Showing posts with label pondicherry. Show all posts
Showing posts with label pondicherry. Show all posts

Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.

Saturday, July 21, 2007

ரிக்க்ஷா மாமாவுக்கு இது '1071'வது பிறந்த நாள்






பாண்டிச்சேரியில் இறங்கி 'ரிக்க்ஷா மாமா' யாரென்று கேட்டால், சின்னக் குழந்தைக்கூட சொல்லிவிடும். அந்தளவுக்கு ஊர் முழுக்கப் பிரபலம் ரிக்க்ஷா மாமா. சத்யராஜ் மாதிரி இவர் குழந்தைகளை ரிக்க்ஷாவில ஏற்றிக்கொண்டு 'ஒத்திப்போ, ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ'ன்னு பாட்டுப் பாடுகிறவரும் இல்லை. ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்ட சத்யராஜ், ''அய்யா! நீங்கதான் நிஜமான ஹீரோ, நீங்கதான் உண்மையான ரிக்க்ஷா மாமா''னு நெகிழ்ந்து போய், ஒரு ரிக்க்ஷாவையே இவருக்குப் பரிசா கொடுத்திருக்கார்.

சேவை செய்யணும்னா உலக அழகி ஆகணுமா என்ன? மனசு தாங்க முக்கியம். அந்த மனசு, இந்த ஏழை ரிக்க்ஷா மாமாகிட்ட நிறையவே இருக்கு. அஞ்சு ரூபாய்க்கு காதி போர்டு பட்ட சாதம் வாங்கி அடிச்சாலும் பசங்களுக்கு பொறந்த நாள்னா, 150 ரூபாய்க்கு கேக் வாங்கிக் கொண்டாடுகிற செல்வந்தர் இவர். இவருக்கு மொத்தம் 1071 பிள்ளைகள். எப்படி சமாளிக்கிறார்ணு பாக்கறீங்களா? கேளுங்க.

சவரிநாதனுக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் லட்சுமாங்குடி. மனம் நிறைய கனவுகளோடு 76ல் ஜெசிந்தா மேரியைக் கைப்பிடித்தார். கண்கொள்ளாத அழகு ஜெசிந்தா. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் மூட்டைத் தூக்கி சம்பாதித்து, அந்தப் பணத்தில் தன் அழகு மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். இப்படி சந்தோஷமாக நாலு வருடங்கள் ஓடிய குடும்ப வாழ்க்கையில், திடீரென்று புயலடிக்கத் துவங்கியது. அன்று நடுக்கடலில் கப்பலுக்குள் வேலை. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. களைத்துப் போய் பசியோடு வீடு வந்து சேர்ந்தவரை எதிர்பாராமல் இடி தாக்கியிருக்கிறது. ஆனால் அன்று மழை ஏதுமில்லை. வானத்திலிருந்து பாய்வதற்குப் பதில், இடி வீட்டுக்குளிருந்து பாய்ந்திருக்கிறது. ஆம், ஆறு மாதக் குழந்தை சார்லஸ் கீழே உறங்கிக் கொண்டிருக்க, மேலே வேறொரு ஆடவனுடன் கட்டிலில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் ஜெசிந்தா மேரி.

''எனக்கு ஆத்திரத்தைவிட அழுகைதான் அதிகமா வந்தது. தன் பொண்டாட்டியோட வேற ஒரு ஆம்பளையை கட்டில்ல பாக்குற மாதிரி கொடுமை உலகத்துல வேற எதுவும் இல்லீங்க. சாகிறவரை அது உங்களை சித்திரவதை பண்ணிக்கிட்டே இருக்கும். ரொம்ப மனசு ஒடஞ்சிப் போச்சு. எங்கெங்க‌யோ சுத்தினேன். கடைசியா வந்து சேர்ந்த‌ இடம், சூசைட் பாயிண்ட்னு சொல்றாங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. மலை உச்சிக்குப் போயிட்டேன். ஆனா, தற்கொலை என்னமெல்லாம் கிடையாது.

