Tuesday, September 27, 2011

Alone in the Amazon: யார் மிருகம்? நெஞ்சைப் பதற வைக்கும் நிஜம்!

'I Shouldn't Be Alive:Alone in the Amazon'


அமேசான் காட்டுக்குள் El_Dorado-வை தேடிக் கிளம்புவதற்கு ஆயத்தமாகிறான் 22 வயது Benedict Allen.‘எல் டொரடோ’ என்பது தங்கப் புதையல் என அறியப்படுகிறது. Benedict Allen-ன் தந்தை ஒரு சாகச வீரர். அவரைப்போலவே சாகசம் புரியும் ஆவலில் தன்னந்தனியாக தன்னுடைய ஆசை நாய், ‘கேஷூ’வுடன் சிறிய படகு ஒன்றில் கிளம்புகிறான் பெனடிக்ட்.


போகும் வழியில் இரண்டு வழிகாட்டிகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான். இந்தக் காட்டில் நிறைய கொள்ளையர்களும், கொலைகாரர்களும் பதுங்கியிருக்கிறார்கள் என அவனுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. படகை கரை தட்டச் செய்து காட்டுக்குள் பிரவேசிக்கிறார்கள் பெனடிக்ட் குழுவினர்.


அங்கே ஒரு குடியிருப்பு தென்படுகிறது. அங்கிருக்கும் இரண்டு கொள்ளைக்காரர்களில் ஒருவன், “எல் டொரடோவை தேடுவதற்கு நான் உனக்கு உதவுகிறேன்” என பெனடிக்டுக்கு வாக்கு தருகிறான். வழிகாட்டிகள் விடைபெறுகிறார்கள்.


அன்று இரவு பெனடிக்ட் தூங்கிக்கொண்டிருக்கும்போது, கொள்ளைக்காரர்கள் பேசிக்கொள்வது காதில் விழுகிறது. “தூங்கிக் கொண்டிருக்கும்போதே இவன் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவோம்” என்கிறார்கள்.


பயந்துபோகும் பெனடிக்ட், கும்மிருட்டில் சத்தம்போடாமல் நாயை அழைத்துக்கொண்டு படகில் ஏறி தப்பிக்கிறான். மறுநாள் அந்த சிறிய படகு பாறை ஒன்றில் மோதி உடைகிறது. உயிர் காக்கும் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது, கூடவே நாயும்.ஒரு லைட்டர், திசைகாட்டி மற்றும் வெட்டுக் கத்தி ஒன்றுடன் கரையேறுகிறான் பெனடிக்ட். தான் எங்கிருக்கிறோம் என்பதே அவனுக்கு புலப்படவில்லை. அடர்ந்து வளர்ந்திருக்கும் அந்த மழைக் காட்டுக்குள்ளிருந்து உடனடியாக அவன் வெளியேறியாகவேண்டும்.


குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவு இல்லை, கூட வந்த நாயும் ஆறுதலுக்கு இல்லை. திசைகாட்டியை வைத்துக்கொண்டு திக்கு தெரியாமல் அலைகிறான் பெனடிக்ட். பகலில் விலங்குகள் என்றால், இரவில் பூச்சிகள் மற்றும் கொசுக்களின் தொல்லை.பூச்சுக் கடியால் உடம்பெல்லாம் காயம்பட, கொசுக்கடியால் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிறான். உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இல்லாததால், மலேரியா நோய் மிக மூர்க்கமாகப் பரவுகிறது.


அதிர்ஷ்டவசமாக, இரண்டு வாரங்கள் கழித்து ஈச்சமரம் ஒன்றைப் பார்க்கிறான். அதனுடைய பழங்களைப் பறித்து கூழாக்கி அதன் சாற்றை போதும் மட்டும் குடிக்கிறான். ஆனால், மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவன் வயிறு எந்த உணவையும் ஏற்கவோ, ஜீரணிக்கவோ மறுக்கிறது. அப்படியே வாந்தி எடுக்கிறான்.


சில நிமிடங்களுக்குப் பிறகு சிங்கம் ஒன்றின் கர்ஜ்னை கேட்கிறது. தீயைக் காட்டி அதை விரட்டுகிறான். அந்த நேரத்தில் இன்னும் ஒரு விலங்கு அவனை நோக்கி வருகிறது. என்ன ஒரு அதிர்ஷ்டம்! அது, அவனுடைய ஆசை நாய் கேஷூ. எப்படியோ, அது எஜமானைத் தேடி வந்துவிட்டது. விலங்குகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் பெனடிக்டுக்கு பாதுகாப்பாக கூடவே வருகிறது கேஷூ.


நாட்கள் செல்லச் செல்ல, பசியின் கொடுமை உக்கிரமடைகிறது. 20 நாட்கள் கடந்தும் வெளியேற வழி தெரியவில்லை. எது கிடைத்தாலும் தின்றுவிடத் துடிக்கும் பசியின் தீவிரத்தில், பெனடிக்டின் பார்வை அவனது அன்புக்குரிய ‘கேஷூ’ மீது பாய்கிறது.


