Saturday, January 13, 2007

அம்மு என்கிற விபச்சாரியும், இமேஜ் பார்க்கிற நடிகைகளும் -இயக்குநர் ப‌த்மாம‌க‌ன்.








அம்முவாகிய நான்'' படத்திற்காக நடிகை பாரதிக்கும், பார்த்திபனுக்கும் மரக்காணம் அருகே ஆலம்பரைக் கோட்டையில் ரொமான்ஸ் நடந்து கொண்டிருந்தது. ''இது 'அம்மு' என்கிற விலை மாதுவின் சுயசரிதையா?'' என்றேன் படத்தின் இயக்குனர் பத்மாமகனிடம்.

''இது அம்மு என்பவளின் சுயசரிதையும் இல்லை, தனிப்பட்ட ஒருத்தியின் சுயசரிதையும் இல்லை. சிவப்பு விளக்கைப் பற்றி இதுவரை சினிமாவில் என்னென்ன பார்த்திருக்கிறீர்கள்? அதையெல்லாம் தாண்டி ரொம்ப ஆழமாக எவ்வளவு முடியுமோ அந்தளவு ஊடுருவிப் பார்க்கிற சினிமா. ஆனால் உருவிப் பார்க்கிற சினிமா இல்லை'' என்று வித்தியாசமாய் பதில் தந்தார்.

''ரொம்ப வித்தியாசமான திரைப்படம்'னு சொல்ல வர்றீங்க?''

''எல்லாரும் வித்தியாசம் வேணும்னு தான் விரும்புறாங்க, ஆனா அப்படி எடுக்கும் போது யாரும் ஒத்துழைப்பதில்லை. நீங்க கதையைப்பத்தி கேக்கறீங்க இல்லையா? அதைவிட இந்த கதைக்காக நடிகைகளிடம் நான் பட்ட கஷ்டத்தை கேளுங்க. அதையே ஒரு திரைப்படமா எடுக்கலாம்'' என்று ஆரம்பித்தார்.

''சிம்ரன்'ல இருந்து 'சந்தியா' வரைக்கும் எல்லா முன்னனி நடிகைங்க கிட்டயும் இந்த கதைய சொல்லிட்டேன். ஊட்டியில வச்சி சிம்ரன்கிட்ட சொன்னபோது ரொம்ப சீரியஸா கதை கேட்டவங்க, பயங்கரமா இம்ப்ரஸ் ஆயிட்டாங்க. ''சார்! இந்த கேரக்டரை நான் சரியா செஞ்சிட்டேன்னா நிச்சயமா எனக்கு நேஷனல் அவார்டு தான்''னு சொன்னாங்க.

அடுத்து முக்கியமானவங்க நந்திதா தாஸ். அவங்க கிட்ட கதையை 'இ' மெயிலில் சொன்னப்போ ''சார் நான் இப்போ ஹனிமூன்'ல இருக்கேன்''னு பதில் வந்தது. சிம்ரனுக்கு நடிக்க ஆசை இருந்தாலும் அவங்களுக்கும் கல்யாணப் பிரச்சினை.

காதல் சந்தியாவுக்கு நானே வீடு தேடிப்போய் இந்த கதையைச் சொன்னேன். நான் கதையைச் சொல்லச் சொல்ல, கூட இருந்த அவங்க அம்மாவுக்கு முகமெல்லாம் மாறிப் போச்சு. ''அம்மா! சொல்லும் போதுதான் செக்ஸ் டாமினேஷன் இருக்கும். அனா படத்துல வராதுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்... சந்தியா மட்டும் ''சார் நான் இந்தக் கதைய தாங்குவேனா? அந்தளவுக்கு எனக்கு கெப்பாசிடி இருக்கா?ன்னு கேட்டு வியந்தாங்க. அதைவிட பயந்தாங்கன்னு சொல்லலாம்.

பெயர் வேண்டாம், அந்த நடிகைகிட்ட சொன்னபோது ''சாரி சார்! எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. நான் அதை கெடுத்துக்க விரும்பலை'' என்றார். இதே நடிகை பிறகு இன்னொரு இயக்குனரின் படத்துல விபச்சாரியா நடிச்சாங்க! அப்ப எங்க போச்சு அந்த இமேஜ்'னு தெரியலை!

