Tuesday, March 11, 2008

"கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை" -அழ‌கிய‌ பார்வதி.

"கவிதைகள் எப்பொழுதும் அழகு தான்
சில சமயம் கவிதாயினியைப் போல"
இந்த வரிகள் பார்வதிக்குப் பொருத்தமாக இருக்கும். பார்த்தவுடன் பிடித்துப் போகிற கனிவானத் தோற்றம், இனிதான குரல் வளம்.பேனா முனை என்பது படைப்பாளிகளுக்கு பெரும்பாலும் கவிதையிலிருந்து தான் தொடங்குகிறது போலும்.அந்த வகையில் "இப்படிக்கு நானும் நட்பும்" என்கிற கவிதைத் தொகுப்பபின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள அழகான கவிஞர் பார்வதி.

அழகைக் குறிப்பிட காரணம் இருக்கிறது. அடிப்படையில் பார்வதி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். பத்திரிகையாளர் ஞானியின் பரிக்ஷா நாடகக் குழுவில் பயின்று தேர்ந்தவர். பல்வேறு குறும்படங்களில் நடித்திருக்கிற பார்வதிக்கு சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது. சும்மா கேஷுவலா ட்ரெஸ் மாற்றினாலே போதும், இன்னொரு ஆளாகத் தெரியக் கூடிய அம்சம் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருக்கிறது. "இப்படி கெட்அப் சேன்ஜ் ஆகிற விஷயம் பற்றி பல முறை ஃபிரண்ட்ஸ் என்னிடம் கேட்டதுண்டு" என ஆச்சர்யப்படுகிறார். அகில இந்திய வானொலியில் கலைஞர்களைப் பேட்டி கான்பது, குரும்படங்களுக்கு பின்னனிக் குரல் கொடுப்பது, பத்திரிகையில் ஃபிரீலான்சர் என்று பன்முகத் திறமையுடன் திகழ்கிறார் பார்வதி.


சின்ன வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதா? கவிஞர் ஆனது எப்படி நிகழ்ந்தது?

எழுத்தை தொழிலாகக் கொள்வதற்கான எந்தத் திட்டங்களும் பால்ய வயதில் என்னிடம் எழவில்லை. குடும்ப சூழல் காரணமாக ஆரம்பத்தில் ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே சமயம் கம்பீரமான உருவங்கள் மீது எப்போதும் எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் பாரதி, சுபாஷ் சந்திர போஸ், விவேகானந்தர் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்தார்கள். பாரதியின் கவிதைகள் தான் எனக்குள் பொரியைக் கிளப்பியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். பாரதி அளவுக்கு பெருங்கோபம் என்னிடம் இல்லை என்றாலும், கொஞ்சமே சீரியஸான ஆள் நான். பொது இடங்களில் ஈவ் டீசிங் மாதிரியான கொடுமைகள் நடந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காமல் தட்டிக் கேட்பேன்.

பாரதியின் கவிதைகளைத் தொடர்ந்து அதே ஆர்வமுடன் மற்ற கவிதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் எமிலி டிக்கன்சன், ராபர்ட் ஃபிராஸ்ட் ஆகியோர் என்னை மிகவும் பாதித்தவர்கள். ஆக்ஸ்போர்ட் புக் ஸ்டோர்.கம் என்கிற இனைய தளம் ஆங்கிலத்தில் ஒரு ஹைகூ கவிதைப் போட்டி நடத்தியது. அப்போதுதான் முதன் முதலாக ஒரு ஹைகூ எழுதி அனுப்பி வைத்தேன். தேர்வாகி விட்டது. அன்றிலிருந்து எழுத்து எனக்கு சாப்பாடு தூக்கம் போல ஆகிவிட்டது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத முடியும் என்பதை என் கூடுதல் பலமாகக் கருதுகிறேன். தற்போதைய தொகுப்பு நட்பு என்றாலும் அடுத்தடுத்த என் அனுபவங்களைப் பொறுத்து கவிதைத் தளம் விரிவடையும்.

உங்கள் கவிதைகளில் நட்புக்கும், காதலுக்கும் இடையில் ஊசலாடுவது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறதே. ஆண், பெண் நட்பில் இப்படியான சிக்கல் தவிற்க முடியாத ஒன்றாகக் கருதலாமா?

