் கொட்டையான், ஜென்டு குட்டி கொட்டையான்''னு சொல்லிக்கிது.

“ங்கோத்தா... செத்தும் உனுக்கு திமுரு அடங்கலையா?”ன்னு சொல்லி மோளத்த குத்தி டாரா கிழிச்சிட்டானாம்.

கொட்டையானுக்கு ரொம்ப நாளா செருப்பு போட்டுக்கினு நடக்கனும்னு ஆச. பொண்டாட்டி, உண்டியில சேத்து வச்சிருந்த காசை எல்லாம் தொடச்சி எடுத்துனு போய், ஒரு புது செருப்பு வாங்கி போட்டுக்கினாராம்.

போட்டுக்கினு ரோட்டு மேல நடந்தும் போனார் பாருங்க! அந்த செருப்புகூட சும்மா இல்லியாம். அது இன்னான்னு சொல்லிச்சாம், ''சர்க்-புர்க் கொட்டையான், சர்க்-புர்க் கொட்டையான்''னு சொல்லிச்சாம்.

“இன்னாடா! இந்த செருப்புக்குகூட நம்பள கண்டா எளக்காரமா பூட்ச்சி”ன்ட்டு செருப்பையும் கண்டந் துண்டமா வெட்டி போட்டுட்டானாம்.

அப்புறம் எங்கெங்கியோ சுத்தி அலைஞ்சிட்டு சாய்ங்காலமா ஊட்டுக்குத் திரும்பி வந்தானாம். ஊட்ல பொண்டாட்டி இலாத்துனால அதது, அங்கங்க போட்டபிடி கடந்துகிது. கோழிய கவுக்க கூட ஆளில்ல.

“மொதல்ல, கோழிய புடிச்சி கூடைல கவுப்பம்”ன்னிட்டு போய் கோழிய புடிச்சானாம் பாருங்க! அது கூடவா அந்தமேறி கத்தும்?

''கொக்கரக்கோ கொட்டையான், கொக்கரக்கோ கொட்டையான்''
ன்னு கத்திக்கிது.

“ங்கொம்மால! சும்மா உட்ருவனா உன்ன?” ன்ட்டு, கோழிய வெட்டி கொழம்பு வச்சிட்டானாம். அப்பவும் பாருங்க சோதனைய! கொழம்பு இன்னான்னு கொதிக்குதாம்?

''கொத-கொதா கொட்டையான், கொத-கொதா கொட்டையான்''ன்னு
கொதிக்குதாம்.

இவனுக்கு ஆத்திரம் தாங்க முடியில. கொழம்பு சட்டிய தூக்கிப்போட்டு அடுப்பு மேலயே வச்சி ஒரே ஒடையா ஒடச்சிட்டானாம். ஒடஞ்டதும் சும்மா ஒடையல.

அதுல இருந்த கொழம்பு, ''சொய்ங்... கொட்டையான், சொய்ங்... கொட்டையான்''
னு ஒடஞ்சி கிது.

அடுப்ப எட்டி ஒரு ஒத உட்டுட்டு, உள்ள போய், பாயப் போட்னு படுத்தானாம். அந்நேரம் பாத்தா அவுனுக்கு குசு வரனும்? அதுவும் சும்மா வரல.

''பொய்ங்... கொட்டையான், பொய்ங்... கொட்டையான்''னு சொல்லிக்கினே வந்துக்கிது.

இவுருதான் பெரிய கோவக்கார்ராச்சே! எடுத்தாராம் அரிவாள! குசு உட்ட சூத்தப் புடிச்சி ஒரே அறுப்புத்தான். 'பர்ர்க்'கினு போட்டுக்க்கிச்சி.

அப்புறம் இன்னா? அவுரு சூத்த அவுரே கிழிச்சிக்கினு செத்துப்பூட்டாராம். இதாங் கொட்டையான் கத.


குறிப்பு: ''ங்கோத்தா, ங்கொம்மால'' என்று இரண்டு இடங்களில் கெட்ட வார்த்தை வருவதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். இந்தக் கதையை எனக்குச் சொன்னது ஒன்பதாம் வகுப்பு படிக்கிற வினோத் [என் அத்தைக்குப் பேரன்].

எங்கள் பகுதிகளில் கெட்ட வார்த்தையை மக்கள் கூச்ச நாச்சமின்றி வெகு இயல்பாகப் பேசுகிறார்கள்.

கதை நாயகன் ஒவ்வொரு கொலைக்கும், ஒரு கெட்ட வார்த்தை சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பான். அதையெல்லாம் இங்கே நான் பதிவு செய்யவில்லை. பிறந்த கிராமத்திற்குள் நுழைந்துவிட்டால், கெட்ட வார்த்தைகளைப் பேச நானும் கூச்சப்படுவதில்லை.

