Wednesday, November 5, 2008

‘‘மந்திரத்தால் மழை! தொடாமலே உடலைக்கீறி ஆபரேஷன்!’’ -இந்தோனேஷிய பயங்கரவாதம்.

‘‘மாசம் பதினஞ்சாயிரம் கொடுத்தாப் போதும். பருவமழை பிச்சிக்கிட்டு கொட்டும்’’ -இப்படியாக‌ சுமார் ஏழு மாதங்களுக்கு ‘மழைச் சித்தர்’ பாலகிருஷ்ணன் என்பவர் ஊர் ஊராய் கப்சா விட்டுக்கொண்டு அலைந்தார்.

‘‘இதெல்லாம் என்ன சார் மேஜிக்? இந்தோனேஷியா போய்ப் பாருங்க. மழை மேகம் ‘வா’ன்னா வரும். ‘போ’ன்னா போகும். ரிப்பேராகிப்போன உங்க வீட்டு கார், ஸ்கூட்டர், லாரி, பஸ் எதுவா இருந்தாலும் ஒரு ‘சூ மந்திரக்காளி’ போட்டா, பக்காவா ரெடியாகிடும். கத்தியில்லாம வெறுங்கையால ஆளையே தொடாம ஆபரேஷன் பண்ணுவாங்க’’ என்று தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் அம்மணி ஒருவர்.

‘‘பிசினஸ் விஷயமா பத்து வருஷங்களுக்கு மேலாக நான் குடும்பத்தோடு இந்தோனேஷியாவில் வாழ்ந்திருக்கேன். அது ஒரு முஸ்லிம் நாடுன்னாலும் பண்டைய பாரதத்தின் இந்துக் கலாச்சாரம் இன்னமும் அங்கே இருக்கு. வியாபாரத்துக்காக குஜராத்தில் இருந்து சென்ற முஸ்லிம்கள், அங்கிருந்த மன்னர்களை முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்று, மக்களும் முஸ்லிமாக மாறியிருக்கிறார்கள். ஆனால், அவர்ளின் நம்பிக்கை மாறவில்லை. அங்குள்ள இஸ்லாமியர்கள், இந்துக்களைப் போலவே செத்துப் போனவர்களுக்கு நீத்தார் கடன் செய்கிறார்கள். வெத்திலைப் பாக்கு, ஊது பத்தி ஏற்றி உறவினர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள்’’ என்று சின்ன முன்னுரை கொடுத்துவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘இந்தோனேஷியா ஒரு வளமான பூமி. அடிக்கடி அங்கே மழை பெய்றதால விவசாயம், பொது நிகழ்ச்சி எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருக்கும். கல்யாணம், பொதுக்கூட்டம், அரசு விழாக்கள், கோயில் விழாக்கள்னு மக்கள் கூடுகிற எந்த விஷேஷமா இருக்கட்டும். மழை வரும்ங்கிற சந்தேகம் இருந்தா, காசு கொடுத்து ‘பவன் ஹூஜான்’(bavang hujan) என்கிற மந்திரவாதிகளைக் கூட்டி வருவாங்க.

புகையிலை, கிராம்பு ஏற்றுமதிதான் அந்நாட்டின் முக்கியத் தொழில். கிராம்பை வைத்து ஸ்பெஷலாக வாசனை சிகரெட்டுகளை தயார் செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவடையின்போது மழை பெய்துவிட்டால், லட்சக் கணக்கில் நஷ்டமாகிவிடும். எனவே குறைந்த கூலி வாங்கிக் கொண்டு மழையை விரட்டியடிப்பது ‘பவன் ஹூஜான்’கள்தான். இவர்கள், சம்பவ இடத்தில் மந்திரங்களை ஓதி முதலில் தூய்மை படுத்துவார்கள். பிறகு வானத்தை நோக்கி கண்களைச் சுழற்றியபடி கைகளை அகல விரித்துத் தள்ளுவார்கள். என்ன ஆச்சர்யம்! திரண்டிருக்கும் மேகங்களெல்லாம் மிரண்டு ஓடிவிடும். இவையெல்லாம் நான் பார்த்து அனுபவித்த விஷயங்கள்’’ என்றவர், ஸ்பெஷலாக இந்தோனேஷிய டீ ஒன்றை எனக்காக போட ஆரம்பித்தார்.

