Tuesday, August 28, 2007

''சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை'' -பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றி சில கேள்விகள்.

டீன்-ஏஜ் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணும் பொருட்டு பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர அரசு முன்
வந்துள்ளது. இப்படி குழந்தைகளிடம் பாலியல் விஷயங்களை விளக்கிக் கூறுவதன் மூலம் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதென்றும் எனவே இதை அனுமதிக்கக் கூடாதென்றும் சில தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.


குறிப்பாக பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெற்றோர்களைப் பொருத்த அளவில் இது நல்லதா, கெட்டதா என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இந்நிலையில் 'பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், வளர் இளம்
பருவத்தினருக்கான சிறப்புக் கல்வியாளருமான டாக்டர் யமுனா'விடம்
இப்பிரச்சினை குறித்துப் பேசியதிலிருந்து...

பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கற்றுத் தரப்படும் என அரசு
அறிவித்துள்ளதே. சின்னக் குழந்தைகளிடம் பெரிய மனுஷ சமாச்சாரங்களை
விளக்குவதால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதா?


பாலியல் கல்வி என்று யார் சொன்னது? நீங்களாக பெயர் வைத்துக் கொண்டது உங்கள் அறியாமையையும், பெரிய மனிதர்களாகிய உங்கள் மனம் பாலியல் விஷயங்களால் நிரம்பிக் கிடப்பதையுமே கட்டுகிறது. இதை வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கைக் கல்வி என்று சொல்வது தான் சரி. ஆங்கிலத்தில் ''adoloscent education'' என்று சொல்வார்கள்.


இதை ஒரு பூமிப் பந்து என்று கொள்வோமானால், அதில் செக்ஸ் கல்வி என்பது ஒரு ஒரு குட்டித் தீவு மாதிரி. யாரெல்லாம் இந்தக் கல்வி முறையை எதிர்க்கிறார்களோ அவர்களின் மனம் ஆபாசங்களால் நிரம்பிக் கிடக்கிறது என்று அர்த்தம். அவர்கள் வெறும் ஆண், பெண் உறுப்புக்களை மட்டுமே பார்க்கிறார்கள்.

அப்படியானால் என்ன மாதிரியான விஷயங்கள் சொல்லித்தரப்படும்?

ஒரு ஆண், பெண்ணுக்கு இடையிலான அத்தனை விஷயங்களும் சொல்லித்தரப்படும்.


நீங்கள் யார்? உங்கள் உறவினர்கள், நன்பர்கள் யார்?


யாரிடம் எப்படிப் பேச வேண்டும்.


இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


சமுதாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


உங்களை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கிறது?


எனப் பல விஷயங்கள் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு
அளிக்கப்படும்.

ஒரு பையனோ, பெண்ணோ தன் உடலில் நிகழும் திடீர்
மாற்றங்களால் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ இதைச் சொல்ல பயம். எனவே தன் கூடப் படிக்கிற நன்பர்களிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், ஆலோசனைக் கேட்கிறார்கள். அதாவது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவறென்றும், பாவமென்றும் கூறி வருகிற ஒரு சமுதாயத்தில் "ஒரு அறைகுறையானது இன்னொரு அறைகுறையிடம் போய் ஆலோசனைக் கேட்கிறது''.


இது எங்கே போய் முடியும் என்று நீங்களே சொல்லுங்கள். எனவே உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிய வைப்பதோடல்லாமல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக, புத்தகப் புழுவாக நிற்காமல் தெளிவான அறிவாற்றல் கொண்ட ஒரு மனிதனை உருவாக்குவதே இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம். முதலில் தன்னை அறிதல் பற்றி சொல்லித் தரப்படும்.

பாடப் புத்தகங்களைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் முதல் மார்க், முதல் ரேங்க் என்று செயல்படுகிற மாணவர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

வாழ்க்கையை விடவா மார்க் முக்கியம்? சமுதாயத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் வளர்பவர்கள் பெற்றோர்களைப் பிரிந்து சுயமாக வாழ
ஆரம்பிக்கும் போது அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இதில் பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி. அதிகாலை நான்கு மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு வரை 'மார்க், மார்க்' என்று ஒரு மதிப்பெண் அச்சிடும் இயந்திரமாகத் தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்களே ஒழிய, நல்ல மனிதனாக இல்லை என்பதை உணர வேண்டும்.

மாணவப் பருவத்தில் இருந்த போது தன் பெற்றோரால் சரியாக அன்பு செலுத்தப்படாத ஒருவர், இப்போது தன் பெற்றோர்களை சரிவர கவணிப்பதில்லை. அவரிடம் பேசிய போது ''they do not not love me. they love only my marks and they wantmoney'' என்று பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.


பெற்றோர்களின் தேவைக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார். ஆனால் அவரால் அன்பைக் கொடுக்க முடியாது. ஏனென்றால், அன்பாய் இருப்பது பற்றி அவருக்கு சொல்லித் தரப்படவில்லை.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்துடன்
செட்டிலாகிவிட்ட 24 வயது இளைஞர் அவர். ''ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. ஒரே டென்ஷன், படபடப்புன்னு நிம்மதியே இல்லாம இருக்குது. எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க "டைம் வேஸ்ட் பண்ணாத, டைம் வேஸ்ட் பண்ணாத''ன்னு. அவங்களோட இருந்தப்ப படிப்பு, டியூஷன்'ன்னு எல்லாமே கரெக்டா இருக்கும். ஆனா இங்க வேலை முடிஞ்சு ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. டோட்டலா டைம் வேஸ்ட் பண்றேன்'' என்று வருத்தப்படுகிறார். வாங்கிய சம்பளத்தை வைத்துக் கொண்டு கிடைக்கிற ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட இவரால் முடியவில்லை.


ஏனென்றால் இவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பது என்றால் என்னவென்றே தெரியவில்லை. படிப்பு, ஹோம் ஒர்க், மார்க் என்று மெஷின் போல்
இயங்கியவருக்கு ஓய்வு என்பது சுமையாய் இருக்கிறது. எந்தத் தவறும்
செய்யாமலேயே டென்ஷன், படபடப்பு. அப்படியானால் இந்த ஏட்டுக் கல்வி
எதற்குத்தான் உதவியிருக்கிறது. புரிகிறதா?

அதிக மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்களையும், தேர்வுகளில் முதலிடம் பிடிக்கிற மாணவர்களையும் கல்வி நிறுவணங்களும், பத்திரிகை ஊடகங்களும், அரசும், சமுதாயமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறதே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஓவராக தூக்கி வைத்துக் கொஞ்சுவது கொஞ்சமும் சரியல்ல. பாராட்டலாம். ஆனால் இன்று உள்ளது போல் மீடியாக்களும், சமுதாயமும் தலைப்புச் செய்தி போடுகிற அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. டென்த்தோ, +2வோ ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்திருக்கிற குறிப்பிட்ட பள்ளியில் எல்லா மாணவர்களுமே பாஸாகியிருப்பார்கள். முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மீதியுள்ள மாணவர்களுக்குமான மார்க் வித்தியாசம் ஒன்றோ, இரண்டோ தான் இருக்கும். மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை தரம் பிரிப்பது அவர்களிடையே தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும். இதற்கு பதில் அவர்களை தர வரிசைப்படுத்தலாம்.

+2 தேர்வு முடிவுக்கு முன்பே குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோமோ என்கிற பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆண்டு தோறும் தோல்வி மற்றும் தோல்வி பயம் காரணமாக விலை மதிப்பற்ற மாணவ மாணவியரின் உயிர்கள் பலி வாங்கப்படுகிறது. குறைந்த மார்க் வாங்குவது என்பது அவ்வளவு கொடிய குற்றமா? உயிர் தான் அதற்கு விலையா?


தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், கொடூரக் கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கூட இங்கே உயிர் வாழ வாய்ப்பளிக்கப்படுகிறது. அனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய் என்று அவமானப்படுத்தி அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறோமே! அந்தக் குற்றத்திற்காக நமக்கு யார் தண்டனை தருவது? இறந்து போகிற ஒவ்வொரு மாணவரோடும் சேர்த்து வெறும் கல்வி அல்லாத பிற துறை வல்லுணர்களையும் குழி தோண்டிப் புதைத்த குற்றமும் நம்மைச் சேரும்.

வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் அந்த நபருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று அளவான குடும்பம். பையன் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான். மகளோ நாலாவது ஐந்தாவது இடம் வாங்கிக் கொண்டிருந்தாள். எதிர் பாராமல் நோய் காரணமாக அந்தப் பையன் இறந்து போய்விட்டான்.


வீட்டு வாசலில் பிணம்கிடத்தப்பட்டு எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். துக்கம் தொண்டையை அடைக்கிற அந்த நேரத்திலும் அப்பாவானவர் தன் மகளின் கையைப் பிடித்து நேராக சாமி படத்தின் முன் இழுத்துச் சென்றிருக்கிறார். "கடவுளே! கூப்பிட்டது தான் கூப்பிட்ட, எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவானே! அவன் தானா உனக்கு
வேணும்? நல்லா படிக்கிற அவன விட்டுட்டு, சுமாரா படிக்கிற இவள
கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா''
என்று அழுதிருக்கிறார்.

அந்தப் பிஞ்சு மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் பாருங்கள். அதே போல் அவள் யாருமில்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்று அதிர்ஷ்ட்ட வசமாக காப்பாற்றப்பட்டிருக்கிறாள். இப்படி யார்-எவர், என்ன-எதற்கு என்ற
வித்தியாசம் எதுவுமில்லாமல் குடும்பங்களில் இருந்தே தான் குழந்தைகளின்
மீதான வன்முறை தொடங்குகிறது.

குழந்தைகளின் மீதான இப்படிப்பட்ட வன்முறையை தடுப்பது எப்படி?

பெற்றோர்கள் குழந்தைகளாக இருந்த போது இந்த வாழ்க்கைக் கல்வி
மறுக்கப்பட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். 'மாரல்
சைன்ஸ்' என்று ஒரு வகுப்பு இருந்தது. அதைக்கூட மற்ற ஆசிரியர்கள்
பறித்துக் கொண்டார்கள். மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப்
பழக வேண்டும். ஒரு ஆள் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று எப்படித்
தீர்மானிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டும்.


பேசும் போது கண்களை நேருக்கு நேர் பார்த்துத் தான் பேச வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முகத்தைப் பார்த்து அல்ல கண்களைப் பார்த்தால் தான் தெரியும். பேசிக் கொண்டிருக்கும்
போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் கண்கள் காட்டிக்
கொடுத்துவிடும். கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசாமல் பார்வை வேறு
எங்கெங்கோ தாவுகிறது என்றால் குறிப்பிட்ட அந்நபரின் எண்ணங்கள்
வேறெங்கெல்லாமோ போகிறது என்று அர்த்தம்.