இது எங்கள் மண்ணின் இயல்பு. இந்த மொழிநடை உங்களுக்கு சிரமமாகத் தெரியலாம். இதுவும் என் மண்ணுக்கானது.

கெட்ட வார்த்தை பற்றிய உளவியலும் அரசியலும் சமூகக் கோபங்ககளைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே திகழ்கிறது.ல் இது பற்றி தனிப் பதிவுபோட முயற்சிக்கிறேன்.

Monday, April 2, 2007

இந்த கையால தான் சோறு அள்ளி துன்றோம்




தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றச் செயல்!



ஒவ்வொரு பாடப் புத்தகத்திலும் இதைச் சொல்லித்தான் கல்வியை ஆரம்பிக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் 1950ல் சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஏதோ ஒரு சட்டப்படி அதே கொடுமை இன்று வரை ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டு தொடர்கிறது என்பதே கசப்பான [நாறிப்போன] உண்மை.
மனிதக் கழிவுகளை மனிதர்களை விட்டே அள்ளுகிற கொடுமை துப்புறவு பணியாளர்கள் என்கிற போர்வையில் சட்டப்படி தொடர்கிறது.



''இந்த குப்ப வண்டிக்காரனுங்களுக்கு ரொம்பக் கொழுப்பு. ஆபீஸ் போற நேரம் பாத்துத் தான் ரோட்ல திரியுவானுங்க. கவருமென்ட்டு உத்தியோகம் பாரு! அந்த தெனாவெட்டு. உவ்வே... நாத்தம் கொடலப் பொரட்டுது. வச்சி நாலு சாத்து சாத்துனாதான் புத்தி வரும். வேணும்னே தான் இப்படியெல்லாம் பண்றானுவோ!'' கோல்கேட் யூஸ் பண்ண வாயால் இதைவிட நாராசமாய் திட்டுகிற மனிதர்களும் உண்டு.



சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் குப்பை அள்ளப் போன ஊழியர்களுக்கும், மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சண்டை வந்து அடிதடியாகிவிட்டது. அடித்தவர்களை கைது செய்யக் கோரி துப்புறவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரியே நாறிப் போய்விட்டது.



மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடை கழிவுகளால் புதுச்சேரியின் ''WALL STREET'' ஆன நேரு வீதியிலும், காந்தி வீதியிலும் யாராலும் நடக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பின் ஒருவாறு பேச்சு வார்த்தை முடிந்து அன்று ஊழியர்கள் குப்பை அள்ளப் போகிறார்கள். அப்போது நான் ஒரு நாளிதழில் புகைப்படக்காரனாக பணி ஆற்றிக்கொண்டிருந்தேன் [அதைவிட பேசாம டீ ஆத்தப் போயிருந்திருக்கலாம்]. அதன் பொருட்டு அந்நிகழ்வை புகைப்படம் எடுக்கப் போகும் போதுதான் அந்த சித்திரவதையை நேரில் உணர முடிந்தது.



பந்தயம் கட்டிப் பீயைத் தின்று காசு வாங்கிய மனிதரை சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று நாட்பட்டுப்போன மாமிசக் கழிவுகளை வாரிச் சுத்தம் செய்தார்களே அந்த மனிதர்கள். கொடுமையடா சாமி. கர்சிப்பால் முகத்தை கட்டிக் கொண்டு, மூச்சை அடக்கிக் கொண்டு எவ்வளவோ முயன்றும் வாந்தி வந்துவிட்டது எனக்கு.



நாற்றம் என்றால் குடலைப் புரட்டி வாந்தி வருகிறது நமக்கு. அந்த நாற்றத்தோடு புறக்கணிக்கப்படுகிறது அம்மக்களின் வாழ்க்கை. கவர்மென்ட்டு வேலை என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களில் எத்தனையோ பேர் கான்ட்ராக்ட் அடிப்படையிலான தினக்கூலி ஊழியர்கள், இவர்களுக்கு எந்த பணிப் பாதுகாப்பும் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?



''ழான் குளோத்'' . புதுவை அரசின் கார்ப்பரேஷன் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளி குடும்பத்தை நடத்துகிறார். இத்தனைக்கும் இவரது குடும்பம் பிரெஞ்சு நேஷனாலிடி[தாத்தாவுக்கு] பெற்றுள்ளது. நாலெழுத்து படிக்கத்தெரியாத பேரனுக்கு நாற்றமடிக்கும் கழிவறைகளில் வேலை.



