டீன்-ஏஜ் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணும் பொருட்டு பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர அரசு முன்
வந்துள்ளது. இப்படி குழந்தைகளிடம் பாலியல் விஷயங்களை விளக்கிக் கூறுவதன் மூலம் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதென்றும் எனவே இதை அனுமதிக்கக் கூடாதென்றும் சில தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
குறிப்பாக பி.ஜே.பி. போன்ற கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெற்றோர்களைப் பொருத்த அளவில் இது நல்லதா, கெட்டதா என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்நிலையில் 'பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், வளர் இளம்
பருவத்தினருக்கான சிறப்புக் கல்வியாளருமான டாக்டர் யமுனா'விடம்
இப்பிரச்சினை குறித்துப் பேசியதிலிருந்து...
பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கற்றுத் தரப்படும் என அரசு
அறிவித்துள்ளதே. சின்னக் குழந்தைகளிடம் பெரிய மனுஷ சமாச்சாரங்களை
விளக்குவதால் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாதா?
பாலியல் கல்வி என்று யார் சொன்னது? நீங்களாக பெயர் வைத்துக் கொண்டது உங்கள் அறியாமையையும், பெரிய மனிதர்களாகிய உங்கள் மனம் பாலியல் விஷயங்களால் நிரம்பிக் கிடப்பதையுமே கட்டுகிறது. இதை வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கைக் கல்வி என்று சொல்வது தான் சரி. ஆங்கிலத்தில் ''adoloscent education'' என்று சொல்வார்கள்.
இதை ஒரு பூமிப் பந்து என்று கொள்வோமானால், அதில் செக்ஸ் கல்வி என்பது ஒரு ஒரு குட்டித் தீவு மாதிரி. யாரெல்லாம் இந்தக் கல்வி முறையை எதிர்க்கிறார்களோ அவர்களின் மனம் ஆபாசங்களால் நிரம்பிக் கிடக்கிறது என்று அர்த்தம். அவர்கள் வெறும் ஆண், பெண் உறுப்புக்களை மட்டுமே பார்க்கிறார்கள்.
அப்படியானால் என்ன மாதிரியான விஷயங்கள் சொல்லித்தரப்படும்?
ஒரு ஆண், பெண்ணுக்கு இடையிலான அத்தனை விஷயங்களும் சொல்லித்தரப்படும்.
நீங்கள் யார்? உங்கள் உறவினர்கள், நன்பர்கள் யார்?
யாரிடம் எப்படிப் பேச வேண்டும்.
இந்தச் சமுதாயத்தைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
சமுதாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
உங்களை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கிறது?
எனப் பல விஷயங்கள் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வு
அளிக்கப்படும்.
ஒரு பையனோ, பெண்ணோ தன் உடலில் நிகழும் திடீர்
மாற்றங்களால் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ இதைச் சொல்ல பயம். எனவே தன் கூடப் படிக்கிற நன்பர்களிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், ஆலோசனைக் கேட்கிறார்கள். அதாவது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவறென்றும், பாவமென்றும் கூறி வருகிற ஒரு சமுதாயத்தில் "ஒரு அறைகுறையானது இன்னொரு அறைகுறையிடம் போய் ஆலோசனைக் கேட்கிறது''.
இது எங்கே போய் முடியும் என்று நீங்களே சொல்லுங்கள். எனவே உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிய வைப்பதோடல்லாமல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக, புத்தகப் புழுவாக நிற்காமல் தெளிவான அறிவாற்றல் கொண்ட ஒரு மனிதனை உருவாக்குவதே இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம். முதலில் தன்னை அறிதல் பற்றி சொல்லித் தரப்படும்.
பாடப் புத்தகங்களைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் முதல் மார்க், முதல் ரேங்க் என்று செயல்படுகிற மாணவர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
வாழ்க்கையை விடவா மார்க் முக்கியம்? சமுதாயத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் வளர்பவர்கள் பெற்றோர்களைப் பிரிந்து சுயமாக வாழ
ஆரம்பிக்கும் போது அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இதில் பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி. அதிகாலை நான்கு மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு வரை 'மார்க், மார்க்' என்று ஒரு மதிப்பெண் அச்சிடும் இயந்திரமாகத் தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்களே ஒழிய, நல்ல மனிதனாக இல்லை என்பதை உணர வேண்டும்.