அதே போல் "குட்-டச், பேட்-டச்'' என்பதை குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கல்யாணம், காதுகுத்தல் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் பண்டிகைகள், விழாக்களின் போதும் ஒன்று கூடும் உறவினர்கள் நன்பர்கள் ஆகியோர் தான் இந்த பேட்-டச் என்கிற ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது மாமா, சித்தப்பா, அண்ணன், பெரியப்பா என்று யாராக வேண்டுமாலும் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் செல்லமாய் அடிப்பது, தட்டுவது, கிள்ளுவது என்று முதலில் ஒத்திகைப் பார்ப்பார்கள். தங்களால் எந்த ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் ஏற்படுத்திய பின் தங்கள் சுய ரூபத்தைக் காண்பிப்பார்கள். இது சரியா, தவறா என்கிற குழப்பத்திற்கு உள்ளாகிற குழந்தைகள் எதிர்ப்பு காட்ட
திராணியற்றவர்களாகின்றனர்.
மீறி பெற்றோர்களிடம் கூறினால் 'அடச்சீ! சும்மா கிட' என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

குழந்தைகள் எதைச் சொல்ல வந்தாலும் அதைப் பொறுமையுடன் காது கொடுத்து கேட்பதே நல்லது.எல்லாம் எனக்குத் தெரியும். நீ வாயை மூடு என்று சொல்வது மிகவும் ஆபத்தானது. இதனால் எதையும் வெளியில் சொல்ல முடியாமல் மவுனமாய் கொடுமைக்குள்ளாகிறவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.

பாலியல் சம்பந்தமான விஷயங்களை வகுப்பெடுக்கும் போது மாணவர்கள் எதிர்மறை தூண்டலுக்கு உள்ளாக மாட்டர்களா?

அது ஆசிரியர்களின் பயிற்று முறையைப் பொறுத்தது.எப்படி பாடம் நடத்த
வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே அசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தாகி
விட்டது. ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு வரை உலகத் தாய்ப்பால் வாரம்
கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக எல்லா பள்ளிகளிலும் தாய்ப்பாலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறுகிறோம். இதைக் கேட்கிற மாணவிகள் ''ஆஹா... தாய்ப்பால் ரொம்ப இன்றியமையாதது. நானும் தாய்ப்பால் தரணும். அதனால் குழந்தைப் பெத்துக்கப் போறேன்'' என்று சொல்வார்களா என்ன?


எல்.கே.ஜி படிக்கும் போதே கண், காது, மூக்கு போன்று பிறப்புறுப்புக்களையும் குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை மூடி மறைத்து அது என்னவோ மர்மமான, ரகசியமான, அறுவெறுக்கத்தக்க ஒன்றாக கற்பனை செய்யவிட்டிருக்கிறோம். ஏன் பத்திரிகையில் கூட அவற்றை மர்ம ஸ்தானம், அந்தரங்க உறுப்பு என்று தானே எழுதுகிறீர்கள்!

இதன் மூலமாக தன் உடலைக் குறித்தே ஒரு குழந்தை மர்மம், அந்தரங்கம் என்று பயந்தால் நிலமை என்னாவது? இந்தியாவில் மொத்தம் 57 லட்சம் எச். ஐ.வி. பாசிடிவ் இருக்கிறார்கள். இதில் 15லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் 34% பேர். 15லிருந்து 24என்பது முழுமையான கல்விப் பருவம். இவர்களெல்லாம் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் விபச்சார விடுதிகளுக்குச் சென்றவர்கள். 20 வயது மாணவன் ஒருவன் எனக்கு இ-மெயில் அனுப்பியிருந்தான்.என்னால் எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் விபச்சாரியிடம் செல்லப் போகிறேன் என்று கூறியிருந்தான்.


நல்ல வேளை! போவதற்கு முன் எனக்கு தெரிவித்திருந்தான். இதனால் முதலில் அவனுக்கு வரப் போகிற எய்ட்ஸ். அதனால் வாழ் நாள் முழுவதும் சமுதாயத்தால் அவன் ஒதுக்கப்படுகிற அவலம். அவன் மட்டும் அல்லாமல் அவனது குடும்பம், உறவினர்கள் என்று யாரெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். குறிப்பாக அவனுக்கொரு அக்காவோ, தங்கையோ இருந்தால் அவர்களின் திருமணம்,எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மற்றவர்களின் கேலிப்பேசுக்கு எப்படியெல்லாம் ஆளாவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எடுத்து கூறியிருந்தேன்.

பின்பு மன்னிப்புக் கேட்டு திருந்தி விட்டதாக பதில் அனுப்பியிருந்தான். இரண்டு வருடத்தில் இ-மெயிலிலேயே சுமார் 4,000 சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன். ஆரம்பத்தில் செக்ஸ், சுய இன்பம் என்று கேள்வி கேட்டவர்கள் படிப்படியாக எக்ஸாம், இண்டர்வியூ என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மாறியதை நேரடியாக உணர்ந்தேன்.

தொடர்ந்து சுய இன்பம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் டீன்-ஏஜ்
பருவத்தினரிடமிருந்து கேட்க்கப்பட்டவண்ணமே இருக்கின்றனவே?


சுய இன்பம் என்பது இன்று டீன்-ஏஜ் பருவத்தினரிடையே பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு இன்னும் வலு சேர்ப்பதற்காக காலை எட்டு மணிக்கே டி.வி. சேனல்களில் சில ஆசாமிகள் ஆஜராகி சுய இன்பப் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். 'சொப்பனாஸ்கலிதம், ஆண்மைக் குறைவு, உடல் மெலிந்து... இன்னும் கன்றாவியாய் என்னவெல்லாமோ சொல்லி சகட்டு மேனிக்கு இளைஞர்களை பயமுறுத்தி காசு பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது.


''சுய இன்பம் என்பது ஒரு சாதாரண விஷயம். விபச்சார விடுதிகளைத் தேடிப்போவதை விட, அல்லது அவசரப்பட்டு யாரிடமாவது செக்ஸ்
வைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதை விட இது எவ்வளவோ மேல்.

சொல்லப்போனால் இது முற்றிலும் ஆபத்தற்ற ஒரு இயற்கையான வடிகால்'' என்று.

சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. சுய இன்பம் பற்றி உலகம் முழுக்க எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன. இதனால் ஆண்மை பாதிக்கப்படும் என்றோ, வேறு உடல் நலத் தீங்குகள் ஏற்படும் என்றோ அறிவியல் பூர்வமாக கண்டறியப்படவில்லை. அது தான் உண்மை.

போலி மருத்துவர்களால் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவிழ்த்துவிடப்பட்ட தகவல்களால் ஏற்பட்ட பயமும், குற்ற உணர்ச்சியுமே மீண்டும் மீண்டும் கேள்விகள் வழியாக உயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது. சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அதனால் நாம் மட்டும் தான் இந்தத் தவறை செய்து விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சிகளுக்கு இளைஞர்கள் ஆளாக வேண்டாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். கணவன் மனைவி உறவு என்றால் என்ன? என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். அது இரண்டு பேருக்கு இடையிலான உடலுறவு என்பது மாதிரியே பதில் சொல்வார்கள். அதுவா உண்மை?


ஒரு கணவன் மனைவிக்கு இடையில் எத்தனையோ
விஷயங்கள் அடங்கியிருக்கும் போது வெறும் உடல் இச்சை சார்ந்த விஷயமாக அதை புரிந்து வைத்திருப்பது குறுகிய மனப்பாண்மையைத் தானே காட்டுகிறது. திருமணங்கள் உடைவதற்கும், நிம்மதியில்லாமல் தொடர்வதற்கும் என்ன காரணம்? பரஸ்பரம் அன்பு, விட்டுக் கொடுத்தல் மற்றும் சரியான புரிதல் இல்லாதது தான்.

வீட்டுப் பாடம் செய்யலைன்னா ஸ்கூல்ல டீச்சர்ஸ் அடிக்கிறாங்க. வீட்ல
இருக்கும் போது சொன்ன பேச்சைக் கேட்கலைன்னா மனைவியைப் புருஷன் அடிக்கிறான்.


ஆக மனைவி மீதான இந்த வண்முறை என்பது படிக்கிற காலத்தில்
பள்ளிக் கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டது. முடிவு?
கல்விக்கூடங்களின் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் கல்யாணத்தை உடைப்பதில் வந்து நிற்கிறது. 'களவும் கற்று மற' என்கிறார்கள். எப்படி திருடினான் என்று தெரிந்தால் தானே திருடனைக் கண்டு பிடிக்க முடியும். தன் உடல், மனம் பற்றி தெரிந்திருந்தால் தான் அது குறித்த பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும். செக்ஸ் என்பதும் அப்படித்தான். அது பற்றிய உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதைச் சார்ந்த ஆபத்துகளிலிருந்தும் விடுபட முடியும். அது தான் நீங்கள் பாலியல் கல்வி என்று கூறுகிற இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம்.

மரக்காணம் பாலா.

Friday, August 17, 2007

எந்த ஆணும் முழு ஆண் அல்ல! எந்தப் பெண்ணும் முழு பெண் அல்ல!


"சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நடந்து போவதை

தெரிந்தும் உணர்ந்தும் கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி

யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்"

-லிவிங் ஸ்மைல் வித்யா.


லிவிங் ஸ்மைல் வித்யா 'அரவாணிகள்' என்றழைக்கப்படும் 'திருநங்கைகளின்' உரிமைகளுக்காக போராடி வருபவர். சமூக சார்ந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர், மு.ராமசாமியின் நாடகப் பட்டறையில் கற்றுத் தேர்ந்தவர். இனைய தளத்தில் எழுதுபவர்களுக்கான "வலைப் பதிவர் பட்டறை"யில் பங்கேற்க சென்னை வந்திருந்த வித்யா "அரவாணிகள் என்றழைக்கபடுவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்'' என்கிறார்.

''ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்களில் ஒன்று கூடுகிற மக்கள் "அரவான் பலி'' என்கிற சடங்கின் மூலம் அரவாணைப் பலியிட்டு அதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அரவாணிகள் என்ன அரவாணின் மனைவியா? இப்படி புராணக் கற்பனைகளில் தொடங்கி, நிஜ வாழ்க்கை வரையிலும் அரவாணிகள் இந்த சமூகத்தால் பலிகடாக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோருமாகக் கூடி கொலை செய்வதையே ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கிற அதே மனப்பண்மை பொது இடங்களில் அரவாணிகளை இழிவு படுத்திப் பார்ப்பதிலும் தொடர்கிறது.

எப்பொழுது ஒரு அரவாணியைப் பார்க்க நேர்ந்தாலும் திடீரென உங்களுக்குள் சந்தோஷம் பெருக்கெடுத்து அது சாக்கடையாய் நிரம்பி வழிகிறது. கொஞ்சமும் கூச்சமில்லாமல் சிரிக்கிறீர்கள், கூப்பிடுகிறீர்கள். அஜக் என்கிறீர்கள், அக்கா என்கிறீர்கள். உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் கோமாளி வேடமிட்டுத் திரியவில்லை. அதுதான் நிஜம், அது தான் இயல்பு.

"திருநங்கைகள்" என்று அவர்களை மரியாதையாக அழைக்கலாமே'' என்று கேட்கிறவருடன் மெரினா கடற்கரையில் கால் பதித்தபடியே நிகழ்ந்த இந்த உரையாடல் முழுக்க வலி நிரம்பியதாகவே இருந்தது.

வித்யாவை அழகாக புகைப்படமெடுக்க வேண்டும் என்கிற எனது எதிர் பார்ப்பில் அவருக்கு பெரிதாக உடன்பாடு இல்லாததை உணர்ந்தேன். ''போட்டோவாங்க இப்ப முக்கியம்? என்ன எழுதப் போறீங்க'ங்கறது தான் முக்கியமே. இப்படித் தான் ஏற்கனவே 'அவர் கூந்தல் காற்றில் படபடத்தது, அப்படி இப்படி'ன்னு என்னை வர்ணிச்சு எழுதினாங்க. நீங்க அப்படி எழுதாதீங்க'' என்கிறார்.

