Tuesday, June 15, 2010

‘‘அதிகாரத்தை கைப்பற்றுங்கள்!’’ -சல்மா!


குறிப்பு: இது சல்மா பேட்டியின் இரண்டாம் பாகம். முதல் பாகம், முந்தைய இடுகையில் உள்ளது.

வீட்டுக்குள் சிறைப் பறவையாய் வாழ்ந்து வந்ததாகக் கூறும் சல்மா, தன் முதல் வெளியுலகப் பயணம் குறித்தும் அரசியல் ஆரம்பம் குறித்தும் தொடர்கிறார்.

‘‘வெளியூர் போகவேண்டும் என்றால், உடம்பு சரியில்லை என்றால் மட்டுமே சாத்தியம். நான், வேண்டுமென்றே கால் வலிக்கிறது என்று கதறினேன். ஒரு வழியாய், ஊரே தூங்கும் அதிகாலை நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் மதுரைக்குப் புறப்பட்டோம். அங்கிருந்த டாக்டர் எனக்கு எக்ஸ்ரேவெல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு,

‘‘என்ன பிரச்னைன்னே கண்டுபிடிக்க முடியலை. வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடப்பதுகூட காரணமாய் இருக்கலாம். எக்ஸர்சைஸ் பண்ணச் சொல்லுங்க’’ என்றபடி அவர் பங்குக்கு ஒரு ஊசி போட்டார். மருந்து, மாத்திரிகளும் எழுதிக் கொடுத்தார்.

இப்போது எப்படிக் கிளம்பினோமோ, அப்படியேதான் யாருக்கும் தெரியாமல் ஊர் திரும்பவேண்டும். எனவே, இரவு 12 வரை நேரமிருந்தது. முதலில், ‘அம்மன் கோயில் கிழக்காலே’ சினிமாவுக்குப் போனோம். அப்புறம் ஷாப்பிங், ஹோட்டல், நியூ சென்சுரி புக் ஸ்டால் என விரும்பிய இடத்துக்கெல்லாம் போனேன். வெளியுலகம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதன்பிறகு, ஐந்தாறு தடவைகள் கால் வலி என்று சொல்லி மதுரைக்கு வந்தேன். ஒவ்வொரு முறையும் நல்லா இருந்த உடம்பில் நாலைந்து ஊசி போட்டுக்கொண்டேன்.

வெளியுலகத்தைப் பார்தத பிறகு, ‘பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று நிறைய கேள்விகள் எழுந்தன. ராஜாத்தி என்கிற புனைப்பெயரில், சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்தேன். ‘ஒரு பொண்ணு பேர் எப்படி வெளியில தெரியலாம்?’ என்று ஊருக்குள் கேவலமாக பேச ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், வீட்டில் எனக்குக் கல்யானத்தை முடிக்கவேண்டும் என்று குதித்தார்கள். இதற்காக, என் பதிமூன்று வயதிலேயே ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. நான், திருமணம் என்பது வேறொரு உலகத்தை எனக்கு திறந்துவிடவேண்டும் என்று விரும்பினேன். மீண்டும் இதே உலகத்துக்குள் விழ விருப்பமில்லை. எனவே, சாமர்த்தியமாக இருபது வயதுவரை தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன்.

என்னுடைய கிராமத்தைப் பொறுத்தவரை வாக்கு கொடுத்துவிட்டால், உயிரைக் கொடுத்தாவது அதைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். என்னையும் அப்படிக் கட்டிக்கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார்களே! மீற முடியுமா? மீறினால், இரண்டு குடும்பத்துக்கும் பெருத்த அவமானமகிவிடும்.

‘என்னத்த பொண்ணு வளத்து வச்சிருக்கீங்க?’ என்று எங்களையும், ‘பையனை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளாமே!’ என்று மாப்பிள்ளை வீட்டாரையும் கேவலமாகப் பேசுவார்கள். ஆனால், ‘கொடுத்த வாக்குறுதிக்காக ஒருவரின் வாழ்க்கையையே பணயம் வைப்பது’ என்பதை நான் வெறுத்தேன்.

