Saturday, January 13, 2007

அம்மு என்கிற விபச்சாரியும், இமேஜ் பார்க்கிற நடிகைகளும் -இயக்குநர் ப‌த்மாம‌க‌ன்.








அம்முவாகிய நான்'' படத்திற்காக நடிகை பாரதிக்கும், பார்த்திபனுக்கும் மரக்காணம் அருகே ஆலம்பரைக் கோட்டையில் ரொமான்ஸ் நடந்து கொண்டிருந்தது. ''இது 'அம்மு' என்கிற விலை மாதுவின் சுயசரிதையா?'' என்றேன் படத்தின் இயக்குனர் பத்மாமகனிடம்.

''இது அம்மு என்பவளின் சுயசரிதையும் இல்லை, தனிப்பட்ட ஒருத்தியின் சுயசரிதையும் இல்லை. சிவப்பு விளக்கைப் பற்றி இதுவரை சினிமாவில் என்னென்ன பார்த்திருக்கிறீர்கள்? அதையெல்லாம் தாண்டி ரொம்ப ஆழமாக எவ்வளவு முடியுமோ அந்தளவு ஊடுருவிப் பார்க்கிற சினிமா. ஆனால் உருவிப் பார்க்கிற சினிமா இல்லை'' என்று வித்தியாசமாய் பதில் தந்தார்.

''ரொம்ப வித்தியாசமான திரைப்படம்'னு சொல்ல வர்றீங்க?''

''எல்லாரும் வித்தியாசம் வேணும்னு தான் விரும்புறாங்க, ஆனா அப்படி எடுக்கும் போது யாரும் ஒத்துழைப்பதில்லை. நீங்க கதையைப்பத்தி கேக்கறீங்க இல்லையா? அதைவிட இந்த கதைக்காக நடிகைகளிடம் நான் பட்ட கஷ்டத்தை கேளுங்க. அதையே ஒரு திரைப்படமா எடுக்கலாம்'' என்று ஆரம்பித்தார்.

''சிம்ரன்'ல இருந்து 'சந்தியா' வரைக்கும் எல்லா முன்னனி நடிகைங்க கிட்டயும் இந்த கதைய சொல்லிட்டேன். ஊட்டியில வச்சி சிம்ரன்கிட்ட சொன்னபோது ரொம்ப சீரியஸா கதை கேட்டவங்க, பயங்கரமா இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. ''சார்! இந்த கேரக்டரை நான் சரியா செஞ்சிட்டேன்னா நிச்சயமா எனக்கு நேஷனல் அவார்டு தான்''னு சொன்னாங்க.

அடுத்து முக்கியமானவங்க நந்திதா தாஸ். அவங்க கிட்ட கதையை 'இ' மெயிலில் சொன்னப்போ ''சார் நான் இப்போ ஹனிமூன்'ல இருக்கேன்''னு பதில் வந்தது. சிம்ரனுக்கு நடிக்க ஆசை இருந்தாலும் அவங்களுக்கும் கல்யாணப் பிரச்சினை.

காதல் சந்தியாவுக்கு நானே வீடு தேடிப்போய் இந்த கதையைச் சொன்னேன். நான் கதையைச் சொல்லச் சொல்ல, கூட இருந்த அவங்க அம்மாவுக்கு முகமெல்லாம் மாறிப் போச்சு. ''அம்மா! சொல்லும் போதுதான் செக்ஸ் டாமினேஷன் இருக்கும். அனா படத்துல வராதுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்... சந்தியா மட்டும் ''சார் நான் இந்தக் கதைய தாங்குவேனா? அந்தளவுக்கு எனக்கு கெப்பாசிடி இருக்கா?ன்னு கேட்டு வியந்தாங்க. அதைவிட பயந்தாங்கன்னு சொல்லலாம்.

பெயர் வேண்டாம், அந்த நடிகைகிட்ட சொன்னபோது ''சாரி சார்! எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. நான் அதை கெடுத்துக்க விரும்பலை'' என்றார். இதே நடிகை பிறகு இன்னொரு இயக்குனரின் படத்துல விபச்சாரியா நடிச்சாங்க! அப்ப எங்க போச்சு அந்த இமேஜ்'னு தெரியலை!