பதிவர் பட்டறைத் தலைவர் பாலபாரதி மற்றும் நன்பரும், ஆங்கில மேதையுமான நடைவண்டி மூலமாகத்தான் நான் வித்யாவைத் தொடர்பு கொண்டது. என் மீது எப்படியான நம்பிக்கையுடன் வித்யா தன் வலிகளைப் பகிர்ந்து கொண்டாரோ! உரையாடல் தொடர்கிறது.

"ஒரு திருநங்கையாய் வாழ்வதில் உள்ள வலி அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். ஆணோ, பெண்ணோ! எந்த ஒரு நபரும் மரியாதைக்குறியவர் அல்ல என்பதையே எங்களின் அனுபவம் உணர்த்துகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் பிணாமிகளாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆணும் முழு ஆண் அல்ல, எந்த ஒரு பெண்ணும் முழு பெண் அல்ல என்பதே அறிவியல் பூர்வமான உண்மையாய் இருக்கிற போது அதையே காரணம் காட்டி திருநங்கைகள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதாபிமனமோ, மனித உரிமைகளோ மருந்திற்குக் கூட இல்லாத ஒரு தேசமாகவே இருக்கிறது இந்தியா. ஆணோ, பெண்ணோ நாலு பேர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைக்கப்படுவது என்பது எவ்வளவு அவமானமான ஒரு விஷயம்? ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு நிர்வாணப்பட வேண்டியிருந்தது.

நாண்கு மருத்துவர்கள் என்னை நிர்வாணப்படுத்தி என் உடலைக் கிளரி சோதனை செய்தார்கள். நானும் ஒரு மனிதப் பிறவி தானே! உங்கள் எல்லோருக்கும் உள்ள உணர்வுகள் தானே எனக்கும் இருக்கும்? அப்போது நான் எவ்வளவு அவமானப்பட்டிருப்பேன், என் உடல் எந்தளவுக்கு கூச்சத்தால் நெளிந்திருக்கும்? சோதனை நடக்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என் பெயரை 'வித்யா' என்று மாற்றுவதற்காக யார் முன்னாடியெல்லாமோ நான் நிர்வாணப்பட வேண்டியிருக்கிறது. கேவலம் நியூமராலஜிக்காக ஒருவர் பதினைந்தே நாட்களில் பெயரை மாற்றிக் கொள்ள இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் நான் இரண்டு வருடங்களாக தாசில்தார், கலெக்டர், மருத்துவமனை, நீதிமன்றம் என்று அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இன்னும் பெயரை மாற்றிக் கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பெண்ணாய் வாழ்வதென்பது எங்களுக்கு வாழ்வா, சாவா பிரச்சினை. பிறந்த குடும்பத்திலிருந்தே சமுதாய கவுரவத்திற்காக நாங்கள் நாயினும் கேவலமக விரட்டியடிக்கப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள்! ஒரு முதுகலைப் பட்டதாரியாய் ரயில்களில் பிச்சையெடுப்பதென்பது எவ்வளவு அவமானகரமான ஒரு விஷயம்? ஆனால் நான் அப்படி இருக்க நேர்ந்தது. எனது முந்தைய அடையாளங்களை அழிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தே அக வேண்டும் என்கிற கட்டாயம்.

சிகிச்சைக்குப் பணம் வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் சுயமரியாதையும் தன்மானமும் என்னைச் சுட்டுக் கொண்டே இருக்க, தாளாத மனவேதனையுடன் (PUNE ரயில்களில்) பிச்சையெடுக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ளப்படுகிற எந்தவிதப் பரிசோதனைகளும் இல்லாமல் சட்டப்படி அரசாங்கத்தால் வாய்ப்பளிக்கப்படாத இப்படியான "அறுத்தெறிதல்'' உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடுப்புக்குக் கீழே அரை மணிநேரம் மறத்துப் போகச் செய்யக் கூடிய லோக்கல் அனஸ்தீசியா மூலம் படித்த மருத்துவரால் இது செய்து வைக்கப்படுகிறது. இதற்கும் வழியில்லாத திருநங்கைகளின் மறுவாழ்வு எங்கோ ஒரு ஓலைக் குடிசையில் ஆக்ஸா பிளேடினால் தீர்மானிக்கப்படுகிறது. பூஜை, புனஸ்காரங்களில் நம்பிக்கையுடைய மூத்த திருநங்கை இந்த அறுவை சிகிச்சையைச் செய்கிறார்.

பால் மாற்று அறுவைக்கு முன்வரும் நபரின் கை, கால்கள் இறுகக் கட்டப்பட்டு புத்தம் புதிதான ஆக்ஸா பிளேடினால் ''அந்த உறுப்பு'' அறுத்தெறியப்படும். உயிர் போகிற வலியில் மயக்கம் போட்டுவிடாமல் இருக்க வாயில் சுக்கு, மிளகைத் திணித்து கண்ணத்தில் பளார், பளார் என அறைவார்கள். சிறிது நேரம் கழித்து தனியறையில் விடப்படும் அந்நபர் மறுநாள் வெளியே வந்தால் திருநங்கை. இல்லையென்றால் பிணம்.

இப்படிப் போக்கிடம் எதுவும் இல்லாத நிலையில் ஆணாக வாழ்வதென்பதை விட செத்துப் போவதே மேல் என்று மனம் அடித்துக் கூறுகிற போது, பலிபீடத்தில் உதிரத்துடன் தொடங்குகிறது எங்கள் வாழ்க்கை.

நீங்கள் எனபது கூட உங்கள் உடல் அல்ல, மனம் தான். உங்களை நான் அவமானப்படுத்திப் பேசினால் உங்கள் மனம் தான் அதற்காக வருத்தப்படுகிறது. மனம் எனபது திருநங்கைகள் உட்பட எல்லோருக்கும் பொதுவானது தானே?

முதுகலைப் பட்டம் முடித்து ஒரு நிறுவணத்தில் பணிபுரியும் 25 வயதாகிய என்னை சில ஆறாம் வகுப்பு மாணவர்கள் "ஊரோரம் புளியமரம்'' என்று பாட்டுப்பாடி கேலி செய்கிறார்கள். தன் உடல் குறித்தோ, படிப்பு குறித்தோ அல்லது சமுதாயம் சார்ந்தோ எந்த அறிவும் இல்லாத சிறுவர்களுக்கு என் போன்றவர்களை இழிவுபடுத்திக் கேலி செய்ய வேண்டும் என்கிற புத்தி எங்கிருந்து வந்தது?

இங்கே தான் இப்படிக் கழிசடையான பொதுப் புத்தியை வளர்ப்பதில் சினிமா தன் பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த பருத்திவீரன் அமீரிடம் திருநங்கைகளை இழிவுபடுத்தியது குறித்து பல கேள்விகளைக் கேட்டேன். "ஆமாம், அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அந்த யதார்த்தைத் தான் காட்டியிருக்கிறேன்'' என்று பொருப்பில்லாமல் பதில் சொன்னார்.

எங்களைப் போன்ற திருநங்கைகளின் யதார்த்தம் பற்றி கற்பழிப்புக் காட்சிகளைப் (கற்பழிப்பு என்கிற வார்த்தை சினிமாத்தனம் என்பதற்காக கையாளப்பட்டுள்ளது. இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்) படமெடுக்கிற அமீருக்கு என்ன தெரியும்?

ஒரு வேளை சோற்றுக்காக, வெறும் முப்பது ரூபாய்க்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிற அவலநிலை தான் திருநங்கைகளுடையது. ஆனால் நீங்கள் மூன்று கோடி, முப்பது லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு இங்கிலீஷ் பேசி, ஏ.சி. பங்களாவில் வாழ்ந்து கொண்டே விபச்சாரம் செய்கிறீர்கள். இன்று பத்திரிகையை எடுத்துப் பாருங்கள், "பத்து கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய நடிகை'' என்று முதல் பக்கத்தில் செய்தி வந்திருக்கிறது. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும், கெட் டூ கெதர் பார்ட்டிகளிலும், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் நீங்கள் அடிக்கிற கூத்துக்கள் பற்றி எத்தனை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறோம்? முதலில் தங்களுக்குத் தெரிந்த இந்த யதார்த்தம் பற்றி அமீர் போன்றவர்கள் படமெடுக்கட்டும்.

"என்ன நாயணக்காரரே! சும்மா வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. வாயில வச்சி ஊத வேண்டியது தானே! நீங்க ஊதுறீங்களா? இல்ல நான் ஊதவா?'' எவ்வளவு வக்கிரமும் ஆபாசம் நிறைந்தது இந்த வசனம் என்பது சொல்லியா தெரிய வேண்டும். கேட்டால் இதை யதார்த்தம் என்கிறார் அமீர்.

இதில் பாலுமகேந்திரா, காக்க காக்க கவுதம், வேட்டையாடு விளையாடு (என்ன வேட்டை, என்ன விளையாட்டுப்பா அது?) கமலஹாசன் என்று எந்த ஒரு அறிவு ஜீவிகளும் விதிவிலக்கல்ல. இவர்களெல்லாம் போதாதென்று 'திருநங்கைகள் எனப்படுபவர்கள் அப்பாவிப் பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் தாதாக்கள்' என்று தனது அரசி சீரியல் மூலம் வீடு தோறும் எடுத்துச் சொல்கிற அரும்பணியை சித்தி ராதிகா செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல் அடுத்தவர்களை இழிவுபடுத்திக் காசு பார்க்கிற நீங்களெல்லாம் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

பள்ளிக்கூடம் படிக்கிறதிலிருந்து இன்றுவரை எதற்கெல்லாம் நாங்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. வரிசையில் நிற்கும் போது கூட ஒன்பதாவது இடம் வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் நான் தான் முதல் மதிப்பெண் எடுக்கிற மாணவராக இருந்தேன். திடீரென்று கரும்பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு "படிப்பலி, உழைப்பலி'' என்று சக மாணவர்களே எழுதி வைத்தார்கள். என்னை அலி என்று அவமானப்படுத்துவது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமனதாக இருந்தது.

சராசரியாக எல்லோருக்கும் அமையக்கூடிய பால்ய வயது அனுபவங்கள் கூட எங்களுக்கு வலி நிரம்பியதாகவே இருக்கிறது. நட்பு என்று சொல்லிக் கொள்ள ஒருவர் கூட அமைவதில்லை. வீட்டிலிருந்து கிளம்பி மீண்டும் வீடு வந்து சேர்கிற வரை "ஏய்... ஒம்போது, பொட்டை, வா... யக்கா, அஜக்" என்று கூறி தொடர்சியாக கேலி செய்வதற்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? இப்படிப் பிறந்தது எங்களின் குற்றமா?

என்ன பிரச்சினை என்று எங்களுக்கே தெரியாத வயதில் சுற்றம், நட்பு என்றில்லாமல் பிறந்த குடும்பத்திலிருந்தே வெறுக்கப்பட்டு அனாதைகளாக்கப்படுகிறோம். அந்த வயதில் எங்களுக்குத் தேவை அன்பு தான். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்களிடம் அன்பாகப் பேசி குடும்பத்தில் ஒருவராக பழக அனுமதித்தாலே போதும். எவ்வளவோ வலிகள் காணாமல் போகும்.

மாறாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்ட்டாயப்படுத்தினால் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் திடீரென்று உண்மை வெடித்துக் கிளம்புகையில் அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமில்லாமல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண்ணானவள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால் இன்று ஜெயலலிதாவோ, கிரன்பெடியோ வந்திருக்க முடியாது. ஆண்டுக் கணக்கில் அடிமைப்பட்டுக் கிடந்த பெண்களும் தலித்துக்களும் கூட இன்று ஓரளவாவது முன்னுக்கு வர வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் யார் பார்வைக்கும் படாமல் இன்றுவரை ஒடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

பொதுவாக இந்தியாவில் குழந்தை வளர்ப்பு பற்றியே தெரிவதில்லை. மருத்துவர்களும் திருநங்கைகள் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் அதற்கான ஆர்வமும் முயற்சியுமின்றி இருக்கிறார்கள். திருநங்கைகளை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாயத்தில் இப்போது திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

"மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம், டீசல் சிக்கனம் - தேவை இக்கனம்" மாதிரி "திருநங்கைகளும் இயல்பான மனிதர்களே - அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்களே" போன்ற வாசகங்கள் தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.

எங்களைக் குடும்பத்தில் ஒருவராக வாழ அனுமதிப்பது, அரசு உதவியுடன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வது, சான்றிதழ்களில் விரும்பிய பெயரை, பாலினத்தை (மாறிய பாலினமாக) மாற்றி அறிவிப்பது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பது ஆகியவற்றை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதுகிறோம்.

அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது எங்களுக்கு நேர்கிற அநியாயத்தைப் பாருங்கள். எவ்வளவு தகுதிகள் இருந்தாலும் விண்னப்பப் படிவத்தில் பாலினம் என்கிற இடத்தில் ஆண் என்று இருக்கும். ஆனால் புகைப்படத்தில் பெண் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக் குழப்பத்தினால் எடுத்த எடுப்பிலேயே எங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமல்ல, வேலை வாய்ப்புக்கான முயற்சியே கூட மறுக்கப்படுவது தான் கொடுமையான விஷயம். எனவே திருநங்கைகளுக்கான அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்ற அரசு சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதே போல் பெண்களின் மீதான பாலியல் வண்கொடுமைக்கும், திருநங்கைகள் மீதான பாலியல் வண்கொடுமைக்கும் உள்ள வித்தியாசத்தையும் பாருங்கள்.

பொது இடத்தில் யாராவது ஒரு பெண்ணை சீண்டினால் சுற்றி இருப்பவர்கள் தர்ம அடி கொடுக்கிறார்கள். வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோம், தண்டனை கிடைக்கும் என்கிற பயமாவது பெண்கள் விஷயத்தில் இருக்கிறது. ஆனால் இதே வண்கொடுமைகளை திருநங்கைகள் மீது கட்டவிழ்த்து விடும் போது சமுதாயம் அதை ரசித்து வேடிக்கைப் பார்க்கிறது.

பட்டப்பகலில் மனிதாபிமானமின்றி நடந்தேறுகிற இந்த வண்கொடுமைகளின் மூலம் நாலு பேர் சந்தோஷப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மனித உரிமைகள் பற்றி பேசி மாநாடுகள் நடத்தி பிஸ்கட் சாப்பிடுகிறீர்கள்.

மரக்காணம் பாலா.

Saturday, August 4, 2007

''க்ளாஸ் ரூம்'லயே சிகரெட் பிடிக்கிறாங்க! டேபிள் மேல காலைப் போடுறாங்க!


''ஓட்டப் பந்தையமோ, கிரிக்கெட் மேட்ச்சோ! எதுக்காகவும் நான் ஆடப்போறதில்லை. உலக சாதனை புரிந்ததற்காக எனக்கு பாராட்டு விழாவும் இல்லை. நான் லட்சாதிபதியோ, கோட்டீஸ்வரியோ இல்லை. ஆனா நான் ஃபிளைட்ல பறந்து சுவீடன் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா?'' முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க யாரைப் பார்த்தாலும் தன் வெளிநாட்டு அனுபவங்களை எடுத்து விடுகிறார் இலக்கியா.

இலக்கியா வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்துப் பெண். தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 'பெய்ன் ஸ்கூலில்' பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஊர் முழுக்க இப்படி எத்தனையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறர்கள். இதிலென்ன ஸ்பெஷாலிட்டி என்று நீங்கள் நினைக்கலாம். 'நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரணும், ஸ்போர்ட்ஸ் ஃபர்ஸ்ட் வரணும். அப்பத்தான் உனக்கு கேட்டதெல்லாம் வாங்கித் தருவேன்' என்று கூறி அவர்களின் மண்டையைத் திருவி பென்டெடுக்காமல், ரொம்ப அழகாய் இரண்டு நிறுவணங்கள் சிந்தித்ததன் விளைவு! இலவசமாய் இலக்கியாவுக்கு ஸ்பெயின் டூர்.

தமிழகத்தைச் சேர்ந்த 'தென்றல்' தன்னார்வத் தொன்டு நிறுவணமும், ஸ்வீடனைச் சேர்ந்த 'ஒய்-நீவ்' தொண்டு நிறுவணமும் இந்தக் காரியத்தை ஆண்டு தோறும் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகள் அமையப் பெறாத சாதாரண, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை 'சுவீடனுக்கு' அழைத்துச் சென்று அந்த நாடு, அதன் மக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்ரை நேரடியாக உணர வைப்பது. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சுவீடன் செல்வது போல், சுவீடனிலிருந்தும் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து கலாச்சாரப் பறிமாற்றங்களை ஏற்படுத்துவது இதன் நோக்கம். இந்த ஆண்டு பதிநான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் விசா காரணமாக இரண்டு குழந்தைகள் மட்டுமே சுவீடன் செல்ல முடிந்திருக்கிறது.எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். ஜாலியா ஒரு பதினைந்து நாள் டூர். எப்படி இருக்கும்? இலக்கியா சொல்கிறார் கேளுங்கள்.

''அய்யோ... முத முதலா விஷயத்தைச் சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஸ்பெஷலா நாம எதுவும் செய்யலையே. எப்படி நம்பள ஃபாரின் கூட்டிட்டுப் போகப்போறாங்க'னு குழம்பிக்கிட்டு இருந்தேன். பாஸ்போர்ட்'லாம் அப்ளை பண்ணும் போது தான் 'அடடா.. நமக்கு சரியான லக்கி பிரைஸ் தான்'னு நெனச்சிக்கிட்டேன். ஏற்போட்டுக்கு உள்ள கார்ல போகும் போதே எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. 'ஆஹா... நாம ஆகாயத்துல பறக்கப் போறோமே... அய்...யா! மேகத்துக்கு உள்ள'லாம் ஏரோப்ளேன் புகுந்து, புகுந்து போகப்போவுது'ன்னு பயங்கரமா கற்பனை'லாம் பண்ணிக்கிட்டே போனேன். 'சுவீடன் போய்ட்டு திரும்பி வருவியா? இல்ல அங்கயே தங்கிடுவியா'ன்னு ஆபீஸர்ஸ் கேட்டாங்க. 'ம்... நான் படிக்க வேண்டாமா? திரும்பி வருவேன்'னு சொன்னேன்.

பேசிக்கிட்டிருக்கும் போதே சீட்ல உக்கார வச்சிட்டாங்க. என்னடான்னு பாத்தா நான் ஃபிளைட்ல இருக்கேன். நான் எவ்ளோ லக்கி தெரியுமா?எனக்கு ஜன்னலோரம் சீட் கிடைச்சிட்டுது. திறந்து பாக்கறதுக்கெல்லாம் அலோ பண்ணாங்க. ஃபிளைட் மேல பறக்க ஆரம்பிக்கட்டும். மேகத்தை அப்டியே ஒரே கொத்தா அள்ளிட வேண்டியது தான்'னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ராத்திரி ஒன்ரை மணியிருக்கும். ஃபிளைட் டேக் ஆப் ஆகும் போது காதெல்லாம் கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்'னு அடச்சிக்கிச்சு. அவ்ளோ தான். அதுக்கப்புரம் ஜாலியா பறக்க ஆரம்பிச்சிட்டோம். நான் நெனச்ச மாதிரியே ஃபிளைட் மேகத்துக்குள்ள புகுந்து, புகுந்து போக ஆரம்பிச்சுது. இது எப்படி எனக்குத் தெரியும்'னு தானே பாக்கறீங்க. எனக்குத் தெரியும்! இப்படிலாம் சந்தேகப்படுவீங்க'ன்னு. நம்ப ஃபிளைட் எங்க போகுது, எப்படி போகுது'ன்றதை உள்ள உக்காந்துக்கிட்டே நாம டி.வி.ல பாத்துக்கலாமே... மேகம் அப்டியே பக்கத்துலயே இருந்திச்சா. கையை விட்டு அள்ளிடலாம்'னு தான் பாத்தேன். ஆனா எட்டவே இல்ல'' என்கிறார்.

''ம்... ரொம்ப நேரம் பறந்தோமா! மறு நாள் மதியம் ஃபிராங்க்பர்ட்'ல போய் விமானம் தரை இறங்கிச்சு. அதோட எனக்கு ஃபிளைட் காலி'ன்னு பாக்கறீங்களா? இல்லவே இல்ல. மறுபடியும் ஒரு ஃபிளைட் புடிச்சி ஸ்டாக்ஹோம் கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து கார்ல ஜாலியா ஒரு சவாரி. போய்க்கிட்டே இருந்தோமா... வழில ஒரு ஈ, காக்கா கூட இல்ல. உங்க ஊர்ல ஆளுங்களே கெடையாதா'ன்னு கேட்டுட்டு இருக்கும் போதே திடீர்னு ஒரு ஜீப்ரா க்ராஸ்ல கார் நின்னுடிச்சி. சரி யாரோ ஆளுங்க தான் க்ராஸ் பண்னப் போறாங்கண்ணு பாத்தா யாருமே இல்ல. ஆளுங்க தான் யாருமே இல்லையே எதுக்கு காரை நிப்பாட்டினீங்க'ன்னு கேட்டேன். ஜீப்ரா க்ராஸ் வந்தா கண்டிப்பா காரை நிப்பாட்டியே ஆகணுமாம்.ஏன்னா, எதுனா மிருகமோ இல்ல மனுஷனோ க்ராஸ் பண்ணாலும் பண்ணுவாங்க, அதனால'ன்னு சொன்னாங்க. நான் நம்மூரை நெனச்சிப் பாத்தேன். சிரிப்புத்தான் வந்தது.
போய்ச் சேர்ந்த உடனே நாங்க தங்கற இடத்துல எங்களுக்கு சாப்பாடு ரெடியா இருந்தது. நாங்க பத்துப் பேருக்கு மேல இருப்போம். ஆனா எங்களுக்கு ஒரே ஒரு மீன் தான் வச்சாங்க. என்னடா இதுன்னு பாக்கறீங்களா? ஏன்னா அது அவ்ளோ பெரிய மீன். யாருக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி சாப்பிட்டுக்கலாம். சாப்பிட்டு முடிச்சப்புறம் வெளியே வந்தா, ராத்திரி ஏழு மணி இருக்கும். ஆனா நம்மூர்ல நாலு மணி போல வெளிச்சம் அடிக்குது. அங்க அப்படித்தான் இருக்குமாம்.

