Monday, March 3, 2008

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா? -மீண்டும் மோக‌ன்!


மோகன் பாடல்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? காதல் கடிதங்களில்கூட அவரது பாடல்களை காப்பியடித்து கவிதை என்று சக்சஸ் செய்து கொண்டவர்கள் ஏராளம். சி.டி விற்கும் சின்ன பிளாட்பாரக் கடைகள் கூட மோகன் ஹிட்சை தவிர்த்து வியாபாரம் செய்ய முடியாது. பரபரப்புகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியை நாடுகிற போது ''மலையோரம் வீசும் காத்து, மனசோடு பாடும் பாட்டு கேட்குதா... கேட்குதா...'' என்று கேட்க நேர்ந்தால் அவ்வளவு சுகமாக இருக்கிறது!

தமிழ் சினிமாவின் வரலாற்றில், தமிழகத்தின் காதல் இதயங்களில் மோகனுக்கென்று தனித்த இடம் உண்டு. என்ன ஆனதென்றே தெரியவில்லை, சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். எல்லாம் வலி நிறைந்தவை. ஒரு வழியாக சுட்டபழம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளவரை சந்தித்த போது, எதுவுமே மாறவில்லை. அதே முகம், அதே சிரிப்பு,அதே இளமை என்று அன்று பார்த்த மோகன் மாதிரியே இருக்கிறார்.

என்ன ஆச்சு, ஏன் இந்த இடைவெளி?

"நிறைய உழைச்சிட்டேங்க. சராசரியா என்னுடைய உடல்நிலையை மீறி ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை செய்திருக்கேன். ஒரு வருஷத்தில் மட்டும் பத்தொன்பது படங்கள் ரிலீசாகியிருக்கு. எல்லாமே வெற்றியா இருந்ததால சோர்வோ, அலுப்போ தெரியலை. 'அப்பாடா... போதுமே! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்'னு நேனச்சேன் பாருங்க! அங்க விழுந்த இடைவெளிதான். மாசம் வருஷமாச்சு, வருஷம் பல வருஷமாச்சு.

இடையில் என்னவெல்லாமோ நடந்து, என்னைப் பற்றி இஷ்டத்திற்குமான வதந்திகள். நான் யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்கவில்லை. ஆனாலும் இட்டுக்கட்டப்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளால், மாலையும் கையுமாக என் வீட்டிற்கு வந்து நின்றார்கள். நினைத்துப் பாருங்கள். ஒருவன் உயிருடன் இருக்கும் போதே 'நீ செத்துப் போய்ட்டியாமே' என்று வந்து நின்றால் சம்பந்தப்பட்டவனின் மனநிலை எப்படி இருக்கும்? நான் மட்டுமில்லாமல் என் குடும்பமே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதிலிருந்து மீள்வதற்கே இரண்டு வருடங்கள் பிடித்தது. இதற்கு செத்துப் போவதே மேல் என்று சொல்லலாம்.

'தூங்கும் போதுகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும். இல்லைன்னா செத்துப் போய்ட்டான்னு சொல்லி அடக்கம் பண்ணிடுவானுங்க'ன்னு சொல்வாங்க. அது என் வாழ்கையில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட சில இடங்களிலேயே என்னைப் பார்த்த சிலர், 'ஏம்பா மோகன் செத்துப் போய்ட்டார்'னு சொன்னாங்க. இந்த ஆளப் பாத்தா அவர் மாதிரியே தெரியுதே'ன்னு என் காதுபடவே பேசினாங்க.

இடைவெளின்னு சொல்றீங்க. என்ன தான் செஞ்சிட்டு இருந்தீங்க. அவ்வளவு நாளும் சும்மாவே இருந்தீங்களா?

நான் எங்கங்க சும்மா இருந்தேன். சொன்னா நம்புவீங்களா! 'சிவிக் சினிமா'ங்கற பேர்ல சொந்தமா ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களுக்கு தயாரிப்பாளரா இருந்திருக்கேன். 'அச்சம் மடம் நானம், பிருந்தாவனம், தெலுங்கு சன் நெட் ஒர்க்கில் ஹாஸ்ய ராமாயணம், இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பகும் செல்வங்கள்' எல்லாமே என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். மோகன் என்கிற பெயரை யூஸ் பண்ண வேண்டாமே'ன்னு நெனச்சு இதை விளம்பரப்படுத்தவில்லை.

இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸோடுகளை எனது நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டதால் மீண்டும் வெளிப்படும் போது ஜெயித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. இடையிடையே வந்து போன சில ஸ்கிரிப்டுகளும் திருப்தியாக அமையவில்லை. அந்த நேரத்திலும், என்னுடைய இயக்கத்தில் ஒரு படம் செய்தேன். எதிர்பாராத காரணங்களால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெரியதிரைக்காக நான் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் 'பெருசு' பட இயக்குநர் ஜி.கே கிடைத்தார். எனக்கும் அவருக்குமான அலைவரிசை பிரமாதமாக ஒத்துப் போனது.

'சுட்டப்பழம்'னு ஒரு சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தை செஞ்சுக்கிட்டிருக்கோம். என்னால அடிச்சு சொல்ல முடியும். சமீபத்தில் இந்த மாதிரி ஒரு படம் வெளிவந்ததில்லை என்று. ரொம்ப வேகமான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பதால் நிச்சயம் இது வெற்றிபெறும்.

ஒவ்வொரு நாளும் பாடல்கள் வழியே மறக்க முடியாத நடிகராக நிலைத்துவிட்டீர்கள். ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதற்கு பாடல்கள் காரணம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

பார்க்காத நேரங்களில்கூட பாடல்கள் தாலாட்டுகின்றன என்பது உண்மை தான். ஆனால் என்னுடைய வெற்றிக்கு வெறும் பாடல்கள் மட்டுமே காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியென்றால், நான் நன்றாக நடிக்கவில்லையா என்ன? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு படத்திற்கான வெற்றி என்பது அதன் கதையில் தான் அடங்கியிருக்கிறது.

முதல்ல படம் நல்லா இருக்கணும். அதோட சேர்ந்து பாடல்களும் பிரமாதமா அமைஞ்சதுன்னா அது சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்கள்ல நீங்க பார்க்கிற மோகன் மாதிரி இல்லாமல் 'விதி, நூறாவது நாள்'னு வில்லத்தனமான ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் என்ன காரணம்? அது நல்ல படம் என்பது தான். அதைவிட முக்கியம் சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. வெற்றி என்பதின் பங்கு அதில் பணியாற்றிய எல்லாருக்குமானது.
உங்கள் ரசிகர்கள் எப்படி இருக்கிறார்கள். காதல் கடிதங்கள் வந்ததுண்டா?

இன்றுகூட வெளிநாடுகளிருந்து ரசிகர்கள் பேசினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிஃப்ட் பார்சலே வீடு தேடி வந்தது. நம்பரை எப்படித்தான் பிடிக்கிறார்களோ! இண்டர்நெட்டில் 'சுட்டப்பழம்' பற்றி தகவல் பார்த்தார்களாம். 'சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணுங்க சார்!'னு கேட்கிறாங்க. என் ரசிகர்களைப் பொறுத்த அளவில் நானும் அவர்களை மறக்கவில்லை, அவர்களும் என்னை மறக்கவில்லை.

காதல் கடிதங்களைப் பற்றிச் சொல்வதென்றால் அதை யார் எழுதினார்களோ அவர்கள் என்மீது தன்னையறியாமல் கொண்ட அன்பினால் ஆனது. அதை விளம்பரப்படுத்தி கொச்சைபடுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

நிச்சயம் நீங்கள் 'ரீ-எண்ட்ரி' ஆகும் போது இளையராஜாவுடன் வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும். இளையராஜாவோ, எஸ்.பி.பி.யோ! இன்னும் யார் யாரெல்லாம் உங்களுக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களோடு இனைந்த அந்தக் கூட்டணி எப்போது சாத்தியம்?

அப்படி ஒரு எதிர்பார்ப்பு உங்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ இருக்குமானால், அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. என்றாலும் சந்தர்ப்பம் சரியாக அமைய வேண்டுமே! நான் வெறும் நடிகன் மட்டும்தான். என்னைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தேதிகள் ஒத்துவர வேண்டும்.

எனக்காக இளையராஜா மீண்டும் இசையமைப்பதோ, எஸ்.பி.பி மீண்டும் பின்னணி பாடுவதோ நடக்கும் என்றால், அதைவிட சந்தோஷமான தருணம் வேறெதுவும் இருக்க முடியாது. இது ஆண்டவன் நினைத்தால், அவனோடு என் ரசிகர்களும் நினைத்தால் நிச்சயம் முடியும் என்று நினைக்கிறேன்.

1 comment:

Anonymous said...

நானும் கேள்விபட்டேன் மோகன் ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைப்பதாக அதை நம்பவும் செய்தேன், பலமுறை கேட்டதால்.

அவர் சொன்னது சரிதான் கால் ஆட்டிக்கிட்டே தூங்கனும் போல