Saturday, November 8, 2008

"தாலியறுத்த போலீஸ்! வேடிக்கை பார்த்த நீதிமன்றம்!"

வனிதா அப்படிச் செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘‘புருஷனே இல்ல! அவரு கட்ன தாலி மட்டும் எதுக்கு?’’ -ஆவேசமாய் கேட்டபடி ‘படக்’கென்று தாலியை அறுத்து நீதிமன்றத்தில் எறிந்தார். 

நீதிபதிகள் வாயடைத்துப் போயினர். வழிந்த கண்ணீருடன் அங்கிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, ‘‘நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க. எம் பொண்ணுங்க பாவம் உங்களைச் சும்மா விடாது. நாசமாப் போய்டுவீங்க’’ கையை விரித்து மண்னை வாரி இறைப்பதுபோல் வனிதா விட்ட சாபத்தால் கோர்ட்டே நிலை குலைந்தது.

கோர்ட் கலைந்ததும் அங்கேயிருந்த மனுநீதிச் சோழன் சிலையருகே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார் வனிதா. கையில் மூன்று குழந்தைகள். பட்டினிக் கொடுமை, மூன்று குழந்தைகளின் முகத்திலும் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூத்தவள் வர்ஷாவுக்கு ‘வயது ஐந்து’ என்றாலும் அதற்கான வளர்ச்சி இல்லை. மொட்டை அடிக்கப்பட்டிருந்த லாவன்யாவுக்கும் ஹேமாவதிக்கும் முறையே மூன்று, இரண்டு வயதுகள். ஊட்டச்சத்து இல்லாமல் அக்குழந்தைகளின் தலை, கொஞ்சம் பெரிசாக இருந்தது. இன்று அவர்கள் யாருமற்ற அநாதைகள்.

ஏன்?

‘‘அத்தனைக்கும் காரணம் ரெண்டு போலீஸ்காரங்கதான்’’ என்கிறார் வனிதா. அழுது வற்றிய கண்களுடன் தன் சோகத்தை இங்கே விவரிக்கிறார்.

‘‘எங்க ஊட்டுக்காரர் பேரு சத்தியசீலன். நாங்க ஏழுமகளூர்ல குடியிருந்தோம். அது நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவுல இருக்கு. போன வருஷம் ஜூன் மாசம். வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் டீக்கடைல உக்காந்திருந்தவரை, கூட வேலை பாத்தவங்க சாராய பாக்கெட் வாங்கியாரச் சொல்லியிருக்காங்க. அவரு கிளம்பிப் போனதும், ஆல்பா டீம்(சாராய தடுப்புப் பிரிவு) எஸ்.ஐ நாகராஜூம், பெரம்பூர்(நாகை) ஏட்டு உத்திராபதியும் மஃப்டில டீக்கடை பக்கமா வந்திருக்காங்க. இவரு சாராயம் வாங்கிட்டு திரும்பி வரும்போது போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க.

டீக்கடை வாசல்ல எஸ்.ஐயும் ஏட்டும், எங்க ஊட்டுக்காரர் வேட்டியை உருவிட்டு வெறும் ஜட்டியோட, நடு... ரோட்ல மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்காங்க. கீழே விழுந்தவரை நெஞ்சிலயும், மாருலயும் எட்டி உதைச்சிருக்காங்க. அவர் மயக்கம் போட்டு விழுந்திருக்காரு. அதைப்பாத்துட்டு, ‘என்னமா நடிக்கிறாம் பாரு?’ன்னு சொல்லிக்கிட்டே தண்ணியை மொண்டு அவர் மேல ஊத்தியிருக்காங்க. கண் முழிச்சுப் பாத்தவரை முடியைப் பிடிச்சுத் தூக்கி, ‘வேலங்குடியில சாராயம் விக்கிறவன் யாரு? வந்து ஆளைக்காட்டு’ன்னு சொல்லி டூவீலர்ல கூட்டிட்டுப் போயிருக்காங்க. இதையெல்லாம் வேடிக்கைப் பாத்த ஜனங்க எங்கிட்டச் சொன்னதும், நான் பெரம்பூர் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

அப்போ, ‘இது நம்ம போலீஸ் இல்லை. ஆல்பா எஸ்.ஐ’ன்னு போலீஸ்காரங்க ரகசியமா பேசிக்கிட்டாங்க. பிறகு என்னைக் கூப்பிட்டு, ‘இந்தாம்மா எல்லா எடத்துலயும் பாத்துக்க. உன் புருஷன் எங்க ஸ்டேஷன்ல இல்லை’ன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே ஸ்டேஷன்ல எங்க வீட்டுக்காரர் இல்லை.