''அப்பா காப்ரேசன்ல கக்கூஸ் அள்ளினுதான் இருந்தேரு. அவுரு செத்தப்புறம் அந்த வேலைய ஏங்கிட்ட குடுத்தாங்க. ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமா இருந்திச்சி. நாத்தம் பொறுக்க முடியாம அன்னாடம் வாந்தியெடுத்துக்கினு தான் கெடந்தேன். அப்பறம் போவப் போவப் பழகிடுச்சி.



காவா அள்ளப் போனா! கக்கூஸ் மட்டுமில்லாம செத்துப்போன எலி, வீங்கி சதை பிஞ்சிபோற அளவுள நாயிங்க அல்லாம் கடக்கும். இது இன்னா பெருசு? இத்தவுட... ஆஸ்பிட்டல்ல இருந்து அபார்ஷன் ஆன கொழந்திங்க[கரு], அங்க நோயாளிங்களோட அல்லா கழிவுங்களையும் கையாலதான் வாரிப்போடுறோம். இதுக்கெல்லாம் மொகம் சுளிச்சிக்கிட்டிருந்தா யாரு நம்பள பாக்கப்போறா?



சாப்பாட்ட அள்ளி வாயில வச்சா போறும். அந்த கையால இன்னான்னாத்த அள்னமோ அதெல்லாம் நாபகத்துக்கு வரும். இப்பிடி ஒரு பொழப்பு வேணுமாடான்னு தோனும். இன்னா பண்றது சார்? பொண்டாட்டி புள்ளிங்களுக்கும் வாயி வயிறு இருக்குதில்ல'' கப்பென்ற சாராய வாடையுடன் கிட்ட வந்து பேசுகிறார் ழான் குளோத்.



''கோச்சிக்காத சார்! எங்கனா ஒரு எடத்துல அடச்சிக்கும். ஆனா ஊரு பூரா நாறிடும். மாசக்கணக்குல மனுஷன் சேத்துவெக்கிற அழுக்கு சார். கண்ணு, காது, வாயி, மூக்குலாம் கக்கூஸ் தண்ணி ஏறிடும். உள்ள முழுவி கையாலதான் அடச்சிங்கிறத எடுப்போம். உங்களாண்டஎப்பிடி சொல்றதுன்னு தெரில, செல சமயம் மம்ட்டி வச்சிகூட வெட்டுற அளவுல இருக்கும். எல்லாம் மணக்க மணக்க வாயல சாப்ட்டதுதான். வவுத்தால போவும் போது இப்பிடி ஆயிடுது.



அதான், ஒரு எம்.சி கோட்ற [மெக்டொவல் பிராந்தி] ஒடச்சமா உள்ள ஊத்தனுமான்னு எறங்கி வேல செஞ்சிடுவோம். யார் ஊட்டு காக்கூஸ்னா அடச்சிக்கிச்சின்னு வச்சிக்குங்க, வந்து கூப்புடுவாங்க. அப்பிடியே ரெண்டு கையாலயும் அள்ளி பக்கெட்ல போட்டு அத்த தலமேல தான் தூக்கியாருவோம். வரும்போது மேல பூறா ஒழுவும். இன்னா பன்றது நம்ப தலவிதி இதுன்னு ஆயிப்போச்சி. இன்னா ஆயிப்போச்சி ஆயிப்போச்சின்னு சொல்றேன்னு பாக்கிறியா? எல்லாம் ''ஆயி''ப்போற வேலதான... சொல்லிவிட்டு சிரிக்கிறார்.



''6,500 ரூபா சார் சம்பளம். வங்குன கடனுக்கு புடிப்பு போவ 450 ரூபாதான் கைல வரும். அத்த வச்சித்தான் குடும்பத்த ஓட்டுறேன். ஆனா எனக்கு மட்டும் தண்ணி செலவுக்கே ஒரு நாளைக்கி நூறு ரூபா ஆயிடும். திருப்பி கடன வாங்கு. இப்பிடித்தான் சார் வண்டி ஓடுது.



சரக்கடிச்சா சோறு எறங்க மாட்டுதா? ஒடம்பே வீணாப்போச்சி. பதிமூணு வருஷமா வேல செய்யிறேன் சார். மாசம் ஒரே ஒரு லைபாய் சோப்பு குடுப்பாங்க. அதான், அதோட ஒரு மழக்கோட்டு குடுத்துகிறாங்க. மருந்து மாத்திர, செக்கப்பு அது இதுன்னு எதுவுங் கெடெயேது. அவ்ளோ ஏன்? கைக்கு, மூஞ்சிக்கு கிளவ்சு எதுனா குடுப்பாங்களான்னு கேளாம்? ம்ஹூம்... ஒருஎழவும் இல்ல.



