Friday, February 12, 2010

‘‘அந்த நினைவுகளை நான் வெறுக்கிறேன்’’ -சல்மா.


சல்மா எழுதிய ‘இரண்டாம் சாமங்களின் கதை’, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’ எனப்படும் ‘மேன் ஏசியன் லிட்டெரரி விருது’க்காக, லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், விருது பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் போய்விட்டது. தற்போது மலையாளம், இந்தி, ஜெர்மன், உருது ஆகிய மொழிகளிலும் இரண்டாம் சாமம் வரவிருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகளைகள் அனைத்தும் சல்மாவை பேட்டி கண்டபோதிலும், தமிழ் ஊடகங்கள் ஏனோ பாராமுகம் காட்டி வருகின்றன. ‘‘இவ்வளவு நீண்ட பேட்டியளிப்பது இதுவே முதல் முறை’’ என்கிற சல்மா, தன் அம்மாவிடம் கூறாத உண்மைகளைக்கூட அன்று வெளிப்படையாகப் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து பூமியை ரசித்தபடி தொடங்கியது உரையாடல்...

‘‘மிகவும் பின்தங்கிய, படிப்பறிவில்லாத சிறிய கிராமம் துவரங்குறிச்சி. அங்கே, சாதரான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன். அதிகபட்சம் பத்தாவது படிப்பதே ஊரில் அபூர்வம். ‘சமைப்பது, துவைப்பது, குழந்தை பெறுவது’ என்று பெண்களுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது. நான் மட்டும் நிறைய கனவுகளுடன் வளர்ந்தேன். காரணம்? புத்தகங்கள். எனக்கு மிகவும் பிடித்தது மாயாஜாலக் கதைகள்தான். அவற்றில் இருந்த அதீத கனவுத்தன்மை என்னை வசீகரித்துக்கொண்டே இருந்தது. ‘இரும்புக்கை மாயாவி’தான் என் ஹீரோ. விக்கிரமாதித்தன், துப்பறியும் சாம்பு போன்றவர்களும் என்னைக் கவர்ந்தார்கள். காமிக்ஸ் வழியாக துப்பாக்கி ஏந்தியபடி குதிரைகளில் பயனிப்பது, கொள்ளையர்களை விரட்டியடிப்பது என்று கதைக்குள்ளாக வாழ்ந்துகொண்டிருந்தேன். மதனகாமராஜன் கதைகள், வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளை வாசிக்க பாதை அமைத்துக் கொடுத்தது. நான் ஆறாவது படிக்கும்போது ‘ஆனந்தவிகடன், குமுதம், ராணி’யெல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டன.

என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்துவிட்டது.

‘‘எது? அந்த சினிமாவுக்குப் போன சம்பவம்தானே!’’

‘‘அய்யோ... ஏன் கேட்கறீங்க? அப்போதெல்லாம் நைட் ஷோதான். வயதுக்கு வந்த பெண்கள் சினிமாவுக்கு போக அனுமதி இல்லை. எங்க ஊர் பரணி தியேட்டரில் அப்போது முதல் முதலாக மேட்னி ஷோ ஆரம்பித்தார்கள். படம் ஆரம்பிக்கும் முன், ‘பழனி முருகனே...!’ என்கிற பக்தி பாடலைப் போடுவார்கள். படம் முடிந்து வெளியே வந்தால், ‘ரூப்புத் தெரா மஸ்தானா...’ என்கிற இந்திப்பாடல் ஒலிக்கும். இப்போதுகூட அந்தப் பாடலை கேட்டால், பழைய நினைவுகள் வந்துவிடும். ஒரு நாள், நானும் என் தோழிகள் மூவரும் லைப்ரரிக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு மேட்னி ஷோவுக்குப் போனோம். போனதும்தான் தெரிந்தது, அது ஒரு மலையாளப் படம்! பிரமிளா நடித்த ‘அவளோட ராவுகள்’ போட்டிருந்தார்கள். திடீரென குளியல் சீன் ஓட ஆரம்பித்ததும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘வெளியே போய்விடலாம்’ என்றால், கேட்டைப் பூட்டிவிட்டார்கள். வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு முழுப்படத்தையும் கேட்டுக்கொண்டிருந்தோம். பெண்கள் பகுதியில் நாங்கள் நான்கு பேர்தான். எல்லோரும் படம் பார்ப்பதை விட்டுவிட்டு எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