இன்னொரு நடிகைகிட்ட சொன்னப்போ, ''அந்தம்மா சொன்னாங்க [அவங்க இப்போ அம்மா என்கிறார்] இதே கதையை பாலுமகேந்திரா எடுத்தா நான் நடிப்பேன். ஆனா நீங்க எப்படி'ன்னு எனக்கு தெரியாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இவ்வளவு ஏங்க? 'அம்மு'வுக்கு அம்மா கேரக்டர், அவங்களோட சப்போர்டிங் கேரக்டர் என்று எல்லாருமே ''சாரி! எனக்குன்னு இருக்கிற இமேஜை விட்டுட்டு வரமுடியாது'''ன்னு கூறி நான் யார் யாரை மனசில வச்சிருந்தேனோ அவங்க அத்தனை பேருமே மறுத்துட்டாங்க. இமேஜை காரணம் காட்டிய அந்த அம்மா நடிகை அறிமுகமானதே விபச்சாரி கேரக்டர்லதான்.

நான் என்ன அவ்வளவு கேவலமான படத்தை எடுக்கிறவனா? பார்த்திபன் சார், மகாநதி, ரமணா, தவமாய் தவமிருந்து படங்களின் காமிராமேன் பிரபு இனங்கள்லாம் என்னை விட்ருவாங்களா? இவங்கள்லாம் ஒத்துக்கிட்டதே இந்த கதைனாலதானே! நடிப்பை நடிப்பாய் பார்க்கக் கூடிய நட்சத்திரங்கள் இங்கே இல்லை என்று ரொம்ப‌வே ஆவேச‌ப்ப‌ட்டார் ப‌த்மாம‌க‌ன். நியாமான‌ ஆவேச‌ம் தான்.

''ஆபாசமாய் இருந்திடும்னு பயப்படுறாங்களாம்! நீங்க வேணா பாருங்க. தொட்ட விஷயம் விபச்சாரம்'னாலும் படத்துக்கு சர்டிபிகேட் வாங்கியே தீருவேன்'' என்று சவால் விட்டு தொடர்ந்தவர்.

''நம்பள எப்படா இந்த விளையாட்டுல சேத்துக்கப் போறாங்க!''ன்னு ஏங்கி, [இப்படி ஒரு டயலாக்கே இருக்கு] விபச்சாரத்தை சந்தோஷமாய் ஏத்துக்கிட்டு தாசியாய் மாறிப்போகிற ஒருத்தியின் வாழ்க்கை தான் அம்முவாகிய நான். இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் இந்தளவு அதன் அறைகளுக்குள் நுழைந்திருக்காது. இதுக்கு மேல நீங்க இந்த கதைக்கு ஒத்துக்கிட்ட பாரதி, நடிகர் பார்த்திபன், காமிராமேன் பிரபு கிட்ட கேளுங்க, அவங்க சொல்லட்டும் என்று முடித்துக் கொண்டார்.

கடலுக்குள் இருந்து கவர்ச்சியான உடையில் கண்ணைக் கூசுகிற மாதிரி [கான்ல்டாக்ட் லென்ஸ்] வந்தார் அம்முவாகிய பாரதி. எப்படி இந்த கேரக்டரை ஒத்துக்கிட்டீங்க?ன்னு கண்ணைப் பார்க்காமலே கேட்டோ ம்.

மூன்று நாள் தூக்கமே இல்லை, இந்த கதையைக் கேட்டு. கேட்க்கும் போதே மனதுக்குள் நடிக்கத் தொடங்கிவிட்டேன். இமேஜ்'லாம் தூக்கிக் குப்பைல போடுங்க. நல்ல கதையை செலக்ட் பண்ணா எல்லா ஹீரோயினும் நிப்பாங்க.
தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம்'னு பதினோரு படங்களை இதுக்காகவே கமிட் ஆகலை. என்னா இதுல எனக்கு அவ்ளோ பெரிய ஸ்கோப் இருக்கு. பார்த்திபன் சாரை விட எனக்குத்தான் ரோல் அதிகம். சீனியர் ஆர்ட்டிஸ்டோ ட சேர்ந்து நடிச்சா அவ்ளோதான் என்பதெல்லாம் இந்த படத்துக்குப் பிறகு உல்டா ஆயிடும்'' என்று அனுபவம் பேசினார் பாரதி.

நீங்க‌ பாக்கிற‌துக்கு மீனா மாதிரியே இருக்கீங்க‌. யாராவ‌து சொல்லியிருக்காங்க‌ளா? மீனாவுக்கான இடம் இன்னும் காலியாகத்தானே இருக்கு என்றேன்.