மாணவப் பருவத்தில் இருந்த போது தன் பெற்றோரால் சரியாக அன்பு செலுத்தப்படாத ஒருவர், இப்போது தன் பெற்றோர்களை சரிவர கவணிப்பதில்லை. அவரிடம் பேசிய போது ''they do not not love me. they love only my marks and they wantmoney'' என்று பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
பெற்றோர்களின் தேவைக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார். ஆனால் அவரால் அன்பைக் கொடுக்க முடியாது. ஏனென்றால், அன்பாய் இருப்பது பற்றி அவருக்கு சொல்லித் தரப்படவில்லை.
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து அமெரிக்காவில் கை நிறைய சம்பளத்துடன்
செட்டிலாகிவிட்ட 24 வயது இளைஞர் அவர். ''ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. ஒரே டென்ஷன், படபடப்புன்னு நிம்மதியே இல்லாம இருக்குது. எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க "டைம் வேஸ்ட் பண்ணாத, டைம் வேஸ்ட் பண்ணாத''ன்னு. அவங்களோட இருந்தப்ப படிப்பு, டியூஷன்'ன்னு எல்லாமே கரெக்டா இருக்கும். ஆனா இங்க வேலை முடிஞ்சு ஈவினிங் ஆனா என்ன பண்றதுன்னே தெரியல. டோட்டலா டைம் வேஸ்ட் பண்றேன்'' என்று வருத்தப்படுகிறார். வாங்கிய சம்பளத்தை வைத்துக் கொண்டு கிடைக்கிற ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட இவரால் முடியவில்லை.
ஏனென்றால் இவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பது என்றால் என்னவென்றே தெரியவில்லை. படிப்பு, ஹோம் ஒர்க், மார்க் என்று மெஷின் போல்
இயங்கியவருக்கு ஓய்வு என்பது சுமையாய் இருக்கிறது. எந்தத் தவறும்
செய்யாமலேயே டென்ஷன், படபடப்பு. அப்படியானால் இந்த ஏட்டுக் கல்வி
எதற்குத்தான் உதவியிருக்கிறது. புரிகிறதா?
அதிக மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்களையும், தேர்வுகளில் முதலிடம் பிடிக்கிற மாணவர்களையும் கல்வி நிறுவணங்களும், பத்திரிகை ஊடகங்களும், அரசும், சமுதாயமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறதே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஓவராக தூக்கி வைத்துக் கொஞ்சுவது கொஞ்சமும் சரியல்ல. பாராட்டலாம். ஆனால் இன்று உள்ளது போல் மீடியாக்களும், சமுதாயமும் தலைப்புச் செய்தி போடுகிற அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. டென்த்தோ, +2வோ ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்திருக்கிற குறிப்பிட்ட பள்ளியில் எல்லா மாணவர்களுமே பாஸாகியிருப்பார்கள். முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மீதியுள்ள மாணவர்களுக்குமான மார்க் வித்தியாசம் ஒன்றோ, இரண்டோ தான் இருக்கும். மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களை தரம் பிரிப்பது அவர்களிடையே தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும். இதற்கு பதில் அவர்களை தர வரிசைப்படுத்தலாம்.
+2 தேர்வு முடிவுக்கு முன்பே குறைந்த மதிப்பெண் எடுத்து விடுவோமோ என்கிற பயத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆண்டு தோறும் தோல்வி மற்றும் தோல்வி பயம் காரணமாக விலை மதிப்பற்ற மாணவ மாணவியரின் உயிர்கள் பலி வாங்கப்படுகிறது. குறைந்த மார்க் வாங்குவது என்பது அவ்வளவு கொடிய குற்றமா? உயிர் தான் அதற்கு விலையா?
தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், கொடூரக் கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கூட இங்கே உயிர் வாழ வாய்ப்பளிக்கப்படுகிறது. அனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய் என்று அவமானப்படுத்தி அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிறோமே! அந்தக் குற்றத்திற்காக நமக்கு யார் தண்டனை தருவது? இறந்து போகிற ஒவ்வொரு மாணவரோடும் சேர்த்து வெறும் கல்வி அல்லாத பிற துறை வல்லுணர்களையும் குழி தோண்டிப் புதைத்த குற்றமும் நம்மைச் சேரும்.
வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் அந்த நபருக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று அளவான குடும்பம். பையன் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான். மகளோ நாலாவது ஐந்தாவது இடம் வாங்கிக் கொண்டிருந்தாள். எதிர் பாராமல் நோய் காரணமாக அந்தப் பையன் இறந்து போய்விட்டான்.