இன்னொரு நடிகைகிட்ட சொன்னப்போ, ''அந்தம்மா சொன்னாங்க [அவங்க இப்போ அம்மா என்கிறார்] இதே கதையை பாலுமகேந்திரா எடுத்தா நான் நடிப்பேன். ஆனா நீங்க எப்படி'ன்னு எனக்கு தெரியாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இவ்வளவு ஏங்க? 'அம்மு'வுக்கு அம்மா கேரக்டர், அவங்களோட சப்போர்டிங் கேரக்டர் என்று எல்லாருமே ''சாரி! எனக்குன்னு இருக்கிற இமேஜை விட்டுட்டு வரமுடியாது'''ன்னு கூறி நான் யார் யாரை மனசில வச்சிருந்தேனோ அவங்க அத்தனை பேருமே மறுத்துட்டாங்க. இமேஜை காரணம் காட்டிய அந்த அம்மா நடிகை அறிமுகமானதே விபச்சாரி கேரக்டர்லதான்.

நான் என்ன அவ்வளவு கேவலமான படத்தை எடுக்கிறவனா? பார்த்திபன் சார், மகாநதி, ரமணா, தவமாய் தவமிருந்து படங்களின் காமிராமேன் பிரபு இனங்கள்லாம் என்னை விட்ருவாங்களா? இவங்கள்லாம் ஒத்துக்கிட்டதே இந்த கதைனாலதானே! நடிப்பை நடிப்பாய் பார்க்கக் கூடிய நட்சத்திரங்கள் இங்கே இல்லை என்று ரொம்ப‌வே ஆவேச‌ப்ப‌ட்டார் ப‌த்மாம‌க‌ன். நியாமான‌ ஆவேச‌ம் தான்.

''ஆபாசமாய் இருந்திடும்னு பயப்படுறாங்களாம்! நீங்க வேணா பாருங்க. தொட்ட விஷயம் விபச்சாரம்'னாலும் படத்துக்கு சர்டிபிகேட் வாங்கியே தீருவேன்'' என்று சவால் விட்டு தொடர்ந்தவர்.

''நம்பள எப்படா இந்த விளையாட்டுல சேத்துக்கப் போறாங்க!''ன்னு ஏங்கி, [இப்படி ஒரு டயலாக்கே இருக்கு] விபச்சாரத்தை சந்தோஷமாய் ஏத்துக்கிட்டு தாசியாய் மாறிப்போகிற ஒருத்தியின் வாழ்க்கை தான் அம்முவாகிய நான். இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் இந்தளவு அதன் அறைகளுக்குள் நுழைந்திருக்காது. இதுக்கு மேல நீங்க இந்த கதைக்கு ஒத்துக்கிட்ட பாரதி, நடிகர் பார்த்திபன், காமிராமேன் பிரபு கிட்ட கேளுங்க, அவங்க சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டார்.

கடலுக்குள் இருந்து கவர்ச்சியான உடையில் கண்ணைக் கூசுகிற மாதிரி [கான்ல்டாக்ட் லென்ஸ்] வந்தார் அம்முவாகிய பாரதி. எப்படி இந்த கேரக்டரை ஒத்துக்கிட்டீங்க?ன்னு கண்ணைப் பார்க்காமலே கேட்டோ ம்.

மூன்று நாள் தூக்கமே இல்லை, இந்த கதையைக் கேட்டு. கேட்க்கும் போதே மனதுக்குள் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இமேஜ்'லாம் தூக்கிக் குப்பைல போடுங்க. நல்ல கதையை செலக்ட் பண்ணா எல்லா ஹீரோயினும் நிப்பாங்க.
தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம்'னு பதினோரு படங்களை இதுக்காகவே கமிட் ஆகலை. என்னா இதுல எனக்கு அவ்ளோ பெரிய ஸ்கோப் இருக்கு. பார்த்திபன் சாரை விட எனக்குத்தான் ரோல் அதிகம். சீனியர் ஆர்ட்டிஸ்டோ ட சேர்ந்து நடிச்சா அவ்ளோதான் என்பதெல்லாம் இந்த படத்துக்குப் பிறகு உல்டா ஆயிடும்'' என்று அனுபவம் பேசினார் பாரதி.

நீங்க‌ பாக்கிற‌துக்கு மீனா மாதிரியே இருக்கீங்க‌. யாராவ‌து சொல்லியிருக்காங்க‌ளா? மீனாவுக்கான இடம் இன்னும் காலியாகத்தானே இருக்கு என்றேன்.