சமூகம் என்ன சிந்தனையில் கிடக்கிறதோ அதே நினைப்பில் கேள்வி கேட்கிறீர்கள். என்னுடயது நட்பு மட்டும்தான். நீங்களும் நானும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தால் பலரும் பலவிதமாய் பார்க்கத் தான் செய்கிறார்கள். கெமிஸ்ட்ரி என்பது எல்லோருடனும் சாத்தியமில்லை. நம்மைக் காதலர்கள் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் மனம்தான் நாறிக் கிடக்கிறது. மஞ்சற் காமாலை வந்தவர்களுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

சென்னையைப் பொறுத்த மட்டில் நம்மைப் போன்ற நன்பர்களுக்கு பிரச்னை இல்லை. அவரவர்களுக்கு ஆயிரம் வேலை. ஆனால் கிராமங்களில் இப்பிரச்னை பூதாகரமானதாக உள்ளது தெரியும். சகோதரி முறை உள்ளவர்களிடம்கூட வெளிப்படையாக பேசுவதில் சங்கடம் உள்ளது. இந்த அதரப் பழசான பொதுப்புத்தி மாற வேண்டுமானால் பழைய பஞ்சாங்கங்களை (சந்தேக புத்திக்காரர்கள்) புதுப்பிப்பதை விட்டுவிட்டு இளைய தலைமுறை நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இவர்கள்தான் வருங்கால மூத்தத் தலைமுறையினர். அதற்கான முயற்சியாகவே எனது கவிதைத் தொகுப்பைக் கருதுகிறேன். ரத்த சம்பந்தமில்லாத ஆண், பெண்ணுக்கு இடையில் வெளிப்படையான உறவுமுறைகள் என்று சாத்தியமாகிறதோ அன்றைக்கு இந்த சமுதாயம் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு வாழும்.

தற்போது பெண் கவிஞர்கள் சர்ச்சைகளில் அடிபடுவது வாடிக்கையாகி விட்டது. "அதெல்லாம் கவிதையே அல்ல. பார்வை தங்கள் மீது திரும்புவதற்கான முயற்சியின் விளைவு" என்ற விமர்சனம் சிலரால் முன் வைக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?

எந்த ஒரு முத்திரையும் என் மீது குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. கவிதை என்பது சர்ச்சைகளின் உலகமாக இருக்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கிறது. வெளிப்படுத்துவது அவர்களுடைய சுதந்திரம். அதே சமயம் விமர்சனங்களை தவிர்க்க முடியாது என்பதால் அதையும் ஏற்றுக் கொள்கிற மனோபாவமும் தேவைப்படுகிறது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுதுவேன். முதலில் எனக்கான விஷயங்கள். எதிர் காலம் என்னவென்பதை இப்போது யாராலும் தீர்மானிக்க முடியாது.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், குறும்படங்களில் நடிப்பு என்ற அனுபவங்கள் மூலம் சினிமா குறித்த உங்கள் பார்வை எப்படி இருக்கிறது. சினிமாவில் முழுநேர கதாநாயகியாக இருக்கப் போவதில்லை என்றாலும் இயக்குநர் கனவு இருக்குமே?

டெக்னிக்கலான பார்வையோடு சினிமாவைப் பார்த்தாலும் பொழுதுபோக்கையும் மறந்துவிடவில்லை. எனக்கு மொழியும் பிடித்திருக்கிறது, போக்கிரியும் பிடித்திருக்கிறது. பாடல்கள், நடனம், டப்பிங், ரீரெக்கார்டிங் என்று எல்லா விஷயங்களையும் கவனிக்கத் தவறுவதில்லை. பாடல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது மெட்டுக்கு ஏற்ற மாதிரி டூப்ளிகேட் போட்டுப் பார்ப்பேன். பாய்ஸ் படத்தில் வரும் 'எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா' பாடலை 'எனக்கொரு பாய் ஃபிரண்ட் வேணுமடா' என்று முழுவதும் மாற்றி வைத்திருக்கிறேன். எனக்குள்ளும் ஒரு குட்டி டைரக்டர் ஓடிக்கொண்டிருக்கிறார். அவரால் குறும்படங்களைத்தான் இயக்க முடியும். ஆனால் சினிமாவுக்கு பாடல் எழுதுவதை இப்போதே சிறப்பாக செய்ய முடியும்.

'எழுத்து, நடிப்பு' என்று ஆகியிருக்காவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்? அழகான முக வடிவம், நல்ல குரல்வளம் இரண்டும் உள்ளதே. டி.வி. தொகுப்பாளினியாக முயற்சிக்கவில்லையா?

எனக்கு தமிழை பிழையின்றி சுத்தமாகப் பேசத் தெரியும். அங்கே தப்புத் தப்பாய் பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அது என்னால் முடியாது. "ரேடியோ ஜாக்கி' ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெயர் சொல்ல விரும்பவில்லை. ஒரு ரேடியோ நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். தேர்வு செய்யும் குழுவில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு சுத்தமாக தமிழே தெரியாது. தமிழில் ஒலிபரப்பாக வேண்டிய ஒரு நிகழ்ச்சிக்கு தமிழே தெரியாத ஆசாமிகள்(நார்த் இண்டியன்ஸ்) உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கேள்வி கேட்பதோடு இல்லாமல் தமிழர்களைக் குறித்த இளக்காரப் பார்வையும் அவர்களிடம் இருந்தது. என்னிடம் நிறைய தமிங்கிலீஷ் பேச வேண்டுமென எதிர்பார்த்தார்கள். எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரம் வேலை பார்த்தாலே என்னால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். என்னை மறைத்துவிட்டு வேறொரு ஆளாக நீடிக்க முடியாது எனக்கூறி கடுமையாக சண்டை போட்டுவிட்டு வந்தேன்.