துவரங்குறிச்சியில் ஒரு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? ‘கல்யாணம் பண்ணி வச்சா தற்கொலை பண்ணிக்குவேன்’ என்று நானும், ‘இல்லைன்னா நான் பண்ணிக்குவேன்’ என்று என் அம்மாவும் மாறி மாறி மிரட்டிக்கொண்டோம். கடைசியில் குடும்பம்தான் ஜெயித்தது.

‘‘அப்படியானால், அரசியலுக்குள் எப்படி வந்தீர்கள்?’’

திருமணத்துக்குப் பிறகு, என்னால் எழுத முடியவில்லை. எனவே, யாருக்கும் தெரியாமல் ராஜாத்தி என்கிற பெயரை மாற்றி ‘சல்மா’ என்று எழுத ஆரம்பித்தேன். காலச்சுவடுதான் என் முதல் (பெயர்) கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. அப்போது என் புகைப்படத்தைக் கேட்டார்கள். கொடுத்தால் பிரச்னையாகிவிடும் என்று நான் மறுத்துவிட்டேன்.

ஆனால், நிலமை தலைகீழாக மாறியது. என் கணவர் குடும்பம் பரம்பரை தி.மு.க.வைச் சேர்ந்தது. எனக்கோ, அரசியல் பிடிக்காது. வாசிப்பின் மூலமாக நானும் அதை ஒரு சாக்கடை என்றே கருதி வந்தேன். அப்போது பஞ்சாயத்துத் தேர்தலுக்கான நேரம். என் கணவருக்கு எலக்'ஷனில் நிற்க ஆசை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பகல் பன்னிரெண்டு மணிக்கு என்னிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

அந்தக் கையெழுத்துதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுதான் இலக்கியவாதியகவும் என்னை வெளிக்கொண்டுவர உதவியது. அது ஒவ்வொரு பெண்ணுக்குமான முன்னுதாரணம். அதிகரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முதல் படி.

அந்தக் கையெழுத்தை மட்டும் நான் போடாதிருந்தால், இன்று முகம் தெரியாத ஒரு சல்மவாக வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயிருப்பேன்.’’ சந்தோஷத்துடன் தொடர்கிறார் சல்மா.

‘‘ஒரு பெருங்கூட்டம் புடைசூழ, ஊர் ஊராக என்னைப் பிரச்சாரத்துக்கு கூட்டிப் போனார்கள். மேடையில் ஏற்றினார்கள். எந்த போட்டோ எனக்கு மறுக்கப்பட்டதோ, அதைப் பெரிது பெரிதாய் அச்சிட்டு ஊர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டினார்கள்.

அப்போதும், அவர்களின் தேவைக்காக என்னைப் பயன்படுத்துகிறார்களே என்று வருந்தினேன். ஆனால், அங்கே மக்கள் என்னிடம் வைத்த ஆயிரக்கனக்கான கோரிக்கைகள் எனக்குள் ஆழ்ந்த நம்பிக்கையை விளைவித்தது. முக்கியமாக ஒன்றைச் சொல்லியாகவேண்டும்.

அப்போது எனக்கு தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவிகூட இல்லை. எனவே, சுயேட்சையாகத்தான் போட்டியிட்டேன். அதிலே, என்னோடு போட்டியிட்ட ஐந்து பேரும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு, மிகப்பெரிய வெற்றி பெற்றேன். அடுத்த ஐந்து வருடத்தில், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றினேன்.