எல்லாரும் அப்ப‌டித்தான் சொல்றாங்க‌. சில‌ பேர் ரூபினி மாதிரி இருக்க‌, ரேகா மாதிரி இருக்க‌'ன்னும் சொல்றாங்க‌. அதெல்லாம் அவ‌ங்க‌வ‌ங்க‌ க‌ண்ணைப் பொருத்த‌து. என‌க்குக் கூட‌த்தான் சில‌ பேரை ஷாருக்கான் மாதிரி தெரியுது. ஆனா உண்மை அது இல்லையே! நான் நானாக‌த்தான் இருக்கிறேன். இருக்க‌வும் விரும்புகிறேன். ஒரு வேளை நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி இத்த‌னை ந‌டிகைக‌ளின் கேர‌க்ட‌ர் என‌க்குள் இருந்தால் அதுவும் ஒரு பிள‌ஸ் பாயின்ட் தானே!

ச‌ரி, எல்லா ந‌டிகைங்க‌ கிட்டேயும் கேட்கிற‌ கேள்விதான். நீங்க‌ள் கிளாம‌ராக‌ ந‌டிப்பீர்க‌ளா? கிளாம‌ர் எல்லோருக்கும் பிடித்திருக்கிற‌து என்று தான் நினைக்கிறேன்.

''ஆரம்பத்தில் கிளாமர் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் இதில் கிளாமர், ஹோம்லி, குறும்பு என்று விதவிதமான ரியாக்ஷன்கள். இதை வேண்டாமென்று மறுத்தவர்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். அது தான் என்னோட குட்லக். சிம்ரன் எதிர்பார்த்த நேஷ்னல் அவார்ட் எனக்கு கெடச்சதுனா அதை டைரக்டர்கிட்டயே திருப்பி தந்துடுவேன். ஏன்னா, இது அவரோட 16 வருட பிரசவம்.

ஓகே! நீங்க‌ எப்ப‌டி ந‌டிச்சிருக்கீங்க‌? உங்க‌ அனுப‌வ‌த்தைப் ப‌ற்றிச் சொல்லுங்க‌.

டிரஸ், மேக்கப், லொகேஷன் என்று எல்லாமே 'லைவ்' இதுல. ஓவ்வொரு சீன்லயும் அனுபவிச்சு நடிச்சிருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க! இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு டைரக்டர் கிட்டயிருந்து எனக்கு கிடைச்சிருக்கு.அதாவது ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் வந்து மானிட்டரை பார்க்க எனக்கு அனுமதி கொடுத்தார். என்னை எப்படி காட்டியிருக்காங்க என்பதை தெரிந்து நடிப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை.படம் எடுக்கிறேன்'ன்னு என் உடம்பை எடுத்து விடுவார்களோ என்கிற பயம் இருக்குமில்ல? ஏன்னா, நானே வீட்ல சண்டை போட்டுக்கிட்டு வந்து நடிக்கிற படம் இது.நாளப் பின்ன என் ஃபிரண்ட்ஸ், ரிலேஷன்ஸ் எல்லோர் முகத்திலயும் முழிக்கனும் இல்ல?

அதோட, படத்துல நானும், பார்த்திபன் சாரும் வாய்திறந்து பாடவே மாட்டோம். ஆனாலும் நாலு பாட்டு இருக்கு. பாட்டுக்கு நீங்க தம் அடிக்க எழுந்திரிச்சா படம் புரியாது. ஏன்னா பாடல்லயே கதை இருக்கு. அதைவிட காதல்'னா என்னன்னு நெஜமாவே இந்த படத்திலர்ந்து தெரிஞ்சிக்கிட்டேன். இந்த ஸ்கிரிப்ட் என் பர்ஸனல் லைஃபுக்கே யூஸ்புல்லா இருக்கும். எந்த பருவத்தில், எதன் பிறகு காதல் வந்தால் அது உண்மை என்பது படம் வந்த பிறகு பாருங்கள். டீட்டெய்லா தகவல் வேனும்னா பார்த்திபன் சார்கிட்ட கேளுங்க. அவர்தான் காதல் ஸ்பெஷலிஸ்ட். அம்பது வயசு பொம்பளைக்கு வர்ரது தான் உண்மையான காதல்'னு ஏதோ ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார். வேணும்னா அவர்கிட்டயே கேளுங்க''ன்னு பார்த்திபனைக் கையைக் காட்டினார் பாரதி.