மறு நாள் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ஸ்கூலா அது! ஒரு பெரிய யூணிவர்சிடி மாதிரி இருந்தது.சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க. க்ளாஸ் ரூம்லயே கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும் ரொம்பக் கேஷூவலா சிகரெட் புடிக்கிறாங்க. எனக்கு பயங்கர ஷாக். அதோட விட்டாங்களா! காலைத் தூக்கி டேபிள் மேல போட்டுக்கிட்டு தான் பாடத்தையே கவணிக்கிறாங்க. ஆச்சர்யமா இருக்கா? இன்னும் கேளுங்க. மிஸ்ஸை எப்படி கூப்பட்றாங்க தெரியுமா? ஒண்ணு... பேர் சொல்லிக் கூப்பட்றாங்க. இல்லைனா ஹாய்! ஹலோ!ன்னு கூப்பட்றாங்க. க்ளாஸ் போரடிக்குதுன்னு நெனச்சா போதும். சொல்லாமக் கொள்ளாம எழுந்து வெளியே போயிடறாங்க. ஒரே ஜாலிதான் அவங்களுக்கு.

அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே ஸ்கூல்லதான் போட்றாங்க. ஆனா சமையல்காரங்க யாரும் கிடையாது. காய்கறிகளை கழுவறது, வெட்றது, சமைக்கறதுன்னு எல்லாமே மெஷின் தான். அதுவா ரெடியாகி வெளியே வந்துடும். அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சாப்பாட்டைக் கையால எடுத்து சாப்பிட்டேனா. 'ஓ... நோ! நோ! கை வச்சி சாப்பிடக்கூடாது. ஸ்பூன்ல தான் எடுத்து சாப்பிடணும். நாங்க உங்க ஊருக்கு வந்தப்போ கையால எடுத்து சாப்பிட்டோம் இல்ல. அது போல நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. இங்க ஸ்பூன்ல தான் சாப்பிட்டாகணும்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த ஸ்கூல்லயே எனக்கு ஒரு பொண்ணு நல்ல ஃபிரண்ட் ஆயிட்டா. திரும்பி வர்ரப்போ எனக்கு என்னக் கொடுத்தா தெரியுமா? இந்தியா போனாலும் நீ என்னை மறக்கக் கூடாது. என் ஞாபகமா இதை வச்சிக்கோ'ன்னு சொல்லி ஒரு சிகரெட் லைட்டரை தூக்கிக் கொடுக்கிறா! அன்பா கொடுத்தா எதுவா இருந்தா என்ன. சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.

நம்ம ஸ்கூல் மாதிரி அங்க ஒண்ணாவது, ரெண்டாவது'லாம் கெடையாது. இருபது வயசு வரை கண்டிப்பா படிச்சே ஆகணும். ஆனா ஸ்டூடண்ட்ஸ்'லாம் ஸ்கூல் போறப்பவே பார்ட் டைமா வேலைக்குப் போய் மாசத்துக்கு பதினஞ்சாயிரம் வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இஷ்டமிருந்தா ஸ்கூலுக்கு வரலாம். இல்லாட்டி வெளிய போயிடலாம். யாரும் அவங்களை கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா அவங்க எல்லோரும் தங்களோட டியூட்டி, வாழ்க்கை, எதிர்காலம் பத்தி தெளிவா இருக்குறதுனால யாரும் வீணாப் போறதில்ல. நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபிரீடம் கிடைசா எவ்ளோ நல்லாயிருக்கும்'னு நெனச்சிக்கிட்டேன்.

அடுத்தடுத்த நாள் பல இடங்களைச் சுத்திப் பாத்தோம். திரும்பவும் ஒரு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. மொத்தமே அறுபது பேர் படிக்கிற அந்த ஸ்கூல் ஒரு அரன்மனை போல இருந்தது. நாங்களும் அந்த ஸ்டூடண்ட்சும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேள்விகள் மூலமா பல சந்தேகங்களை தீத்துக்கிட்டோம். ஒரு மாணவி என்னன்னு தெரியுமா கேட்டா! 'ஆமா... நீங்கள்லாம் எப்படி பல்லு வெளக்குவீங்க'ன்னு கேக்கறா! எனக்கு சிறிப்பா வந்துச்சி. 'ஆங்... நாங்கன்னா யானை மாதிரியா வெளக்குவோம். நாங்களும் உங்களை மாதிரி தான் பிரஷ் போட்டு வெளக்குவோம்'னு சொன்னேன். அப்புறம் கிராமங்கள்ல ஆலும், வேலும் வச்சி பல் விளக்குறதைப் பத்தியும் சொல்லிட்டு வந்தேன். எங்ககிட்ட... நீங்க சிகரெட் பிடிப்பீங்களா? க்ளாஸ் ரூம்ல எப்படி உக்காருவீங்க? ஒயின்'லாம் குடிப்பீங்களா?ன்னு பல கேள்விகளைக் கேட்டாங்க.

சினிமாவில எல்லாம் காட்டுவாங்களே! தண்ணிய வாரி இறைச்சிக்கிட்டு... அந்த மாதிரி ஸ்பீட் போட்டிங் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒரு காக்காவைப் பாத்தேன். ஆனா அதுவும் அவங்களை மாதிரி வெள்ளையாவே இருந்தது. ஸ்டாக்ஹோம்'ல முதல் உலகப் போர் நடந்தப்போ இருந்த மிச்ச மீதிகளை அப்படியே ஒரு நினைவுச் சின்னமா மாத்தி வச்சிருக்காங்க. போர்க்கள காட்சிகளை சிலை வடிவத்துல தத்ரூபமா வடிச்சி, அதுக்கு சவுண்ட், லைட்டிங் எல்லாம் கொடுத்து ஒரு நிஜமான போர்க்களத்துல இருக்கிற மாதிரியே பண்ணியிருக்கிறாங்க. அதன் மூலமா மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட முடியுது'ன்னு சொல்றாங்க. ஒரு காலத்துல ஸ்வீடன் ஆர்மி தான் ஐரோப்பாவிலேயே மிகச்சிறந்த ஆர்மியா இருந்ததாம். ஆனா இப்ப இல்லையாம்.

அப்புறம் கடைசியா ட்ரெய்ன்ல ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனாங்களா. ட்ரெய்னா அது! ஃபிளைட் மாதிரியே இருந்தது. பேசஞ்சர்ஸ் எல்லாரும் கொஞ்சமும் சத்தம் போடாம அமைதியா பயணம் செஞ்சாங்க. அங்க இருந்த கடல் ஏரி மாதிரி ரொம்பப் அமைதியா அலையே இல்லாம இருந்தது. அங்க இருக்குற மக்கள்லாம் கார்பெண்டிங்'ல மரம் இழைக்கிற தூள் எல்லாத்தையும் வீணாக்காமல் அதுல ஒரு பேஸ்ட் கலந்து குளிருக்கு எரிக்கப் பயன்படுத்துறாங்க. பாரம்பரிய உடைகளை அங்க இருக்குற ஒரு சில வயசானவங்க மட்டும் தான் போட்டுக்கறாங்க. ''நாங்க உயிரோட இருக்குற வரைக்கும் தான் நீங்க இந்த ட்ரெஸ்சை பாக்க முடியும். நாங்களும் செத்துப் போய்ட்டா இதைப் போட்றதுக்கே ஆள் இல்லை'ன்னு ரொம்ப சோகமா எங்ககிட்ட சொன்னாங்க. எனக்கு ரொம்பப் பாவமா இருந்தது.

சுவீடனை விட்டுக் கிளம்பும் போது ரொம்ப கிராண்டா ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்க வச்சி தான் நான் ஒயின் குடிச்சேன். ம்... நல்லா தான் இருந்தது. பிரியும் போது எல்லாரும் அழுதுட்டோம். அந்தளவுக்கு அவங்க எங்களோட ரொம்ப அன்பா பழகினாங்க. எங்களுக்கு நெறைய பரிசுப் பொருள்லாம் கொடுத்து வழியணுப்பி வச்சாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் இந்தியா வந்து சேர்ந்தேன். ரூம்ல எப்பனாச்சும் கரண்ட் கட்டாயிருச்சின்னா அந்த சிகரெட் லைட்டரைத்தான் யூஸ் பண்ணுவேன். உடனே எனக்கு அந்த ஃபிரண்ட் ஞாபகம் வரும். ஆனா அடிக்கடியா கரெண்ட் போயிடுது? அதை எங்க தாத்தாவுக்கு கொடுத்திரலாம்'னு இருக்கேன். அவருக்காவது யூஸ் ஆகட்டும்.

மரக்காணம் பாலா.

Saturday, July 21, 2007

ரிக்க்ஷா மாமாவுக்கு இது '1071'வது பிறந்த நாள்






பாண்டிச்சேரியில் இறங்கி 'ரிக்க்ஷா மாமா' யாரென்று கேட்டால், சின்னக் குழந்தைக்கூட சொல்லிவிடும். அந்தளவுக்கு ஊர் முழுக்கப் பிரபலம் ரிக்க்ஷா மாமா. சத்யராஜ் மாதிரி இவர் குழந்தைகளை ரிக்க்ஷாவில ஏற்றிக்கொண்டு 'ஒத்திப்போ, ஒத்திப்போ கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ'ன்னு பாட்டுப் பாடுகிறவரும் இல்லை. ஆனால் விஷயத்தைக் கேள்விப்பட்ட சத்யராஜ், ''அய்யா! நீங்கதான் நிஜமான ஹீரோ, நீங்கதான் உண்மையான ரிக்க்ஷா மாமா''னு நெகிழ்ந்து போய், ஒரு ரிக்க்ஷாவையே இவருக்குப் பரிசா கொடுத்திருக்கார்.

சேவை செய்யணும்னா உலக அழகி ஆகணுமா என்ன? மனசு தாங்க முக்கியம். அந்த மனசு, இந்த ஏழை ரிக்க்ஷா மாமாகிட்ட நிறையவே இருக்கு. அஞ்சு ரூபாய்க்கு காதி போர்டு பட்ட சாதம் வாங்கி அடிச்சாலும் பசங்களுக்கு பொறந்த நாள்னா, 150 ரூபாய்க்கு கேக் வாங்கிக் கொண்டாடுகிற செல்வந்தர் இவர். இவருக்கு மொத்தம் 1071 பிள்ளைகள். எப்படி சமாளிக்கிறார்ணு பாக்கறீங்களா? கேளுங்க.

சவரிநாதனுக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் லட்சுமாங்குடி. மனம் நிறைய கனவுகளோடு 76ல் ஜெசிந்தா மேரியைக் கைப்பிடித்தார். கண்கொள்ளாத அழகு ஜெசிந்தா. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் மூட்டைத் தூக்கி சம்பாதித்து, அந்தப் பணத்தில் தன் அழகு மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார். இப்படி சந்தோஷமாக நாலு வருடங்கள் ஓடிய குடும்ப வாழ்க்கையில், திடீரென்று புயலடிக்கத் துவங்கியது. அன்று நடுக்கடலில் கப்பலுக்குள் வேலை. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. களைத்துப் போய் பசியோடு வீடு வந்து சேர்ந்தவரை எதிர்பாராமல் இடி தாக்கியிருக்கிறது. ஆனால் அன்று மழை ஏதுமில்லை. வானத்திலிருந்து பாய்வதற்குப் பதில், இடி வீட்டுக்குளிருந்து பாய்ந்திருக்கிறது. ஆம், ஆறு மாதக் குழந்தை சார்லஸ் கீழே உறங்கிக் கொண்டிருக்க, மேலே வேறொரு ஆடவனுடன் கட்டிலில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் ஜெசிந்தா மேரி.