முதன் முதலாக விகடன் பத்திரிகை என்னை பேட்டி கண்டது. அப்போது, புகைப்படத்துக்காக வீட்டில் அனுமதி வாங்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு உடைந்திருந்தது. பிறகு, இலக்கிய கூட்டங்களுக்காக சென்னை வர ஆரம்பித்தேன். கனிமொழியோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. முதல்வர் மகள் என்றாலும் ஒரு கவிஞராக தன்னை அடையாளப்பட்டுத்திக்கொண்ட கனிமொழிதான் எனக்கு ‘மாரல் சப்போர்ட்’டாக இருந்தவர்.

‘தலைவர் மகளும் ஒரு எழுத்தாளர்தான்’ என்கிற இந்த ஒப்புமைதான் என்னை என் கணவருக்கும் புரிய வைத்தது. கனிமொழியோடு நான் பேசுவதை வியப்போடு அவர் பார்த்தார். எழுத்து, எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொண்டார். அதன் பிறகு, 2004-ம் ஆண்டுதான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக என்னைப் பதிவு செய்ய வைத்தார்.

‘‘உங்களின் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘வாய்ப்பு கேட்டு, எல்லோரும் பணம் கட்டுவதுபோலத்தான் நானும் கட்டினேன். அதுவும் ராகுகாலத்தில்! ஆனால், அதிர்ஷ்டவசமாக சீட் கிடைத்துவிட்டது. சீட் கிடைத்த பிறகு எனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவானதுதான் நன் எதிர்பார்த்திராத ஒன்று. நான் போட்டியிட்ட மருங்காபுரி தொகுதி அ.தி.மு.க.வுக்கு ராசியானது என்றாலும், ‘சல்மா ஜெயிக்கிறார்’ என்பதுதான் துக்ளக் முதற்கொண்டு ஆனந்தவிகடன் வரையிலான கருத்துக் கணிப்பு.

ஆனால், பெண்கள் அரசியலுக்கு வருவதை முக்கியமான சில ஆண்கள் இன்றைக்கும் விரும்பவில்லை. ஓட்டுப் பதிவுக்கு முதல் நாள், கட்சிப் பாகுபாடின்றி அவர்கள் செய்த சதியின் காரணமாக வெறும் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் தோல்வியைத் தழுவினேன்.

ஆனாலும் ,பிறகு தி.மு.க ஆட்சியைப் பிடித்ததால் தோல்வியைப் பர்க்காமல் மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொண்டுவந்தனர். நான் அவற்றை எடுத்துக்கொண்டு சென்னையில் தலைவரைப் போய்ப் பார்த்தேன். அவர், யாருமே எதிர்பாராத வகையில் எனக்கு சமூகநல வரியத் தலைவர் பதவியைக் கொடுத்தார். என்னால் முடிந்த அளவுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

‘‘அரசியல், இலக்கியம் இரண்டையும் எப்படி ஒரே நேரத்தில் கையாள முடிகிறது?’’

‘‘இத்தனை வயதிலும் எங்கள் தலைவர் கையாளவில்லையா? தி.மு.கழகத்தைப் பொறுத்த அளவில் இதற்கு ஊக்குவிப்புகள் அதிகம். சொல்லப்போனால், அரசியலில் இருப்பது ஒரு பெண்ணுக்கென்று சமூகத்தில் உள்ள பொதுவான தடைகளை உடைக்க உதவுகிறது. என் அனுபவத்தில், ‘பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், அதிகாரத்தை கைப்பற்றவேண்டும்’ என்பதை முக்கியமான ஒரு கருத்தாக சொல்ல விரும்புகிறேன்.

சமீபத்தில் அமெரிக்க தூதரகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக என்னை அழைத்திருந்தார்கள். ‘அமெரிக்காவில், பத்தில் ஆறு பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாக’ அப்போது என்னிடம் சொன்னார்கள். அமெரிக்காவிலேயே இந்த நிலமை என்றால், இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக் கழக விழாக்களுக்கு போகும்போது, மாணவிகள் என்னிடம் சொல்கிறார்கள். ‘மேடம்! உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது’ என்று. அரசியலுக்கு அதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ''

No comments: