Showing posts with label road accident at pondicherry tamilnadu. Show all posts
Showing posts with label road accident at pondicherry tamilnadu. Show all posts

Tuesday, May 20, 2008

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூலம்.


மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்.

ஆரம்ப காலங்களில் நரிக்குறவர்கள்தான் அதிகம் பச்சை குத்தி வந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவர்கள், எழுத்துக்களை சித்திர வடிவில் மனப்பாடம் செய்து பச்சை குத்தினர். மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு எற்ப நோய்களின் பெருக்கம் அதிகரித்தபோது, மருத்துவமனை ஊசிகளே பாதுகாப்பானதாக இல்லை என்பது தெரிந்தது. நோயிலிருந்து பாதுக்காக இப்போது டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.

நரிக்குறவர்கள் ஆண்டுக் கணக்கில் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்துவார்கள் என்பதால், அவர்களிடம் யாரும் பச்சை குத்திக் கொள்வதில்லை. ஆனால், பச்சை குத்தும் மோகம் இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது. நாகரீகம், டெக்னாலஜியை உள்வாங்கிக் கொண்டு எங்கோ போய்விட்டது. இந்தியாவில் பிறந்த பச்சை குத்து, வெளிநாட்டுக்குப் போய் நவீன தொழில் நுட்பங்களுடன் மீண்டும் இங்கே கலர் கலராய் கால் பதித்துள்ளது. இன்று அதன் பெயர் 'டாட்டூ'.

மீரா லிடியா. தமிழகத்தின் சூப்பர் பச்சை குத்துக்காரி.

சென்னையின் இளசுகள் மட்டுமல்லாது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சல்லிசாக இவரிடம் வந்து குத்திக் கொள்கிறார்கள். ஆளைப் பார்த்தால் "கருப்புத்தான் எனக்குப் பிடிச்சக் கலரு" என்று பாடத்தோன்றும். கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிளாக் மேஜிக் என்கிற தன் டாட்டூ ஸ்டுடியோவில் வேலையே ஜாலியாக இருக்கிறார் லிடியா.

இவரது இன்னொரு பெயர் பாய்சன் ஐ.வி. "பேட்ஸ் மென் ஆங்கிலப் படத்தில் வரும் பாய்சன் ஐ.வி.ங்கிற வில்லி கேரக்டர் எனக்கு ரொம்...பப் பிடிக்கும்" என்றபடி தன் விசிட்டிங் கார்டை நீட்டுகிறார். பார்த்தால், முதுகெலும்பைக் கைப்பிடியாகக் கொண்ட கத்தியைப் பிடித்தபடி அதில் எமன் முறைத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ லேடி எஸ்.ஐ பிஸ்டலை பிடிப்பது போல் 'டாட்டூ கன்'னை(பச்சை குத்தும் கருவி) எடுத்துக் காட்டி, தன் குருநாதர் ராஜுக்கு நமஸ்காரம் செய்பவர் "கேள்வியை நீங்கள் கேட்குதா? அல்லது நான் கேட்குதா?" என்கிறார்.

ஒரு தொழிலாக செய்யக்கூடிய அளவுக்கு டாட்டூ வரைந்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா. எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது?



இன்னா அப்டி கேட்டுட்டீங்க! ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதே தவிர குறையல‌. அப்பாயிண்ட்மென்ட் வாங்கின‌ பிறகுதான் ஸ்டுடியோவுக்கே வர முடியும். ஏன்னா... பச்சை குத்துறது ஒன்னும் லேசுபட்ட‌ விச‌யமில்ல‌. சொல்லப் போனா, வரைர‌திலேயே ரொம்பக் கஷ்டமான வேலை மன்ஷன் உடம்புல டாட்டூ போட்ற‌துதான்" என்கிறார்.

அப்படி இன்னாங்க பொல்லாத கஷ்டம்?

"ஒவ்வொருத்தரோட உடலும் ஒவ்வொரு விதமா இருக்கும். சிலருக்கு ரொம்ப மிருதுவான சருமம், சிலருக்கு நார்மல், சிலருக்கு கடினம்னு தசைகள் வேறுபட்டு இருக்கும். சாதாரணமாக ஒரு கான்வாஸிலோ, பலகையிலோ வரையும் போது கிடைக்கக் கூடிய க்ரிப் இல்லாமல் வழுக்கிக் கொண்டே போகும். இதனால் படமோ, எழுத்தோ எதுவாக இருந்தாலும் தவறாகக்கூடிய வாய்ப்பு உண்டு. ரொம்ப சாஃப்ட் பேர்வழிகளின் தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டுதான் வரைய ஆரம்பிப்போம். ஆண்கள் பெரும்பாலும் தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களிளும் பெண்கள் பின் இடுப்பின் மேற்புறம் மற்றும் முழங்கால்களில் வரைந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பேர் குத்துற‌து, கோலம் போடுற‌‌து ரெண்டைத் தவிர வேற என்ன ஸ்பெஷல் இதுல?