''எனக்கு ஆத்திரத்தைவிட அழுகைதான் அதிகமா வந்தது. தன் பொண்டாட்டியோட வேற ஒரு ஆம்பளையை கட்டில்ல பாக்குற மாதிரி கொடுமை உலகத்துல வேற எதுவும் இல்லீங்க. சாகிறவரை அது உங்களை சித்திரவதை பண்ணிக்கிட்டே இருக்கும். ரொம்ப மனசு ஒடஞ்சிப் போச்சு. எங்கெங்க‌யோ சுத்தினேன். கடைசியா வந்து சேர்ந்த‌ இடம், சூசைட் பாயிண்ட்னு சொல்றாங்க. அதெல்லாம் எனக்குத் தெரியாது. மலை உச்சிக்குப் போயிட்டேன். ஆனா, தற்கொலை என்னமெல்லாம் கிடையாது.

நான் மலை உச்சியில நிக்கிறதைப் பார்த்து, கர்னல் அந்தோனிங்கிற மிலிட்ரி ஆபீசர், 'அடப்பாவி ஏண்டா சாகப் போற? உனக்கு என்ன கஷ்டம்? எங்கிட்ட சொல்லு'ன்னு கேட்டவர், அங்குள்ள டெபன்ஸ் காலேஜில் என்னை தோட்ட வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் தனியா இருக்கிறதைப் பார்த்து 'ரோசி'ன்ற பொண்ணை கல்யாணமும் செஞ்சு வச்சார். ரோசிகூட குடும்பம் நடத்தினப்ப ஒரே பிரசவத்துல ரெட்டைக் குழந்தை பிறந்தது. யார் செஞ்ச பாவமோ! ரெண்டுமே செத்துப் போச்சு.

ரொம்ப நாளாகியும் குழந்தைங்க செத்துப்போன துக்கம் மனசை விட்டுப் போகலை. வெறுத்துப் போய், மனம் போன போக்கில் கிளம்பி பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன். குளம் வெட்டி இந்த ஊர் ஜனத்துக்கெல்லாம் தண்ணி அளந்தாளாமே ஆயி! அந்த ஆயி மண்டபத்துக்குப் பக்கத்துல பசியோட உக்காந்திருந்தேன். 'ராஜூ, பாபு'ன்னு ரெண்டு ரிச்சா தொழிலாளிங்க. அவங்க‌தான் எம்மேல இறக்கப்பட்டு கூடைசோறு வாங்கித் தந்தாங்க. என் கதைய கேட்டுட்டு 'இனிமே நீயே ஒழச்சி சம்பாரிச்சி சாப்பிடு'ன்னு சொல்லி ஒரே நாள்ல எனக்கு ரிச்சா ஓட்டக் கத்துக் குடுத்தாங்க.

ஹனிமூன் கொண்டாட பாண்டிச்சேரி வந்த ஜோடிதான் என் முதல் சவாரி. அன்னைக்கு என்ன அதிஷ்ட்டமோ! நிறைய வெள்ளக்காரங்க என் ரிச்சாவுக்கு சவாரி வந்தாங்க. சொன்னா நம்பறீங்களோ இல்லியோ! அன்னைக்கு மட்டும் ஒரே நாள்ல 300 ரூபா கலெக்க்ஷன் ஆச்சு. நேரா கொண்டுபோய் 'ராஜூ, பாபு'கிட்ட கொடுத்துட்டேன். அவங்க வெறும் முப்பது ரூபாயை எடுத்துக்கிட்டு, மீதிய எங்கிட்டயே கொடுத்துட்டாங்க.

இவ்ளோ பணத்தை எப்ப‌டி செலவு பண்றதுண்ணே தெரியல! குதிக்காத குறைதான். சந்தோஷமா தெருவுல நடந்து, போய்க்கிட்டே இருந்தேன். அப்பப் பாத்து பிளாட்பாரத்துல வசிக்கிற குழந்தைங்க, 'யம்மா பசிக்குது, யம்மா பசிக்குது'ன்னு சொல்லி அவங்க அப்பாம்மாகிட்ட கெஞ்சிக்கிட்டு நிக்குதுங்க! எனக்கு குழந்தைங்க இல்லையா? இதுங்க பசியில துடிக்கிறதப் பாத்து மனசு இறங்கிப் போச்சு. அப்பவெல்லாம் ஒரு சாப்பாடு ரெண்டு ரூபாதான். எல்லா குழந்தைங்களையும் கூப்பிட்டேன். மொத்தம் இருபது, இருப‌த்தஞ்சி பசங்க இருக்கும். எல்லாத்துக்கும் சோறு வாங்கிக் கொடுத்துட்டு, அதுங்க சாப்புடறதையே வச்சக் கண்ணு வாங்காம பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்குப் பசியே எடுக்கலை.

அதுக்கப்புறம் எனக்கு நெறைய ஸ்கூல் சவாரிங்க வர ஆரம்பிச்சது. சக்திகுமரன்தான் என்னோட முதல் ஸ்டூடண்ட். அவனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள், எனக்கு நவம்பர் 8. சரி, இந்தக் குழந்தையோட பிறந்த நாளை கிராண்டா கொண்டாடணும்ணு முடிவு பண்னேன். நேரா காந்தி ஸ்ட்ரீட்ல இருக்குற சிவா ஆர்ட்டிஸ்ட்கிட்டப் போய், ஒரு வாழ்த்து அட்டை வரஞ்சிக்கிடேன். அப்புறமா கலர் பேப்பர், ஜோடிப்புலாம் வாங்கி ராத்திரி முழுக்க‌ உக்காந்து ரிக்க்ஷாவை அலங்காரம் பண்ணேன். காலைல சக்திகுமரன் வீட்டு வாசல்ல போய் நின்னதும், அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! பிள்ளைய ரிச்சாவுல ஏத்திக்கிட்டுக் கிளம்பும்போது, பக்கத்து வீடுகள்ல இருந்து ஒரு பத்துப் பிள்ளைங்க வந்து நிக்குது. எல்லாரையும் ஏத்திக்கிட்டு நேரா மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போனேன். பிரார்த்தனையை முடிச்சிட்டு அங்கிருந்து லக்கி ஸ்டூடியோ ஓனரைப்போய், தூக்கத்துல எழுப்பினேன். அதுதான் எங்களோட முதல் பிறந்தநாள் போட்டோ.

குழந்தைங்க, அவங்க அப்பாம்மான்னு எல்லாரும் சந்தோஷப்பட்டதைப் பார்த்து எனக்கு ரொம்ப உற்சாகமாயிடுச்சி. ஆனா வசதியான பிள்ளைங்கள்லாம் சைக்கிள்ல, ரிச்சாவுல வரும்போது தெருவோரப் பிள்ளைங்க நடந்தே வர்றது என்னவோ மாதிரி இருந்துச்சி. 'நமக்குதான் பிள்ளைங்களே இல்லை. இதுங்களையாவது கூட்டிட்டுப் போவோம்'னு இலவசமாவே ரிச்சாவுல ஏத்திட்டுப்போக‌ ஆரம்பிச்சேன். போகும்போது, 'மாமா எனக்கு இன்னைக்கி பொறந்தநாள்'னு பிள்ளைங்க சொல்லும். மாத்திப் போடவே துணி இல்ல. இதுல பொறந்த நாள் எப்படிக் கொண்டாட முடியும்? புதுத் துணி எப்படி எடுக்க முடியும்? அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேன்.

இந்த மாதிரி ஏழைக் குழந்தைகளுக்கு நாமே பிறந்தநாள் கொண்டாடிடணும்.

புதுசா எந்தக் குழந்தை வந்தாலும் சரி! பிறந்த நாளைக் கேட்டு, குறிச்சு வச்சுக்குவேன். ஆனா கேக் வெட்டி, புதுத் துணி எடுத்து, பிறந்தநாள் கொண்டாடுற அளவுக்கு எனக்கு மட்டும் வசதி இருக்கா என்ன? அதனால... யாராவது பெரிய மனுஷங்க, அரசியல்வாதிங்க, துணிக்கடைக்கார‌ங்க, தனியார் கம்பெணிங்கன்னு போய், விஷயத்தைச் சொல்லி உதவி கேட்பேன். அவங்களும் 'இல்லை'ன்னு சொல்லாம இன்னிக்கு வரைக்கும் முடிஞ்சதை செஞ்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. பாண்டிச்சேரியில் இருக்கிற எல்லா வி.ஐ.பி.களோடவும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிட்டோம். எங்களோட 125வது பிறந்தநாளை நடிகர் சத்யராஜ் முன்னிலையில் கொண்டாடினோம். அப்பதான் அவர் என்னைப் பாராட்டி ஒரு ரிச்சாவைப் பரிசாக் கொடுத்தார். 200வது பிறந்த நாளுக்கு சூப்பர்ஸ்டார், 225வது பிறந்தநாளுக்கு நடிகர் சரத்குமார், 250வது பிறந்தநாளுக்கு கமலஹாசன்னு எல்லா சினிமாஸ்டார் கூடவும் கொண்டாடி இருக்கோம். இதுவரைக்கும் 1071 பொறந்தநாள் கொண்டாடியிருக்கேன். இனிமேலும் என் மூச்சு இருக்குற வரைக்கும் கொண்டாடுவேன்'' என்கிறார்.

''உங்க ரெண்டாவது மனைவி ரோசி என்ன ஆனாங்க. அவங்களை ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க?" என்றேன்.

''அய்யய்யோ... விட்டுட்டு வரலை சார். போய் கூட்டிட்டு வ‌ந்துட்டேன். திரும்பவும் என் சொந்தக் கதைக்கே வந்துட்டீங்க. மறக்கணும்னு நெனச்சாலும் சொல்லித்தானே ஆகனும். சவாரி, சாப்பாடு அதைவிட்டா பிறந்தநாள்னு சந்தோஷமாத்தான் போய்க்கிட்டிருந்தது வாழ்க்கை. புள்ளைக்குட்டி யாரும் இல்லாததால வீட்ல ரோசி மட்டும் தனியா இருப்பா. அப்படி நான் இல்லாத நேரமாப் பார்த்து ரெண்டு பொருக்கிப் பசங்க அவளை பலாத்காரம் பண்ணியிருக்காங்க. ஏற்கனவே அவ கொழந்தைங்க செத்துப் போன துக்கத்துல மனசொடிஞ்சிக் கிடந்தா. இந்த சம்பவத்தால அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. குழந்தைங்களோட குழந்தையா அவளையும் 27 வருஷமா பாத்துக்கிட்டிருந்தேன். எனக்குன்னு இருந்த சொந்தம் அவ மட்டும்தான். அதையும் மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த சுனாமி, பரிச்சிக்கிட்டுப் போயிடிச்சி. சுனாமி வந்தப்போ நான் சவாரில இருந்தேன். குடிசை கடலோரத்துல இருந்ததா!அலையோட அலையா அவளையும் வாரிக்கிட்டுப் போயிருச்சி. ஆனா அவ சாகலை. விசாரிச்சிப் பாத்தப்ப அவங்க அம்மா வீட்டுப் பக்கம் பாத்ததா சிலபேர் சொன்னாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் திரும்பி வரவே இல்லை. எங்க இருக்கான்னும் தெரியல'' என்றவரிடம்,
''உங்களோட முதல் குழந்தை சார்லஸாவது இருக்கானா? அவனைப் பாத்திருக்கீங்களா?" என்றேன்.

