Thursday, December 21, 2006

சாக்கடைச் சமுதாயம்!


கைக்குட்டையை போர்த்திக்கொண்டு கம்மென்று நடக்கிறது கால்கள்.
''ஒரே நாத்தம்!'' உள்ளிருந்து வருகிறது வார்த்தைகள்.

''இவனுங்க வாயை விட இந்த காவா நாத்தம் மேல்றா!''
சொல்லிச் சிரித்தபடி தொடர்கிறது வேலை.

ஏரி குளங்களில் புல்டோசர் - பொக்லைன் இயந்திரங்கள்
உழவர்கள் கூலியை உறிஞ்சிக் குடிக்கிறது.

கையை நீட்டினால் தண்ணீர் கொட்டுகிறது
துடைக்க வேண்டாம் துண்டுக்கு பதில் சூடான காற்று.

எதெதற்கோ இயந்திரம் இருக்கு இதற்கொரு கருவி இல்லை
இது சாக்கடைச் சமுதாயம். உண்மைதானே?

சாலை அதிர்வுகள்!


யாரென்று கேள் என்னை
நான் தமிழனா இந்தியனா?

மக்கள் தொகை கணக்கெடுப்பில்
எனது பெயர் இடம் பெறுமா?

குப்பையில் கண்டெடுத்தேன் அதனை
ஐயோ! அத்தனையும் இதயங்கள்

யாருக்கு வேண்டும் இது?
என்றெண்ணி வீசியிருப்பீர்கள்

தின்ன முடியாத சோற்றைக்கூட
கெட்ட பின் கொட்டுகிறீர்கள்

கண்களைச் சுழற்றுகிறது தூக்கம்
உறக்கத்தில் உங்கள் மூளை

கொஞ்சம் மெதுவாய்ப் போங்களேன்
உங்களால் சாலை அதிர்கிறது.

நாறுது இந்தியா!


''வாசனையாய் சாப்பிட்ட உன்
வாயை முகர்ந்து பார்
பீ நாற்றம் அடிக்கும்.

நீ கழித்த மலத்தில்
நாள் முழுதும் குளிக்கிறேன்
வெட்கமாய் இல்லையா?

மனிதர் மலத்தை மனிதன் அள்ளும் நாட்டில்
மனித உரிமை ஆனையங்கள்
மாநிலத்திற்கு ஒன்று.

இந்தியா ஒளிர்கிறது
இனிமேல் சொன்னால்
செருப்பால் அடிப்பேன்.''

நண்டுகள், நத்தைகள்


ஒரு விடுமுறை நாளில் சில நத்தைகளை பிடித்துக் கொண்டு இச்சிறுவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.

ஒரு காலத்தில் அதாவது என் பள்ளிப் பருவத்தில், மழைக் காலம் தொடங்கிய பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் கால் வைக்கவே இடம் இருக்காது. துள்ளிக் குதிக்கும் தவளைகளும், ஓடி விளையாடும் நண்டுகளும், ஊர்ந்து செல்லும் கணக்கிலடங்கா நத்தைகளும் என்று விளை நிலங்கள் செழிப்பாய் இருந்தது.


பூச்சிக்கு மருந்தடிக்கிறேன் பாரு'ன்னு சொல்லி சில பொறம்போக்குகள் எப்போது ஊருக்குள் வந்தானுங்களோ! அப்பவே போச்சி எல்லாம். யூரியா போட்றேன், அம்மோனியா போட்றேன்'னு சொல்லி ஏகப்பட்ட மருந்து கொடுத்தானுங்க. அத கெடுத்தானுங்கன்னு சொல்லலாம்.

அப்படியான கால கட்டங்களில் ''இன்றி மருந்து'' குடித்துவிட்டு செத்துப்போன இளவட்டங்கள் தான் ஏராளம். [வய‌லுக்கு தெளிக்கும் ஒரு திரவ பொருள்‍: இன்றி மருந்து]


வயலில் தெளிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் அங்கிருந்த நண்டு நத்தைகள், புழு பூச்சிகள், எலி பாம்புகள் என்று எல்லாவற்றையும் கொன்று குவித்தது.

பசிக்கு எதுவுமில்லா காலகட்டங்களில் கூடை கூடையாய், குடம் குடமாய் நத்தைகள், நண்டுகள் கொண்டுவந்து வேகவைத்து தின்பார்கள் மக்கள். வயலில் கிடைக்கும் இவை பல வியாதிகளுக்கு மருந்து.

இன்று எவ்வளவுதான் தேடினாலும் நண்டு நத்தைகள் அகப்படுவது மிகக் கடினம். இருக்கும் சில உயிரினங்களும் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு உய்ர் வாழ்வதால் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அளவிலேயே இருக்க நேரிடும்.