எனுக்கு இன்னின்ன வியாதி கீதுன்னு எனுக்கே தெரியாது. எங்காளுங்களாம் நல்லாத்தான் இருக்குற மாதிரி இருப்பானுங்க. ஆனா திடீர்னு செத்துறுவானுங்க. பின்ன! இந்த வேல பாக்குறவன் நூறு வயசா வாழுவான்? எனுக்கு எப்ப சாவு வருமோ தெரியாது. எம் புள்ளங்கிளயாவது நல்லா படிக்க வச்சி பெரியாளா ஆக்கனும்னு பாக்குறேன் முடியல. ஆசப்பட்டா முடியுமா? அததுக்கு இன்னா எழுதி வச்சிக்குதோ அதான நடக்கும். இன்னா நான் சொல்றது?'' என்று என்னைப் பார்த்து கேட்க்கிறார்.



''நீ எங்க ஊட்ல சாப்பிடமாட்ட. வா உனுக்கு டீ கடைல வாங்கித்தறேன். அங்க வந்து ஒரு டீ குடிச்சிட்டு போ. வானான்னு மட்டும் சொல்லிறாத'' என்று டீக்கடை நொக்கி நடையை கட்டுகிறார் 35 வயதில் 45 போல் மாறிவிட்ட 'ழான் குளோத்'. இந்தியாவில் இவர் ஒரே ஒரு எடுத்துக்காட்டு. நாடு முழுக்க 5.77 லட்சம் பேர்களும், தமிழகத்தில் மட்டும் 35,000 பேர்களும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.



கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் ''ரோசய்யா''. மருத்துவமனை கழிவுகளை கையால் அல்ளுகிற போது சிரிஞ்ச் குத்திவிட்டது. சில நாட்களில் கை அழுகிப்போய் குஷ்டம் வந்துவிட வேலை கிடையாது என்று நிர்வாகம் விரட்டி விட்டது.



நீதிமன்றத்தில் முறையிடுகிறார் ரோசய்யா. ''இது தொழில் முறை வியாதிப் பிரிவில் வராது எனவே நஷ்ட ஈடு தர முடியாது என்று மதாபிமானமிக்க திர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்''. பின்னர் இறந்து போன ரோசய்யாவின் நிலை தான் இத்தொழிலில் ஈடுபட்டுள்ல ழான் குளோத் போன்றோர்களுக்கு.



''துப்புறவுத் தொழிளாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள் என்று எதுவுமே கிடைப்பதில்லை'' என்று குற்றம் சாட்டுகிறார் ஆதித் தமிழர் பேரவைத் தலைவரான இரா. அதியாமான்.



தமிழ்நாட்டில் துப்புரவுத் தொழிளாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடிவரும் இவர் ''கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருட்டு வி.சி.டி.க்கு குண்டர் த்டுப்பு சட்டம், மதமாற்றத் தடுப்புச் சட்டம், ஆடு கோழி பலியிட தடைச் சட்டம் என்று அநேக சட்டங்கள் துரித கதியில் போட்டார்கள். ஆனால் காலங்காலமா இழிவுபடுத்தப்பட்டு வரும் எங்களது கோரிக்கைகளை கொஞ்சமும் செவி கொடுத்து கேட்க்கவில்லை.



சமூக நீதிக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் தி.முக அரசு அதைச் செயல் படுத்தும் விதத்தில் [குறைந்த பட்சம் தமிழகத்தில்] மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் அவல நிலையை சட்டப்படி ஒழிக்க வேண்டும். மேலை நாடுகளைப் போல் துப்புறவுத் தொழிலை நவீனமயமாக்கி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்.



இலங்கையில் உள்ள தமிழர்களுக்காகவெல்லாம் குரல் கொடுக்கிற தமிழ்நாட்டுத் தமிழன் இங்கே உள்ள மக்களை தீண்டத் தகாதவனாக வைத்திருக்கிறான். ஒரே ரத்தமாம், ஒரே மண்ணாம், ஒரே இனமாம். மொத்தத்தில் ஒரு மயிருமில்லை.