அவர் சொல்வதை மெய்ப்பிக்கும் விதமாக, பி.பி.சி செய்தியாளரான ‘ரேச்சல் ஹார்வி’ 2003&ம் ஆண்டு இந்தோனேஷியாவில் தான் சந்தித்த ‘அபா ஹாஜி ஒதாங்’(aba haji otang) என்கிற 84 வயது ‘பவன் ஹூஜான்’ பற்றி இப்படிக் கூறுகிறார்.‘‘அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. லேசான இடியின் ஓசை வானத்திலிருந்து இறங்கும் நேரம், பவன் ஹூஜான் தன் மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்தார். அவரது பிரகாசமான கண்கள் வானத்தை உற்று நோக்கின. அகல விரிந்த அவரின் கைகள் மேலெழ, மெல்லிய குரலில் அரபு மொழியில் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். பருவநிலையும், பிராத்தனையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். வேகமாக வீசத்தொடங்கிய காற்று, மேகங்களால் இருண்டிருந்த வானத்தை வெள்ளையடிக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் பெய்து கொண்டிருந்த மழை முற்றிலும் நின்றுவிட்டது. ‘பார்த்தாயா! இப்போது ஜகார்த்தாவில் இருந்து அறுபது கி.மீ தள்ளியிருக்கும் ‘பாந்தங்’ நகருக்கு மழையை நகர்த்திவிட்டேன்’. -ஹாஜி என்னைப் பார்த்து பெருமையாக இப்படிச் சொன்னார்.

என்ன செய்ய? சில நிமிடம் கழித்து, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. நான், ‘பவன் ஹூஜாங்கின் பிரார்த்தனையைக் குலைத்துவிட்டதாக’ மக்கள் பேசிக் கொண்டார்கள். விடைபெறும்போது ஹாஜி என்னிடன் சொன்னார். ‘இந்த வாரம் கடற்படையில் பிரிவுபசார நிகழ்ச்சி ஒன்றுக்காக மழையைத் தள்ளிவைக்கப் போகிறேன். அன்று என்னோடு வருகிறாயா?’.
-சூடான டீயுடன் வந்த அம்மணி, அடுத்த அதியசத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
‘‘கெதோக் மேஜிக்’(ketok magic)னு இந்தோனேஷியா முழுக்க பளிச்னு போர்டு மாட்டிய கடைகள் இருக்கும். அவ்வளவும் நம்மூர் மெக்கானிக் ஷெட்கள் மாதிரி. ஆனா, மெக்கானிக்கும் இருக்க மாட்டார், டூல்சும் இருக்காது. பதிலாக மந்திரவாதி இருப்பார். எங்கயாவது சுவத்துல மோதிட்டோம், இன்டிகேட்டர், சேஃப்டி கார்ட் மாதிரியான பொருட்கள் உடைஞ்சிட்டுதுன்னா அங்கிருக்கிறவங்க நேரா ‘கெதோக் மேஜிக்’தான் போவாங்க. ஒரு நாள் எங்களோட டிரைவர் காரை சுவத்துல மோதிட்டார். இதனால சேஃப்டி கார்ட், ஹெட் லைட்ஸ் எல்லாம் உடைஞ்சிட்டது. குறைஞ்சது பத்தாயிரமாவது செலவு ஆகும். ஆனா, ‘கெதோக் மேஜிக்’ போனா ரெண்டாயிரத்துல முடிச்சிடலாம்’னு ஆலோசனை சொன்னார் டிரைவர். நம்பிக்கையில்லை என்றாலும் ‘சரி பார்ப்போம்!’னு கிளம்பிப் போனேன். அங்கே காலியான ஒரு இடம் மட்டுமே இருந்தது. அதற்குள் காரை விட்டுவிட்டு எங்களை வெளியேபோகச் சொல்லிட்டார் மெஜிசியன். என்ன ஆச்சர்யம்! கொஞ்ச நேரம் கழிச்த்து வந்து பார்த்தால், ‘இடிபடுவதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் கார் வெளியேவந்திருந்தது. நமக்கு இதெல்லாம் பிரமிப்பாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்’’ என்றவர், மேலும் ஒரு புதிய திகில் கதையைச் சொன்னார்.‘‘இந்தோனேசியாவுக்கு நடுவில் சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட ‘தோமாக்’னு ஒரு தீவு இருக்கு. பெரிய பெரிய கப்பலெல்லாம் அதுல போகும். அந்தத் தீவுல இருக்கிற கடைகள்ல ஆளுங்க யாருமே இருக்க மாட்டாங்க. நமக்கு ஏதாவது பொருள் வாங்கணும்னா, பக்கத்துல இருக்கிற ஓனர் வீட்டுல கதவைத் தட்டி வேண்டியதை வாங்கிக்கணும். ‘யாரும்தான் இல்லையே! திடுடிட்டுப் போய்டலாம்னு கடையில கையை வச்சோம்னா, கொஞ்ச நாள்லயே செத்துப் போய்டுவோம். அந்தளவுக்குத் தீவு முழுக்க மந்திரக் கட்டு பண்ணி வச்சிருக்காங்க’னு எல்லோரும் பயமுறுத்தினாங்க.