கேஷுவை சாப்பிடலாமா...? கேஷூவை உற்று நோக்குகிறான் பெனடிக்ட்! அவனது கண்களில் உக்கிரம்.


ஆனால், கேஷூவின் கண்களில் விசுவாசமும் அன்பும் பொங்கி வழிவது அழகாகத் தெரிகிறது. என்னையே நம்பி, என்னுடைய பாதுகாப்புக்காக என்னுடனே அலையும் கேஷுவைக் கொல்வதா? குற்ற உணர்ச்சியில் கூணிக் குறுகுகிறான் பெனடிக்ட்.


நான்கு நாட்கள் கடந்து இன்றோடு 24-வது நாள். நாயை உணவாக்குவது குறித்த எண்ணம் பெனடிக்டிடம் தீவிரமடைகிறது. இதற்கு மேல் உணவு உட்கொள்ளவில்லை என்றால், மரணம் நிச்சயம் என்கிற நிலை.


ஒன்று, நாயைக் கொன்று பெனடிக்ட் உயிர் வாழவேண்டும். அல்லது பட்டினியால் உயிர்விடவேண்டும்.


வேறு வழியில்லை.கையில் இருக்கும் கத்தியை எடுத்துக்கொண்டு நாயை நோக்குகிறான். நடக்கப்போவது எதுவுமே தெரியாமல், மாறாத விசுவாசத்தோடு அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது அப்பாவி கேஷூ.


வீரனைப்போல் நேருக்கு நேர் மோத விருப்பமும் துணிவும் இல்லாத பெனடிக்ட், கோழையைப்போல பின்னால் நின்று, ஒரே வெட்டாய் கேஷுவின் கழுத்தில் கத்தியை பாய்ச்சுகிறான்


......................................................


கேஷூவை சுட்டு, அதன் இறைச்சியை சாப்பிடுகிறான். ஆனால், உடலுக்குள் இருக்கும் மலேரியா கிருமிகளின் செயல்பாடுகளால், உணவை ஏற்க மறுக்கிறது வயிறு. மொத்தத்தையும் வாந்தி எடுக்கிறான்.


28-ம் நாள், காட்டைவிட்டு வெளியேறுகிறான். உள்ளூர்வாசிகளால், காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறான்.எஜமானனுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு அவனைப்போலவே பசி, பட்டினியுடன் பின் தொடரும் கேஷூ. சுயநலமாய் நடந்துகொண்ட பெனடிக்ட்.


உண்மையில் யார் மிருகம்?


இரண்டு நாட்களாக என்னைத் தூங்கவிடாமல், அடிக்கடி மனக்கண்ணில் பட்டு மறைகிறது கேஷூ. என்னாலும் ஜீரணிக்க முடியவில்லை.


http://www.youtube.com/watch?v=NgT7Vw5VdRM&feature=mfu_in_order&list=UL

Thursday, September 22, 2011

“விடியாத இரவு” -சிறையிலிருந்து நளினி எழுதும் தொடர்!


ன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.

‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் செய்தி வெளியான நாள் முதல், தமிழகம் மற்றும் உலகமெங்கும் எழுந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்கிறது. இன்று நீதிமன்றத் தடை உத்தரவால், மரணம் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், உத்தரவு என்னவோ மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது.

மரண தண்டனை ஒழிப்பு என்கிற சமீபத்திய விவாதத்தின்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகு, உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கலாமா? வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்களே! இவர்களை உடனே தூக்கில் போடவேண்டும்’’ என்பதுபோன்ற பரவலான கருத்தாக்கங்கள் எழுந்தன.  

இந்த விவாதங்களுக்குள் போகும் முன்பாக, ‘நாங்கள் எப்படி கைது செய்யப் பட்டோம், எவ்வாறு நடத்தப்பட்டோம், எந்த சூழலில் எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன’ என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். 

இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இளைய தலைமுறையினருக்கு எங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தெரியாதல்லவா?   அதற்காகத்தான் உங்களை பத்திரிக்கை வாயிலாக சந்திக்க விழைகிறேன். 

எம் மீதான சித்ரவதைகளை எழுதுவதே இன்னுமொரு சித்ரவதைதான்.

அன்புடன்
நளினி ஸ்ரீகரன்.

***********************************


14, ஜூன் -1991. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக அன்று ரொம்பவும் இருட்டாக இருப்பதுபோல உணர்ந்தேன்.  

நானும் என் கணவர் ஸ்ரீகரனும்(முருகன்) இரவு 11 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டோம். அப்போது நான், இரண்டு மாத கர்ப்பம். மூன்று போலீசார் எங்கள் அருகில் வந்து என்னையும், முருகனையும் கைது செய்கிறோம் என்றும், ஆட்டோவில் ஏறுங்கள் என்றும் உத்தரவிட்டனர்.

நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றப்பட்டோம். ஆட்டோவின் இடது ஓரத்தில் ஒரு காவலர் அமர்ந்து கொண்டார். காவலர் அருகில் என் கணவர் முருகனும், முருகன் அருகில் நானும், எனக்கு அருகில் ஒரு உதவி ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அமர்ந்துகொண்டனர்.

மூன்று பேர் உட்காரும் இடத்தில், நான்கு பேர் உட்காந்து இருந்ததால், அந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த உதவியாளர், என் உடலில் படக்கூடாத இடங்களில் தன் கையை வைத்து, செய்யக்கூடாத காரியங்களைச் செய்தார். ஒரு தாயாக இருக்கும் என்னை, என் கணவர் அருகில் இருக்கும்போதே, இப்படி அசிங்கமாக நடந்துகொண்ட அந்த காவலர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்? இப்போது  நினைத்தாலும் உடல் கூசுகிறது.  

‘கைது செய்யப்பட்டோம்’ என்கிற அதிர்ச்சியில் இருந்து மீள, ஒரு சில வினாடிகள்கூட கொடுக்கப்படாமல், எனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையின் வேதனையை அனுபவித்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது சி.பி.ஐ என்று அழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுக் குழுவின் ‘மல்லிகை’ அலுவலகம். அந்த மல்லிகை அலுவலகம் எனக்கும், என்னோடு கைது செய்யப்பட்டவர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு நரகத்தை காண்பிக்கப்போகிறது என்பது, அந்த ஆட்டோ காம்பவுண்டுக்குள் நுழையும்போது எனக்கு தெரியாது.

ஆனால், மல்லிகைக்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களிலேயே நரகம் தெரிந்துவிட்டது. பெயர்தான் மல்லிகையே தவிர, மல்லிகை மலருக்கு உண்டான மென்மையோ, மணமோ அந்த கட்டிடத்தில் துளியும் கிடையாது. மாறாக மலருக்கு நேர் மாறான மிருககுணம் உடைய மனிதர்களும், மலத்திலும், சிறுநீரிலும், வாந்தியிலும் என்னைப் போன்றவர்களைப் புரள வைக்கப்பட்ட அவலமும்தான் அந்தக் கட்டிடத்தின் அடையாளங்கள்.

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, எந்த விதத்திலும் மனித உரிமைகளை மீறாமல், ராஜீவ் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது என்று புத்தகம் எழுதும் அளவுக்கு மேடைதோறும் இப்போதும் பேசிவரும் அந்த முன்னாள் அதிகாரியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.  

எங்களைப் பார்த்ததும், “கொலைகாரி சிக்கிட்டாளா? ரெண்டு நாய்களும் சிக்கிட்டாங்களா? அடிச்சு இவங்க முதுகுத் தோலை உரிங்க. அப்போதான் வழிக்கு வருவாங்க” என்று கடும் குரலில் உத்தரவிட்டார். நானும், என் கணவரும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டோம். மிகவும் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி, இடக்குமடக்கான கேள்விகளை கேட்டனர்.

அரை மணிக்கும் மேலாக எனக்கு ஆபாச அர்ச்சனைகள் நீண்டுகொண்டிருந்தபோது, பக்கத்து அறையில் இருந்து நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அது, என் கணவர் வைக்கப்பட்டிருந்த அறை. வேகவேகமாக அந்த அறைக்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கே நான் கண்ட காட்சி! இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகிறது. எழுதும் என் விரல்கள் ஆடுகின்றன. என் கணவரை நிர்வாணப்படுத்தி பல பேர் சுற்றி நின்று லத்தியால் அடித்துக் கொண்டிருந்தனர். என் கணவர் வேதனை தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். நான், கண்களை மூடிக்கொண்டு “அவரை விட்டுவிடுங்கள், அடிக்காதீர்கள்” என்று அலறினேன், அழுதேன், கெஞ்சினேன்.

ஆனால், லத்தி அடிகள் விழுந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த ஒரு அதிகாரி, “என்ன நடக்கிறது என்று பார்த்தாயா? சொல்லுகிறபடி கேட்காவிட்டால் உனக்கும் இதே கதிதான். உன் கணவரை அடித்தே கொன்று விடுவோம்” என்று கூறிவிட்டு, என்னை பழைய அறைக்கே இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

அன்று இரவு முழுவதும் என்னை தூங்கவிடவில்லை. குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அந்த இரவிலும் அந்த அறையில் பளிச்சென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் என் கண்ணை உறுத்தின. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கைகள் என் கழுத்தை நோக்கி நீண்டது!

-இரவுகள் நீளும்

நன்றி, ‘மீடியா வாய்ஸ்’ 24.09.2011 இதழ்