வெள்ளைக்காரர்களிடமிருந்தும், நமது அரசாங்கத்திடமிருந்தும் சேவை என்ற பெயரில் பணத்தைச் சுரண்டி கொழுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இத்தகைய அவல நிலைகளை மக்களின் பார்வைக்கோ, அரசாங்கத்தின் பார்வைக்கோ கொண்டு வருவதில்லை.
அவ்வளவு தூரம் எதற்கு தமிழ் தமிழ் என்று வீர முழக்கமிடும் திருமாவளவன் கூட இப் பிரச்சினைக்காக ஓங்கிக் குரல் கொடுக்கவில்லைஎன்பதே உண்மை.
மரக்காணம் பாலா.

Friday, November 17, 2006

உயிர்வலி!

புதுச்சேரி, நேரு வீதியில்தான் அந்த மனிதரைப் பார்த்தேன். மழை, விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. எப்போதுமே போகுவரத்துக்கு இடைஞ்சலாக சாலையில் நடந்து செல்லும் மக்கள், மழைக்கு பயந்து பிளாட்பாரத்தில் நடந்துகொண்டிருந்தார்கள்.

சில்லென்றெ குளிர்காற்று வீசிக்கொண்டிருக்க, நான் வேடிக்கை பார்த்தபடி நகர்ந்துகொண்டிருந்தேன். நான் ஒரு காமிராக்காரன்.

காந்தி வீதி குறுக்கிட்டபோது, சன்னமான குரல். ஒலித்த குரல், என் உயிரைப் பிடுங்கி உடலைக் கிழித்த மாதிரி வலித்தது. குரல் வந்த திசைக்குத் திரும்பினேன். சாக்குப் பையை போர்த்தியபடி கிழவர் ஒருவர் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.

"அய்யா பெரியவங்களே! எதுனா தர்மம் போடுங்கையா!''

எலும்பும் தோலுமான தேகம், தலையோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. மீண்டும், மீண்டும் ''அய்யா பெரியவங்களே, அய்யா பெரியவங்களே!'' என்று அவர் இரந்து கொண்டிருந்தது, என்னை மிகவும் பாதித்தது. பாக்கெட்டில் தடவிப் பார்த்தேன். பைசா எதுவுமில்லை.

''ச்சே, இந்நேரம் பார்த்து...'' என வருத்தப்பட்டுக்கொண்டு, அடுத்த நடையை எடுத்து வைத்தேன்.

மனம் என்னை விடுவித்துக்கொண்டு, பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கிழவரைத் திரும்பிப் பார்ப்பதற்குள் சில அடிகள் கடந்துவிட்டேன். ''அட்லீஸ்ட் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட்டு போகலாமா?'' என்று நினைத்து, பின் அந்த நினைப்பையும் கைவிட்டேன். வீடுபோய்ச் சேர்ந்தேன்.

மறுநாள் காலை தோழியுடன் அக்கிழவரைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தபோது, நேரு வீதியில் அந்த இடம் வந்துவிட்டது. வழக்கமாய் நாங்கள் அலுவலகம் நோக்கி பிரிகிற இடம்.

''மதியம், அவ‌ருக்கு எதுனா வாங்கிக்கொடு'' என்றாள் தோழி.

நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும். பெரிய மார்க்கெட் மீன் நாற்றம் காந்தி வீதியில் மணத்துக்கொண்டிருந்தது. 'நேரு வீதியில் தோழியை ஒரு எட்டு பாத்துட்டு போய்டலாம்' என்று பார்க்கிறேன்! எதிரில்அந்த கிழவர்.

நடு ரோட்டில், போலிஸ் பேரிகார்ட் மீது சாய்ந்தபடி,
''அய்யா பெரியவங்களே! அய்யா பெரியவங்களே!"
என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.

விருவிருவென்று பழைய காட்சிகள் மனதில் ஓட ஆரம்பித்தது.

''யாரு, யாரப் பார்த்துடா 'பெரியவங்களே’ன்னு சொல்றது? என்னடா உலகம் இது? கேடுகெட்ட சமுதாயம். இந்த மனுஷனுக்கு சோறுபோட, படுக்க வைக்க வக்கில்லாத நாடு, என்னடா நாடு?'' என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

மாலை வெளிச்சம் புகைப்படத்திற்கு போதுமானதாக இருந்ததால், கைகள் தன்னிச்சையாக காமிராவை வெளியே எடுத்தன‌. முகத்தை சூம் செய்து, போகஸ் செய்கிறேன். அந்தக் கண்களைப் பார்க்கிறேன்.

கண்களா அது!? ஆயிரம் கதைகள் சொல்லும் அதன் தீட்சண்யம். வயதாகிப்போனதால், அதில் நீலம் படர்ந்திருந்தது. ஆனால், ஒளி மிகுந்து காணப்பட்டது. அதிலிருந்து வீசிய மின்னலை ஒன்று, நேராக என் இதயத்தை தாக்கியதை நன்றாகவே உணர்ந்தேன். யாசகம் வேண்டி நின்ற ஒரு மனிதனின் வலி, காமிரா வழியாக கண்களுக்குள் பரவியதால், மனம் வலிக்க ஆரம்பித்துவிட்டது.