''காமம் முடிந்த பிறகு வருவது தான் உண்மையான காதல்'' என்று கிறுக்கலாய் ஆரம்பித்த பார்த்திபன், 'காதலை உடைத்துப் பார்த்தால் காமம் என்கிற விதை இருக்கும். அனால் காமத்தை விதைத்துப் பாருங்கள் அதில் காதல் இருக்காது. இது காமத்தை விதைத்து முளைத்த காதல்'' என்று கவிதை படித்தார்.

''அமாம்! சின்ன வயதிலேயே காமத்தையும் அதன் எல்லைகளையும் கடந்தவள் அம்மு. அவள் பார்க்காத ஆண்கள் இல்லை, அவளுக்கு உடல் சுகமும் தேவை இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருத்தனை விரும்பினால் அது தான் உண்மையான காதல். காதலின் நேர்மையான கோணம் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது. பொதுவா ஃபிலிம் ஃபெஸ்டிவ‌ல்ல‌ தான்
இந்த‌ மாதிரி ப‌ட‌த்தை எல்லாம் பார்க்க‌ முடியும்.
ஆனா எல்லோரும் பார்க்க‌னும் என்ப‌த‌ற்காக‌ இந்தப் ப‌ட‌த்தில் உழைத்திருக்கிறோம்.

மொத்தக் கதையில் பதினைந்து சதவிகிதம் தான் எனக்கு நடிக்க‌ வாய்ப்பு என்றாலும், கதைக்காக ஒத்துக் கொண்டிருக்கிறேன். செல்லிங் த நேம் என்பார்கள் [விஜய் -த்ரிஷா, ரஜினி -கமல் மாதிரி] பெயரை விற்பது. அம்முவாகிய நான் கதைக்காகவே ஆயிரம் நாள் ஓடும். மனைவியை கேவலமாக நடத்துகிற ஆண்களுக்கு மத்தியில் ஒரு விபச்சாரியை கண்ணியமாக நடத்துகிற கேரக்டர் என்னுடையது. இந்தப் படத்தில் நான் தலையைக் காட்டினாலே சந்தோஷம் தான் என்கறார் பார்த்திபன்.

சூரிய‌ன் ம‌ற‌யும் வேளையில் அந்த‌ப் பாட‌ல் காட்ச்சியை முடித்து விட்டு வ‌ந்து கொண்டிருந்தார் ஒளிப்ப‌திவாள‌ர் பிர‌பு. த‌வ‌மாய் த‌வ‌மிருந்து'வை த‌ங்க‌மாய் இழைத்த‌ கைக‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்.

''ஒரு ஹாலிவுட் படத்துல வேலை செஞ்ச திருப்தி இருக்கு சார்''னு பதினெட்டாவது நாள் ஷூட்டிங்ல பார்த்திபன் என்னிடம் சொன்னார். நான் இந்த படத்தில வெறும் ஒளிப்பதிவாளர் இல்லை. இனை இயக்குனர்'னு சொல்லலாம். அந்தளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கார் பத்மாமகன். எனது முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு, ''கதையின் கூடவே நீங்கள் பயனிக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாய் நீங்கள் தான் வேண்டுமென்று கேட்டார். அந்த விஷயம் தான் பத்மாமகனிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே கௌரவமாய்க் கருதி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறேன். பொதுவாக ஒளிப்பதிவாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் அழகியல் சார்ந்து பதிவு செய்வார்கள். நான் அப்படி செய்வதில்லை. கதையின் ஊடாகப் பயணிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறேன்.

உணர்வுப்பூர்வமாய் என்பார்கள், அதை படம் பார்க்கும் போது உண‌ர்வீர்கள்'' என்று இயல்பாக கூறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபு. அம்முவாகிய நான் விருதுக்கான படமாக மட்டுமல்லாமல் விரும்புகிற படமாகவும் இருந்தால் நல்லதே.

பேட்டி: மரக்காணம் பாலா.
படங்கள்: அம்முவாகிய நான் படத்திலிருந்து.

Friday, January 5, 2007

சப்ப மாடு செத்து ஏழை பணக்காரன் ஆன கதை

ஒரு ஊர்ல ஒரு ஏழ‌ விவசாயி இருந்தாங். அவங்கிட்ட ஒரே ஒரு பசு மாடு இருந்துது. அதுவும் சரியான சப்ப மாடு. ஒரு நாள் திடீர்னு, அந்த சப்பமாடும் செத்துப் போச்சு. 'இன்னாப் பண்றது?'ன்னு இவம் தவிக்கிறான்.
கூழுக்கு வழியில்லாத குடும்பம். இருந்த ஒரே மாடும் செத்துப் போச்சு. அழுதுகினே போய், மாட்டுக் கறிய மண்ல பொதச்சிட்டு, தோல உறிச்சி எடுத்துக்கினாங்.