எல்லாரும் அப்ப‌டித்தான் சொல்றாங்க‌. சில‌ பேர் ரூபினி மாதிரி இருக்க‌, ரேகா மாதிரி இருக்க‌'ன்னும் சொல்றாங்க‌. அதெல்லாம் அவ‌ங்க‌வ‌ங்க‌ க‌ண்ணைப் பொருத்த‌து. என‌க்குக் கூட‌த்தான் சில‌ பேரை ஷாருக்கான் மாதிரி தெரியுது. ஆனா உண்மை அது இல்லையே! நான் நானாக‌த்தான் இருக்கிறேன். இருக்க‌வும் விரும்புகிறேன். ஒரு வேளை நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி இத்த‌னை ந‌டிகைக‌ளின் கேர‌க்ட‌ர் என‌க்குள் இருந்தால் அதுவும் ஒரு பிள‌ஸ் பாயின்ட் தானே!

ச‌ரி, எல்லா ந‌டிகைங்க‌ கிட்டேயும் கேட்கிற‌ கேள்விதான். நீங்க‌ள் கிளாம‌ராக‌ ந‌டிப்பீர்க‌ளா? கிளாம‌ர் எல்லோருக்கும் பிடித்திருக்கிற‌து என்று தான் நினைக்கிறேன்.

''ஆரம்பத்தில் கிளாமர் கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் இதில் கிளாமர், ஹோம்லி, குறும்பு என்று விதவிதமான ரியாக்ஷன்கள். இதை வேண்டாமென்று மறுத்தவர்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். அது தான் என்னோட குட்லக். சிம்ரன் எதிர்பார்த்த நேஷ்னல் அவார்ட் எனக்கு கெடச்சதுனா அதை டைரக்டர்கிட்டயே திருப்பி தந்துடுவேன். ஏன்னா, இது அவரோட 16 வருட பிரசவம்.

ஓகே! நீங்க‌ எப்ப‌டி ந‌டிச்சிருக்கீங்க‌? உங்க‌ அனுப‌வ‌த்தைப் ப‌ற்றிச் சொல்லுங்க‌.

டிரஸ், மேக்கப், லொகேஷன் என்று எல்லாமே 'லைவ்' இதுல. ஓவ்வொரு சீன்லயும் அனுபவிச்சு நடிச்சிருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க! இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு டைரக்டர் கிட்டயிருந்து எனக்கு கிடைச்சிருக்கு.அதாவது ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் வந்து மானிட்டரை பார்க்க எனக்கு அனுமதி கொடுத்தார். என்னை எப்படி காட்டியிருக்காங்க என்பதை தெரிந்து நடிப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை.படம் எடுக்கிறேன்'ன்னு என் உடம்பை எடுத்து விடுவார்களோ என்கிற பயம் இருக்குமில்ல? ஏன்னா, நானே வீட்ல சண்டை போட்டுக்கிட்டு வந்து நடிக்கிற படம் இது.நாளப் பின்ன என் ஃபிரண்ட்ஸ், ரிலேஷன்ஸ் எல்லோர் முகத்திலயும் முழிக்கனும் இல்ல?

அதோட, படத்துல நானும், பார்த்திபன் சாரும் வாய்திறந்து பாடவே மாட்டோம். ஆனாலும் நாலு பாட்டு இருக்கு. பாட்டுக்கு நீங்க தம் அடிக்க எழுந்திரிச்சா படம் புரியாது. ஏன்னா பாடல்லயே கதை இருக்கு. அதைவிட காதல்'னா என்னன்னு நெஜமாவே இந்த படத்திலர்ந்து தெரிஞ்சிக்கிட்டேன். இந்த ஸ்கிரிப்ட் என் பர்ஸனல் லைஃபுக்கே யூஸ்புல்லா இருக்கும். எந்த பருவத்தில், எதன் பிறகு காதல் வந்தால் அது உண்மை என்பது படம் வந்த பிறகு பாருங்கள். டீட்டெய்லா தகவல் வேனும்னா பார்த்திபன் சார்கிட்ட கேளுங்க. அவர்தான் காதல் ஸ்பெஷலிஸ்ட். அம்பது வயசு பொம்பளைக்கு வர்ரது தான் உண்மையான காதல்'னு ஏதோ ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார். வேணும்னா அவர்கிட்டயே கேளுங்க''ன்னு பார்த்திபனைக் கையைக் காட்டினார் பாரதி.