சூமைக் குறைத்து முகத்தை ஃபிரேம் செய்தேன். சுருங்கிய தோலும், லேசான எண்ணெய்ப் பசையும் முகத்தில் பளபளப்பைக் கூட்டியிருந்ததால், விலை மதிக்கமுடியாத ஒரு பிம்பம் கைகூடி இருந்தது. காமிரா அடுத்தடுத்து கிளிக்கிக்கொண்டிருந்தது.

அந்த கிழவருக்கு குழப்பம் வந்திருக்க வேண்டும். ''எப்படியா இருந்தாலும் இவன் பணம் கொடுப்பான். ஆனால், இவனைப் பார்த்துக்கொண்டு வழியில் போகிறவர்களை எப்படி விடுவது?'' என்கிற குழப்பம் அது.

எனவே, நொடிக்கு நொடி அவரது முகபாவம் மாறிக்கொண்டிருந்தது. என்னைப் பார்க்கிறார், திரும்பி சாலையில் போவோரைப் பார்க்கிறார். ரொம்பப் பாவமாய் போஸ் கொடுக்கிறார்.

நான், என் நிலை இழந்துகொண்டிருந்தேன். ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த ஆறாத ரணங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. கிழவரைப்போலவே நானும் நடுக்கத்தை உணர்ந்தேன்.

ரொம்பப் பாவமாக என்னைப் பார்த்து கையை நீட்டினார் கிழவர்.

பாக்கெட்டைத் தடவினேன். அன்று சில்லரையாகக் கிடந்த பன்னிரண்டு ரூபாயைப் போட்டுவிட்டு, வலிகளைச் சுமந்தபடி நகர்ந்தேன்.

'நாளைக்கு எப்படியாவது ஒரு நூறு ரூபாயை சில்லரை மாத்திப் போட்றனும். வேற என்ன பண்ண‌லாம்...?'' என்று யோசித்தேன்.

நேராக தோழியிடம் போய், "அந்தத் தாத்தா சொன்னேன்ல! இதோ பார் அவர் போட்டோ" என்று காமிராவை நீட்டினேன். பார்த்த நொடியில் அவள் முகம் சுருங்கிவிட்டது.

''காசு குடுத்தியா...?''

''ம்...பன்னென்ரூபா''

''ச்சீ... அவ்ளோதானா?''

''இல்ல... நாளக்கி நூர்ரூபா சில்ர மாத்தி குடுத்துடலாம்னு இருக்கேன்.''

அன்றிரவு தூங்கப் பிடிக்கவில்லை. மாற்றி மாற்றிக் கிழவரும் வேறு சில நிகழ்வுகளும் போட்டுத் தாக்கியதில், கெட்டக் கெட்ட‌ வார்த்தைகள் மனதுக்குள் சத்தம் போட்டு ஒலித்தன.

மறுநாள் பத்தரை மணி இருக்கும். வேக வேகமாய் நேரு வீதிக்கு வந்தேன். கிழவரைக் காண‌வில்லை. அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தார். அவர் கையிலிருந்த கோனிப்பையை வாங்கிக்கொண்டு, ''நீ வருவேன்னுதான் காத்திருக்கேன்'' என்றேன்.

ஒன்றும் விளங்கவில்லை அவருக்கு. ஏதோ சொல்ல வருவதைப் புரிந்தவராய்,
''காது செரியா கேக்கல, கண் பார்வையும் தெரியாது'' என்றார்.

"வா! ஒக்காருவோம்" என்று கைத்தாங்கலாக அவரை அழைத்து கடை வாசல் ஒன்றில் அமரவைத்தேன்.

''தாத்தா, உம் பேரு இன்னா?"

''ம்... பேரா கேக்குற? பரணி கவுண்ரு. தொண்டர் படைத் தலைவன், அந்தகாலத்துல'' என்றவரின் முகத்தில், லேசாகப் பிரகாசம்.
எனக்கு ஆர்வம் கூடிற்று.

"தொண்டர் படைத் தலைவன்னா போராட்டம், ஆர்ப்பாட்டம்லாம் கலந்துகிட்டியா?"