ஒரு இன்ஸ்டன்ட் கவிதை சொல்லுங்கள்?

இன்ஸ்டன்ட் காபி வேணும்னா கேளுங்க. ஹபிபுல்லா ரோட்ல கிளாசிக் கார்னர்னு ஒரு டீக்கடை இருக்கு. அங்கதான் என் ஃபிரண்ட்ஸோட 'டீ' அடிக்கிறது வழக்கம். என்னமோ... ஒரு பாட்டுப் பாடுங்க, ஒரு டான்ஸ் ஆடுங்கன்னு கேட்பது போல் கேட்கறீங்க. இயந்திரம் மாதிரி எங்க வச்சாலும் என்னால் கவிதை எழுத முடியாது. கவிதை என்பது மனசு மாதிரி. ரொம்ப லெக்சர் கொடுக்கிறேனோ! கூல் டவுன்மா. உங்களுக்காக மனசு பற்றி ஒரு கவிதை.

"நீள்வட்டம் பழுப்பு மஞ்சள்
சருகுகள் சப்தம் செய்கின்றன
அவற்றின் உணர்வுகளும் உலர்ந்ததாலா?"

Monday, March 3, 2008

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா? -மீண்டும் மோக‌ன்!


மோகன் பாடல்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காதல் கடிதங்களில்கூட அவரது பாடல்களை காப்பியடித்து கவிதை என்று சக்சஸ் செய்து கொண்டவர்கள் ஏராளம். சி.டி விற்கும் சின்ன பிளாட்பாரக் கடைகள் கூட மோகன் ஹிட்சை தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது. பரபரப்புகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியை நாடுகிற போது ''மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேட்குதா... கேட்குதா...'' என்று கேட்க நேர்ந்தால் அவ்வளவு சுகமாக இருக்கிறது!

தமிழ் சினிமாவின் வரலாற்றில், தமிழகத்தின் காதல் இதயங்களில் மோகனுக்கென்று தனித்த இடம் உண்டு. என்ன ஆனதென்றே தெரியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாம் வலி நிறைந்தவை. ஒரு வழியாக சுட்டபழம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளவரை சந்தித்த போது, எதுவுமே மாறவில்லை. அதே முகம், அதே சிரிப்பு,அதே இளமை என்று அன்று பார்த்த மோகன் மாதிரியே இருக்கிறார்.

என்ன ஆச்சு, ஏன் இந்த இடைவெளி?

"நிறைய உழைச்சிட்டேங்க. சராசரியா என்னுடைய உடல்நிலையை மீறி ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்திருக்கேன். ஒரு வருஷத்தில் மட்டும் பத்தொன்பது படங்கள் ரிலீசாகியிருக்கு. எல்லாமே வெற்றியா இருந்ததால சோர்வோ, அலுப்போ தெரியலை. 'அப்பாடா... போதுமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்'னு நேனச்சேன் பாருங்க! அங்க விழுந்த இடைவெளிதான். மாசம் வருஷமாச்சு, வருஷம் பல வருஷமாச்சு.

இடையில் என்னவெல்லாமோ நடந்து, என்னைப் பற்றி இஷ்டத்திற்குமான வதந்திகள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்கவில்லை. ஆனாலும் இட்டுக்கட்டப்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளால், மாலையும் கையுமாக என் வீட்டிற்கு வந்து நின்றார்கள். நினைத்துப் பாருங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும் போதே 'நீ செத்துப் போய்ட்டியாமே' என்று வந்து நின்றால் சம்பந்தப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும்? நான் மட்டுமில்லாமல் என் குடும்பமே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதிலிருந்து மீள்வதற்கே இரண்டு வருடங்கள் பிடித்தது. இதற்கு செத்துப் போவதே மேல் என்று சொல்லலாம்.

'தூங்கும் போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துப் போய்ட்டான்னு சொல்லி அடக்கம் பண்ணிடுவானுங்க'ன்னு சொல்வாங்க. அது என் வாழ்கையில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட சில இடங்களிலேயே என்னைப் பார்த்த சிலர், 'ஏம்பா மோகன் செத்துப் போய்ட்டார்'னு சொன்னாங்க. இந்த ஆளப் பாத்தா அவர் மாதிரியே தெரியுதே'ன்னு என் காதுபடவே பேசினாங்க.