‘போலீஸ் அடிச்சதால, அசிங்கப்பட்டுகிட்டு எங்கயாவது ஓடிப்போயிருப்பான். நீ வீட்டுக்குப் போன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ரெண்டு நாளாகியும் புருஷன் வீட்டுக்குத் திரும்பலை. உடனே ‘அவரைக் கண்டுபிடிச்சிக் குடுங்க’ன்னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்தேன். ‘எடுத்துக்க மாட்டோம்’னு சொல்லிட்டாங்க.

அப்பதான், விடுதலைச் சிறுத்தைங்க வந்து எங்க வீட்டுக்காரரை ஒப்ப்டைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. அவங்க மூலமா ஆர்.டி.ஓ.கிட்ட கம்ளென்ட் கொடுத்தோம். அவங்க, ‘சத்தியசீலன் உயிரோடதான் இருக்கார். பணம் புடுங்கறதுக்காக இந்தம்மா டிராமா போடுறாங்க’ன்னு எம்மேலயே புகார் சொன்னாங்க. பிறகு ‘போலீஸ் உண்மையை மறைக்குது’ன்னு சி.பி.ஐ விசாரனை கேட்டோம். விஷயம் பெரிசானதும் எஸ்.ஐ., ஏட்டு ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.

யாரை சஸ்பென்ட் பண்ணி என்ன ஆவப்போகுது? என் புருஷன் உயிரோட வரணுமே! ‘இனி போலீஸை நம்பி பிரயோஜனமில்லை’ன்னு இதே ஐகோர்ட்ல போன 2007, செப்டம்பர் மாசம் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டோம். நீதிபதி அதை படிச்சிப் பாத்துட்டு, ‘இந்தக் கேஸை டி.எஸ்.பி. விசாரிக்கணும்’னு சொல்லி உத்தரவு போட்டார். ஆனா, டி.எஸ்.பி. விசாரிக்கவே இல்லை.

‘‘எம்புருஷன் இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார்’ணு எத்தனை நாளைக்கு காத்திருப்பது? அவரைக் கண்டு பிடிச்சிக் கொடுக்கலைன்னா இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்னு எஸ்.பி. ஆஃபீஸ்லயே தர்ணா பண்ணி உக்காந்துட்டேன். எம் புருஷனை கண்டுபுடிச்சிக் குடுக்காத போலீஸ்காரங்க, ‘நான் ரகளை பண்றேன்’னு சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. குழந்தைக்கு பால் வாங்கக்கூட காசில்லாத நான், ஜாமீன்ல வர்றதுக்கு பட்டக் கஷ்டம் இருக்கே...’’ அதற்கு மேல் பேச முடியாமல் ‘ஓ...’ வென்று சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார் வனிதா.

வனிதா அழுவதைக் கேட்டு குழந்தைகளும் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். கோர்ட்டுக்கு வந்திருந்த சில பெண்கள்தான் வனிதாவைத் தேற்றி ஆறுதல்படுத்தினர். இந்த களேபரத்துக்கிடையில், நான்கு தயிர் சாதப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி அங்கே வந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த். சாதத்தை வனிதா மற்றும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தவரைக் கூப்பிட்டுப் பேசினேன்.

‘‘சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அப்பாவிகளைக் கொடுமைப்படுத்துவதே சில போலீஸ்காரர்களுக்கு கடமையாய் இருக்கிறது. சாராயம் விற்றவனை விட்டுவிட்டு, வாங்கிவந்தவனை பிடித்துச் சென்றுள்ளனர். சரி, பிடித்தார்களே வழக்குப் பதிவு செய்தார்களா? என்றால், அதுவும் இல்லை. கணவனை கண்டுபிடித்துத் தரச்சொல்லி வனிதா கொடுத்த புகாரை பதிவு செய்யாத காவல்துறை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எஸ்.ஐ. நாகராஜிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு ‘சத்தியசீலன், டூவீலரில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டதாக’ எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் வனிதாவின் ஆட்கொணர்வு மனு விசாரனைக்கு வந்தபோது,  

‘சத்தியசீலன் தப்பியோடிவிட்டதாக’ வாய்வழி வாக்குமூலம் அளித்த நாகராஜும் உத்திராபதியும், எழுத்து மூலம் அளித்த பதில் மனுவில், ‘சத்தியசீலனை ஊர் முக்கியஸ்தர்களிடம் ஒப்படைத்ததாக’ முன்னுக்குப் பின்னாய் உளரிச் சென்றுள்ளனர்.  

விசாரனை அதிகாரியான டி.எஸ்.பி.யும் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாறாக கணவனை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணை சிறையில் அடைத்திருக்கிறார்.