படம் முடிந்தது. ‘எல்லா ஆண்களும் வெளியேறட்டும்’ என்று அரைமணி நேரம் காத்திருந்தோம். தாவனியை இழுத்து, முக்காடு போர்த்திக்கொண்டு வெளியே வந்தால்...! ‘என்ன ஆயிற்று தெரியுமா? ஒருத்தன்கூட வீட்டுக்குப் போகவில்லை. அத்தனை பேரும் எங்களுக்காகவே வாசலில் காத்திருந்தார்கள். அவமானத்தில் ‘செத்தே போய்விடலாம்’ என்றிருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள், ‘ஏ& படம்’ பார்த்த செய்தி முந்திக்கொண்டுவிட்டது. அவ்வளவுதான்! அடுத்தநாள் முதல் நால்வரின் பள்ளி வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

முற்றுப்புள்ளிக்குப் பிறகான எனது வாழ்க்கை, குகைக்குள் புதைந்த மாதிரி ஆயிற்று. அதை நினைத்துப் பார்ப்பதையே நான் வெறுக்கிறேன். அவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை அது. பதிமூன்று வயதில் பெரியவளாகிவிட்டேன். வீட்டைவிட்டு ஒரு நொடிகூட வெளியே வரக்கூடாது. எந்த ஆம்பிளையும் வீட்டுக்குள் வரக்கூடாது. காலிங் பெல் சத்தம் கேட்டதும், பெண்கள் எழுந்து ரூமுக்குள் சென்றுவிடவேண்டும். தந்தை மகள் உறவே ஆண்&பெண் அடிப்படையில் தீர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் புத்தகங்கள் மட்டுமே எனக்குத் துனையாய் இருந்தன.’’ &ஆழ்ந்த பெருமூச்சுடன் லேசாகச் சிரிக்கிறார் சல்மா.

‘‘கொடுமையான இந்த வாழ்க்கையை நான் அறிந்தே இருந்தேன். ‘பள்ளிக்கூடம்தான் போக முடியவில்லை, கரஸ்பான்டென்சிலாவது படிக்கலாம்’ என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ‘தபால் மூலம் படிப்பதென்றால் முதலில் ஸ்கூலுக்குப் போய் டி.சி. வாங்கணும். ஸ்கூலுக்குப் போனால் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். ஒரு பொண்ணை எப்படி வெளியூருக்கு அனுப்பலாம்? என்று அசிங்கமாகப் பேசுவார்கள்’ என்றார் அம்மா. இப்படி நமக்காக என்றில்லாமல், ஊருக்காகவே எல்லோரும் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் ஊருக்குள் கார் வந்து நின்றால், ‘உள்ளே யார் இருக்கிறார்கள்?’ என்று எட்டிப் பார்க்கும் அளவுக்கு தனிமனிதச் சுதந்திரம் அனுமதிக்கப்படாத பூமியாகவே இருக்கிறது துவறங்குறிச்சி.

இந்தச் சூழ்நிலையில்தான், வீட்டுக்குள் இருந்தபடியே என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து, ‘இருளின் முதுகை ஒடித்துக்கொண்டு சூரியனாய் வெளியே வா!’ என்பது மாதிரி கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் வாசிப்புத் தளம் விரிவடைய ஆரம்பித்தது. லைப்ரரியன் மூலமாக தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதியார் போன்றவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். ரஷ்ய இலக்கியங்கள் கிடைத்தது.