''ஆமா, காந்தி கடலூர் வந்தப்போ, ஒரு பெரிய படையே தெரட்டிகினு போய் கூட்டத்துல கலந்துக்கிட்டேன். கடலூர்னு இல்ல, காந்தி எங்கக் கூட்டம் போடறார்னு தெரிஞ்சா போதும், எப்பாடுபட்டாவது போய்க் கலந்துக்குவேன்."

''பெரியார்லாம் பாத்திருக்கியா?''

அன்னாந்து பார்த்துவிட்டு சிரிக்கிறார்.

''பாத்திருக்கியாவா? அவரு பேச்சக் கேக்காதவன் எவன் இருந்தான், அந்தக் காலத்துல! அப்பிடியே நரம்பு முறுக்கிட்டு துள்ளும். ரத்தம் கொதிக்கும்.  'ஆமா, ஆமா! அவரு சொல்றது சரிதான்'னு சொல்வானுங்க'' என்றவர்,

''எங்க ஊர் பறையன, பொனுசாமி கவுண்டன் அடிச்சிட்டான். வந்துச்சி பார் ஆத்திரம். பரபரன்னு இழுத்தும்போய் கோட்டகுப்பம் போலீஸ் ஸ்டேசன்ல புடிச்சிக் குடுத்துட்டேன். மூனு மாசம் ஜெயில். வந்து ஏங்கிட்ட கெஞ்சுறாங்க. 'மன்னிச்சுடு'ன்னாங்க. சரி போவுதுன்னு உட்டுட்டேன். இதெல்லாம் அவர் பேச்சக் கேட்டு வந்ததுதான்.

அப்ப ஒடம்பு நல்லா வாட்ட சாட்டமா, பாடியா இருப்பேன். 'மனுசனுக்கு மனுசன் இன்னாடா ஜாதி வேண்டி கெடக்குது?'ன்னு கேப்பேன். எனக்கு அதெல்லாம் புடிக்காது. அதனாலயே ஊர்ல ஆவாதவனா போய்ட்டேன்.''

''உங்க சொந்த ஊர் எது? ஏன் இங்க வந்துட்டீங்க?''

''காலாப்பட்டு பக்கத்துல மாத்தூரு. நெலம், சொத்து பத்துலாம் இருக்குது. மூனு சொந்த மனை இருக்குது. மூன்ற கானி நெலத்த கோயிலுக்கு எழுதி வச்சிட்டேன். இப்பக்கூட ஊருக்கு போனேன். 'ஏன்டா... கோயிலுக்கு நெலத்த எழுதி வச்சிருக்கேன். இன்னாடா ஊர ஒழுங்கு மரியாதையா வச்சிருக்கீங்க?'ன்னு கேட்டேன். பிரச்ன வந்திருச்சி. என்னை எல்லாரும் சண்டக்காரனாத்தான் பாக்குறானுவோ!"

''ஏன், உங்க பொண்டாட்டி புள்ளைலாம் எங்க?''

''பொண்டாட்டி செத்து நாப்பது வருசமாவுது. இப்போ எனக்கு நூத்தி அஞ்சி வயசு'', என்றபோது தூக்கி வாரிப்போட்டது.

பொக்கிஷமாய் காக்கப்பட வேண்டிய புத்தகமல்லவா இவர்? ஜப்பான், அமெரிக்காவில் நூறு வயதைத் தாண்டியவர்களை கொண்டாடி மகிழும் நாளிதழ் செய்திகள் நியாபகத்துக்கு வந்தது.

தொடர்ந்து பேசினார் கிழவர்.

''ஒரு புள்ள இருக்கான்... பேரு உத்திரகுமாரன். அவம் பொண்டாட்டிதான் என்ன சரியா கவனிச்சிக்கிறதில்ல. ஏன் வயசான காலத்துல வீணா அவங்களுக்கு தொல்ல குடுப்பான?ன்ட்டு கௌம்பி வந்துட்டேன். தோ! இங்கியே படுத்துக்கிறேன், இங்கியே சாப்டுக்கிறேன். சொத்துப் பத்துக்கெல்லாம் ஆசயில்லை எனக்கு. நான் பாக்காத சொத்தா?

காலாபட்ல எட்டுத் தூலபத்தி வீடு, மூன்ற கானி நெலம். இன்னக்கி கோடிக்கணக்குல போவும். வெறும் பதினேழு ரூபாய்க்கு ஏமாத்தி வாங்கிக்கினான் அந்த வக்கீலு. திருட்டுப் பையன். போன மாசம்கூட நேர்ல போய் நாக்கப் புடுங்கறமாரி நாலு கேழி கேட்டுட்டு வந்தேன். அவ்ளோதான் முடிஞ்சது. ஏமாத்திக்கினான். இன்னா பண்றது? புள்ளையும் செரியில்ல''

புலம்பியபடி மீண்டும் தொடர்ந்தார்.