''காமம் முடிந்த பிறகு வருவது தான் உண்மையான காதல்'' என்று கிறுக்கலாய் ஆரம்பித்த பார்த்திபன், 'காதலை உடைத்துப் பார்த்தால் காமம் என்கிற விதை இருக்கும். அனால் காமத்தை விதைத்துப் பாருங்கள் அதில் காதல் இருக்காது. இது காமத்தை விதைத்து முளைத்த காதல்'' என்று கவிதை படித்தார்.

''அமாம்! சின்ன வயதிலேயே காமத்தையும் அதன் எல்லைகளையும் கடந்தவள் அம்மு. அவள் பார்க்காத ஆண்கள் இல்லை, அவளுக்கு உடல் சுகமும் தேவை இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருத்தனை விரும்பினால் அது தான் உண்மையான காதல். காதலின் நேர்மையான கோணம் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது. பொதுவா ஃபிலிம் ஃபெஸ்டிவ‌ல்ல‌ தான்
இந்த‌ மாதிரி ப‌ட‌த்தை எல்லாம் பார்க்க‌ முடியும்.
ஆனா எல்லோரும் பார்க்க‌னும் என்ப‌த‌ற்காக‌ இந்தப் ப‌ட‌த்தில் உழைத்திருக்கிறோம்.

மொத்தக் கதையில் பதினைந்து சதவிகிதம் தான் எனக்கு நடிக்க‌ வாய்ப்பு என்றாலும், கதைக்காக ஒத்துக் கொண்டிருக்கிறேன். செல்லிங் த நேம் என்பார்கள் [விஜய் -த்ரிஷா, ரஜினி -கமல் மாதிரி] பெயரை விற்பது. அம்முவாகிய நான் கதைக்காகவே ஆயிரம் நாள் ஓடும். மனைவியை கேவலமாக நடத்துகிற ஆண்களுக்கு மத்தியில் ஒரு விபச்சாரியை கண்ணியமாக நடத்துகிற கேரக்டர் என்னுடையது. இந்தப் படத்தில் நான் தலையைக் காட்டினாலே சந்தோஷம் தான் என்கறார் பார்த்திபன்.

சூரிய‌ன் ம‌ற‌யும் வேளையில் அந்த‌ப் பாட‌ல் காட்ச்சியை முடித்து விட்டு வ‌ந்து கொண்டிருந்தார் ஒளிப்ப‌திவாள‌ர் பிர‌பு. த‌வ‌மாய் த‌வ‌மிருந்து'வை த‌ங்க‌மாய் இழைத்த‌ கைக‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர்.

''ஒரு ஹாலிவுட் படத்துல வேலை செஞ்ச திருப்தி இருக்கு சார்''னு பதினெட்டாவது நாள் ஷூட்டிங்ல பார்த்திபன் என்னிடம் சொன்னார். நான் இந்த படத்தில வெறும் ஒளிப்பதிவாளர் இல்லை. இனை இயக்குனர்'னு சொல்லலாம். அந்தளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கார் பத்மாமகன். எனது முந்தைய படங்களைப் பார்த்துவிட்டு, ''கதையின் கூடவே நீங்கள் பயனிக்கிறீர்கள், அதனால் கண்டிப்பாய் நீங்கள் தான் வேண்டுமென்று கேட்டார். அந்த விஷயம் தான் பத்மாமகனிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே கௌரவமாய்க் கருதி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறேன். பொதுவாக ஒளிப்பதிவாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் அழகியல் சார்ந்து பதிவு செய்வார்கள். நான் அப்படி செய்வதில்லை. கதையின் ஊடாகப் பயணிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறேன்.

உணர்வுப்பூர்வமாய் என்பார்கள், அதை படம் பார்க்கும் போது உண‌ர்வீர்கள்'' என்று இயல்பாக கூறுகிறார் ஒளிப்பதிவாளர் பிரபு. அம்முவாகிய நான் விருதுக்கான படமாக மட்டுமல்லாமல் விரும்புகிற படமாகவும் இருந்தால் நல்லதே.

பேட்டி: மரக்காணம் பாலா.
படங்கள்: அம்முவாகிய நான் படத்திலிருந்து.

2 comments:

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு படத்தை பற்றிய உங்களின் அழகான கண்ணோட்டமும் பேட்டிகளும் படம் எப்பொழுது வரும் என எதிர்ப்பார்க்கவைக்கிறது.

பத்மாமகன் ஒரு நல்ல இயக்குனர். அவரது இந்த தவம் கண்டிப்பாக வெற்றியடையும்.

வாழ்த்துக்கள்.

Sivabalan said...

பேட்டிக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்!!

நன்றி!