''டியே! புள்ளங்கில பாத்துக்க. நாம் போயி தோல வித்துட்டு, சாப்பாட்டுக்கு எதுனா அரிசி வாங்கியாரன். கஞ்சியாவது காசி குடிப்போம்''னு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு, வெளிய கௌம்பிட்டாங்.
தோல் வேபாரி, ஊட்ல இல்ல. 'எத்தினி மணி ஆனாலும் செரி, தோல விக்காம ஊட்டுக்குப் போவக்கூடாது'ன்னு சொல்லி, அங்கேயே காத்திருந்தாம்...

அந்த நாள்ளதான் கரண்ட்டு கெடயாதே! இருட்டிப் போயி கண்னு மண்னு தெரியில. அந்த நேரம் பாத்து, ரெண்டு திருடனுங்க கையில ரெண்டு பையோட வந்துகிறானுங்க.

'' டேய்! இந்த ஊட்டு வாசல்ல கீற மர பீரோவ்ல ஒளிஞ்சுக்குவோம். யாரும் இல்லாத நேரம் பாத்து தப்பிச்சிற்லாம்''னு சொல்லி, பீரோவ்ல பூந்து கதுவ சாத்திக்கினானுங்க.

கொஞ்ச நேரம் கழிச்சி, தோல் வியாபாரி வந்துக்கிறாங். அவம், 'கா' வௌக்க ஏத்தன ஒட்னே..., இவம் போயி நின்னாம். 'யாரு...?' தோலு விக்க வந்தவம்.

''யாருப்பா நீ? இன்னா வேனும்''னு தோல் வேபாரி கேட்டுக்கிறாங்.

''அய்யா! இன்ன மேறி யாம் பசுமாடு செத்திறிச்சி. அதாங் இந்த தோல வித்துப்புட்டு, எதுனா வாங்கினு போலாம்னு வந்தேன்''னு சொன்ன ஒட்னே...

''செரி, செரி யவ்ள வேணும்? அத்த சொல்லு"ன்னு கேட்டுக்கிறாங் தோல் வேபாரி.

''காசு பணமெல்லாம் எதுவும் வேணாம் சாமி. தோ! மழைலயும் வெயில்லயும் மக்கிங்கடக்குதே... மர பீரோ... அத்த குடுத்தா, எங்கூட்டு சாமான்கள பத்தரமா வச்சிக்குவேன்''னு சொல்லிக்கிறான் நம்பாளு.

'வெளிய கடந்து வீனாதான மக்குதுன்னு', தோல் வியாபாரியும் அத்த அவங்கிட்ட குடுத்துட்டாங்.

பக்கத்துல ஒரு வண்டிக்காரன கூப்ட்டா,
'ராத்திர்ல என்னால வரமுடியாது'ன்னு சொல்லி,
'வேண்னா வண்டிய நீயே ஓட்டிம் போய், காலைல கொண்னாந்து உட்ரு'ன்னு சொல்லிக்கிறாம்.
'இத்த சொல்லுவன்னுதான எதிர் பாத்தன்'னு நெனச்சி, நம்பாளும் பீரோவ வண்டில ஏத்திக்கினு ஊருக்கு கௌம்பிட்டாங்.

போற வழியில மாடுங்க்கிட்ட சொல்லிக்கிறாங்,
''மாடுங்களா...! மன்னர் எனக்கிட்ட கட்டளைய‌ இன்னிக்கித்தாங் நெறவேத்திக்கிறேன்.
ரொம்ப நாள்... அகப்படாத திருட்னுங்கள இன்னிக்கி புடிச்சிட்டேன்.
நாளக்கி பாரு அமக்களத்த! ஆ...ன்னு சொல்லிக்கிறான்.

திருட்னுங்க பயிந்து போயி,
'எங்கடா நமுக்கு மரண தண்டன குடுத்துட போறாங்க!'ன்னு நெனச்சி,
''அய்யா, சாமி! உங்க கால்ல உழுந்து கேக்கறோம். இந்த பொண்ணும் பொருளும் உங்கிட்டயே குடுத்துட்றோம். எங்கள தெறந்து உட்ருங்க, நாங்க எங்கனா கண்காணா தேசத்துக்குப் போய் பொழச்சிக்கிட்றோம்''னு கெஞ்சிக்கிறானுங்க.

