Saturday, July 26, 2008

ச்சே... இப்படியொரு வித்தை இருப்பது தெரியாமல் போச்சே!

பழைய புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்ப்பதே அலாதியானதுதான். அப்படியொரு புகைப்படத்தை எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார் என் அலுவலக நன்பர். இப்போது பார்க்க போலீஸ் அதிகாரிபோல் தோற்றமளிக்கும் ஒருவர், ஹிப்பித் தலையுடன் கூத்தாடி போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தார். நெற்றியில் பாதி நிலாபோல் வெள்ளைச் சிகப்பில் விபூதி குங்குமம். ‘‘ஆஹா... பிரமாதமா இருக்கே! பால்ய வயது சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துவிடுமே?’’ என்றேன், போட்டோவைப் பார்த்துவிட்டு.

‘‘அய்யோ! ஊர்ல இவம் பண்ணாத ராவடியே இல்லை. ஆடையில்லாம பாக்கிறதுக்கு கண்ணாடி கண்டுபுடிக்கிறதுக்கு முன்பே இவன் றெக்கை கண்டுபுடிச்சிட்டான்’’ என்று அந்த மந்திர வித்தையை எடுத்துவிட்டார் குரூப் போட்டோவில் கூட இருந்த நன்பர்.

கிராமத்து ஆட்களுக்குத் தெரியும். ‘‘கருடன் கூண்டில் சஞ்சீவி மூலிகை இருக்குமாம். அதைக் கொண்டுவந்தால் இரும்புக் கதவைக்கூட திறந்துவிடலாம். முழங்கையிலோ, தொடையிலோ கத்தியால் கிழித்து, கிழிபட்ட இடத்தில் சஞ்சீவி மூலிகையை வைத்துவிட்டால் தானாக மூடிக்கொள்ளுமாம். அதன் பிறகு எவனும் நம்மை கத்தியால் வெட்ட முடியாது. ஜெயிலுக்குப் போனாலும் கம்பியை உடைச்சிட்டு வெளியே வந்துவிடலாம். துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு தெரித்துவிடும். உடம்புக்கு ஒன்றும் ஆகாது’’ என்று கதை சொல்வார்கள். சஞ்சீவி மூலிகை எடுக்க கூண்டுக்குள் கையை விட்டு கருடன் கையால் மண்டையில் கொத்து வாங்கியவர்கள் ஏராளம்.

இப்போது குரூப் போட்டொ நன்பர் சொன்ன கதைக்கு வருவோம். அது பொம்மணாட்டிகளை அம்மணமாய் பார்க்க புது கண்ணாடி கண்டுபிடித்துவிட்டதாக கதை கிளம்பியிருந்த நேரம். "ஹ¨ம்... இதென்ன பிரமாதம். அந்த காலத்திலேயே இதுக்கு றெக்கை கண்டுபிடிச்சிட்டான்’’ என்று பிட்டு போட்டிருக்கிறார் கிராமத்தில் ஊர் கொளுத்தியாக வலம் வந்த ஒருவர். ''அப்படியா...! என்ன அது?’’ என்று வாய் பிளந்து கேட்டிருக்கிறார்கள் ஹிப்பித்தலையும், அவரது தோஸ்த்தும்.

‘‘கருடன் பறந்து போவுதில்ல... அப்ப றெக்கை உழுதான்னு பாத்துக்கிட்டே இருக்கணும். அப்படி என்னைக்காவது றெக்கை உழுந்திச்சின்னா, மண்ல உழுந்திடாம அப்படியே அதை கைல வாங்கிக்கணும். அதை எடுத்தும்போய், மொதமொதலா கண்ணு போட்ட பசுமாடு இருக்குதில்ல...! அது போடுற மொத சாணியில நாலா பக்கமும் நனைச்சு எடுத்துக்கணும். அதை எடுத்தும்போய் எது நம்ம குல தெய்வமோ, அதுங் காலடியில 108 நாள் விரதமிருந்து நல்லா காய வைக்கணும்.
காய வச்சாச்சா...? இப்ப என்னா பண்ணனும்னா... நல்லா பூ மலர்ந்த தாமரைக் குளமா தேர்ந்தெடுக்கணும். யார் கண்ணுலயும் படாம விடியக்காலை இருட்டோட இருட்டா பிரம்ம முகூர்த்தத்துல போய் றெக்கையை கைல புடிச்சிக்கிட்டு 108 முறை குளத்துல முங்கி எழுந்திருக்கணும். இதே மாதிரி 108 நாள் தொடர்ந்து பண்னனும்.

இதுக்குப் பொறவு என்ன பண்ண‌னும்னா...? ஊர்ல ஏழு கன்னிமார் கோவில் இருக்கில்ல!? உறும வேளையா (நன்பகல் பன்னிரண்டு) அங்க போய் உச்சி வெயில்ல 108 நாள் றெக்கையை கையில புடிச்சிக்கிட்டு காய வைக்கணும். றெக்கை ஒவ்வொரு நாளும் கொஞ்சங் கொஞ்சமாய் மெருகேறி ஜொலிக்கிறது உனக்கே தெரிய ஆரம்பிக்கும். 108 நாள் முடிஞ்சதுன்னு வச்சிக்கியேன்! அப்புறம் பாரு வித்தையை. 'தூக்கு'னா தூக்கும். 'இறக்கு'னா இறக்கும் என்று செய்து காட்டியிருக்கிறார்.

அதாவது, யாராவது ஆளுங்க இருக்கிற இடமா பாத்து கையில இறகோட நின்னுக்கணுமாம். அவங்களைப் பார்த்துக்கிட்டே, இறகை கீழிருந்து மேலாக நீவி விட்டால் அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்சும் அதே மாதிரி மேல போய் வருமாம்.’’

-இதைத்தான் பண்டைகால கண்டுபிடிப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் அந்தப் புண்ணியவான். ‘‘கருடா... கருடா... றெக்கை போடு!’’ ன்னு நம்ம ஹிப்பித்தலை நன்பரும், அவருடைய தோஸ்த்தும் அலையாத நாளில்லையாம்.
‘‘அட... இந்த வித்தை முன்னமே தெரியாமப் போச்சே!’’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டார் எங்க ஆபீஸ் கவிஞர்.
புகைப்படங்கள், நன்றி: friendsofblackwater.org/harold decker, mikecurtis.com

1 comment:

திங்கள் சத்யா said...

அருமையான கமென்ட், அருமையான கேள்வி. கதையை விட்டுட்டு இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாம கேட்கணும். அய்யா unsecured loan அவர்களே! உங்களை பாதுகாப்பற்ற கந்துவட்டிக்காரர் என்று கூப்பிடலாமா? எந்த போட்டோவைப் பற்றி கேட்கிறீர்கள் என்று தெரிவிப்பீர்களா?