''அந்த காலத்துல சுத்துப்பட்டு ஊருக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்வேன். ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பனா, எவனும் எதுத்துப் பேசமாட்டான். ஆனா, ஞாயமாத்தான் தீர்ப்புச் சொல்வேன். எவன், எங்கத் தப்பு செஞ்சிருந்தாலும் இழுத்து வந்து நாலு சாத்து சாத்தி, 'பத்து ரூவா, இருவது ரூவா'ன்னு அபராதம் போட்ருவேன். அப்பலாம் அது பெரிய காசு.''

கிழவருக்கு காது கேட்காது என்பதால், சத்தம் போட்டு நான் கேட்ட கேள்விகளால், சாலையில் போவோர் எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டு டீ சொல்லி ஆளுக்கு ஒன்றாய் சாப்பிட்டோம். கொஞ்சம் நிம்மதியாய் உணர்ந்தேன். அடுத்த கேள்வி மிகுந்த சங்கடமானது. அவரது சாவைப் பற்றியது. சூசகமாக ஆரம்பித்தேன்.

''வயசான காலத்துல ஊர்ல இருந்தாத்தானே நல்லது. நாலுபேர் கூட வருவாங்க, எல்லாத்துக்கும் வசதியா இருக்கும்?''

கொஞ்சம் பலமாகவே சிரித்துவிட்டு, கேட்டார்.

''என் சாவப் பத்தி கேக்கிறியா? அதுக்குத்தான் அப்பவே பாடிவச்சிட்டு போனானே!

''இப்பவோ இன்னுஞ்செத்த நேரமோ
இரவுதான் பகலோ அஃதிலோ

நீரிலோ தீயிலோ
செப்பறியா வீட்டிலோ காட்டிலோ

சாலையிலோ மரம் மீதிலோ
எப்பொழுது என்னுயிர் பிரியும்
ஈசனே!''

என ராகம் போட்டுப் பாடியவர்,

'' வெள்ளக்காரங் காலத்துல ஏழாவது படிச்சேன். விவேக சிந்தாமனி, ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எல்லாம் தண்ணி பட்ட பாடு.''

''ஒடம்பு எப்படி இருக்கு?''

"எனக்கு... எந்த நோயுமில்ல. இப்ப கொஞ்ச நாளா மூச்ச இழுக்குது. இன்னும் பத்து நாள் இருப்பனா? சாவு எப்பனா வரட்டும். யாருக்குத்தான் வரல. நீ வேலைக்கு போவல..?'' என்றார், என்னை பார்த்து.

''அது கிடக்கட்டும், ஊர்க்காரங்க யாரும் உன்னை விசாரிக்கிறது இல்லையா? எதுனா வாங்கித் தருவாங்களா?''

''ஏன் வாங்கித்தராம! ஊர்க்காரன், ஜாதிக்காரன் யாரும் வரமாட்டான். காலனிக்காரங்க வந்து விசாரிப்பாங்க. அஞ்சோ, பத்தோ குடுத்துட்டு போவாங்க. ஒன்னும் கஷ்டமில்ல உடு... ஒரு கை சோத்துக்கு மேல எறங்காது.''

என் செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புமணி வந்துகொண்டிருந்தது. ரொம்பவே நேரமாகிவிட்டிருந்தது.

"சரி தாத்தா, எதுனா வாங்கி வந்து தரவா? குளிர் நாளாயிடுச்சே! போர்வை வாங்கித்தரட்டுமா?'' என்றேன்.

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். போர்வை எங்கிட்டயே இருக்கு. போத்தாலே ஒடம்பு வலிக்குது. காசுகூட வேணாம். முந்தாநாளு எர்நூற்ரூபாவ எவனோ திருடினு போய்ட்டான். நீ எங்கயா இருந்தாலும் நல்லா இருக்கனும், கௌம்பு.'' என்றார்.

பாக்கெட்டில் கிடந்த முப்பத்தைந்து ரூபாயை, அவர் கையில் தினித்துவிட்டு நடந்தேன். கோபம் யார், யார் மீதெல்லாமோ படர்ந்துகொண்டிருந்தது.























''தமிழ், தமிழ் என்கிறோம். தமிழ்நாட்டில்தான் இந்த கேடுகெட்ட நிலை. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன். ச்சே!

நேற்று வரை நான் தமிழன். இன்று முதல் ஒரு மயிரும் இல்லை'' என்று நினைத்துக் கொண்டேன்.

*03.12.2006 தேதியிட்ட குங்குமம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.