இல்லாத உருட்லு, மெரட்ல்லாம் காமிச்சிட்டு,
''இத்தா...ட எந்த வம்புக்கும் போவக்கூடாது.'' அப்டின்னு சொல்லி, நகயும் பணத்தியும் வாங்கினு, அவுனுங்குள தெர்த்தி உட்டாம்.

நேரா ஊட்டுக்கு வந்தவம், பொண்டாட்டியாண்ட ரெண்டு பைய்யும் குடுத்துட்டு வண்டிக்காரங்கிட்ட வண்டியும் உட்டுட்டாம்.
அதுக்கப்புறம் செல்வத்துக்கு கேக்கவா வேணும்?
'கல்லு ஊடுதான், கறி கொழம்பு தான்...
கால்லெயிம், சாய்ந்திரமும் வெத்தில பாக்குத்தாம்.'

ஊரு சும்மா இருக்குமா? எல்லாருக்கும் ஒரே ஆச்சரியமாப்பூட்டுது.
'இவம் எப்பிட்றா இவ்ளோ பெரிய பணக்காரனா ஆணான்?'னு தலைய பிச்சிக்கிறானுங்க.
பொம்பளங்க வாயி சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்களே! 'நைஸா இன்னான்னு விசாரிடி'ன்னு, அவவம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டானுங்க.

தண்னி புடிக்கும் போது கேட்டுகிறாளுங்க.
''ஏண்டி... எங்கருந்துதாண்டி வந்த்து இவ்ளோ வசதியும்! அந்த மாயத்த எங்களுக்கும் சொன்னா நாங்களும் செஞ்சிப் பாப்பமுல்ல... ''

''அட இதக் கேக்கவா இவ்ளோ நாளு மொன்னு முழுங்கிருந்தீங்க.
ஒரு சப்ப மாடு வச்சிருந்தமே. அதான் சம்பாரிச்சி குடுத்திச்சி. அது பாலுங் கரக்காம, சானியும் போடாம ஒரு நாள் செத்துப் போச்சா!
கறிய கொண்னும்போய் மண்ல பொதச்சிட்டு, தோல எடுத்தும்போய் விக்கப் போனவரு தாங்!
பய்யி நெறெய பணத்தொடத்தான் ஊட்டுக்கு வந்தாரு.
தங்க வெல விக்கிதாமுல்ல தோலு..''
-இவ சொல்லி வாய மூடல! கொடத்த பூரா போட்டது, போட்டபிடியே எல்லாரும் ஊட்டுக்குப் போய்ட்டாளுங்க.

''அட வெவரங்கெட்டவனுங்களா... நாட்ல எந்த பொருளு என்னா வெல விக்கிதுன்னுகூட தெரியாம, நீங்க சம்பாரிக்க கௌம்பிடுறீங்க.
சப்ப மாட்டு தோலு தாண்டா இவ்ளோ வசதிக்கும் காரணம்''னு, கேட்ட கதைய சொல்லிக்கிறாளுங்க.

அவ்ளதான்!
எல்லா ஊட்டுக்காரணுங்களும் கூடி முடிவெடுத்தானுங்க.
'இருக்குற மாடு எல்லாத்தயும் வெட்டிக் கூறுபோட்டு பொதச்சிட்டு, தோலத் தூக்கினு போய் வித்து பணக்காரனா ஆவுரது'. அதே மாறி இருந்த ஆடு, மாடு எல்லாத்தயும் வெட்டி சாவடிச்சிட்டு, தோல உறிச்சி வேபாரத்தப் பாக்க கௌம்பிட்டானுங்க.
தோலு இன்னா வெல விக்கும்னு, நம்பளுக்குத்தான் தெரியுமே.
'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா'ங்கற கதயா போயிடுச்சி நெலம.

நம்பாளு வாயும், வயிருமா வசதியா வாழறத பாக்குறதுக்கு எவனுக்கும் புடிக்கல. ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தானுங்க.

''அவன எப்பிடியாவது சாவடிச்சுடனும்டா''.
அதே மாதிரி இன்ன பண்ணானுங்கன்னா?, மரத்துல ஒரு பீப்பா செஞ்சி, ராவோட ராவா போய் நம்பாள அமுக்கிட்டானுங்க.
வெடிஞ்ச ஒடனே கும்பலா உருட்டிக்கினு கடல பாத்து தள்ள ஆரம்பிச்சிட்டானானுங்க‌.