இடைவெளின்னு சொல்றீங்க. என்ன தான் செஞ்சிட்டு இருந்தீங்க. அவ்வளவு நாளும் சும்மாவே இருந்தீங்களா?

நான் எங்கங்க சும்மா இருந்தேன். சொன்னா நம்புவீங்களா! 'சிவிக் சினிமா'ங்கற பேர்ல சொந்தமா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்திருக்கேன். 'அச்சம் மடம் நானம், பிருந்தாவனம், தெலுங்கு சன் நெட் ஒர்க்கில் ஹாஸ்ய ராமாயணம், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பகும் செல்வங்கள்' எல்லாமே என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். மோகன் என்கிற பெயரை யூஸ் பண்ண வேண்டாமே'ன்னு நெனச்சு இதை விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸோடுகளை எனது நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதால் மீண்டும் வெளிப்படும் போது ஜெயித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இடையிடையே வந்து போன சில ஸ்கிரிப்டுகளும் திருப்தியாக அமையவில்லை. அந்த நேரத்திலும், என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்தேன். எதிர்பாராத காரணங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெரியதிரைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 'பெருசு' பட இயக்குநர் ஜி.கே கிடைத்தார். எனக்கும் அவருக்குமான அலைவரிசை பிரமாதமாக ஒத்துப் போனது.

'சுட்டப்பழம்'னு ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தை செஞ்சுக்கிட்டிருக்கோம். என்னால அடிச்சு சொல்ல முடியும். சமீபத்தில் இந்த மாதிரி ஒரு படம் வெளிவந்ததில்லை என்று. ரொம்ப வேகமான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் நிச்சயம் இது வெற்றிபெறும்.

ஒவ்வொரு நாளும் பாடல்கள் வழியே மறக்க முடியாத நடிகராக நிலைத்துவிட்டீர்கள். ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதற்கு பாடல்கள் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

பார்க்காத நேரங்களில்கூட பாடல்கள் தாலாட்டுகின்றன என்பது உண்மை தான். ஆனால் என்னுடைய வெற்றிக்கு வெறும் பாடல்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், நான் நன்றாக நடிக்கவில்லையா என்ன? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு படத்திற்கான வெற்றி என்பது அதன் கதையில் தான் அடங்கியிருக்கிறது.

முதல்ல படம் நல்லா இருக்கணும். அதோட சேர்ந்து பாடல்களும் பிரமாதமா அமைஞ்சதுன்னா அது சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்கள்ல நீங்க பார்க்கிற மோகன் மாதிரி இல்லாமல் 'விதி, நூறாவது நாள்'னு வில்லத்தனமான ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் என்ன காரணம்? அது நல்ல படம் என்பது தான். அதைவிட முக்கியம் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. வெற்றி என்பதின் பங்கு அதில் பணியாற்றிய எல்லாருக்குமானது.
உங்கள் ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள். காதல் கடிதங்கள் வந்ததுண்டா?

இன்றுகூட வெளிநாடுகளிருந்து ரசிகர்கள் பேசினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிஃப்ட் பார்சலே வீடு தேடி வந்தது. நம்பரை எப்படித்தான் பிடிக்கிறார்களோ! இண்டர்நெட்டில் 'சுட்டப்பழம்' பற்றி தகவல் பார்த்தார்களாம். 'சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க சார்!'னு கேட்கிறாங்க. என் ரசிகர்களைப் பொறுத்த அளவில் நானும் அவர்களை மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கவில்லை.

காதல் கடிதங்களைப் பற்றிச் சொல்வதென்றால் அதை யார் எழுதினார்களோ அவர்கள் என்மீது தன்னையறியாமல் கொண்ட அன்பினால் ஆனது. அதை விளம்பரப்படுத்தி கொச்சைபடுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயம் நீங்கள் 'ரீ-எண்ட்ரி' ஆகும் போது இளையராஜாவுடன் வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இளையராஜாவோ, எஸ்.பி.பி.யோ! இன்னும் யார் யாரெல்லாம் உங்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களோடு இனைந்த அந்தக் கூட்டணி எப்போது சாத்தியம்?

அப்படி ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இருக்குமானால், அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. என்றாலும் சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டுமே! நான் வெறும் நடிகன் மட்டும்தான். என்னைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தேதிகள் ஒத்துவர வேண்டும்.

எனக்காக இளையராஜா மீண்டும் இசையமைப்பதோ, எஸ்.பி.பி மீண்டும் பின்னணி பாடுவதோ நடக்கும் என்றால், அதைவிட சந்தோஷமான தருணம் வேறெதுவும் இருக்க முடியாது. இது ஆண்டவன் நினைத்தால், அவனோடு என் ரசிகர்களும் நினைத்தால் நிச்சயம் முடியும் என்று நினைக்கிறேன்.