''அவன் மெட்ராஸ்லதான் எங்கயோ இருக்கானாம். அவன் எனக்குப் பிறந்த குழந்தைங்க. என்னைக்காவது என்னைப் பார்க்க வருவானான்னு நான் ஏங்காத நாள் இல்லை. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டாவது அவனைப் பாக்க முடிஞ்சா அதைவிட சந்தோஷம் வேற எதுவும் கிடயாது'' என்கிறார்.

''பிறந்த நாள் மட்டும் தான் கொண்டாடுகிறீர்களா... இல்லை வேறு ஏதாவது சமூக சேவையும் செய்வதுண்டா?"

''ஜான்பீட்டர்னு ஒரு ஊணமுற்றப் பையன். யார் யாரிடமோ உதவி கேட்டு பத்து வருஷமா அவனைப் படிக்க வச்சிருக்கேன். நல்லா படிச்சி கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிட்டான். இப்ப அவனுக்கு கவர்மெண்ட் டூ வீலர் குடுத்திருக்கு. அவன் ஸ்கூட்டர்ல போற அழகைப் பாக்கறதுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? தமிழ்ச்செல்வின்னு ஒரு பொண்ணு. பாவம்! ரொம்ப ஏழை. பேப்பர்ல என்னைப்பத்தி படிச்சிட்டு உதவி கேட்டு வந்துச்சி. 'ஊர் உலகத்துல எத்தனையோ பெரிய மனுஷங்க இருக்கும்போது இந்தப் பொண்ணு நம்ம‌கிட்ட வந்து நிக்குதே!'ன்னு ஒன்னுமே புரியலை. மருந்துக்கு மட்டும் மாசம் 600 ரூபா செலவாகும். அந்த மாதிரி ஒரு பிரச்சினை அந்தப் பொண்ணுக்கு. நிறைய தனியார் கம்பெனிகள்ல போய் நின்னு மொத்தம் ஒன்ரை வருஷம் மருந்து வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஒரு குறையும் இல்லாம நல்லபடியா இருக்கா.

93ல் என் தோள்ல தூக்கிட்டுப் போய்விட்ட சரண்யா! இப்ப ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர். அந்தப் பொண்ணால நடக்க முடியாது. அதேபோல சுகண்யாங்கற பொண்ணுக்கு கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் நடந்திச்சி. அதுக்கு ஆயிரம் சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா, 'தங்களை அன்புடன் வரவேற்கும் ரிக்க்ஷா மாமா'ன்னு இன்விடேஷன்ல எம்பேரப் போட்டுருச்சி. அதப் பாத்த உடனே எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. எனக்குன்னு யாருங்க சொந்தம்? பள்ளிக்கூடம் கூட்டிட்டுப் போனப் பாவத்துக்காக, இந்தப் பொண்ணு பத்திரிகைல பேரைப்போட்டு கவுரவப்படுத்திருச்சே!ன்னு எனக்கு பலநாள் தூக்கமே வரலை'' என்கிறவர்,

''வெள்ளிக்கிழமையானால் போது!, பாண்டிச்சேரியில் இருக்கிற ஜோதி கண் மருத்துவமனைக்கு கிராமத்தில் இருக்கிற ஏழை முதியோர்களை கொண்டு போய்விடுகிறார் ரிக்ச்கா மாமா. டாக்டர் வனஜா வைத்தியநாதன் அவர்களுக்கு ரிக்க்ஷா மாமா சார்பாக இலவச மருத்துவம் பார்த்து அனுப்புகிறார். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏழை ஊணமுற்றவர்களை சென்னை சூளையில் உள்ள 'ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை'க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவர்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்களை வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவது என்று இன்றைக்கும் தொடர்கிறது ரிக்க்ஷா மாமாவின் சேவை.

இந்த ஏழையைச் சார்ந்து நிற்கிற ஏழைகளுக்கு இவர் வெறும் ரிக்க்ஷா மாமா அல்ல. அதையும் தாண்டி அற்புதங்களை நிகழ்த்துபவர். இவரது ரிக்க்ஷாவில் ஏறி இன்றைக்கு ஃபிரான்ஸில் குடியிருக்கும் விண்ணரசி என்ற மாணவி, இவருக்காகவே பாண்டிச்சேரி வந்து ஒரு முழு நீள டாக்குமெண்ட்ரி எடுத்துச் சென்றிருக்கிறார். அது அங்குள்ள பல்வேறு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அரசு நிறுவன‌ங்களாகட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவன‌ங்களாகட்டும்! காக்கா பிடித்து காரியம் சாதிப்பதற்காகவே விருதுகள் வழங்கி, ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விழா நடத்துகிறார்கள். இனிமேலாவது இவர்கள் சவரிநாதன் போன்ற மனிதர்களை இனம் கண்டு கவுரவிக்கட்டும்.

''உறவினர்கள் யாரும் உங்களைத் தேடி வருவதில்லையா?'' என்றால் சவரிநாதன் சொல்கிறார், ''உன் சகோதரனிடத்தில் மனத்தாங்கல் வைத்துக் கொண்டு என்னிடத்தில் வராதே' என்கிறார் ஏசு. அவர்கள் தினமும் கோவிலுக்குப் போகிறார்கள்''.

Wednesday, July 18, 2007

தெருவுல ஓடுற நாயி... இல்லனா பன்னி...எதுனா ஒண்னு போடுங்க!










ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நவீன காலத்தில், நாகரிக சமுதாயத்தில் யாருக்காவது கல்வி மறுக்கப்படுமா என்னசுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தியக் குடியரசில், அரசாங்கத்தாலேயே கல்வி மறுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு. அது வீடு வீடாய் வந்து நிற்கும் குடுகுடுப்பை சமூகம்.


''கூடிய சீக்கிரம் இந்தக் குடும்பத்துல ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது. தெற்கு தெசைல இருந்து நல்ல சேதி ஒண்னு வரும்''

குடுகுடுவென உறுமி ஒலிக்கும் ஒரு சிறிய பம்பை மேளம் (குடுகுடுப்பை). முழுநீளப் புடவையை முடிந்து கட்டிய முண்டாசு, தோளில் ஒரு மாந்திரீகப் பை, கக்கத்தில் ஒரு குடை என்று கெட்டப்பிலேயே ஒரு அட்ராக்ஷன் இருக்கும் குடுகுடுப்பைக்காரர்களிடம்.

'ஆமா...எப்ப வந்தாலும் இதையே தான் சொல்ற! நல்ல காரியம் எங்க நடக்குது? என்று அம்மணிகள் சலித்துக் கொள்வார்கள்.

'நான் சொன்னா வாக்கு சுத்தமா இருக்கும். சந்தேகமிருந்தா கைரேகை பார். இல்லனா ஒலச்சுவடி போட்டுப் பார்'' என்பார்கள்.

'சோஸ்...சியம் ஒன்னுதான் கொறச்சல். ஒனக்கு காசு வேணும்ல... அதான்!”

 மண்டை முழுக்க ஆர்வமிருந்தாலும், என்னமோ அவசியமில்லாததுபோல் வீட்டம்மாக்கள் சாமர்த்தியம் காட்டுவார்கள்.

''சொல்றன்னு தப்பா நென்சிக்காத! ஒரு சிறுக்கியோட பார்வ இந்த ஊட்டு மேல விழுந்துருச்சி. அவ உள்ள வந்த நேரம் தீட்டானதால, எல்லாமே உனுக்கு வெட்டி, வெட்டிப் போவுது''

மன நிலைக்குத் தக்கபடி டயலாக்கை மாற்றுவார்கள் குடுகுடுப்பைகள்.

நான் நெனச்சேன். அவ பார்வையே செரியில்லாமதான் இருந்துதுஎன்று எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் நம் பெண்கள், “சரி, இன்னாதான் அதுக்குப் பரிகாரம்'' என்று பணிவார்கள்.

ஒரு வகையில் கிராமப்புற மக்களுக்கு இது உளவியல் மருத்துவமாக அமைகிறது. 'ப்பூ...' என்று விபூதியை முகத்தில் ஊதி விட்டாலே, பாதி பிரச்சினை பறந்துவிடும். இப்போது கிராமம் முழுக்க கரண்ட் வசதி வந்த பிறகு பேய் பிசாசுகள் அனைத்தும், போன மாயம் தெரியவில்லை. அப்படியிருக்க இம்மாதிரியான நம்பிக்கைகளைச் சார்ந்து வாழ்ந்த குடுகுடுப்பை மக்களுக்கு இன்று வயிற்றுப்பாடே பெரும் பிரச்சினையாகிவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது ஆலத்தூர் கிராமம். இதை ஒரு குடுகுடுப்பை கிராமம் என்றே சொல்லலாம். சுமார் ஐம்பது குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன.

அங்கே போனதுதான் தாமதம், bike-கை சூழ்ந்து கொண்டு, 'கையா, முய்யா'வென ஒரே கூச்சல். "... போட்டோக்கார், போட்டோக்கார்" என்று காமிராவைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.

"தொழில்லாம் எப்படிப் போவுது" என்றேன்.

"எங்க சார்! குடுகுடுப்ப அடிச்சி வாசல்ல போய் நின்னா, 'ஏன் கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு. ஒழச்சி சம்பாதிக்க வேண்டியது தானே.எதுக்கு இப்படி பிச்சை எடுக்கனும்'னு அசிங்கப்படுத்துறாங்க. எங்களுக்கும் உங்கள மாதிரி கவுரவமா வாழனும்னுதான் ஆசை. ஆனா படிப்பு இல்ல, வேற தொழிலும் தெரியாது. இனா பண்றது?" என்று வருத்தப்படுகிறார்கள்.

"தொழில் இன்னாங்க தெரியனும்? ஏதாவது ஆடு மாடு வச்சிப் பொழச்சுக்கலாமே?" என்றால்,

"ஏன் சார்! எங்க ஊட்டு பொம்பளிங்கோ, மானம் மரியாதையா இருக்குறது உனுக்குப் புடிக்கலியா? நீங்க சொல்றா மாதிரி நாங்களும் ஆடு, மாடுங்க வச்சிருந்தோம். தோ கீறானே அய்னாரு. இவம் ஊட்ல மட்டும் அம்பது ஆடுங்க இருந்திச்சி. மேச்சலுக்கு எல்லா ஜாதி ஆடு, மாடுங்க போவலாம் சார். ஆனா எங்க ஆடுங்க போவக்கூடாது. மீறிப் போய்ட்டா போதும்.

'குடுகுடுப்பக்காரனுக்கு குடுத்தனக்காரன் மேரி ஆடு மாடுங்க கேக்குதா. ஒழுங்கா ஆட்ற (குடுகுடுகுடுப்பையை ஆட்டுவது) வேலைய மட்டும் பாருங்க. இல்லனா உம் பொண்டாட்டி, பொண்ணுஙகள நாங்க ............ ஆட்டிருவோம்'னு எங்களை அசிங்கசிங்கமாப் பேசுவாங்க.