இப்போது சத்தியசீலன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா? அநாதையாக்கப்பட்ட அவரது குடும்பத்துக்கு யார் பொறுப்பு? என்பதுதான் கேள்வி. ‘போலீஸார் அடித்ததில் படக்கூடாத இடங்களில் பட்டு சத்தியசீலன் இறந்திருக்கக்கூடும். அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு, ஓடிப்போய்விட்டதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே வனிதாவுக்கும் அவரது மூன்று குழந்தைகளுக்கும் நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்’’ என்றார் எரிச்சலுடன்.

செப்டம்பர் 29-ம் தேதி நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பெரியகருப்பையா ஆகியோர் முன்பு விசாரனைக்கு வந்த இவ்வழக்கின்போது, டி.எஸ்.பி.யின் அறிக்கை திருப்தியளிக்கவில்லை என்று கூறியவர்கள், சத்தியசீலன் குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். 

இதையடுத்து கடந்த அக்டோபர் 15-ம் தேதி நீதிபதிகள் எலிட் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி சத்தியசீலனை போலீஸார் ஒப்படைக்காததால் இப்போது டி.ஜி.பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

‘‘மனித உரிமைகளை மீறக்கூடாது’’ என்று நீதிமன்றங்கள் காது கிழிய கத்தினாலும், போலீஸார் அதைக் கேட்பதில்லை. அப்பாவிகளை அவர்கள் அடிக்கிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

விடைபெறும் வேளையில் வனிதா நம்மிடம் கேட்கிறார். ‘‘அண்ணே... எங்க வீட்டுக்காரர் உயிரோட வந்துடுவாரா? குழந்தைங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னே! ‘பசிக்குதுமா...!’ன்னு வயித்தைப் புடிச்சிக்கிட்டு புள்ளைங்க துடிக்கிறப்போ, ‘மூணுத்தையும் கொண்ணுட்டு தற்கொலை பண்ணிக்கலாமா!’ன்னு தோணுது.’’

இது, காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் தெரியணுமே!

Wednesday, November 5, 2008

‘‘மந்திரத்தால் மழை! தொடாமலே உடலைக்கீறி ஆபரேஷன்!’’ -இந்தோனேஷிய பயங்கரவாதம்.

‘‘மாசம் பதினஞ்சாயிரம் கொடுத்தாப் போதும். பருவமழை பிச்சிக்கிட்டு கொட்டும்’’ -இப்படியாக‌ சுமார் ஏழு மாதங்களுக்கு ‘மழைச் சித்தர்’ பாலகிருஷ்ணன் என்பவர் ஊர் ஊராய் கப்சா விட்டுக்கொண்டு அலைந்தார்.

‘‘இதெல்லாம் என்ன சார் மேஜிக்? இந்தோனேஷியா போய்ப் பாருங்க. மழை மேகம் ‘வா’ன்னா வரும். ‘போ’ன்னா போகும். ரிப்பேராகிப்போன உங்க வீட்டு கார், ஸ்கூட்டர், லாரி, பஸ் எதுவா இருந்தாலும் ஒரு ‘சூ மந்திரக்காளி’ போட்டா, பக்காவா ரெடியாகிடும். கத்தியில்லாம வெறுங்கையால ஆளையே தொடாம ஆபரேஷன் பண்ணுவாங்க’’ என்று தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அம்மணி ஒருவர்.

‘‘பிசினஸ் விஷயமா பத்து வருஷங்களுக்கு மேலாக நான் குடும்பத்தோடு இந்தோனேஷியாவில் வாழ்ந்திருக்கேன். அது ஒரு முஸ்லிம் நாடுன்னாலும் பண்டைய பாரதத்தின் இந்துக் கலாச்சாரம் இன்னமும் அங்கே இருக்கு. வியாபாரத்துக்காக குஜராத்தில் இருந்து சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்த மன்னர்களை முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்று, மக்களும் முஸ்லிமாக மாறியிருக்கிறார்கள். ஆனால், அவர்ளின் நம்பிக்கை மாறவில்லை. அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்களைப் போலவே செத்துப் போனவர்களுக்கு நீத்தார் கடன் செய்கிறார்கள். வெத்திலைப் பாக்கு, ஊது பத்தி ஏற்றி உறவினர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள்’’ என்று சின்ன முன்னுரை கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இந்தோனேஷியா ஒரு வளமான பூமி. அடிக்கடி அங்கே மழை பெய்றதால விவசாயம், பொது நிகழ்ச்சி எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருக்கும். கல்யாணம், பொதுக்கூட்டம், அரசு விழாக்கள், கோயில் விழாக்கள்னு மக்கள் கூடுகிற எந்த விஷேஷமா இருக்கட்டும். மழை வரும்ங்கிற சந்தேகம் இருந்தா, காசு கொடுத்து ‘பவன் ஹூஜான்’(bavang hujan) என்கிற மந்திரவாதிகளைக் கூட்டி வருவாங்க.