வீட்டு வாசலில் பிணம்கிடத்தப்பட்டு எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். துக்கம் தொண்டையை அடைக்கிற அந்த நேரத்திலும் அப்பாவானவர் தன் மகளின் கையைப் பிடித்து நேராக சாமி படத்தின் முன் இழுத்துச் சென்றிருக்கிறார். "கடவுளே! கூப்பிட்டது தான் கூப்பிட்ட, எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவானே! அவன் தானா உனக்கு
வேணும்? நல்லா படிக்கிற அவன விட்டுட்டு, சுமாரா படிக்கிற இவள
கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா'' என்று அழுதிருக்கிறார்.
அந்தப் பிஞ்சு மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் பாருங்கள். அதே போல் அவள் யாருமில்லாத நேரத்தில் தற்கொலைக்கு முயன்று அதிர்ஷ்ட்ட வசமாக காப்பாற்றப்பட்டிருக்கிறாள். இப்படி யார்-எவர், என்ன-எதற்கு என்ற
வித்தியாசம் எதுவுமில்லாமல் குடும்பங்களில் இருந்தே தான் குழந்தைகளின்
மீதான வன்முறை தொடங்குகிறது.
குழந்தைகளின் மீதான இப்படிப்பட்ட வன்முறையை தடுப்பது எப்படி?
பெற்றோர்கள் குழந்தைகளாக இருந்த போது இந்த வாழ்க்கைக் கல்வி
மறுக்கப்பட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். 'மாரல்
சைன்ஸ்' என்று ஒரு வகுப்பு இருந்தது. அதைக்கூட மற்ற ஆசிரியர்கள்
பறித்துக் கொண்டார்கள். மற்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப்
பழக வேண்டும். ஒரு ஆள் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று எப்படித்
தீர்மானிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டும்.
பேசும் போது கண்களை நேருக்கு நேர் பார்த்துத் தான் பேச வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முகத்தைப் பார்த்து அல்ல கண்களைப் பார்த்தால் தான் தெரியும். பேசிக் கொண்டிருக்கும்
போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் கண்கள் காட்டிக்
கொடுத்துவிடும். கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசாமல் பார்வை வேறு
எங்கெங்கோ தாவுகிறது என்றால் குறிப்பிட்ட அந்நபரின் எண்ணங்கள்
வேறெங்கெல்லாமோ போகிறது என்று அர்த்தம்.
அதே போல் "குட்-டச், பேட்-டச்'' என்பதை குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். கல்யாணம், காதுகுத்தல் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் பண்டிகைகள், விழாக்களின் போதும் ஒன்று கூடும் உறவினர்கள் நன்பர்கள் ஆகியோர் தான் இந்த பேட்-டச் என்கிற ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது மாமா, சித்தப்பா, அண்ணன், பெரியப்பா என்று யாராக வேண்டுமாலும் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் செல்லமாய் அடிப்பது, தட்டுவது, கிள்ளுவது என்று முதலில் ஒத்திகைப் பார்ப்பார்கள். தங்களால் எந்த ஆபத்தும் இல்லை என்கிற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் ஏற்படுத்திய பின் தங்கள் சுய ரூபத்தைக் காண்பிப்பார்கள். இது சரியா, தவறா என்கிற குழப்பத்திற்கு உள்ளாகிற குழந்தைகள் எதிர்ப்பு காட்ட
திராணியற்றவர்களாகின்றனர். மீறி பெற்றோர்களிடம் கூறினால் 'அடச்சீ! சும்மா கிட' என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
குழந்தைகள் எதைச் சொல்ல வந்தாலும் அதைப் பொறுமையுடன் காது கொடுத்து கேட்பதே நல்லது.எல்லாம் எனக்குத் தெரியும். நீ வாயை மூடு என்று சொல்வது மிகவும் ஆபத்தானது. இதனால் எதையும் வெளியில் சொல்ல முடியாமல் மவுனமாய் கொடுமைக்குள்ளாகிறவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.
பாலியல் சம்பந்தமான விஷயங்களை வகுப்பெடுக்கும் போது மாணவர்கள் எதிர்மறை தூண்டலுக்கு உள்ளாக மாட்டர்களா?
அது ஆசிரியர்களின் பயிற்று முறையைப் பொறுத்தது.எப்படி பாடம் நடத்த
வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே அசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தாகி
விட்டது. ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு வரை உலகத் தாய்ப்பால் வாரம்
கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக எல்லா பள்ளிகளிலும் தாய்ப்பாலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறுகிறோம். இதைக் கேட்கிற மாணவிகள் ''ஆஹா... தாய்ப்பால் ரொம்ப இன்றியமையாதது. நானும் தாய்ப்பால் தரணும். அதனால் குழந்தைப் பெத்துக்கப் போறேன்'' என்று சொல்வார்களா என்ன?