பேர் குத்திக்கிற‌து என்னமோ வாஸ்தவம்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி யாரும் புள்ளிக் கோலம்லாம் போட்டுக்க மாடாங்க. எல்லாமே மார்டன் ஆர்ட்தான். ஒவ்வொரு ஓவியத்துக்குப் பின்னாடியும் ஒரு ஸ்பெஷல் ஸ்டோரியே இருக்கும். அர்த்தத்தோடதான் டாட்டூ போடுறோம். ஒவ்வொரு நாளும் மண்டையை குடைஞ்சி நானாவே புதுப்புது கான்செப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். அதில்லாம... வர்றவங்க என்ன மாதிரி டிசைன் கொண்டு வந்தாலும் அதையும் போட்டு தருவேன். இப்ப உங்க லவ்வரோட போட்டோவை எங்ககிட்ட குடுத்துட்டா போதும். அச்சு அசலா அப்படியே உங்க உடம்புல ரியலிஸ்டிக்கா வரைஞ்சு வச்சிடுவேன். ஆனா, அதுக்கப்புறம் வர்ற பிரச்சினைக்கு நான் பொறுப்பு இல்லை.

அப்படின்னா, மாசத்துக்கு ஒரு டிசைன்னு உடம்புல வரைஞ்சிக்கிட்டு அசத்தலாம். என்ன, 500 ரூபா வாங்குவீங்களா! ஆமா... எவ்ளோ நேரம் பிடிக்கும் இதை வரைய. அஞ்சு நிமிஷத்துல முடிச்சுடுவீங்கள்ல?

ஹலோ... ஹலோ... என்ன, ஜஸ்ட் லைக் தட் பேசிட்டே போறீங்க? அஞ்சு நிமிஷமா? அஞ்சு நிமிஷத்துல நீங்க ஆப்பங்கூட சுட முடியாது. குறைஞ்சது மூணு மணி நேரத்திலருந்து பத்து மணி நேரம் வரைக்கும் ஆகும்.

இதோ நான் கால்ல வரைஞ்சுக்கிட்டிருக்கேனே! இதுக்கு மட்டும் பத்து மணி நேரம் ஆச்சு. இந்தா... கைல இருக்கே! இதுக்கு அஞ்சு மணி நேரம். அப்புறம் என்ன கேட்டீங்க. ஐநூறு ரூபாயா? குறைஞ்சது ஒரு 'ஸ்கொயர் இன்ச்'க்கு ஆயிரம் ரூபாய்.

நான் கால்ல போட்டிருக்கிற சைஸ்னா பத்தாயிரம் ரூபாய் ஆகும். நாங்க என்ன காட்டுல இருந்து முள்ளு பறிச்சிக்கிட்டா வந்து குத்தி விடுறோம். எல்லாமே அமெரிக்காவிலருந்து இறக்குமதி பண்ணியது. இங்க் எல்லாம் கூட ப்யூர் வெஜிடேரியன். அதாவது தாவரங்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்ட, சருமத்திற்கு தீங்கு விளைவிக்காதவை. அமெரிக்க அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

நமக்கு தலை சுற்றுகிறது...

"ஓவியங்களுக்குத் தகுந்த மாதிரி பச்சை குத்தும் கருவியில் பல்வேறு ஊசிகள் இனைக்கப்பட்டிருக்கும். இங்க்'கை தொட்டுத் தொட்டுதான் படம் வரைய முடியும். பெயிண்ட் ஸ்பிரேயர் மாதிரி பயன்படுத்த முடியாது. கோடுகளுக்குத் தகுந்த மாதிரியும், ஷேடுகளுக்குத் தகுந்த மாதிரியும் ஊசிகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கின்றன‌. மற்ற ஓவியங்களைப் போலவே இதிலும் எல்லாவிதமான வண்ணங்களையும் பயன்படுத்த முடியும்" என்று டெக்னிக்கல் பாயிண்டுகளை அடுக்கிய லிடியா,

"மாசத்துக்கு ஒரு டிஸைன்னு பச்சை குத்திக்கிட்டீங்கன்னா, அப்புறம் உங்க உடம்புல எந்த இடமும் பாக்கி இருக்காது. ஏன்னா இது பர்மனென்ட் பச்சை.இதை அழிச்சிட்டு வேறு புதிதாக போட்டுக் கொள்வதற்கான ஆராய்ச்சியில் எங்க கோஷ்டி ஈடுபட்டிருக்கு. கூடிய விரைவில் சக்ஸஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்" என்கிறார் ஜாலியாகவும் சீரியஸாகவும்.

ம்ம்...நாமளும் பச்சை குத்திக்கலாம். ஆனா பர்ஸ்ல அவ்ளோ அமவுண்ட் இல்லீங்க.

Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.

Thursday, December 21, 2006

சாலை அதிர்வுகள்!


யாரென்று கேள் என்னை
நான் தமிழனா இந்தியனா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில்
எனது பெயர் இடம் பெறுமா?

குப்பையில் கண்டெடுத்தேன் அதனை
ஐயோ! அத்தனையும் இதயங்கள்

யாருக்கு வேண்டும் இது?
என்றெண்ணி வீசியிருப்பீர்கள்

தின்ன முடியாத சோற்றைக்கூட
கெட்ட பின் கொட்டுகிறீர்கள்

கண்களைச் சுழற்றுகிறது தூக்கம்
உறக்கத்தில் உங்கள் மூளை

கொஞ்சம் மெதுவாய்ப் போங்களேன்
உங்களால் சாலை அதிர்கிறது.

Wednesday, November 15, 2006

நரிக்குறவர்கள் சிவாஜியின் படை வீரர்கள்:

அழகுன்னா அழகு! அப்படி ஒரு அழகு ஜோதிகாவுக்கு. 'அராபியக் கண்கள், சிவந்த உதடுகள், கோதுமை நிற‌ம்' என்று பார்ப்பவர்களை சொக்கிப் போக வைக்கிற‌ வசீகரம் அவளுக்கு. அவள் மட்டுமல்ல இங்கு சினேகா, ரம்பா, மீனா என்று நிறைய அழகிகள் இருக்கிறார்கள். ஆனாலும் என்ன செய்ய? அவர்கள் அனைவரும் நரிக்குறத்திகள். நான் பார்த்த ஜோதிகாவுக்கும், சினேகாவுக்கும் வயது இரண்டரை.
இன்று உடைகளில் அழுக்குப் படிந்து ஒதுக்குப் புறமாய் வாழும் நரிக்குறவர்கள் ஒரு காலத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் படை வீரர்கள். உலகம் முழுக்க அதிகார வேட்டை தொடங்கிவிட்டிருந்த நேரம், முகலாயர்கள் இந்தியாவின் மீது படை எடுத்தார்கள். சிவாஜி படை தோல்வி காண ஏரளமானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அப்படித்தான் முகலாயர்களிடம் அடிமைகளாய் சிக்கினர் நரிக்குறவர்கள்.
மராட்டிய மண்ணுக்கே உரிய நிரம், குணத்தோடு இப்பெண்கள் மிகுந்த அழகுடையவர்களாய் இருந்தனர். மானத்தை உயிரெனப் போற்றும் இவர்களால் தொடர்ந்து எதிரிகளிடம் மல்லுக்கட்ட முடியவில்லை. தப்பித்தால் போதுமென்று வட இந்தியாவை விட்டு, தெற்கே தமிழகத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைந்து வாழத் தொடங்கினர். காடு மற்றும் மலை சார்ந்த வாழ்க்கையில் வேட்டைத் தொழில், மூலிகை வைத்தியம் கற்றுத் தேர்ந்தனர்.
அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயப் படையெடுப்பு நிகழ்ந்தபோது, வனப் பகுதிகளில் இவர்களின் உதவி வெள்ளையர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. பலனாய் வெள்ளையர்களிடமிருந்து துப்பாக்கிகள் இவர்களுக்கு பரிசளிக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய துப்பாகிகளைத்தான் இப்போதும் இவர்களிடம் நாம் பார்ப்பது.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஓரளவு தைரியம் பெற்ற இவர்கள், மெல்ல ஊர்ப்புரங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். என்றாலும் பல்லாண்டு கால அடிமை வாழ்க்கை இவர்களை மிகவும் முடக்கிப் போட்டுவிட்டிருந்தது. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு காரணமாகவும் இதர குடிமக்களோடு பழகுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருந்தது.
பெண்கள் அழகுடையவர்களாகவும், ஆண்கள் நல்ல உடல் பலத்துடனும் காணப்பட்டாலும், சமுதாயத்தை எதிர்த்துப் போராடும் திறன் அற்றிருந்ததால் பெண்கள் பாலியல் ரீதியாகவும், ஆண்கள் பொருளாதார ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டனர். இவ்வாறான தொடர் வன்கொடுமைகளால் சோர்வுற்ற நரிக்குறவர்கள், சமுதாயத்தில் யாருடனும் கலவாமல் தனித்தே வாழத்தொடங்கினர்.
அழகு ஒரு முக்கியக் குறியீடாக இருந்ததால், முதலில் அதையே அழித்தனர். அழுக்கு உடைகளுடன் வாரக் கணக்கில் குளிக்காமல், சிகை அலங்காரம் செய்யாமல், பற்களில் மீசி என்ற மை பூசி கருப்பாக்கிக் கொண்டனர். இச்செயல்களின் தொடர்ச்சியானது, இன்று அவர்களின் கலாச்சாரமாகவே மாறிவிட்டதைக் கான முடிகிறது.