புகையிலை, கிராம்பு ஏற்றுமதிதான் அந்நாட்டின் முக்கியத் தொழில். கிராம்பை வைத்து ஸ்பெஷலாக வாசனை சிகரெட்டுகளை தயார் செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவடையின்போது மழை பெய்துவிட்டால், லட்சக் கணக்கில் நஷ்டமாகிவிடும். எனவே குறைந்த கூலி வாங்கிக் கொண்டு மழையை விரட்டியடிப்பது ‘பவன் ஹூஜான்’கள்தான். இவர்கள், சம்பவ இடத்தில் மந்திரங்களை ஓதி முதலில் தூய்மை படுத்துவார்கள். பிறகு வானத்தை நோக்கி கண்களைச் சுழற்றியபடி கைகளை அகல விரித்துத் தள்ளுவார்கள். என்ன ஆச்சர்யம்! திரண்டிருக்கும் மேகங்களெல்லாம் மிரண்டு ஓடிவிடும். இவையெல்லாம் நான் பார்த்து அனுபவித்த விஷயங்கள்’’ என்றவர், ஸ்பெஷலாக இந்தோனேஷிய டீ ஒன்றை எனக்காக போட ஆரம்பித்தார்.

அவர் சொல்வதை மெய்ப்பிக்கும் விதமாக, பி.பி.சி செய்தியாளரான ‘ரேச்சல் ஹார்வி’ 2003&ம் ஆண்டு இந்தோனேஷியாவில் தான் சந்தித்த ‘அபா ஹாஜி ஒதாங்’(aba haji otang) என்கிற 84 வயது ‘பவன் ஹூஜான்’ பற்றி இப்படிக் கூறுகிறார்.‘‘அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. லேசான இடியின் ஓசை வானத்திலிருந்து இறங்கும் நேரம், பவன் ஹூஜான் தன் மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்தார். அவரது பிரகாசமான கண்கள் வானத்தை உற்று நோக்கின. அகல விரிந்த அவரின் கைகள் மேலெழ, மெல்லிய குரலில் அரபு மொழியில் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். பருவநிலையும், பிராத்தனையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். வேகமாக வீசத்தொடங்கிய காற்று, மேகங்களால் இருண்டிருந்த வானத்தை வெள்ளையடிக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் பெய்து கொண்டிருந்த மழை முற்றிலும் நின்றுவிட்டது. ‘பார்த்தாயா! இப்போது ஜகார்த்தாவில் இருந்து அறுபது கி.மீ தள்ளியிருக்கும் ‘பாந்தங்’ நகருக்கு மழையை நகர்த்திவிட்டேன்’. -ஹாஜி என்னைப் பார்த்து பெருமையாக இப்படிச் சொன்னார்.

என்ன செய்ய? சில நிமிடம் கழித்து, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நான், ‘பவன் ஹூஜாங்கின் பிரார்த்தனையைக் குலைத்துவிட்டதாக’ மக்கள் பேசிக் கொண்டார்கள். விடைபெறும்போது ஹாஜி என்னிடன் சொன்னார். ‘இந்த வாரம் கடற்படையில் பிரிவுபசார நிகழ்ச்சி ஒன்றுக்காக மழையைத் தள்ளிவைக்கப் போகிறேன். அன்று என்னோடு வருகிறாயா?’.
-சூடான டீயுடன் வந்த அம்மணி, அடுத்த அதியசத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
‘‘கெதோக் மேஜிக்’(ketok magic)னு இந்தோனேஷியா முழுக்க பளிச்னு போர்டு மாட்டிய கடைகள் இருக்கும். அவ்வளவும் நம்மூர் மெக்கானிக் ஷெட்கள் மாதிரி. ஆனா, மெக்கானிக்கும் இருக்க மாட்டார், டூல்சும் இருக்காது. பதிலாக மந்திரவாதி இருப்பார். எங்கயாவது சுவத்துல மோதிட்டோம், இன்டிகேட்டர், சேஃப்டி கார்ட் மாதிரியான பொருட்கள் உடைஞ்சிட்டுதுன்னா அங்கிருக்கிறவங்க நேரா ‘கெதோக் மேஜிக்’தான் போவாங்க. ஒரு நாள் எங்களோட டிரைவர் காரை சுவத்துல மோதிட்டார். இதனால சேஃப்டி கார்ட், ஹெட் லைட்ஸ் எல்லாம் உடைஞ்சிட்டது. குறைஞ்சது பத்தாயிரமாவது செலவு ஆகும். ஆனா, ‘கெதோக் மேஜிக்’ போனா ரெண்டாயிரத்துல முடிச்சிடலாம்’னு ஆலோசனை சொன்னார் டிரைவர். நம்பிக்கையில்லை என்றாலும் ‘சரி பார்ப்போம்!’னு கிளம்பிப் போனேன். அங்கே காலியான ஒரு இடம் மட்டுமே இருந்தது. அதற்குள் காரை விட்டுவிட்டு எங்களை வெளியேபோகச் சொல்லிட்டார் மெஜிசியன். என்ன ஆச்சர்யம்! கொஞ்ச நேரம் கழிச்த்து வந்து பார்த்தால், ‘இடிபடுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் கார் வெளியேவந்திருந்தது. நமக்கு இதெல்லாம் பிரமிப்பாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்’’ என்றவர், மேலும் ஒரு புதிய திகில் கதையைச் சொன்னார்.‘‘இந்தோனேசியாவுக்கு நடுவில் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட ‘தோமாக்’னு ஒரு தீவு இருக்கு. பெரிய பெரிய கப்பலெல்லாம் அதுல போகும். அந்தத் தீவுல இருக்கிற கடைகள்ல ஆளுங்க யாருமே இருக்க மாட்டாங்க. நமக்கு ஏதாவது பொருள் வாங்கணும்னா, பக்கத்துல இருக்கிற ஓனர் வீட்டுல கதவைத் தட்டி வேண்டியதை வாங்கிக்கணும். ‘யாரும்தான் இல்லையே! திடுடிட்டுப் போய்டலாம்னு கடையில கையை வச்சோம்னா, கொஞ்ச நாள்லயே செத்துப் போய்டுவோம். அந்தளவுக்குத் தீவு முழுக்க மந்திரக் கட்டு பண்ணி வச்சிருக்காங்க’னு எல்லோரும் பயமுறுத்தினாங்க.

ஃபிரன்ட் ஒருத்தரை துனைக்கு அழைச்சிட்டு, நானும், என் மகனும் ‘தோமாக்’ கிளம்பினோம். ‘பிரபாத்’ங்கிற இடத்திலிருந்து கப்பல்லதான் ‘தோமாக்’ போயாகணும். ஆட்களை கூட்டிட்டுப் போக மூன்று மாடிக் கப்பல் ஒண்ணு காத்திருந்தது. சொன்னா நம்புவீங்களா? யாரும் வரலைங்கிறதால மூணு மாடிக் கப்பல்ல நாங்க மூணே பேர்தான் தீவுக்குப் போனோம். அந்தளவுக்கு அங்கே டீசல் விலை குறைவு.

எல்லாரும் சொன்ன மாதிரியே கடையெல்லாம் திறந்து கிடந்தது. அங்கே வசிக்கும் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறவர்களாக இருந்தார்கள். யாருக்காவது உடம்புல நோய் வந்தா ‘இபு ஜாமு’ங்கிற பெண் மருத்துவச்சிகள்தான் வைத்தியம் பார்ப்பாங்களாம். வெறும் கையினால் தொடாமலே உடம்பைக் கீறி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஆபரேஷன் செஞ்சிட்டு, பிறகு காயமே இல்லாமல் மூடிவிடுவார்கள்’ன்னு அங்கிருந்தவங்க சொன்னாங்க. என்னால் அதை நேர்ல பார்க்க முடியலையேங்கிற வருத்தம் இருந்துச்சு. அங்கிருந்தபோது, ‘மந்திரக்கட்டு நம்பளை ஏதாவது செஞ்சிடுமோ!’ங்கிற பயத்தோடவே நாங்க ஜகார்த்தாவுக்கு திரும்பி வந்தோம்’’ &படபடப்பாய்த் தன் அனுபவங்களைச் சொல்லி முடித்தார் அம்மணி.

இப்போ நமக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு.
1. பீரோ புல்லிங் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க தோமாக் தீவின் மந்திரக்கட்டு ஆசாமிகளை நம்மூருக்கு அழைத்து வரலாம்.
2. ‘கெதோக் மேஜிசியன்’களை கூட்டிவந்து கார், பைக்கை ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
3. முக்கியமாக, எப்பாடு பட்டாவது ‘பவான் வூ§ஜான்’களை கூட்டி வந்துவிட்டால் காவிரிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-என்ன கரீட்டா...?