எல்.கே.ஜி படிக்கும் போதே கண், காது, மூக்கு போன்று பிறப்புறுப்புக்களையும் குழந்தைகளுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும். ஆனால் அதை மூடி மறைத்து அது என்னவோ மர்மமான, ரகசியமான, அறுவெறுக்கத்தக்க ஒன்றாக கற்பனை செய்யவிட்டிருக்கிறோம். ஏன் பத்திரிகையில் கூட அவற்றை மர்ம ஸ்தானம், அந்தரங்க உறுப்பு என்று தானே எழுதுகிறீர்கள்!
இதன் மூலமாக தன் உடலைக் குறித்தே ஒரு குழந்தை மர்மம், அந்தரங்கம் என்று பயந்தால் நிலமை என்னாவது? இந்தியாவில் மொத்தம் 57 லட்சம் எச். ஐ.வி. பாசிடிவ் இருக்கிறார்கள். இதில் 15லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் 34% பேர். 15லிருந்து 24என்பது முழுமையான கல்விப் பருவம். இவர்களெல்லாம் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் விபச்சார விடுதிகளுக்குச் சென்றவர்கள். 20 வயது மாணவன் ஒருவன் எனக்கு இ-மெயில் அனுப்பியிருந்தான்.என்னால் எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் விபச்சாரியிடம் செல்லப் போகிறேன் என்று கூறியிருந்தான்.
நல்ல வேளை! போவதற்கு முன் எனக்கு தெரிவித்திருந்தான். இதனால் முதலில் அவனுக்கு வரப் போகிற எய்ட்ஸ். அதனால் வாழ் நாள் முழுவதும் சமுதாயத்தால் அவன் ஒதுக்கப்படுகிற அவலம். அவன் மட்டும் அல்லாமல் அவனது குடும்பம், உறவினர்கள் என்று யாரெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். குறிப்பாக அவனுக்கொரு அக்காவோ, தங்கையோ இருந்தால் அவர்களின் திருமணம்,எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மற்றவர்களின் கேலிப்பேசுக்கு எப்படியெல்லாம் ஆளாவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எடுத்து கூறியிருந்தேன்.
பின்பு மன்னிப்புக் கேட்டு திருந்தி விட்டதாக பதில் அனுப்பியிருந்தான். இரண்டு வருடத்தில் இ-மெயிலிலேயே சுமார் 4,000 சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருப்பேன். ஆரம்பத்தில் செக்ஸ், சுய இன்பம் என்று கேள்வி கேட்டவர்கள் படிப்படியாக எக்ஸாம், இண்டர்வியூ என்று ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மாறியதை நேரடியாக உணர்ந்தேன்.
தொடர்ந்து சுய இன்பம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் டீன்-ஏஜ்
பருவத்தினரிடமிருந்து கேட்க்கப்பட்டவண்ணமே இருக்கின்றனவே?
சுய இன்பம் என்பது இன்று டீன்-ஏஜ் பருவத்தினரிடையே பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு இன்னும் வலு சேர்ப்பதற்காக காலை எட்டு மணிக்கே டி.வி. சேனல்களில் சில ஆசாமிகள் ஆஜராகி சுய இன்பப் புராணம் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். 'சொப்பனாஸ்கலிதம், ஆண்மைக் குறைவு, உடல் மெலிந்து... இன்னும் கன்றாவியாய் என்னவெல்லாமோ சொல்லி சகட்டு மேனிக்கு இளைஞர்களை பயமுறுத்தி காசு பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது.
''சுய இன்பம் என்பது ஒரு சாதாரண விஷயம். விபச்சார விடுதிகளைத் தேடிப்போவதை விட, அல்லது அவசரப்பட்டு யாரிடமாவது செக்ஸ்
வைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதை விட இது எவ்வளவோ மேல்.
சொல்லப்போனால் இது முற்றிலும் ஆபத்தற்ற ஒரு இயற்கையான வடிகால்'' என்று.
சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. சுய இன்பம் பற்றி உலகம் முழுக்க எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன. இதனால் ஆண்மை பாதிக்கப்படும் என்றோ, வேறு உடல் நலத் தீங்குகள் ஏற்படும் என்றோ அறிவியல் பூர்வமாக கண்டறியப்படவில்லை. அது தான் உண்மை.
போலி மருத்துவர்களால் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவிழ்த்துவிடப்பட்ட தகவல்களால் ஏற்பட்ட பயமும், குற்ற உணர்ச்சியுமே மீண்டும் மீண்டும் கேள்விகள் வழியாக உயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது. சுய இன்பத்தில் ஈடுபடாதவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அதனால் நாம் மட்டும் தான் இந்தத் தவறை செய்து விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சிகளுக்கு இளைஞர்கள் ஆளாக வேண்டாம்.