புத்தகங்கள் வழியாக உலகைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தொலைக்காட்சியின் வருகை வியப்பை ஏற்படுத்தியது. வாழ்க்கையை அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்கும் பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் ஆகியோர் எனக்குள்ளிருந்த வேகத்தை கூட்டினார்கள். ‘இவ்வளவு பெரிய உலகமா?’ ஏக்கமும், தனிமையும் என்னை வாட்ட ஆரம்பித்தது. கம்யூனிஸ தத்துவங்களும், பெரியாருடைய எழுத்துக்களும் என்னை தீவிரமானவளாக மாற்றியது. சட்டென்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். மூன்று வேளையும் எனக்கு நல்ல சாப்பாடு கிடைத்துக்கொண்டிருந்தபோது, ஐந்து ரூபாய் கூலிக்காக, தலித் பெண்கள் என் வீட்டில் கடலை உடைத்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபம் தலைக்கேறியது. நான் கடவுள் நம்பிக்கையை கைவிட ஆரம்பித்தேன்.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணும் மாமியார் குடும்பத்துக்காக சமைத்துப் பழக வேண்டும் எனபது ஊர் நடைமுறை. ஒட்டுமொத்தப் பெண்களுடைய சக்தியும், சமைப்பதற்கும் துவைப்பதற்குமே செலவிடப்பட்டது. இதுவும் எரிச்சலை உண்டாக்கியது. ‘பொழுதன்னிக்கும் அடுப்படியில் வேகக்கூடிய வேலையை செய்யமாட்டேன்’ என்று எதிர்த்துப் பேச ஆரம்பித்தேன். ‘பெண்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது? என்பதை எழுத்தாக மாற்ற முடிவெடுத்தேன். தொடர்ந்து கலில் கிப்ரான், விட்மன், டால்ஸ்டாய், தஸ்தோவ்ஸ்கி, கார்க்கி, செக்கோவ் ஆகியோரை வாசிக்கத் தொடங்கினேன். மொழி லாவகப்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு எப்படியாவது வெளியேறவேண்டும் என்ற ஆவல் பீரிட்டுக் கிளம்பியது.

இதற்காக ஒரு தந்திரம் செய்தேன். சும்மாவாச்சும், ‘அம்மா... கால் வலிக்கிறது!’ என்று கதற ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் இளைஞர்கள் என்பதால் வீட்டுக்குள் வர அனுமதி இல்லை. பெண்களுக்கென்று சரவணன் என்கிற வயசான ஹோமியோபதி ஸ்பெஷலிஸ்ட் இருந்தார். சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்த சரவணன், கால் வலிக்கு ஊசி போட்டுவிட்டுக் கிளம்பினார். நான், ‘அய்யோ... வலி தாங்கலையே...!’ என்று மீண்டும் நாடகமாடினேன். துடித்துப்போன என் அம்மா, டாக்டரைப் பார்க்க மதுரை போகலாம் என்று முடிவு செய்தார். இதைத்தான் நான் எதிர் பார்த்தேன். எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல்! வயசுக்கு வந்த பெண்கள் டாக்டரிடம் போனால், ‘ஏதோ வியாதி போலிருக்கு!’ என்று ஊர்முழுக்க வதந்தி கிளம்பிவிடும். அசிங்கமாகப் பேசுவார்கள். அது கல்யாணத்தைப் பாதிக்கும். அப்படியானால், மதுரைக்கு எப்படிப் போவது...?

-அடுத்த இடுகையில்...

4 comments:

Shobana Rupakumar said...

Hello anna, vry nice to see ur blog! u r making a real journalism! this is what journalists like u are meant for HATS OFF TO U,anna!


-Shobana, News Reporter, Punnagai Ulagam

திங்கள் சத்யா said...

ha.. ha.. thank you shobana. hope so!

Shobana Rupakumar said...

Why laughing?

திங்கள் சத்யா said...

அடேங்கப்பா! வாழ்க்கைல சிரிக்கக்கூட சுதந்திரமில்லையா? ச்சும்மா!