நான் மலை உச்சியில நிக்கிறதைப் பார்த்து, கர்னல் அந்தோனிங்கிற மிலிட்ரி ஆபீசர், 'அடப்பாவி ஏண்டா சாகப் போற? உனக்கு என்ன கஷ்டம்? எங்கிட்ட சொல்லு'ன்னு கேட்டவர், அங்குள்ள டெபன்ஸ் காலேஜில் என்னை தோட்ட வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் தனியா இருக்கிறதைப் பார்த்து 'ரோசி'ன்ற பொண்ணை கல்யாணமும் செஞ்சு வச்சார். ரோசிகூட குடும்பம் நடத்தினப்ப ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. யார் செஞ்ச பாவமோ! ரெண்டுமே செத்துப் போச்சு.

ரொம்ப நாளாகியும் குழந்தைங்க செத்துப்போன துக்கம் மனசை விட்டுப் போகலை. வெறுத்துப் போய், மனம் போன போக்கில் கிளம்பி பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன். குளம் வெட்டி இந்த ஊர் ஜனத்துக்கெல்லாம் தண்ணி அளந்தாளாமே ஆயி! அந்த ஆயி மண்டபத்துக்குப் பக்கத்துல பசியோட உக்காந்திருந்தேன். 'ராஜூ, பாபு'ன்னு ரெண்டு ரிச்சா தொழிலாளிங்க. அவங்க‌தான் எம்மேல இறக்கப்பட்டு கூடைசோறு வாங்கித் தந்தாங்க. என் கதைய கேட்டுட்டு 'இனிமே நீயே ஒழச்சி சம்பாரிச்சி சாப்பிடு'ன்னு சொல்லி ஒரே நாள்ல எனக்கு ரிச்சா ஓட்டக் கத்துக் குடுத்தாங்க.

ஹனிமூன் கொண்டாட பாண்டிச்சேரி வந்த ஜோடிதான் என் முதல் சவாரி. அன்னைக்கு என்ன அதிஷ்ட்டமோ! நிறைய வெள்ளக்காரங்க என் ரிச்சாவுக்கு சவாரி வந்தாங்க. சொன்னா நம்பறீங்களோ இல்லியோ! அன்னைக்கு மட்டும் ஒரே நாள்ல 300 ரூபா கலெக்க்ஷன் ஆச்சு. நேரா கொண்டுபோய் 'ராஜூ, பாபு'கிட்ட கொடுத்துட்டேன். அவங்க வெறும் முப்பது ரூபாயை எடுத்துக்கிட்டு, மீதிய எங்கிட்டயே கொடுத்துட்டாங்க.

இவ்ளோ பணத்தை எப்ப‌டி செலவு பண்றதுண்ணே தெரியல! குதிக்காத குறைதான். சந்தோஷமா தெருவுல நடந்து, போய்க்கிட்டே இருந்தேன். அப்பப் பாத்து பிளாட்பாரத்துல வசிக்கிற குழந்தைங்க, 'யம்மா பசிக்குது, யம்மா பசிக்குது'ன்னு சொல்லி அவங்க அப்பாம்மாகிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்குதுங்க! எனக்கு குழந்தைங்க இல்லையா? இதுங்க பசியில துடிக்கிறதப் பாத்து மனசு இறங்கிப் போச்சு. அப்பவெல்லாம் ஒரு சாப்பாடு ரெண்டு ரூபாதான். எல்லா குழந்தைங்களையும் கூப்பிட்டேன். மொத்தம் இருபது, இருப‌த்தஞ்சி பசங்க இருக்கும். எல்லாத்துக்கும் சோறு வாங்கிக் கொடுத்துட்டு, அதுங்க சாப்புடறதையே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்குப் பசியே எடுக்கலை.