ஃபிரன்ட் ஒருத்தரை துனைக்கு அழைச்சிட்டு, நானும், என் மகனும் ‘தோமாக்’ கிளம்பினோம். ‘பிரபாத்’ங்கிற இடத்திலிருந்து கப்பல்லதான் ‘தோமாக்’ போயாகணும். ஆட்களை கூட்டிட்டுப் போக மூன்று மாடிக் கப்பல் ஒண்ணு காத்திருந்தது. சொன்னா நம்புவீங்களா? யாரும் வரலைங்கிறதால மூணு மாடிக் கப்பல்ல நாங்க மூணே பேர்தான் தீவுக்குப் போனோம். அந்தளவுக்கு அங்கே டீசல் விலை குறைவு.

எல்லாரும் சொன்ன மாதிரியே கடையெல்லாம் திறந்து கிடந்தது. அங்கே வசிக்கும் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறவர்களாக இருந்தார்கள். யாருக்காவது உடம்புல நோய் வந்தா ‘இபு ஜாமு’ங்கிற பெண் மருத்துவச்சிகள்தான் வைத்தியம் பார்ப்பாங்களாம். வெறும் கையினால் தொடாமலே உடம்பைக் கீறி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஆபரேஷன் செஞ்சிட்டு, பிறகு காயமே இல்லாமல் மூடிவிடுவார்கள்’ன்னு அங்கிருந்தவங்க சொன்னாங்க. என்னால் அதை நேர்ல பார்க்க முடியலையேங்கிற வருத்தம் இருந்துச்சு. அங்கிருந்தபோது, ‘மந்திரக்கட்டு நம்பளை ஏதாவது செஞ்சிடுமோ!’ங்கிற பயத்தோடவே நாங்க ஜகார்த்தாவுக்கு திரும்பி வந்தோம்’’ &படபடப்பாய்த் தன் அனுபவங்களைச் சொல்லி முடித்தார் அம்மணி.

இப்போ நமக்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கு.
1. பீரோ புல்லிங் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க தோமாக் தீவின் மந்திரக்கட்டு ஆசாமிகளை நம்மூருக்கு அழைத்து வரலாம்.
2. ‘கெதோக் மேஜிசியன்’களை கூட்டிவந்து கார், பைக்கை ரிப்பேர் செய்து கொள்ளலாம்.
3. முக்கியமாக, எப்பாடு பட்டாவது ‘பவான் வூ§ஜான்’களை கூட்டி வந்துவிட்டால் காவிரிப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-என்ன கரீட்டா...?

2 comments:

Anonymous said...

உள்ளூர் லகுடபாண்டிகளின் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் உங்கள் யோசனையை ம.க.இ.க சார்பாக கண்டிக்கிறேன்.

நிலா said...

இது ரொம்ப அழிச்சாட்டியமால்ல இருக்கு?