''எம் மொவன் இத்தோட ஒழிஞ்சாண்டா''ன்னு சொல்லி ஜாலியா போறாங்க.

போற வழியில இவுங்களுக்கு தண்ணித் தாகம் எடுத்துக்கிச்சி.

''டே! தண்னித் தாகம் எடுக்குதுடா''ன்னு ஒருத்தஞ் சொல்லவும்,

''நெல்லிக்கா சாப்ட்டா சரியாப் பூடும்''னு ஆளுக்கு ஒரு மூலயா நெல்லிக்கா பெறிக்க கௌம்பிட்டானுங்க.

பய எப்பிடி தப்பிச்சிட போறாங்கற நெனப்பு!

அந்த காலத்துலதாம் மாடு திருடுறவனுங்க அதிகமாச்சே!
அந்த மேறி மூணு திருடனுங்க ஆளுக்கு நூறு ஆடு, நூறு மாடுன்னு ஓட்டி வந்துட்டானுங்க. இவுனுங்குளுக்கும் களப்பு. பீப்பா உருட்டிம் போற வழில ஆடு மாடுங்கள மேய உட்டுட்டு,
செம வேட்டயாச்சே! ஆச தீர சாராயத்தையும், கள்ளையும் நெக்க குடிச்சிட்டானுங்க.

குடி வெறி சும்மா இருக்குமா? பங்கு போட்றதுல தகறாறு வந்துருச்சி.
உட்டாங்... ஒரு ஒதெ!
ஒர்த்தவம் ஓடி நேரா பீப்பா மேல உழுந்தாம்.
''ஒதெக்கி ஒதெ குடுக்குறம் பார்றா''ன்னு சொல்லி பீப்பாவ தூக்குனாம் பாரு!
தூக்க முடியில.
'இன்னாடா இந்த கணம் கணக்குது'ன்னு நெனச்சி,

''டேய்! பங்கு அப்புறம் பிரிச்க்கிலாம். மொதல்ல இந்த பீப்பாவ தெறப்போம். சத்தியமா இதுல பொதயல்தாங் இருக்குது''ன்னு சொன்னான்.

சண்டய மறந்துட்டு மூணு பேரும் போய் பீப்பாவ தெறந்தானுங்க.

திடீர்ணு நம்ப ஆளு வெளிய வரவும், மூணு பேரும் மெரண்டு பூட்டானுங்க.

''யாரும் பயப்படாதீங்க! இது அதிசய பீப்பா. இதும் உள்ள போயி நீங்க இன்னா கேட்டாலும் கெடைக்கும், எங்க‌ போவும்னாலும் போவும், எல்லா ஒலகத்துக்கும் போயி வரலாம்''னு நம்பாளு புளுவிட்டான்.

இத்த நம்பி இந்த மூணு மூணு திருடனுங்களும் பூந்துக்கிட்டானுங்க.

இவம் இன்னா பண்ணாம்னா,
இருந்த மாறியே பீப்பாவ தச்சி மூடிட்டு, நூறு ஆட்டையும், நூறு மாட்டையும் ஓட்டிக்கினு ஊட்டுக்கு வந்துட்டாம். ஊர்க்காரப் பயலுங்க பீப்பாவ உருட்டினு போய் கடல்ல தள்ளிட்டு,

''அப்பாடா! ஒழிஞ்சிது சனியன்''னு சொல்லி ஊட்டுக்கு திரும்பிட்டானுங்க.

மறு நாள் வெடிஞ்சி எல்லாரும் வெளிய வந்தா...! நம்பாளு தின்ன மேல ஒக்காந்து வெத்தலப் பாக்கு போட்டுக்கினு கீறாம்.

''இன்னாடா இது? எழவெடுத்த வேலயாப் பூடுச்சி. மெனக்கட்டு போய் கடல்ல தள்ளிட்டு வந்தோம், இவம் கல்லுமாதிரி தின்னைல ஒக்காந்துனு கீறானே!''

-அப்பிடீன்னு ஆச்சரியாமாப் பூடுச்சி.
திருப்பி பொண்டாட்டிய உட்டனுப்புறானுங்க.

''போய் இன்னான்னு கேள்றின்னு.''