அதுக்கப்புறம் எனக்கு நெறைய ஸ்கூல் சவாரிங்க வர ஆரம்பிச்சது. சக்திகுமரன்தான் என்னோட முதல் ஸ்டூடண்ட். அவனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள், எனக்கு நவம்பர் 8. சரி, இந்தக் குழந்தையோட பிறந்த நாளை கிராண்டா கொண்டாடணும்ணு முடிவு பண்னேன். நேரா காந்தி ஸ்ட்ரீட்ல இருக்குற சிவா ஆர்ட்டிஸ்ட்கிட்டப் போய், ஒரு வாழ்த்து அட்டை வரஞ்சிக்கிடேன். அப்புறமா கலர் பேப்பர், ஜோடிப்புலாம் வாங்கி ராத்திரி முழுக்க‌ உக்காந்து ரிக்க்ஷாவை அலங்காரம் பண்ணேன். காலைல சக்திகுமரன் வீட்டு வாசல்ல போய் நின்னதும், அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பிள்ளைய ரிச்சாவுல ஏத்திக்கிட்டுக் கிளம்பும்போது, பக்கத்து வீடுகள்ல இருந்து ஒரு பத்துப் பிள்ளைங்க வந்து நிக்குது. எல்லாரையும் ஏத்திக்கிட்டு நேரா மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போனேன். பிரார்த்தனையை முடிச்சிட்டு அங்கிருந்து லக்கி ஸ்டூடியோ ஓனரைப்போய், தூக்கத்துல எழுப்பினேன். அதுதான் எங்களோட முதல் பிறந்தநாள் போட்டோ.

குழந்தைங்க, அவங்க அப்பாம்மான்னு எல்லாரும் சந்தோஷப்பட்டதைப் பார்த்து எனக்கு ரொம்ப உற்சாகமாயிடுச்சி. ஆனா வசதியான பிள்ளைங்கள்லாம் சைக்கிள்ல, ரிச்சாவுல வரும்போது தெருவோரப் பிள்ளைங்க நடந்தே வர்றது என்னவோ மாதிரி இருந்துச்சி. 'நமக்குதான் பிள்ளைங்களே இல்லை. இதுங்களையாவது கூட்டிட்டுப் போவோம்'னு இலவசமாவே ரிச்சாவுல ஏத்திட்டுப்போக‌ ஆரம்பிச்சேன். போகும்போது, 'மாமா எனக்கு இன்னைக்கி பொறந்தநாள்'னு பிள்ளைங்க சொல்லும். மாத்திப் போடவே துணி இல்ல. இதுல பொறந்த நாள் எப்படிக் கொண்டாட முடியும்? புதுத் துணி எப்படி எடுக்க முடியும்? அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேன்.

இந்த மாதிரி ஏழைக் குழந்தைகளுக்கு நாமே பிறந்தநாள் கொண்டாடிடணும்.

புதுசா எந்தக் குழந்தை வந்தாலும் சரி! பிறந்த நாளைக் கேட்டு, குறிச்சு வச்சுக்குவேன். ஆனா கேக் வெட்டி, புதுத் துணி எடுத்து, பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு எனக்கு மட்டும் வசதி இருக்கா என்ன? அதனால... யாராவது பெரிய மனுஷங்க, அரசியல்வாதிங்க, துணிக்கடைக்கார‌ங்க, தனியார் கம்பெணிங்கன்னு போய், விஷயத்தைச் சொல்லி உதவி கேட்பேன். அவங்களும் 'இல்லை'ன்னு சொல்லாம இன்னிக்கு வரைக்கும் முடிஞ்சதை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. பாண்டிச்சேரியில் இருக்கிற எல்லா வி.ஐ.பி.களோடவும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிட்டோம். எங்களோட 125வது பிறந்தநாளை நடிகர் சத்யராஜ் முன்னிலையில் கொண்டாடினோம். அப்பதான் அவர் என்னைப் பாராட்டி ஒரு ரிச்சாவைப் பரிசாக் கொடுத்தார். 200வது பிறந்த நாளுக்கு சூப்பர்ஸ்டார், 225வது பிறந்தநாளுக்கு நடிகர் சரத்குமார், 250வது பிறந்தநாளுக்கு கமலஹாசன்னு எல்லா சினிமாஸ்டார் கூடவும் கொண்டாடி இருக்கோம். இதுவரைக்கும் 1071 பொறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இனிமேலும் என் மூச்சு இருக்குற வரைக்கும் கொண்டாடுவேன்'' என்கிறார்.

''உங்க ரெண்டாவது மனைவி ரோசி என்ன ஆனாங்க. அவங்களை ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க?" என்றேன்.