இன்னொரு முக்கியமான விஷயம். கணவன் மனைவி உறவு என்றால் என்ன? என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். அது இரண்டு பேருக்கு இடையிலான உடலுறவு என்பது மாதிரியே பதில் சொல்வார்கள். அதுவா உண்மை?
ஒரு கணவன் மனைவிக்கு இடையில் எத்தனையோ
விஷயங்கள் அடங்கியிருக்கும் போது வெறும் உடல் இச்சை சார்ந்த விஷயமாக அதை புரிந்து வைத்திருப்பது குறுகிய மனப்பாண்மையைத் தானே காட்டுகிறது. திருமணங்கள் உடைவதற்கும், நிம்மதியில்லாமல் தொடர்வதற்கும் என்ன காரணம்? பரஸ்பரம் அன்பு, விட்டுக் கொடுத்தல் மற்றும் சரியான புரிதல் இல்லாதது தான்.
வீட்டுப் பாடம் செய்யலைன்னா ஸ்கூல்ல டீச்சர்ஸ் அடிக்கிறாங்க. வீட்ல
இருக்கும் போது சொன்ன பேச்சைக் கேட்கலைன்னா மனைவியைப் புருஷன் அடிக்கிறான்.
ஆக மனைவி மீதான இந்த வண்முறை என்பது படிக்கிற காலத்தில்
பள்ளிக் கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டது. முடிவு?
கல்விக்கூடங்களின் துன்புறுத்தல் நடவடிக்கைகள் அவர்களின் கல்யாணத்தை உடைப்பதில் வந்து நிற்கிறது. 'களவும் கற்று மற' என்கிறார்கள். எப்படி திருடினான் என்று தெரிந்தால் தானே திருடனைக் கண்டு பிடிக்க முடியும். தன் உடல், மனம் பற்றி தெரிந்திருந்தால் தான் அது குறித்த பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும். செக்ஸ் என்பதும் அப்படித்தான். அது பற்றிய உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதைச் சார்ந்த ஆபத்துகளிலிருந்தும் விடுபட முடியும். அது தான் நீங்கள் பாலியல் கல்வி என்று கூறுகிற இந்த வாழ்க்கைக் கல்வியின் நோக்கம்.
மரக்காணம் பாலா.
12 comments:
Very Interesting.
Good post but unnoticed
நல்ல பதிவு... ரொம்பப் பேருக்கு தெரிய வேண்டிய விசயம் ... வாழ்த்துகள்
மிக நல்ல பதிவு. அருமையான கருத்துக்களும், கேள்விகளும்.
வண்ணங்களின் குழம்புதான் கொஞ்சம் கண்வலி ஏற்படுத்துகிறது!
மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
க.சுதாகர்
தங்களின் வலைப்பதிவையும் தங்களின் புகைப்படங்களையும் இதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
உங்கள் பதிவுகள் மிக அருமை..
புகைப்படங்கள்.... உறைய வைக்கின்றன.. வேறெப்படிச் சொல்வதென்று கூடத் தெரியவில்லை..
மிக்வும் பயனுள்ள பதிவு. இளையவர்கள் உலகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறது. எங்காள் காலத்தில் தனித்தும் மறைத்தும் தப்புத்தப்பாய் பார்த்த வாழ்வின் ஊற்று இயல்பாக அறியப் படுக்கிற சூழல் மகிழ்ச்சிதருகிறது. நன்றி
நல்ல பதிவு. தற்போதைய நம் உயர்/மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டங்களிலேயே இனப்பெருக்க உறுப்புகள்/விந்து/அண்டம்/கருவுறுதல் ஆகிய பகுதிகள் வருகின்றன. இதையே சற்று விரிவாகவும் முறையாகவும் பயிற்றுவித்தாலே போதுமானது. இதையொட்டிய மனம் சார்ந்த சிக்கல்களையும் போக்குவிப்பதாய் இருத்தல் அவசியம். இப்பகுதிகளின் எளிமையான அறிமுகத்தை டீன்-ஏஜ்லியே தொடங்கலாம்.
marlinmantrox@gmail.com
நல்ல பதிவு. மேலும் வ்அளர்க. அதே போல, டாக்டர். யமுனா அவர்களின் தொடர்பு ஈ மெயிலையோ அல்லது எண்களையோ தந்தால் எங்களைப் போன்ற பெற்றோர்களுக்கு நல்லதாய் அமையும்.
great post ,may god bless you
anmaikuraivin arikuri enna?
anmai kuraivin arikuri enna
miga nalla karuthugal
my all the doubts are clear in this site
Post a Comment