இந்த ஆடு மாடுங்களாலதானே நம்பூட்டுப் பொம்பளங்கிள, கண்டவன் கண்டபடி பேசுறான். அதனால பஞ்சாயத்தக் கூட்டி, மொத்தமா எல்லா ஆடு, மாடுங்களையும் வித்துட்டோம். நாங்க நாதியத்த ஜாதியாப் போய்ட்டோம் சார். எதுத்துக் கேட்டா ஊடேறி வந்து அடிப்பாங்க. எல்லாம் தலவிதின்னு போவவேண்டியதுதான்.”

உங்களுக்குத்தானேங்க படிப்பு இல்ல. உங்க புள்ளைங்கள படிக்க வைக்கலாமில்ல?”

எங்க சார் படிக்க உடுறாங்க? ஜாதி சர்டிபிகேட் இருந்தாத்தான் படிக்க முடியுமாம். 'அது இல்லனா படிக்க வராத'ன்னு சொல்றாங்க. நாங்களும் எவ்ளவோ போராடிப் பாத்துட்டம் சார். எங்களுக்கு சிபாரிசு பண்ணக்கூட யாரும் இல்ல. கவுன்சிலரப் போய் கேட்டா, 'நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ! அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றாரு.

ஆனா, நாங்க ஒரு ஆள் தவறாம ஓட்டுப் போட்டோம் சார். ஒதவிக்கின்னு யாரும் இல்ல. நீங்களாவது பேப்பர்ல போட்டீங்கன்னா எதுனா நல்லது நடக்கும்னு எதிர்பாக்குறோம்.”
ஏதோ, நம்பிக்கையில் கேட்கிறார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று வெள்ளை நிறம், கொள்ளை அழகுடைய இம்மக்களின் பூர்வீகம், மகாராஷ்டிரா. தாய் மொழியாக மராட்டி பேசுகிறார்கள். என்றாலும் பிற மொழி கலப்புகளும் நிறைந்துள்ளன. தக்காளி - தக்காளிதான். மராட்டி மறந்து போய்விட்டதாம்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனித்த அடையாளம் இருப்பதைப்போல, இவர்களுக்கும் ஏதாவது இருக்க வேண்டுமல்லவா!

"உங்களுக்குன்னு ஏதாவது ஸ்பெஷலா பாட்டு, டான்ஸ்னு தனியா இருக்குதா? திருவிழா, இல்லனா கல்யாணத்துல ஆடிப்பாடுற மாதிரி..?" என்றேன்.

இருக்குதே! 'என்னம்மா தேவி ஜக்கம்மா... ஒலகம் தலகீழா சுத்துது நியாயமா' தம்பி படத்துல மாதவன் பாடுவாரே! அதான் சார் எங்க பாட்டு'' என்கின்றனர் அப்பாவியாக.

இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

தாங்கள் எப்படி குடுகுடுப்பைகாரர்கள் ஆனோம் என்பதற்கு ஒரு கதை சொல்கிறார் ஊர்த் தலைவரான அர்ச்சுனன்.  

''எல்லாரோட பொழப்புக்கும் ஒவ்வொரு தொழிலா வரம் குடுத்துட்டு இருந்தாராம் ஈஸ்வரன். கடைசியிலதான் விஷயம் தெரிஞ்சி ஓடியிருக்காங்க எங்காளுங்க. ஏம்பா இவ்ளோ லேட்டா வர்ரீங்க. எல்லா வரத்தையும் குடுத்து முடிச்சிட்டேனே! இப்ப இன்னா பண்றது?ன்னு யோசிச்சாராம்.

இந்தா இது ஒன்னுதான் பாக்கி இருக்குதுன்னு சொல்லி, சூலத்துல கட்டியிருக்குமே பம்ப உடுக்க, அத எடுத்து கைல குடுத்துட்டாராம். 'இத வச்சி ஊர் ஊரா உடுக்க அடிச்சி, அங்க இருக்குற காத்துக் கருப்பு, பேய் பிசாசுங்கள எல்லாம் வெரட்டி அடிங்க. ஊர் ஜனங்களுக்கு நல்ல வாக்கு சொல்லி, அவங்க குடுக்குறத வாங்கி குடும்பம் நடத்துங்க'ன்னு சொன்னாராம். இதப் பாத்தீங்களா! அதே உடுக்கதான். சைஸ் மட்டும் சின்னதா இருக்கும்'' என்றபடி குடுகுடுப்பையை அடித்துக் காட்டுகிறார்.

இங்கு வசிக்கும் 16 வயது அமிர்தவள்ளிக்கு, ஏகப்பட்ட பள்ளிக்கூடக் கனவு.
நீலம், வெள்ளையில் பாவாடை தாவணி கட்டிக் கொண்டு மற்ற சாதிப் பெண்கள் பள்ளிக்கூடம் சென்று வரும் அழகை, வைத்த கண் வாங்காமல் பார்ப்பாராம். ஒரு வேளை, பள்ளிக்கூட படியேறி இருந்தால் அமிர்தவள்ளியின் அழகுக்கு எல்லா சாதி இளவரசர்களும் கியூவில் நின்றிருப்பார்கள். ஆனால், நிறைவேறாத பள்ளிக்கூடக் கனவுகளுடன் அமிர்தவள்ளிக்கு திருமணமாகிவிட்டது.

அமிர்தவள்ளிக்கு இருக்கிற பள்ளிக்கூடக் கணவு அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் இங்கே இருந்து தொலைக்கிறது. ஆனால், ஒருவர்கூட படித்ததாகத் தெரியவில்லை. 'ஆம்பளைங்க குடுகுடுப்பை அடிக்கக் கிளம்பிட்டாங்கன்னா, நாங்க சுறுக்குப் பை விக்கப் போயிடுவோம். டைலர் கடையில வெட்டிப் போடுற துணிய வச்சித்தான் பை தைக்கிறோம். நாள் முழுக்க வித்தாலும் பத்து ரூபா தேர்றதே கஷ்டம்'' என்கிறார்கள் அங்குள்ள பெண்கள்.

'எங்க தாத்தா காலத்துலர்ந்து ஆலத்தூர்லதான் சார் குடும்பம் நடத்துறோம். மெட்ராஸ், விழுப்புறம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை'ன்னு நாலு மாவட்டங்கள்ளயும் சேத்து இருவது கிராமங்களுக்கு மேல எங்க ஆளுங்க இருக்காங்க.

காஞ்சிபுரம் திருப்பத்தூர்ல (அநேகமாக இது வேலூர் மாவட்டம் திருப்பத்தூராக இருக்கலாம்) எங்காளுங்க சில பேருக்கு ''இந்து கணிக்கர்'னு சர்டிபிகேட் குடுத்திருக்காங்க. நாங்க இருக்குற நெலமைக்கு எஸ்.டி சர்டிபிகேட் குடுத்தா நல்லா இருக்கும்'னு சொல்றாங்க. அது முடியலைன்னாகூட பரவாயில்ல சார். 'இவுங்க, தெருவுல ஓடுற நாயி, பன்னி' அப்டின்னு, எதுனா ஒண்ணு போட்டுக்குடுங்க சார். எங்க புள்ளங்க படிக்கனணும்னா சர்டிபிகேட் வேணும்என்கிறார் அய்யனார் என்பவர்.

நாலு ஊட்டு அரிசிய, ஒரு பிடி போட்டுப் பொங்கிப் பாருங்க. நாலு கலர்ல சோறு இருக்கும். அதுவும் சின்னதும் பெருசுமா இருக்கும். எத்தினி நாளைக்குத்தான் பிச்சை எடுத்தே சோறு துன்றது? எங்களுக்கும் உங்களப் போல ஒழச்சி சம்பாதிக்கணும்னு ஆச இருக்காதா? ஆனா, வழி தெரியிலயேஎன்கிறார் முருகன் என்பவர்.

'எல்லா ஊர்லயும் மகளிர் சங்கம் வச்சி இன்னாலாமோ பண்றாங்க. ஆனா, எங்கள யாரும் வந்து எட்டிப் பாக்குறதில்ல. எதுனா ஒரு கைத்தொழில் கத்துத் தந்தா இந்த சுறுக்குப் பைய்ய உட்டுக் கடாசிட்டு வேற தொழில் பாப்போம்' என்று கேட்கின்றனர் பெண்கள்.

வாழ்க்கை முறைப பற்றி விசாரித்தபோது வாயைப் பிளக்கு அதிசயம் ஒன்று தெரிந்தது. அது, அவர்கள் வரதட்சனை வாங்குவதே இல்லை என்பது.

வஜ்ஜடா, வஷ்டோர், முத்திரிஜோர், தொர்கோர், ஜவான், பஹங்கோத், சசானா அப்டீன்னு எங்கள்ள மொத்தம் ஏழு ஜாதிங்க. நீங்க முதலியார், செட்டியார்னு சொல்லிக்கிலையா! அப்படித்தான். இன்னா ஒண்ணு, நீங்க ஜாதி உட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க. நாங்க ஒரே ஜாதில பண்ணிக்க மாட்டோம். அதான் வித்தியாசம்.

வஜ்ஜடா, வஷ்டேர்ல பொண்ணு கட்டுவான், தொர்கோர், முத்திரிஜோர்ல பொண்ணு கட்டுவான். இங்க வரதட்சனையும் வாங்கக்கூடாது, பொண்டாட்டியையும் கைநீட்டி அடிக்கக் கூடாது. எல்லாரும் கட்டு திட்டங்களை மதிச்சி நடக்கனும். அம்பது ஊடுங்களயும் தெறந்து போட்டுட்டு போனாலும் ஒரு சின்ன திருடு கூட போவாது.

அப்டி ஏதாவது பிரச்சினைன்னா தலைவர்கிட்ட சொல்லிறணும். அவர் பஞ்சாயத்தைக் கூட்டி , சாட்சிங்கள விசாரிச்சுட்டு தீர்ப்பு சொல்வாரு. இன்னிக்கு வரிக்கும் ஒரு தப்பான தீர்ப்பு வந்ததில்ல'' என்று பெருமையோடு கூறுகின்றனர்.

மார்வாடிகளும், நரிக்குறவர்களும் இவர்களின் சகோதரர்களாம், சொல்கின்றனர். முறையாக கவுன்சிலிங் கொடுத்து, பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் இவர்களை சமுதாயத்தில் ஒருவராய் மாற்றுவது மிகச் சுலபம். ஏனென்றால், முண்டாசை வீசி எறிந்துவிட்டு படிக்கவும் உழைக்கவும் தயாராய் இருக்கிறார்கள் இம்மக்கள்.

 ''நீ என்ன சாதி என்றோ, உனக்கு சாதியே இல்லை என்றோ கூறி அவமானப்படுத்துதோடு மட்டுமல்லாமல் சட்டப்படியே கல்வியை மறுப்பது எவ்வளவு அக்கிரமம்''.

அய்யனார் கேட்பது போல ''இது தெருவுல ஓடுற நாயி, பன்னி'' என்றாவது போட்டுக்கொடுங்கள். அவர்களின் பிள்ளைகளாவது படிக்க, ஒரு சாதிச் சான்று தேவை.