''அய்யய்யோ... விட்டுட்டு வரலை சார். போய் கூட்டிட்டு வ‌ந்துட்டேன். திரும்பவும் என் சொந்தக் கதைக்கே வந்துட்டீங்க. மறக்கணும்னு நெனச்சாலும் சொல்லித்தானே ஆகனும். சவாரி, சாப்பாடு அதைவிட்டா பிறந்தநாள்னு சந்தோஷமாத்தான் போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை. புள்ளைக்குட்டி யாரும் இல்லாததால வீட்ல ரோசி மட்டும் தனியா இருப்பா. அப்படி நான் இல்லாத நேரமாப் பார்த்து ரெண்டு பொருக்கிப் பசங்க அவளை பலாத்காரம் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே அவ கொழந்தைங்க செத்துப் போன துக்கத்துல மனசொடிஞ்சிக் கிடந்தா. இந்த சம்பவத்தால அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. குழந்தைங்களோட குழந்தையா அவளையும் 27 வருஷமா பாத்துக்கிட்டிருந்தேன். எனக்குன்னு இருந்த சொந்தம் அவ மட்டும்தான். அதையும் மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த சுனாமி, பரிச்சிக்கிட்டுப் போயிடிச்சி. சுனாமி வந்தப்போ நான் சவாரில இருந்தேன். குடிசை கடலோரத்துல இருந்ததா!அலையோட அலையா அவளையும் வாரிக்கிட்டுப் போயிருச்சி. ஆனா அவ சாகலை. விசாரிச்சிப் பாத்தப்ப அவங்க அம்மா வீட்டுப் பக்கம் பாத்ததா சிலபேர் சொன்னாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் திரும்பி வரவே இல்லை. எங்க இருக்கான்னும் தெரியல'' என்றவரிடம்,
''உங்களோட முதல் குழந்தை சார்லஸாவது இருக்கானா? அவனைப் பாத்திருக்கீங்களா?" என்றேன்.

''அவன் மெட்ராஸ்லதான் எங்கயோ இருக்கானாம். அவன் எனக்குப் பிறந்த குழந்தைங்க. என்னைக்காவது என்னைப் பார்க்க வருவானான்னு நான் ஏங்காத நாள் இல்லை. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டாவது அவனைப் பாக்க முடிஞ்சா அதைவிட சந்தோஷம் வேற எதுவும் கிடயாது'' என்கிறார்.

''பிறந்த நாள் மட்டும் தான் கொண்டாடுகிறீர்களா... இல்லை வேறு ஏதாவது சமூக சேவையும் செய்வதுண்டா?"

''ஜான்பீட்டர்னு ஒரு ஊணமுற்றப் பையன். யார் யாரிடமோ உதவி கேட்டு பத்து வருஷமா அவனைப் படிக்க வச்சிருக்கேன். நல்லா படிச்சி கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிட்டான். இப்ப அவனுக்கு கவர்மெண்ட் டூ வீலர் குடுத்திருக்கு. அவன் ஸ்கூட்டர்ல போற அழகைப் பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? தமிழ்ச்செல்வின்னு ஒரு பொண்ணு. பாவம்! ரொம்ப ஏழை. பேப்பர்ல என்னைப்பத்தி படிச்சிட்டு உதவி கேட்டு வந்துச்சி. 'ஊர் உலகத்துல எத்தனையோ பெரிய மனுஷங்க இருக்கும்போது இந்தப் பொண்ணு நம்ம‌கிட்ட வந்து நிக்குதே!'ன்னு ஒன்னுமே புரியலை. மருந்துக்கு மட்டும் மாசம் 600 ரூபா செலவாகும். அந்த மாதிரி ஒரு பிரச்சினை அந்தப் பொண்ணுக்கு. நிறைய தனியார் கம்பெனிகள்ல போய் நின்னு மொத்தம் ஒன்ரை வருஷம் மருந்து வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஒரு குறையும் இல்லாம நல்லபடியா இருக்கா.