இவுளுங்களும் போய் கேக்கறாளுங்க.
''ஏதும இம்மாம் ஆடு மாடுங்க...? அதிசயமா கீது! எங்களுக்கும் சொன்னா நாங்களும் பொழைக்க மாட்டமா?'' ஆ...ன்னு கேட்டுக்கிறாளுங்க.

''இதுலன்னா அதிசயங்கீது? ராத்திரி யாரோ திருட்டுப் பயலுவ எங்கூட்டுக்கார்ரு தூங்கியிந்த நேரமாப் பாத்து பீப்பாவுல அடச்சி எடுத்தும் போய் கடல்ல தள்ளிட்டு கீறானுங்க.
வெடிஞ்சி பாத்தா மனுசனக் காணாம். என்னமோ எதோன்னு நாம் பதறிங்கடக்குறேன். சயந்தரமா பாத்து வர்ராரு.
சும்மாவா!?
இந்தப் பக்கம் நூறு ஆடு, இந்தப் பக்கம் நூறு மாட இல்ல ஓட்டிக்கினு வர்ராரு.

'ஏதுய்யா இம்மாங் ஆடு, மாடுங்களும்'னு கேட்டா,
'அட அத யாண்டி கேக்குற? திருட்டுப் பயலுவ பீப்பாவுல வச்சி உருட்டினு போய் என்ன‌ கடல்ல தள்ளிட்டானுங்க.
போறம... போறம்... போறம்... நடு ஆழத்துவெரக்கும் போறேங்.
பாத்தா...! பாதாள தேவத வந்து பீப்பாய தெறக்குது.

''யார்றா நீ? எதுக்கு இங்க வந்த?''ன்னு கேக்குது.

நான் இன்னாத்த சொல்றது. இந்த மேறி படுபாவிப் பயலுங்க என்ன சாவடிக்கப் பாத்த கதைய சொன்னேங்.
யாம் மேல எறக்கப்பட்டு,

''இந்தா உனுக்கு நூறு ஆடு, நூறு மாடு''ன்னு குடுத்து, ஓட்டிம்போவ சொல்லிச்சி''ன்றாரு. இதாம்மா நடந்த கத''னு சொல்லிட்டா...!

பொண்டாட்டி காரிங்க அம்மா...ம்பேரும் போனாளுங்க.

''அட அறிவு கெட்டவனுங்களா! இதாண்டா நடந்து. நீங்களும் இருக்கிறீங்களே?"ன்னு காரித் துப்பிக்கிறாளுங்க.
ரோசம் பொத்துக்கினு வந்திருச்சி இவனுங்களுக்கு.

''டேய்! ஆளுக்கு ஒரு பீப்பாய ரெடி பண்ணுங்கடா''ன்னு சொல்லி அதே மாறி தயார் பண்ணிட்டானுங்க.

''பாருங்கடி... நங்கள்ளாம் இதுல உள்ள பூந்துக்குவோம். பக்குவமா எங்கள கொண்ணும்போய் கடல்ல தள்ளிறனும்''னு சொல்லிட்டானுங்க.
அதே மாறி பொண்டாட்டிங்களும் பண்ணிட்டாளுங்க. ஆனா போன புருசன் திரும்ப வர்ல.
'அப்புறம் இன்னா ஆச்சி?' எல்லா பொம்மினேட்டிங்களயும் இவனே கல்யாணம் பண்ணிக்கினு சந்தோசமா குடும்பம் நடத்துனானாம்.

குறிப்பு: இந்த கதையை எனக்கு சொன்னது எங்க ஊர் மூலிகை வைத்தியர் விஜயன். கதைப்படி மூணு கொழந்தைங்கதான் ஆடு, மாடு மேய்க்கும். கொழந்தைங்கள சாவடிக்கிறது எனக்கும் பாவமா இருந்திச்சி. அதுமட்டுமில்லாம, கொழந்தைங்ககிட்ட இந்த கதைய சொன்னா, 'பாவம் அந்த மூணு பசங்க'ன்னு சொல்லி சோகமாயிடுவாங்க. அதனால எதனா சொல்லி சமாளிங்க''ன்னு குறிப்பு தந்திருந்தேன்.

கதையை படிச்சிப் பாத்த நம்ப தீச்செய்தி இந்தியா[Bad News India], ஏன் கொழந்தைங்கள சாவடிப்பானேன்! குழந்தைங்களுக்குப் பதிலா மூணு குடிகாரனுங்கன்னு போடுங்க'ன்னு புத்திமதி சொல்லிருந்தாரு. அய்யா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கதை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.