நரிக்குறவர்கள் எந்த சூழ்நிலையிலும் திருடுவதோ, பொய் சொல்வதோ கிடையாது. மானத்தை உயிரெனக் கருதுகின்றனர். [ஆனால் திருட்டு வழக்குகளில் ஆள் கிடைக்காத சில மானங்கெட்ட போலிஸ்காரர்கள் இவர்களை சந்தேகக் கேசில் பிடித்து அடைப்பதுண்டு] தங்களுடைய பன்பாடுகளை மிகக் கராராக பின்பற்றுகின்றனர். இவர்களது மொழி "வாக்ரிபோலி" என்றழைக்கப்படுகிறது. 24 மொழிகளின் கலவை இது. சிலர் மராட்டி பேசுகின்றனர். நீங்கள் எப்படிப்பட்ட சீமானாக இருந்தாலும், நரிக்குறவப் பெண்களை உங்களுக்கு மணமுடித்து தர மாட்டார்கள். கருகமணிதான் தாலி. கல்யாணத்தை இரவு நேரத்தில்தான் செய்கின்றனர். வரதட்சனை என்பது அறவே கிடையாது. ஆணுக்கும் பெண்னுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை உண்டு.
வயதுக்கு வந்தவுடன் பெண்களை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். பிரசவம் 'தீட்டு' என்று கருதப்படுவதால், குடிசைக்கு வெளியில் வைத்துத்தான் குழந்தைப் பிறப்பு நடைபெறுகிறது. குழந்தை பிறந்த பின், 12 நாட்களுக்கு பிறகு தீட்டு கழித்து தாயும், சேயும் அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு பிறகே தந்தையோ, கணவனோ அவர்களைத் தொட அனுமதி.
மணமானவர்கள் யாருடனாவது கள்ள உறவு வைத்துக் கொண்டால், உடனே டைவர்ஸ்தான். "ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வைக்கோலை மூன்று முறை கிள்ளிப் போட்டால் போதும், டைவர்ஸ் முடிந்தது." மறுமணங்கள் தாராளமாக அனுமதிக்கப்படுவதால் இங்கே விதவைகள் கிடையாது. தாத்தா பாட்டிகள்கூட தனியாக இருக்க நேர்ந்தால், பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்கள் மாட்டு எலும்புகளால் அடிபடுவதோ, பாவாடையால் அடிபடுவதோ மிகப் பெரிய இழிவாக கருதப்படுகிறது. ஆண்களின் குடுமியைப் பிடித்து இழுப்பதும், பெண் தனது அந்தரங்க முடியைப் பிடுங்கி அவர்களின் மீது வீசுவதும் குற்றமாக, அவமானமாக கருதப்படுகிறது.
மரக்காணத்தில் இவர்களுக்கென்று உள்ள தண்ணிர் குழாயில், 'ஒரு பெண்ணின் பாவாடை பட்டுவிட்டது' பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. ஆத்திரப்பட்ட ஆண் ஒருவன், குடிநீர் குழாயை செருப்பால் அடித்துவிட்டு வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டான். இன்று வரை ஆண்கள் குழாயில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பதிலாக குளத்து நீரை அருந்துகின்றனர்.
பிற சமுதாயத்தினர் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டாவிட்டாலும், உபத்திரவம் செய்வது மட்டும் தொடர்கிறது. இவர்களது குடியிருப்புகளை தாண்டிச் செல்லும் ஆண்கள் பலர், "ஏ... பெருங்காயம் கெடைக்குமா?" என்று கேலி பேசிச் செல்கின்றனர் [பெருங்காயம் என்பது அவர்களை உடலுறவுக்கு அழைப்பதற்கான குறியீடு].
பல சமயங்களில் இச்சமூகப் பெண்கள், நாகரீக சமுதாய ஆண்வர்க்கத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். யாரும் கேட்பதற்கு நாதி இல்லாததால் இக்கொடுமை இன்றும் நீடிக்கிறது.
பாண்டிச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவப் பெண்கள் பலர், அப்பகுதி பெரிய இடத்து பையன்களால் அம்மக்கள் கண்ணெதிரிலேயே பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளனர். மீட்க முனைந்த அவர்களது உறவினர்களை ஒரு பெரிய கும்பலே வந்து அடித்து நாசப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான அச்சத்துக்கு இடயிலேதான் எல்லா நரிக்குறவர்களின் வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாம் உடைகளில் தூய்மையும், உள்ளத்தில் அழுக்கும் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம்.
விரிவான தகவல்களுக்கு கரசூர் பத்மபாரதி எழுதிய ''நரிக்குறவர் இனவரைவியல்'' படிக்கவும்.