93ல் என் தோள்ல தூக்கிட்டுப் போய்விட்ட சரண்யா! இப்ப ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர். அந்தப் பொண்ணால நடக்க முடியாது. அதேபோல சுகண்யாங்கற பொண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் நடந்திச்சி. அதுக்கு ஆயிரம் சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா, 'தங்களை அன்புடன் வரவேற்கும் ரிக்க்ஷா மாமா'ன்னு இன்விடேஷன்ல எம்பேரப் போட்டுருச்சி. அதப் பாத்த உடனே எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. எனக்குன்னு யாருங்க சொந்தம்? பள்ளிக்கூடம் கூட்டிட்டுப் போனப் பாவத்துக்காக, இந்தப் பொண்ணு பத்திரிகைல பேரைப்போட்டு கவுரவப்படுத்திருச்சே!ன்னு எனக்கு பலநாள் தூக்கமே வரலை'' என்கிறவர்,

''வெள்ளிக்கிழமையானால் போது!, பாண்டிச்சேரியில் இருக்கிற ஜோதி கண் மருத்துவமனைக்கு கிராமத்தில் இருக்கிற ஏழை முதியோர்களை கொண்டு போய்விடுகிறார் ரிக்ச்கா மாமா. டாக்டர் வனஜா வைத்தியநாதன் அவர்களுக்கு ரிக்க்ஷா மாமா சார்பாக இலவச மருத்துவம் பார்த்து அனுப்புகிறார். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஊணமுற்றவர்களை சென்னை சூளையில் உள்ள 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவது என்று இன்றைக்கும் தொடர்கிறது ரிக்க்ஷா மாமாவின் சேவை.

இந்த ஏழையைச் சார்ந்து நிற்கிற ஏழைகளுக்கு இவர் வெறும் ரிக்க்ஷா மாமா அல்ல. அதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவர். இவரது ரிக்க்ஷாவில் ஏறி இன்றைக்கு ஃபிரான்ஸில் குடியிருக்கும் விண்ணரசி என்ற மாணவி, இவருக்காகவே பாண்டிச்சேரி வந்து ஒரு முழு நீள டாக்குமெண்ட்ரி எடுத்துச் சென்றிருக்கிறார். அது அங்குள்ள பல்வேறு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அரசு நிறுவன‌ங்களாகட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவன‌ங்களாகட்டும்! காக்கா பிடித்து காரியம் சாதிப்பதற்காகவே விருதுகள் வழங்கி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விழா நடத்துகிறார்கள். இனிமேலாவது இவர்கள் சவரிநாதன் போன்ற மனிதர்களை இனம் கண்டு கவுரவிக்கட்டும்.

''உறவினர்கள் யாரும் உங்களைத் தேடி வருவதில்லையா?'' என்றால் சவரிநாதன் சொல்கிறார், ''உன் சகோதரனிடத்தில் மனத்தாங்கல் வைத்துக் கொண்டு என்னிடத்தில் வராதே' என்கிறார் ஏசு. அவர்கள் தினமும் கோவிலுக்குப் போகிறார்கள்''.

Saturday, November 18, 2006

புடுச்சேரி என்கிற டுபுக்குச்சேரி!


சரக்குக்கு பேர் போன பாண்டிச்சேரி'யோட பேரை புதுச்சேரி என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உட்பட பல்வேரு தரப்பினர் நீண்ட நெடுங்காலமாகவே போராடி வந்தனர்.


புதுச்சேரி பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு உள்ளான போது பிரஞ்சியர்களின் எழுத்துப் பிழையால் புதுச்சேரியில் உள்ள ''U'' என்பது ''N'' ஆக மாறி பாண்டிச்சேரி ஆகிவிட்டது.


இந்த குறையை மாற்ற வேண்டி சட்ட மன்றத்தில் தீர்மானமும் போட்டு, அதுவும் மத்திய அரசு ஒப்புதலோடு புதுச்சேரி ஆனது. ஆனா பாருங்க மெத்தப் படிச்ச அதிகாரிங்களோட இங்கிலிசு நாலெட்ஜை.


PUDHUCHERRY என்பதற்கு பதில் PUDUCHERRY [புடுச்சேரி] என்று எழுதியிருக்கிறார்கள். இதுக்காடா இவ்ளோ கஷ்ட்டப்பட்டீங்க?


வெளியூர்காரன் இன்னைக்கி புடுச்சேரி'ன்னு படிப்பான். நாளைக்கு புடுச்சேரி, புடுக்குச்சேரி'ன்னு ஆவும், இல்ல டுபுக்குச்சேரி'ன்னும் ஆவும். ஆனா கண்டிப்பா புதுச்சேரி ஆகாது